Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Saturday, October 29, 2011

தமிழகம் இன்று

(டைம்ஸ் இன்று தீபாவளி மலருக்காக மனுஷ்யபுத்திரன் கேட்டுக்கொண்டதற்கிணங்க அனுப்பப்பட்ட குறிப்புகள் –முழுமையாக இங்கு.)

rural

1.கற்றுத்தருதலின் பிரச்னைகள்

கற்றல்-கற்பித்தல் தொடர்பான சொந்த யோசனை உள்ள ஆசிரியர்கள் யாரும் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை.அரசாங்கப் பயிற்சிப்பள்ளிகளில், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகளில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து இந்த கற்பித்தல் உத்தியோகத்துக்கு வந்து சேர்கிறார்கள்.என்ன மரியாதை இருக்கும் இந்தக் கற்றுத்தரும் பணியின் மீது அவர்களுக்கு?முதல் பிரச்னை இது.அப்புறம்....

டிசம்பருக்குள்ளே போர்ஷனை முடிக்கணும்

பிப்ரவரிக்குள்ளே ரிவிசன் டெஸ்ட்டுகள் மூணு முடிக்கணும்.

பசங்க சரியாப் படிக்கலேன்னா டீச்சர்ஸ் என்னா சார் பண்ண முடியும்? அதிகாரி எனக்கு மெமோ கொடுக்கறாரு?நான் போயி பரிச்சை எழுதவா?

சார்.. புரியுதா புரியலியாண்றது முக்கியமில்லை..ரிசல்ட்தான் முக்கியம்.போங்க போய் நல்லா டிரில் பண்ணுங்க பசங்களை..

சின்ன கிளாஸ் டீச்சர்ஸ் ஒண்ணுமே சொல்லித்தராமே ஒரு கூட்டல் கழித்தல் கூட சரியா கத்துத்தராம மேலே அனுப்பிடறாங்க..நாங்க டென்த் ப்ளஸ்டூ டீச்சர்ஸ்தான் சாக வேண்டியிருக்கு.. எல்லாக் கெட்ட பேரும் எங்களுக்குத்தான்..

ப்ளஸ் டூ விலே 200 பசங்க சார்.ஒரே ஒரு இங்கிலீஸ் டீச்சர் நான் மட்டும்தான்.மைக் வச்சுத்தான் பாடம் நடத்தறேன்.டெஸ்ட் வச்சா பேப்பர் திருத்தியே கை வீங்கிப்போகுது..கவர்ன்மெண்ட் ஸ்கூல் லட்சணம் இதுதான் பாத்துக்கிடுங்க..

இவை நம் பள்ளி வளாகங்களில் அன்றாடம் கேட்கும் உரையாடல்கள்.கற்றுத்தருதலின் பிரச்னைகளாக நம் ஆசிரிய நண்பர்கள் உணர்வது எல்லாம் இவற்றுக்குள் அடங்கி விடும். இவை எல்லாமே இன்னும் பல லட்சம் ரோபோக்களை உருவாக்கும் போராட்டத்தின் பிரச்னைகள்தாம்.கற்றுத்தருதலின் பிரச்னைகள் அல்ல. கல்வி என்பது இதுவல்லவே?

சார்..நாம ஸ்கூல் டூர் போனப்போ டில்லி வரைக்கும் அவ்வளவு தூரம் போனாலும் பூமி தட்டையாத்தானே சார் இருக்குது?ஆனா பூமி உருண்டைன்னு படிக்கிறோம்?

மிதக்கிற டெக்டோனியம் பிளேட்டுகளுக்கு மேலேதான் கடலும் நிலமும் இருக்குதுன்னா நாம் படகு வீடு மாதிரி இருக்கிறோமா?அப்படின்னா அசையாம இருக்கிறோமே எப்படி ?

நாமளும் அவங்களை மாதிரிதானே இருக்கிறோம்.அப்புறம் எப்படி நாம மட்டும் கீழ்ச்சாதி ஆனோம்?சாதின்னா என்னா?

கற்பித்தலின் சவால்களை நம் பள்ளிகள் இன்றுவரை சந்தித்தே இல்லை.குழந்தைகளாக கல்விச்சாலைகளுக்குள் நுழைந்து இளைஞர்களாக யுவதிகளாக அவர்கள் வெளியேறும் காலம் வரையான 15 ஆண்டுகளில் என்ன கற்றுத்தருகிறோம்?. கடந்த பல நூற்றாண்டுகளாக மனிதகுலம் சேகரித்து வைத்துள்ள அறிவு மற்றும் பண்பாட்டுச் சுரங்கத்திருந்து எவ்வளவை நம் குழந்தைகள் எடுத்துச்செல்லும் விதமாக கற்றுத்தருதல் நடக்கிறது?அதில் என்ன பிரச்னைகள்?அதை விவாதிக்க நம் நாட்டில் இப்போது அவசியம் இல்லை.கல்வியின் பொருளறிந்து கற்பித்தல் நடக்கும்போதுதானே நாம் அதுபற்றிப் பேசலாம்.

2.மாற்றுக்கல்வி முயற்சிகள்

கற்பவரும் கற்பிப்பவரும் சேர்ந்து விமர்சனப்பூர்வமாக இந்த உலகத்தையும் பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்ளும் நிகழ்வுப்போக்கே கல்வி.அது அதிகாரப்பூர்வமான கல்விச்சாலைகளில் நடக்காததால் இந்தப்புரிதலோடு உள்ளும் புறமும் நடக்கும் எல்லா முயற்சிகளையுமே மாற்றுக்கல்வி முயற்சிகள் எனலாம். வழமையான பள்ளிகளில் வழமையான பாட போதங்களைத்தாண்டி நடைபெறுகிற பல நிகழ்வுகள் மாற்றுக்கல்வி முயற்சிகள்தாம்.பேச்சுப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு திறன்களுக்கான போட்டிகள்,பள்ளிகளுக்கு எழுத்தாளர்கள் உள்ளிட்ட சமூக மனிதர்களை அழைத்துப் பேச வைப்பது.சமூகசேவைக்காக கிராமப்புறங்களுக்கு அழைத்துச்சென்று பத்துநாள் முகாம் போடுவது,என்.சி.சி முகாம்கள்,பள்ளி ஆண்டுவிழாக்களில் பங்கேற்பது என இவையெல்லாம் சரியான புரிதலோடு செய்யப்பட்டால் எல்லாமே மாற்றுக்கல்வி முயற்சிகள்தாம்.

இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சிலகாலம் மிகுந்த உற்சாகத்தோடு இரவுப்பாடசாலைகளைப் பல மாவட்டங்களில் நடத்தினர். பள்ளிக்கூடத்தின் பாட்த்திட்டமும் புத்தகங்களும் தேர்வு முறையும் பிரம்பும் அவர்கள் மனங்களில் ஏற்படுத்தியிருக்கும் அன்றாடக் காயங்களுக்கு மருந்தாக அந்த இரவுப்பாடசாலைகள் இருந்தன.அவற்றை நட்த்தியவர்கள் அதே தெருக்களைச் சேர்ந்த மூத்த அல்லது முன்னாள் மாணவர்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர்,நாகப்பட்டினம் மாவட்டங்களில் இந்தப் பாடசாலைகள் மிகப் பரவலாகவும் சிறப்பாகவும் நடைபெற்றன.

மதுரையில் அக்‌ஷரா,பட்டுக்கோட்டையில் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் பள்ளி ,சென்னையில் சில பள்ளிகள் ,திருச்சியில் எஸ்.ஆர்.வி.மெட்ரிக்குலேசன் பள்ளி எனச் சில முறைசார்ந்த பள்ளிகள் மாற்றுக்கல்வி முயற்சிகளில் ஈடுபடுகின்றன.அவை மிக முக்கியமான அனுபவங்களைத் தந்துள்ளன.பல நல்ல முன்னுதாரணங்களை அவை உருவாக்கியுள்ளன.பட்டுக்கோட்டைப் பள்ளியில் வீட்டுப்பாடம் ,பிரம்பு,அதிகமான தேர்வுகள் ஏதும் வைப்பதில்லை.மாறாக வேறுவிதமான வீட்டுப்பாடங்கள் தருகிறார்கள்.

பிள்ளைகளுக்கு நமது மரபான கலைகளான கரகாட்டம்,தப்பாட்டம் போன்றவற்றிலும் நாடகங்கள் நடத்துவதிலும் பயிற்சி அளித்துப் பல ஊர்களுக்குப் பள்ளி வேனிலேயே அழைத்துச்சென்று நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.பள்ளிக்கூடம் இப்படி கரகாட்ட்த்தில் அக்கறை காட்டினால் படிப்பை பிள்ளைகள் தாங்களே பார்த்துக்கொள்கிறார்கள். எந்த வன்முறையும் இல்லாமல் பத்தாம் வகுப்பில் பட்டுக்கோட்டை மாணவர்கள் 98 சதம் தேறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் தேசிய அறிவியல் நிறுவனத்தின் விருதை இப்பளி மாணவர்கள்தாம் பெறு வருகிறார்கள்.

திருச்சி எஸ்.ஆர்.வி.பள்ளி ஆண்டு முழுவதும் சமூகத்தை மானவர்களுக்கு அறிமுகம் செய்யும் கனவு மெய்ப்பட.. என்கிற நிகழ்வை நடத்தி வருகிறது.வெளிக்காற்று உள்ளே வரட்டும் என்கிற தலைப்பில் கோடைகாலப் பயிலரங்கை நட்த்துகிறது.

நான் அறிய மேற்கூறிய சில பள்ளிகளின் ஆசிரியர்கள் மட்டுமே ஜன்னலில் ஒரு சிறுமி,பகல் கனவு,ஜான் ஹோல்ட்டின் கல்வி சார்ந்த புத்தகங்கள் எல்லாம் வாசித்தவர்களாக பாவ்லோ பிரையர்,மாண்டிசோரி போன்ற பெயர்களை அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கல்வி முயற்சிகலும் மாற்றுக்கல்வி முயற்சிகளே.அறிவியல் இயக்கத்தின் துளிர் இல்லங்களில் ஒரு பைக் மெக்கானிக் சிறப்பு அழைப்பாளராக வந்து ஒரு பைக்கை அக்கு வேறு ஆணிவேறாகக் கழட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். இதுதானே மாற்றுக்கல்வி.சமூகத்தை விமர்சனப்பூர்வமாகப் பார்க்கப்பழக்குவது.கஞ்சி குடிப்பதற்கிலார்.அதன் காரணம் இவையெனும் அறிவுமிலார் வாழும் ஒரு சமூகத்தில் காரணம் எவை என்னும் அறிவை வழங்குவது மட்டுமே மாற்றுக்கல்வியாக இருக்க முடியும்.

சாதியக்கூறுகளும் மீறல்களும்

தமிழகக் கிராமங்களில் சாதி முதல் பார்வையில் பளிச்செனத்தெரிவது புவியியல் தளத்தில்.சாதி ரீதியான தெருக்கள்.ஒதுக்குப்புறமான தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள்.அங்கிங்கெணாதபடி இந்தப்புவியியல் விதிப்படிதான் இப்போதும் கிராமங்கள் இருக்கின்றன.(நகரங்களும் அப்படித்தான். அங்கே பளிச்சென்று தெரியாது. ஆனால் தோண்டிப்பார்த்தால் இப்புவியியல் ரீதியான சாதி அங்கும் தெரியும்).இதில் மீறல் என்பது சில வடிவங்களில் இப்போது வெளிப்படுவதைக் காண முடியும்.ஒன்று, ஊருக்குள் வரும் டவுண்பஸ் கிராமத்திலேயே நின்று திரும்பி விடுகிறது.சேரிவரை வருவதில்லை.ஆகவே சேரிமக்கள் கிராமத்துக்கு வந்து நிற்க நிழலின்றிக்காத்திருந்து பஸ் ஏற வேண்டும்.சேரிவரை பஸ் வரணும் என்று தலித் மக்களும், சேரிவரை போனால் பள்ளுப்பறையெல்லாம் முதல்ல ஏறி சீட்டுப்போட்டு உக்கார்ந்துட்டு வருவான் நாம ஸ்டாண்டிங்லே போகணும்.ஆகவே பஸ் சேரிக்குப்போக்க்கூடாது என்று கிராமத்து மக்களும் என பஸ் போராட்டமாக அது வடிவம் கொண்டு நிற்கிறது பல ஊர்களில்.சாதிக்காரர்கள் வந்தால் பஸ்ஸில் முதலில் உட்கார்ந்துவிட்ட தலித்துகள் எழுந்து அவர்களுக்கு சீட் கொடுக்கும் அடிமைத்தனமெல்லாம் இப்போது கிராமப்புறங்களில் முற்றாக ஒழிந்து விட்டது ஆறுதலான மீறல்.ஆனாலும் சேரி இன்றும் ஒதுக்குப்புறமாகத்தான் இருக்கிறது என்பது பருண்மையான புவியியல் உண்மை.

படிப்பு ,வேலைவாய்ப்பு காரணமாக பொருளாதாரரீதியில் சற்றே முன்னேறிய தலித் மக்களில் ஒரு சிறு பகுதியினர் கிராமத்தில் சொந்தமாக நிலம் வாங்கிப் பயிர் செய்ய முன்வருகின்றனர்.பன்னெடுங்காலத்து நிலத்தாகம் தீர அவர்கள் உற்சாகத்துடன் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.நேற்றுவரை கூலியாக இருந்தவன் இன்று சமமாக விவசாயம் செய்ய வந்துவிட்ட யதார்த்த்த்தை சீரணிக்க முடியாத உயர்சாதி மனோபாவம் வயற்காட்டில் நீர்பாய்ச்சும் வாய்க்கால் தகராறாக வெடித்துக் கொலைகள் வரை செல்கிற போக்கு தென் மாவட்டங்களில் பரவலாக உண்டு.இது சாதியின் இருப்புக்கும் மீறலுக்குமான அடையாளம்தான்.

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே என்றொரு தமிழ்த்திரைப்படப்பாடல் உண்டு.மயானக்கரையில் நின்று அப்பாடலை ஒருவர் பாடுவதாக வரும்.ஆனால் தமிழகத்தில் எல்லாச் சாதியினருக்கும் ஒரே சுடுகாடு என்பது இன்றும் உருவாகவில்லை.மாநகரத்து மின்மயானங்கள் ஒரு வேளை விதிவிலக்காக இருக்கலாம்.எல்லா கிராமங்களிலும் சாதிரீதியான சுடுகாடுதான்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக இதுபற்றி நாங்கள் ஒரு சர்வே நட்த்தியபோது அரசாங்கத்தின் செலவில் கட்டப்பட்ட மயானங்களுமே சாதிக்கு ஒன்றாகத்தான் கட்டப்பட்டுள்ளதைக் கண்டோம்.இன்னும் பல ஊர்களில் பஞ்சம சாதிகளுக்கு மயானக்கரை என்ற ஒன்ரே இல்லாத நிலை நீடிக்கிறது.

தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சியும் வட மாவட்டங்களில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் வந்த பிறகு உள்ளூரில் தீண்டாமைக்கு எதிராக அவர்கள் போராட முடியாவிட்டாலும் பெருநகரங்களில் மாநாடுகள் போடும் போதெல்லாம் சாதி மறுப்பு உணர்வு பொங்க ஒருவித மீறல் சமூக மனநிலைக்கு ஆளாவது நடக்கிறது.இது நாளை உள்ளூர் எதிர்ப்புகளுக்கும் பீறல்களுக்கும் இட்டுச்செல்ல ஒரு கருத்துநிலை முன் தயாரிப்பாக இருக்கும் என நம்பலாம். இட்துசாரிகளும் அருந்த்தியர் அமைப்புகளும் இணைந்து உருவாக்கியுள்ள தீண்டாம ஒழிப்பு முன்னணி போன்ற எல்லாச்சாதியினரும் கொண்ட பொது அமைப்புகள் சாதி எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதும் இப்போது துவங்கியுள்ளது ஆரோக்கியமான போக்கு ஆகும்.

4.இடம் பெயர்தல்

நான் சிறுவனாக இருந்த 50-60 களில் பஞ்ச காலங்களில் எங்கள் பகுதி மக்கள் மூட்டை முடிச்சுகளோடு தஞ்சாவூருக்குப் பஞ்சம் பிழைக்கப்போவது உண்டு.நான்கைந்து மாதங்கள் அங்குபோய் விவசாயக் கூலி வேலை பார்த்து நெல் மூட்டைகளுடன் ஊர் திரும்புவார்கள்.தஞ்சாலூரு போனா கருதறுத்துப் பிழைக்கலாம் காஞ்சீவரம் போனா காலாட்டிப்பிழைக்கலாம் என்று பாட்டி சொல்லுவாள்.இப்பழமொழிகள் நமக்குச் சொல்வது என்ன?ஏழை உழைப்பாளி மக்கள் பிழைப்புத்தேடி ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்தார்கள் என்பதைத்தான்.காலம் காலமாகத்தொடரும் இத்துயரம் இன்றும் தொடர்கிறது.

திருப்பூர் நகரம் ஒரு மினி தமிழ்நாடாகவே இருக்கிறது.எல்லா முனைகளிலிருந்தும் திருப்பூருக்கு பஸ்களின் வழித்தடங்கள் உண்டு.பிழைப்பு இழந்த தமிழகத்தின் கிராமப்புற ஏழைகள் படையெடுப்பது திருப்பூராக இருக்கிறது.அங்கே ஒரு நரக வாழ்க்கைதான் அவர்களுக்குக் காத்திருக்கிறது.என்றாலும் துரத்தும் ஊர்களை விட்டுப் பிரிந்தே தீரவேண்டியிருக்கிறது.நானறிந்த தென் மாவட்டங்களிலிருந்து திருப்பூர்,சென்னை புறநகர்ப்பகுதிகள்,ஓசூர்,ஆந்திர,கர்நாடக கல் குவாரிகள் எனப் பல திசைகளை நோக்கி மக்கள் இடம்பெயர்கிறார்கள்.பணம் புரட்ட முடிந்தவர்கள் வளைகுடா நாடுகளுக்குத் தப்பிச்செல்கிறார்கள்.

இது ஒருபுறம் எனில் தமிழகத்துக்குப் பிழைப்புத் தேடி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினசரி வந்திறங்கும் பீகார்,ஒரிஸ்ஸா மற்றும் ஆந்திர மாநில மக்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.கு.அழகிரிசாமியின் திரிபுரம் கதைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

” பட்டினிப்பட்டாளங்கள் ஏதோ நம்பிக்கையுடன் ஒரே சாலையில் எதிர் எதிர் திசையில் பிரயாணம் செய்வது பஞ்சத்தின் கோரமான அலைக்கழிவுகளில் ஒன்று “ 1949இல் கு.அழகிரிசாமி எழுதிய கதை இது.எந்த முன்னேற்றமும் இன்றுவரை இல்லையே என மனம் பதறுகிறது.சுதந்திரம் நமக்கு எதைத்தான் கொண்டு வந்ததோ தெரியவில்லை.

மத்தியதர வர்க்கத்து வாழ்வில் இடப்பெயர்ச்சி என்பது வெள்ளைக்காரன் காலத்திலிருந்து இருப்பதுதான்.விவசாயம் சார்ந்த வாழ்வை விட்டு அரசாங்க உத்தியோகம் சார்ந்து வாழப்புகும் அத்தனைபேருக்கும் இடப்பெயர்வு உண்டு.

ஆண்கள் இடம்பெயர்ந்து சம்பாதிக்கப்போவது சங்க காலம் தொட்டு இருப்பதுதான் -பொருள்வயின் பிரிவு.ஆனால் இன்று கூட்டம் கூட்டமாகப் பெண் குழந்தைகள் சுமங்கலித்திட்டம் என்பது போன்ற பல பேர்களில் ஊர்கடத்தப்பட்டு ஏதேதோ மில்களின் எந்திரங்களுக்கிடையே வதைபட்டுக்கொண்டிருக்கும் அவலம் நம் கண் முன்னே அரங்கேறிக்கொண்டிருக்கிறது.அவர்களின் கதைகளைக் கேட்டால் –சொல்லாமலே பெருமூச்சில் கரைந்துபோன கதைகள் ஓராயிரம் -நமக்கு ரத்தக்கண்ணீர்தான் கொட்டும்.தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் நாகை,திருவாரூர்,தஞ்சைப் பகுதிகளில் கிராமங்களில் இன்று இளைஞர்களே இல்லை.யுவதிகளும் இல்லை.எல்லாம் இடம்பெயர்ந்து டிருப்பூர் போன்ற பகுதிகளுக்குச் சென்று விட்டனர்.அரசின் விவசாயக்கொள்கையும் இறால் பண்ணைகளின் வருகையும் அவர்களைத் துரத்தி விட்டுள்ளதை வெறிச்சோடிக்கிடக்கும் அவ்வீதிகளில் காணலாம்.

மதுரை,திருச்சி பஸ் நிலையங்களில் ஓர் இரவை நாம் கழிக்க நேர்ந்தால் கூட்டம் கூட்டமாக மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் இப்பக்கமும் அப்பக்கமுமாக அலைவதைக் காணநேரும்.சனிக்கிழமைகளில் திருப்பூரிலிருந்து வரும் அத்தனை பஸ்களிலும் ரயில்களிலும் மக்கள் தொங்கிக்கொண்டு வருவதைப் பார்ர்க்க முடியும்.இடப்பெயர்வின் காட்சி வடிவமாக அது இன்றைக்கும் நடந்துகொண்டிருக்கிறது.ஆட்சிகள் நிலையாக இருக்கின்றன.அமைப்புகள் நிலையாக இருக்கின்றன.மக்கள்தாம் நிலையற்று வேரற்று அலையும் காலமாக நம் காலம் இருக்கிறது.

5.கிராமப்புறப்பெண்களின் கல்வி,சுகாதாரம்

என்னைச்சுற்றிலும் பீடிசுற்றும் பெண்கள்.கால்களை அகட்டி நடுவில் வட்டச்சுளகை வைத்துக்கொண்டு பீடி இலைகளோடு அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.எத்தனையோ தொழில்களில் எங்கள் பெண்கள் காலை முதல் மாலைவரை -செங்கல் சூளைகளில்,வயல் வெளிகளில்,தீப்பெட்டியில் பட்டாசுத்தொழிலில் -என உழைத்து வருகிறார்கள்.அவ்வத் தொழில்சார்ந்து உடல் உபாதைகள், வியாதிகள் அவர்களுக்கு வந்து சேர்கின்றன.பெண்ணாகப்பிறந்ததால் உண்டாகும் பிரச்னைகள் தனி.எல்லாவற்றுக்கும் மருந்து தேடி அவர்கள் போவதில்லை.போக நேரமில்லை என்பதுதான் முக்கியக் காரணம்.ஊருக்குள்ளேயே ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தால் போய் விடுகிறார்கள்.பக்கத்து ஊருக்குப்போய் வைத்தியம் பார்க்க நேரம் இருப்பதில்லை.இழுத்துக்கிட்டா கிடக்கு இப்பம் ஆஸ்பத்திரிக்குப் போக.. என்று வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஆரம்ப சுகாதார நிலையமும் அரசு மருத்துவமனைகளும் மட்டுமே அவர்களுக்கான நோய்நீக்கும் ஏற்பாடுகளாக உள்ளன.தனியார் மருத்துவமனைகள் பற்றி அவர்கள் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை.ஆகவே அரசு மருத்துவமனைகள் மிக மிக முக்கியமானவை ஆகின்றன.எளிய மக்களின் வாழ்வில் அவை வகிக்கும் பங்கு மகத்தானது.ஆயிரம் கோளாறுகளும் ஊழலும் உள்ளே இருந்தாலும் அரசு மருத்துவமனைகள் - கண் கலங்கிச்சொல்கிறேன் -எம் பெண்களின் குறைநீக்கும் கோவில்கள்தாம்.

இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.முதலில் வீடுகளில் பெண்களுக்கான சத்தான உணவுக்கு வழியில்லை.எல்லோருக்கும் உணவளித்தபின் தனக்கானதை அவள் எடுத்துக்கொள்கிறாள்.நகர்ப்புறத்து இந்தப் பண்பாடு இப்போது கிராமத்துக்கும் வந்துவிட்டது.பெரும்பாலான பெண்கள் ரத்தசோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபற்றி அறியாமலும் அறிந்தாலும் கவனிக்க வாய்ப்பின்றி வண்டி ஓடுற வரைக்கும் ஓடட்டும் என்று போய்க்கொண்டிருக்கிறார்கள்.

படிப்பு பரவலாகியுள்ளது.கிராமத்துப் பெண் குழந்தைகள் எல்லோருமே ஆரம்பப்பள்ளியில் சேர்ந்துவிடுகிறார்கள்.பால்வாடிக்குப் போகும் பழக்கம் இன்னும் சின்ன வயதிலேயே 2 வயசில் வந்துவிடுவதால் பள்ளி செல்லும் பழக்கம் வந்துவிடுகிறது.படிப்பைத் தொடர்வதில் இன்னும் பிரச்னை இருக்கிறது.பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தபிறகு பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கும் பழக்கம் வெகுவாக்க் குறைந்துள்ளது.உள்ளூரில் பள்ளி இருந்தால் அதில் இருக்கும் வகுப்புவரை படிப்பதில் சிக்கல் இல்லை.அருகமைப்பள்ளிகள்,பொதுக்கல்வி என்கிற நம் கனவுகள் நிறைவேறினால் அது பெண்கல்விக்குத்தான் பெரும் பேறாக அமையும்.இன்று கிராமத்துப்பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான தனிக் கழிப்பறைகள் கிடையாது.ஓலைத்தடுப்புத்தான் எங்கும் இருக்கிறது.மாத விலக்குக் காலங்களில் எம் குழந்தைகள் ஒதுங்க பள்ளிகளில் தனியான ஏற்பாடே கிடையாது. கழிப்பறை இல்லாத பள்ளிகளுக்கு கணிணி மட்டும் வந்து சேர்ந்து விடுகிறது.கேலிக்கூத்துதானே.

இன்னும் கல்லூரிகளுக்குப் போவது என்பது கிராமப்புறத்தில் உள்ள படித்த வர்க்கத்தினரின் பிள்ளைகளுக்கு மட்டுமே வாய்க்கிறது.மார்க் அடிப்படையில் சீட் என்னும் போது கிராமப்புறப் பெண்குழந்தைகள் கல்லூரிகளில் கிடைக்கும் பாட்த்தை எடுத்துப் படிக்க வேண்டிய நிலைதான் வாய்க்கிறது.ட்யூசன் வசதிகள் எதுவும் இல்லாத கிராமப்புறப் பெண்குழந்தைகளுக்கென எல்லாப் பாடப்பிரிவுகளிலும் (கல்லூரிகளில்)இட ஒதுக்கீடு செய்வது அவசியம்.

Saturday, January 1, 2011

என் சக பயணிகள்-3

அம்பைambai

நான் தோசைகளை வெறுக்கத்துவங்கியது அம்பையின் எழுத்துக்களைப் படிக்கத்துவங்கிய காலத்தில்தான்.அதற்கு முன்வரைக்கும் தோசை என்றால் கபகப வென்று அவ்வளவு ஆசையுடன் தட்டின் முன்னால் காத்திருப்பேன்.என் அம்மா கல்லில் தோசை வார்த்து அதை ஒரு இட்லிக்கொப்பரை மூடிகொண்டு மூடி வைத்துப் பின் மூடியைத்திறந்து தோசையை அப்படியே இரண்டாக மடித்து ,மடித்த தோசையின் மீது தோசைக்கரண்டியால் செல்லமாக ரெண்டு தடவு தடவி எடுத்து எங்கள் தட்டில் போடுவார்கள்.எங்கள் கிராமத்திலேயே இப்படித் தோசை சுடுவது எங்க அம்மா மட்டும்தான்.மற்ற வீடுகளிலெல்லாம் ராத்திரி 2 மணிக்கெல்லாம் தோசைகளைச் சுட்டு வட்ட வட்டமாக நார்ப்பெட்டியில் அடுக்கி விடுவார்கள் பெண்கள்.அப்பேர்ப்பட்ட தோசையும் ஆணாதிக்கத்தின் இன்னொரு வடிவமாக என் மனதில் அழுத்தமாகப் படிந்துவிட்டது-அம்பையின் வெளிப்பாடு கதையைப் படித்து முடித்த அந்த நிமிடத்தில். (வட்டமான ஆணாதிக்கம்).எங்கள் அம்மா சுட்டு நாங்கள் தின்ற தோசைகள் வயிற்றில் வலி உண்டாக்கின.

பெண்கள் வாழ்க்கை குறித்து ஆய்வு செய்ய வந்த ஆய்வாளரான ஒரு பெண்ணுக்கும் ஒரு குடும்பப்பெண்ணுக்கும் நடக்கும் உரையாடல்(வெளிப்பாடு-கதை):

“நான் தோசை சுடட்டுமா?

“அட, தோசை சுடத்தெரியுமா?”

”ஏன்,தெரியாதுன்னு நினைச்சீங்களா? உங்களை மாதிரி அவ்வளவு அழகா வராது.ஆனா சுடுவேன்.”

“என்ன மாதிரின்னா, என் வயசு என்ன உங்க வயசு என்ன?பத்து வயசு தொடங்கி சுடறேன்.நாப்பது வருஷத்திலே ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை....அம்மம்மா...”

ஒரு வருடத்துக்கு ஏழாயிரத்து முந்நூறு தோசைகள்.நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துத் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள்.இது தவிர இட்லிகள்,வடைகள்,அப்பங்கள்,பொரியல்கள், குழம்புகள்.எவ்வளவு முறை சோறு வடித்திருப்பாள்?எவ்வளவு கிலோ அரிசி சமைத்திருப்பாள்?இவள் சிரிக்கிறாள்.

“என்னா ரிப்போர்ட்டு எளுதணும்?”

“ பொம்பளைங்க பத்தி “

”பொம்பளைங்க பத்தி எழுத என்ன இருக்கு?”

“அதாவது அவங்க எப்படி வாழறாங்க?என்னவெல்லாம் வேலை செய்யறாங்க, அவங்க தங்களோட வாழ்க்கையைப் பத்தி என்ன நெனக்கிறாங்க..”

“என்ன நெனக்கிறாங்க? புள்ள பெறுதோம்.ஆக்கிப் போடுதோம். “

தோசையைப் புரட்டிப்போட்டது போல அன்று என் ஆண் மனதைப் புரட்டிப்போட்ட அரைப்பக்கம் இது.இன்று 2010இல் இன்னும் கூர்மையாக நம்மைத்தாக்கும் கதைகளைப் பெண் படைப்பாளிகள் பலர் எழுதித்தீர்த்துவிட்டார்கள் என்றாலும் நவீன தமிழ் உரைநடை இலக்கியத்தில் ஒலித்த முதல் பெண் குரல் அம்பையினுடையது அல்லவா?பெண் கோபத்தின் முதல் வெளிப்பாடு என்று சுந்தரராமசாமி மிகச்சரியாகக் குறிப்பிட்டார்.உண்மையில் இக்கதையை வாசித்த பிறகு பெண்களின் உலகத்தைப் பார்க்கும் என் பார்வை தலைகீழான மாற்றம் அடைந்தது.இதெல்லாம் கூடக் கவனிக்காமல் கடந்து வந்துவிட்டோமே என்கிற குற்ற உணர்வும் கூர்மைப்பட்டது.’பெண் பார்வை’ என்றால் என்ன என்பதை முதன் முதலாக எம்மில் பலருக்கு உணர்த்தியது அம்பையின் சிறுகதைகள்தாம்.அப்புறம்தான் நான் அலெக்ஸாண்டர் கொலண்டாயும் கிளார ஜெட்கினும் சிமாண்டிபுவாவும் அறிய வாய்த்தது.

70களில் கசடதபற இதழில் அம்பை எழுதிய ‘ அம்மா ஒரு கொலை செய்தாள்‘ கதை பெரும் அதிர்வலைகளையும் விவாதத்தையும் தமிழ் இலக்கியப்பரப்பில் ஏற்படுத்தியது.என் முன்னோடிகளான வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் (ஒரு போதும் தனித்தனியாக இந்த இருவரையும் பிரித்து என்னால் யோசிக்கவே முடிந்ததில்லை-க.சீ.சிவக்குமாரையும் பாஸ்கர் சக்தியையும் போல) நெருக்கமான நண்பர் அம்பை எனக் கேள்விப்பட்டிருந்ததால் அவர் எழுத்துக்கள் மீது வாசிக்கும் முன்பே ஒரு மரியாதை விழுந்திருந்த்து.

வயதுக்கு வரும் நாளின் மனக் குழப்பத்தோடு அம்மாவின் ஆறுதலான வார்த்தைகளுக்காகக் காத்திருக்கும் சிறுமி ஒருத்தியின் மனம் –அம்மா வந்ததும் அவள் கழுத்தைக்கட்டிக்கொண்டு- தன் அவஸ்தையைச் சொல்லக்காத்திருக்கும் அந்த மனம்-தன் உடம்பே தனக்கு மாறுதலாகப் படும் தவிப்பை –அதற்கான விளக்கத்தை அம்மா சொல்லுவாள் எனக்காத்திருக்கும் அவள் மனதை ‘ உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம் ’என்று சொல்லிச் சிதறடிக்கும் அம்மா உண்மையில் ஒரு கொலைதான் செய்தாள்.

அவருடைய முதல் தொகுப்பின் தலைப்புக்கதையான சிறகுகள் முறியும் ஆண் பெண் உறவு குறித்தும் பெண்ணின் விடுபட முடியாத் துயரம் குறித்தும் விஸ்தாரமாகவும் அழுத்தமாகவும் பேசியது.அந்தக்கதையை நான் வாசித்து முடித்த அந்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது.தன் நிலை பற்றிய சுய பிரக்ஞை ஏதும் இல்லாதவரைக்கும்தான் பெண் நிம்மதியாகத் தூங்க முடியும்.தன்னுணர்வு பெற்ற கணத்திலிருந்து சாயாவைப்போல அல்லது அவள் அம்மாவைப்போலச் சிரிப்பை இழந்து வெறிக்கும் பார்வையோடு மௌனத்தில் நிற்கும் நிலையே லபித்துவிடும்.ஆனால் தன்னுணர்வு பெறாமல் , இத்தகைய மனநிலையைக் கடந்து ஒரு கோப மனநிலையை நோக்கித் தன்னை நகர்த்தாமல் விடுதலைக்கு வேறு மார்க்கமில்லை.இது கடந்தே தீர வேண்டிய வலிதான்.இவ்வாறும் பலவித்மாகவும் யோசித்தபடி அன்று யாரோடும் பேசப்பிடிக்காமல் நெடுந்தூரம் தனியே நடந்து கொண்டிருந்தேன்.

கு.அழகிரிசாமியின் திரிபுரம் கதைக்குப் பிறகு அவ்வளவு மன அழுத்தத்தை நான் அடைந்தது அம்பையின் வெளிப்பாடு , வீட்டின் மூலையில் ஒரு சமையலறை மற்றும் கறுப்புக்குதிரைச் சதுக்கம்,காட்டில் ஒரு மான் போன்ற கதைகளால்தான்.

கு.அழகிரிசாமி,வண்ணநிலவன்,வண்ணதாசன் என்று என்னுடைய உலகம் உணர்ச்சிகரமானதாக இருக்க,அம்பை அறிவார்த்தமான கேள்விகளைக் கிளப்பியபடி எனக்குள்ளே பிரவேசித்தார். அறிவார்ந்த உலுக்குதல் மூலம் உள்நுழையும் அவரது கதைகள் பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை வாசக மனதில் பொங்கி எழ வைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளவை.அறிவின் தீட்சண்யமும் ஆழ்ந்தடங்கி உறைந்திருக்கும் உணர்வுப் பெருக்கும் சரியாகக் கலந்த ஒரு படைப்பு சக்தியாக நான் அம்பையை உணர்கிறேன்.இந்த நிதானம்தான் இன்றைய நம் படைப்பாளிகளிடம் தப்பி விடுவதாகப் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

தோழர் கந்தசமியின் துணைவி தன் மகன் லெனினைப் பற்றிப் பேசும் ஒரு பத்தி (கறுப்புக்குதிரைச் சதுக்கம்) :

”நல்ல புள்ளம்மா அவன்.” கையைப்பற்றிக்கொண்டாள்.” “இன்னும் நிஜார் போட்ட பையனாகவே தெரியிறான் எனக்கு.ஒருவாட்டி அவரை செயில்ல போட்டுட்டாங்க.பன்னண்டு வயசுப்பயையணை இழுத்துக்கிட்டு ஓடறேன் அங்க.அங்க அலைஞ்சு,இங்க போயி அவரப் பாக்குற வரிக்கும் ‘பசிக்குதம்மா’ன்னு சொல்லலையே பையன்! எப்படிப்பட்ட புள்ள அவன்! ”

முதல் முறை இந்தப்பகுதியை வாசித்தபோது வெடித்து அழுதுவிட்டேன்.எத்தனை ஆண்டுகள் கழிந்தும் ஒரு தாய்க்குத் தன் மகன் பற்றிய எந்த நினைவு முதலில் முந்திக்கொண்டு வருகிறது ! பசியாற்றிப் பசியாற்றித் தன் பசியும் தன் சுகமும் தன் சுயமும் அழிந்துபோன ஆயிரமாயிரம் தாய்களின் தியாகப்புகையில் மூச்சுத்திணறுகிறது.பால்நினைந்தூட்டும் தாய் மனதோடு கூடிய ஒரு சமூக அமைப்பு பற்றிய நம் நெடுங்கனவு குறித்தான ஏக்கம் பெருமூச்செரிகிறது.தாயும் சமூக அமைப்பும் ஒன்றெனக் கொள்கிறேன்.

அம்பையின் படைப்புகளில் முதலில் நம்மைத்தாக்குவது அவரது தெளிவான -அகண்ட பார்வை வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் -அவர் முன் வைக்கும் பெண்ணரசியல். இதெல்லாவற்றையும்விட பொதுவான பிரச்னைகளை ஒரு தன்னுணர்வோடும் தனிப்பட்டதான உணர்வாக மடைமாற்றியும் அவர் பேசும் விதம்தான் அவர் படைப்புகளைத் தனித்துவமிக்கவையாக்குகிறது.இது தமிழில் அபூர்வமான இடமாகும்.

வன்முறைக்கும் வன்புணர்ச்சிக்கும் ஆளாக்கப்பட்ட பெண் உறுப்புகள் மீது அவர் கொள்ளும் –கொட்டும்-கருணையும் வாஞ்சையும் நம் ரத்தத்தை உறையச் செய்கின்றன.நம்மால் (ஆண்களால்)அப்படியெல்லாம் யோசிக்கவே முடியாது.

“ஒவ்வொரு பெண்ணும் இன்னொருத்தியின் கண் அடியில் உள்ள கருவட்டங்களைத் தடவ வேண்டும்.பிரசவக் கோடுகளில் உள்ளங்கைகளை வைக்க வேண்டும்.புடைத்த நரம்புகளில் விரலை வைக்க வேண்டும்.வெடித்த கால்களைக் கைகளில் ஏந்த வேண்டும் .யோனியில் முகம் பதிக்க வேண்டும் “

இப்பத்தியில் இடம் பெறாமல் புறந்தள்ளப்பட்ட ஆணாக என்னை உணரும் இக்கணம் பெரும் குற்றச் சுமையை ஏற்றுகிறது.பல கதைகளில் பெண்களின் உடல்கள் கோடுகளோடும் கீறல்களோடும் விவரிக்கப்பட்டிருப்பது பெரும் மனத்திறப்பை ஆண் வாசகரிடம் ஏற்படுத்த வல்லதாகும்.

கதைகளுக்கு அப்பால் அம்பை இயங்கும் படைப்புத் தளம் மிக விரிந்து பரந்தது.அவர் நடத்தி வரும் ஸ்பாரோ (SPARROW- Sound and Picture Archives for Reasearch on Women) பெண்களுக்கான ஆய்வு மையத்தின் பணிகள் குறிப்பிடத்தக்கவை.அவர்களின் ஓரிரு நூல்கள் வாசிக்கக் கிடைத்தன.புதிய வெளிச்சம் தரும் முயற்சிகள் அவை.

இப்பூமியில் தோசைகளும் மார்ச்-8 உம் உள்ளவரை அம்பையின் கதைகள் நினைக்கப்படும்.ஆழ்ந்த அதிவுர்களை அவசியமான அளவுக்குத் தந்து கொண்டே இருக்கும்.

Saturday, March 13, 2010

மகளிர் தினமும் இரண்டு கதைகளும்

கதை-1

முதலில் ஒரு நாட்டுப்புற தெய்வத்தின் கதை.

தேனி மாவட்டம் கம்பம் வட்டாரத்தில் கவுண்டர் சாதியினரில் ஒரு பகுதி மக்கள் வணங்கும் தெய்வம் முத்தாலம்மன்.நாட்டுப்புற தெய்வங்கள் எல்லாமே ஒரு காலத்தில் நம்மோடு வாழ்ந்து கொலையாலோ தற்கொலையாலோ இறந்து போன மனிதர்கள்தான்.கொலை/தற்கொலை என்பதால் பெரும்பாலும் அவை பெண் தெய்வங்களாகவே இருக்கின்றன.நல்லதங்காள் துவங்கி இசக்கியம்மன், சீலைக்காரியம்மன் வரை எல்லாமே கொல்லப்பட்டவர்கள்தான்.இந்தக் கம்பத்து முத்தாலம்மனின் கதை என்ன என்று கள ஆய்வில் கிடைத்த கதை சற்று வித்தியாசமான கொலைக் கதையாக இருக்கிறது.

ஒரு 70-80 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் வாழ்ந்த முத்தாலம்மன் என்கிர கவுண்டர் சதியைச் சேர்ந்த பெண் ஒரு பறையர் சாதியைச் சேர்ந்த பையனை காதலித்திருக்கிறாள்.வீட்டாருக்குத் தெரியாமல் இருவரும் ‘ஓடிப்போய்’ வேறு ஊரில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.தகவல் தெரிந்த சாதி கம்பெடுத்துப் போய் அந்தப்பையனை அங்கேயே வெட்டிப்பொலி கொடுத்துவிட்டு முத்தாலம்மனை ஊருக்கு இழுத்து வந்திருக்கிறது.ஊரை குளக்கரையில் கூட்டி ஊர் நடுவே அவளுக்கு மரண தண்டனை விதித்தது சாதி.எல்லோரும் பார்த்திருக்க ஊருக்கு நடுவே அவள் தடியால் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறாள்.அப்போதானே ஊரில் எந்தப் பொண்ணுக்கும் இப்படி ஓடிப்போலாம் என்கிற தைரியம் வராது?

அவள் சாகும் முன் வெறித்துப்பார்த்த பார்வைக்கு அஞ்சி அவளை ஊர் சாமியாகக் கும்பிட்டு வருகிறது. ஆனால் எல்லாச் சாமிகளையும் போல அவளையும் கும்பிட்டால் அவளுடைய காதலை அங்கீகரித்தது போல ஆகி விடுமே. ஆகவே அவளுக்கு சிலை செய்து கோவில் கட்டிக் கும்பிடவில்லை ஊர். திருவிழா அன்று அவளை மண் சிலையாகச் செய்து அதே குளக்கரையில் அம்மண் சிலையை நிறுத்தி எல்லோரும் தடியால் அடித்தே அச்சிலையை உடைத்து நொறுக்கி விடுகிறார்கள்.ஒருநாள் சாமியாக அவள் இப்படி அன்று காதலித்த குற்றத்துக்காக ஆண்டுதோறும் அடிவாங்கி வருகிறாள்.அக்கோவிலில் வழிபாட்டு முறையாக இந்த தடியடி புனிதமாக நடைபெற்றுவருகிறது.

(பத்தாண்டுகளுக்கு முன்னால் மதுரையை மையமாகக்கொண்டு பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் தலைமையில் நாங்கள் நடத்திய பி.ஜி.வி.எஸ். கருத்துக்கூடத்தின் சார்பில் தொகுக்கப்பட்ட கதைகளில் இது ஒன்று.)

கதை -2

மேலே சொன்ன கதையைப்படித்து கிராமத்து முட்டாள் ஜனங்க என்று நம் வாய் கருத்தைச் சொல்லிவிடக்கூடாது.இந்தக் கதையையும் படிப்போம். இந்த மார்ச் 8 அன்று இந்துப் பத்திரிகையில் கடைசிப்பக்கம் வெளியான கதை.

சுஷ்மா திவாரி என்னும் 25 வயதுப் பெண்ணின் கதை அது.

Sushma

அவள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிராமண சாதிப்பெண்.மும்பையில் அவள் குடும்பம் வசிக்கிறது.அவள் கேரளத்தின் ‘கீழ்ச்சாதி’யான ஈழவ சமூகத்தைச் சேர்ந்த பிரபு என்கிற இளைஞனைக் காதலித்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டாள்.ஆத்திரமடைந்த சாதி அவளுடைய அண்ணன் திலிப் திவாரியின் ரூபத்தில் தடியெடுத்து நின்றது.தங்கையின் செயலால் ஆத்திரமடைந்த திலிப் சுஷ்மாவின் வீட்டுக்குச் செல்கிறான்.அங்கே அவள் இல்லை.கர்ப்பிணியான அவள் அப்போது வெளியே போயிருந்தாள்.அவளுடைய அன்புக்கணவன் பிரபு,பிரபுவின் அப்பா மற்றும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை அந்த இடத்திலேயே கொன்றுபோட்டுவிட்டு திலிப் வெளியேறினான் தன் கொலையாளிச் சகாக்களுடன்.

வெளியே போனதால் சுஷ்மா தப்பினாள்.அவள் அண்ணனை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்திப்போராடி மும்பை கோர்ட்டிலும் பின்னர் மராட்டிய உயர்நீதிமன்றத்திலும் போராடி அண்ணனுக்குத் தூக்குத் தண்டனை பெற்றுத்தருகிறாள்.

அவன் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறான்.சுப்ரீம் கோர்ட் தூக்குத் தண்டனை தேவையில்லை 25 ஆண்டு சிரை மட்டும் போதும் என்று கீழ்க்கண்டவாறு தீர்ப்பளிக்கிறது:

The Supreme Court, explaining its decision to revoke the death sentence, said: “It is a common experience that when the younger sister commits something unusual and in this case it was an inter-caste, intercommunity marriage out of [a] secret love affair, then in society it is the elder brother who justifiably or otherwise is held responsible for not stopping such [an] affair.”

It added: “If he became the victim of his wrong but genuine caste considerations, it would not justify the death sentence... The vicious grip of the caste, community, religion, though totally unjustified, is a stark reality “

சாதிய சமூகத்தில் பாவம் அண்ணன்காரன் என்ன ச்ய்வான்.ஆத்திரப்படத்தானே வேண்டியிருக்கிறது என்கிர தொனியிலான இத்தீர்ப்பு சாதி மீறிய காதலுக்கு எதிரான தீர்ப்பாக அமைந்துவிட்டது.சுஷ்மா மனம் தளர்ந்துவிடவில்லை.இன்னும் போராடிக்கொண்டிருக்கிறாள்.இது 1989ஆம் ஆண்டின் வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்துக்கே விரோதமான தீர்ப்பாகும். சமீபத்தில் பெங்களூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் நடத்திய இளம்பெண்கள் மாநாட்டில் பங்கேற்றுபேசிய அவர் நான் எனக்காகவும் என் 5 வயது மகள் த்ரிஷ்னாவுக்காகவும் மட்டும் போராடவில்லை.வரும் வரும் தலைமுறைக்காகப் போராடுகிறேன் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.அவர் வெற்றி பெற வேண்டும்.

கம்பத்து கட்டப் பஞ்சாயத்துத்தான் டெல்லியிலும் எதிரொலிக்கிறது. சட்டம் படித்துத்தான் நீதிபதிகளெல்லாம் கோர்ட்டுக்கு வருகிறார்களா?என்கிர கேள்வி நமக்கு எழுகிறது.இது உச்சநீதிமன்றம் அல்ல.உச்சிக்குடுமி நீதிமன்றம் என்று அன்று தந்தை பெரியார் சொன்னது 2010 லாவது பொய்யாக வேண்டாமா?

கண்களில் நீர்கசிந்தாலும் மனதை இறுக்கிக் கொண்டு போராடும் நம் அன்புமகள் சுஷ்மாவுடன் நம் எல்லோருடைய மனமும் துணை நிற்கிறது.

Monday, October 19, 2009

மு.சித்ராதேவிக்கு உதவுங்கள்

யார் சிரித்தால் தீபாவளி என்கிற என் முந்தைய பதிவைப் படித்துவிட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து அமிர்தவர்ஷினி அம்மா எனக்கொரு மின்கடிதம் அனுப்பினார்கள்.கவிதா என்கிற அந்த பட்டாசு விபத்தில் கைகளும் முகமும் சிதையுண்ட பெண்ணுக்கு அவருடைய வெளிநாடுவாழ் நண்பர்கள் மூலம் உதவிகள் செய்ய விரும்புவதாகவும், ஆகவே அந்தப்பெண்ணின் முழு முகவரி மற்றும் தேவைகள் பற்றி அறியத்தருமாறு கேட்டிருந்தார். உண்மையிலேயே தாயுள்ளத்தோடு அவர் எழுதிய வரிகள் என்னை நெகிழ வைத்தன. ஆகவே கவிதா என்று நான் குறிப்பிட்ட மு.சித்ராதேவி பற்றிய விபரங்களை அவருக்கு இ மெயிலில் அனுப்பாமல் இங்கேயே எல்லோருக்குமாகப் பதிவு செய்கிறேன்.சித்ராதேவியின் புகைப்படத்தையும் தந்துள்ளேன்.

சித்ராதேவிக்கு உதவ விரும்பும் உள் மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் நேரடியாக அவருடைய குடும்பத்தாரைத் தொடர்பு கொண்டு உதவிகள் செய்திட வேண்டுகிறேன்.

பெயர் – மு.சித்ராதேவி /வயது - 17

தாயார் –சுந்தராம்பாள். தந்தை – க.முனியசாமி

முகவரி – 109/44 பி. புதுத்தெரு,

அம்மன் கோவில்பட்டி பாகம்,சிவகாசி வட்டம்

விருதுநகர் மாவட்டம்,தமிழ்நாடு,இந்தியா

பின் கோடு-626123

கல்வித்தகுதி- ஏழாம் வகுப்பு (இடை நிற்றல்-விபத்து காரணமாக

முகத்தில் ஏற்பட்ட காயம் சக மாணவர்கள்

பயந்ததன் காரணமாக பள்ளி செல்லவில்லை)

உடன் பிறந்தோர்- மு.கார்த்தீஸ்வரி (24)-மணமாகிவிட்டது

மு.மகாலட்சுமி(22)-மணமாகவில்லை

மு.ராஜா (21)- மணமாகவில்லை-(ரூ 1200

மாதச்சம்பளத்துக்கு ஒரு மருந்துக்கடையில் பணி புரிகிறார்)

தந்தை திரு.க.முனியசாமி சிவகாசியில் ஒரு அச்சுக்கூடத்தில் தொழிலாளி அவருடைய மாத வருமானம் ரூ 2500/-

வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.

சித்ரா தேவிக்குத் தேவைப்படும் உதவிகள் – தொடர்ந்து அவரைப் பராமரிக்க வருமானம்-அவரால் கைகளைப் பயன்படுத்த முடியாது.

3 அறுவைச்சிகிச்சைகள் செய்தால் செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.மருத்துவச்செலவுகளுக்கு உதவி தேவை.தொடர்ந்து படிக்க வேண்டும் என்கிர ஆர்வமும் சித்ராதேவிக்கு இருக்கிறது.

யார் என்ன உதவி செய்ய முடியுமோ செய்யுங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

தொடர்புகளுக்கு : 91 9952500713

தோழர் சுகந்தி ( அனித்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்)-செல் -919442432659

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

Monday, October 5, 2009

யார் சிரித்தால் தீபாவளி?

35 36

அவள் பெயர் கவிதா.

18 வயதுப் பருவ மங்கை.

சந்தனக்கலரில் பூப்போட்ட சுடிதாரும் துப்பட்டாவும் அணிந்து அவள் மேடையேறினாள்.மேடையில் அமர்ந்திருந்த நாங்கள் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தோம்.ஒரு நிமிடத்துக்கு மேல் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை.இரு கரங்களையும் துப்பட்டாவுக்க்குள்ளேயிருந்து வெளியே எடுத்து வணக்கம் சொன்னாள்.அந்தக் கைகளையும் எங்களால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை.அவள் ஒரு இளம் பட்டாசுத்தொழிலாளி.

அவள் ஏழாவது வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது வீட்டில் அம்மாவோடு சேர்ந்து பட்டாசு சுற்றிக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு அவள் முகம் கோரமாகச் சிதைந்துபோனது.கைகளில் விரல்கள் எல்லாம் மெழுகைப்போல உருகி ஒரே சதைக்கோளமாகி இருந்தது.அது வீட்டில் நடந்த விபத்து என்பதால் சட்டப்படி நட்ட ஈடு ஏதும் பெற முடியவில்லை.கருணைத்தொகையாக 25000 ரூபாய் மட்டும் கிடைத்தது.போராடினால் இன்னும் கொஞ்சம் பணம் அதிகமாகக் கிடைக்கலாம்.

ஆனால் கவிதாவின் அம்மா சொன்னார் ” இந்தப்பொண்ணோட எதிர்காலம் என்னாகுமோ என்கிற கவலையிலே நான் நல்லா தூங்கி ஆறு வருசமாகுதுய்யா.இந்த முகத்தை உங்களாலேயே ஒரு நிமிசம்கூட உத்துப்பாக்க முடியலே .இவளை யாரு கல்யாணம் கட்டுவா?என் காலம் முடிஞ்ச பிறகு இவ கதியென்ன?இந்த பூமியிலே எங்கே போய் அவ இருப்பா சொல்லுங்க சாமிகளா...”

தீபாவளிக்கு நாம் கொளுத்துகிற பட்டாசுகளின் சத்தத்தில் இந்தக் கவிதாக்களின் அழுகுரல்கள் அம்மாக்களின் கதறல்கள் எல்லாமே அமுங்கித்தானே போய்விடுகிறது?மேடையில் இருந்த எங்களிடம் அம்மாவின் கேள்விக்கு எந்த பதிலும் இல்லை.என் கன்னங்களில் உருண்ட கண்ணீரையும் கூட மேடை நாகரிகம் கருதியோ என்னவோ அவசரமாகத் துடைத்துக்கொண்டேன்.

கவிதாவைப்போல பலர் மேடையேறினார்கள்.கை இழந்தவர்கள்.தலை முடியோடு மேற்பகுதி கருகியவர்கள்.கணவனை இழந்தவர்கள் என.. ..

*

கடந்த இரு மாதங்களுக்கு முன்னால் சிவகாசியைச் சுற்றிலும் அடுத்தடுத்து பட்டாசுத் தொழிற்சாலைகளில் வெடி விபத்துக்கள் நடந்து 20க்கு மேற்பட்ட தொழிலாளிகள் கொல்லப்பட்டனர்.தினசரி தென் மாவட்ட செய்தித்தாள்களில் வந்த அச்செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் தந்தன.ஆண்டுதோறும் தீபாவளிக்கு முந்தின மாதங்களில் எம் மக்களின் உடம்பில் திரி வைத்து வெடிக்கப்படும் இக்கொடுமை நடந்துகொண்டே இருக்கிறது. இது சகஜம்தானே என்று நினைப்பதுபோல நம் சமூகம் மௌனமாய்க் கடந்து போய்க்கொண்டே இருக்கிறது.

இம்முறை இந்திய தொழிற்சங்க மையமும் (சி.ஐ.டி.யு) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் சேர்ந்து இக்கொடுமைகள் குறித்த விரிவான கள ஆய்வினை மேற்கொண்டு அதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி சிவகாசியில் கடந்த 30-8-09 அன்று ஒரு பொதுவிசாரணைக்கு ஏற்பாடு செய்தனர்.பொது விசாரணையின் நீதிபதிகள் குழுவில் ஒருவனாக நானும் மேடையில் இருந்தேன்..

சிவகாசியைச்சுற்றிலுமுள்ள 200க்கு மேற்பட்ட கிராமத்து மக்கள் பட்டாசுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.அநேகமாக எல்லா கிராமங்களிலும் வெடி விபத்துக்களில் மரணமடைந்த/காயப்பட்ட/கை,கால் இழந்த தொழிலாளிகள் அல்லது அவர்கள் குடும்பத்தினர் இருக்கிறார்கள்.

பட்டாசுத்தொழிலில் குழந்தைகள் சர்வசாதாரணமாக ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.ஏராளமான குழந்தை உழைப்பாளிகள் கடந்த காலங்களில் சிவகாசியில் இதுபோன்ற விபத்துக்களில் கொல்லப்பட்டுளனர்.தொடர்ச்சியான தொழிற்சங்கங்களின் போராட்டங்களாலும் மனித உரிமை அமைப்புகளின் வழக்குகளாலும் இப்போது பட்டாசுத் தொழிற்சாலைகளில் வெளிப்படையாக எந்த முதலாளியும் குழந்தை உழைப்பாளிகளை சேர்ப்பதில்லை.ஆனாலும் காண்ட்ராக்ட் முறை அதிலும் வந்த பிறகு வீடுகளுக்கு எடுத்துச்சென்று பட்டாசு தயாரிக்கும்போது அங்கு குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது தொடரத்தான் செய்கிறது.

பட்டாசுத்தொழிற்சாலைகளில் விபத்துக்கு முக்கிய காரணமாக அப்பொது விசாரணையில் வெளிவந்த உண்மை- வெடிகள் தயாரிப்பதற்கான ரசாயனப்பொருட்கள் குறித்த எந்த அறிவும் பயிற்சியும் தரப்படாத தொழிலாளிகள் அப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவதுதான். போர்மேன் எனப்படும் ஒருவர்தான் ரசாயனக்கலவையைத் தயாரிப்பது மற்றும் ரசாயனக்கழிவுகளை பாதுகாப்பாக அழிப்பது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. சிவகாசியில் எந்தப் பட்டாசுத் தொழிற்சாலைக்குப் போனாலும் மத்திய அரசின் வெடிமருந்துத்துறை அளித்த முறைப்படியான ஒரு போர்மேன் சான்றிதழ் அவருடைய புகைப்படத்துடன் பிரேம் போட்ட கண்ணாடியுடன் ஆணியில் தொங்கிக்கொண்டிருக்கும்.ஆனால் அப்படத்தில் உள்ள போர்மேன் அங்கே இருக்க மாட்டார்.கேள்வி ஞானத்தின் அடிபடையில் ஒரு போர்மேன் அங்கே வேலை செய்து கொண்டிருப்பார்.

விசாரணை மேடையில் அப்படி சான்றிதழ் பெற்ற ஒரு போர்மேன் சாட்சி சொல்ல வந்தார்.அவருடைய சான்றிதழின் ஜெராக்ஸ் பிரதியை எங்களிடம் வழங்கிவிட்டுச் சொன்னார்.” அய்யா நான் எஸ்.எஸ்.எல்.சி படித்திருக்கிறேன்.ரொம்ப காலமாக ஒரு ஜவுளிக்கடையில்தான் வேலை செய்கிறேன்.எனக்கு ரசாயனம் பற்றி எதுவுமே தெரியாது.எனக்குப் பழக்கமான பட்டாசு ஆலை அதிபர் ஒருவர் என் சான்றிதழையும் புகைப்படத்தையும் வாங்கிச் சென்று இந்த போர்மேன் சான்றிதழைப் பெற்று அவரது தொழிற்சாலையில் தொங்க விட்டு வேறு ஒரு பயிற்சியற்ற நபரை வைத்து வேலை வாங்கிக்கொண்டிருக்கிறார்.பெரும்பாலான தொழிர்சாலைகளில் இதுதான் நிலை.நான் ஒரு நாள் கூட பட்டாசு ஆலைப்பக்கம் போனதில்லை” .உண்மையில் அவருடைய வாக்குமூலம் எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை.பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகவுள்ள ஒரு சமூகத்தில் என்னதான் நடக்காது? தொழிலாளிகளின் உயிரோடு விளையாடும் முதலாளிகளும் அதிகாரிகளும் என்ன தண்டனையும் பெறத்தகுதியானவர்கள்தான்.ஆனால் அவர்கள் எப்போதும் நிம்மதியாகவும் செல்வச்செழிப்போடும்தான் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சாட்சிகளாக வந்த வெடிவிபத்துக்களில் காயம் பட்டவர்கள், உடல் உறுப்புகளை இழந்தவர்கள் மேடையேறிச் சாட்சி சொன்ன்போது அதைத் தொடர்ந்து கேட்பதற்கே மனதோடு போராட வேண்டியிருந்தது.

சட்டங்கள் யார் மேல் தப்பு எந்த அளவுக்கு தப்பு எதனால் தப்பு அதற்கு எவ்வளவு தண்டனை யாருக்கு நிவாரணம் எவ்வளவு என்று எந்திரமாகப் போய்க்கொண்டே இருக்க ஆண்டுதோறும் எம் மக்கள் சிதைந்து கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.அவர்கள் எல்லோருக்கும் உதவிகளையும் ஆறுதலையும் அன்பையும் அரவணைப்பையும் நாங்கள் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையையும் ஊட்டத் துப்பில்லாத சமூகமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கொத்துக்கொத்தாக மக்கள் செத்து மடியும் இந்த அவலம் குறித்து ஊடகங்களும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.செத்த 3 நாளைக்கு நியூஸ் வரும்.அமைச்சர் வந்து ஆஸ்பத்திரியில் ஆறுதல் சொல்லும் புகைப்படத்தோடு அவர்களுக்கு பரபரப்புப் போய்விடும். விதர்பா விவசாயிகள் 60000 பேர் செத்தது கூட அவர்கள் முதல் பக்கச் செய்தியாக இடம்பெறத் தகுதி பெறவில்லையே.

அன்று மேடையை விட்டு இறங்கும் போது மானசீகமாக என் செருப்பைக் கழற்றி என் தலையில் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டேன்.மேடையில் பேசிய எம் வாய்ச்சொற்கள் அம்மக்களுக்கு என்ன பயனைத் தந்து விடப்போகிறது? மேடையில் நீதிபதிகள் குழுவில் ஒருவராக இருந்த சிஐடியுவின் தலைவர் தோழர் டி.கே.ரெங்கராஜன் கவிதாவைப் பக்கத்தில் அழைத்து தைரிய்மாக இரு பாப்பா நிச்சயமாக உனக்கு நிவாரணம் கிடைக்கப்பாடுபடுவேன் என்று சொன்ன ஒரு வரியில் நம்பிக்கை வைத்து என் குற்ற உணர்வை மூடிப் பஸ் ஏறினேன்.

ஜப்பான் நாட்டில் 1945இல் அமெரிக்காக்காரன் ஹிரோஷிமா,நாகசாகி நகரங்களின் மீது குண்டு வீசினான்.பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்தார்கள்.இன்னும் தப்பியவர்கள் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களாக முகம் சிதைந்து மூக்கு அழுகி காதுகள் இழந்து என்று நடைப்பிணங்களாக வாழ்ந்தார்கள்.இன்னும்கூட வாழ்கிறார்கள்.அவர்களை ஹிபாகுஷ் மக்கள் என்று ஒரு பெயரிட்டு அழைக்கிறார்கள்.சிவகாசியிலும் அப்படியான ஹிபாகுஷ் மக்கள்தான் கவிதாவைப்போன்றவர்கள் என்பதை உலகம் இன்னும் அறியாமல் இருக்கிறது.ஹிபாகுஷ் போல தனியாக ஒரு பெயர் சூட்டி இம்மக்களையும் அழைக்க வேண்டும்.

சிவகாசிக்கு குட்டி ஜப்பான் என்று ஒரு பெயர் உண்டு என்பதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.எவ்வளவு பொருத்தமான பெயர்?

கவிதாவின் முகம் இன்றுவரை என்னைத் துரத்திக்கொண்டே இருக்கிறது-தூக்கத்துக்கு நடுவிலும் பஸ்,ரயில் பயணங்களுக்கு நடுவிலும் என. உனக்கு என்னால் என்ன செய்துவிட முடியும் என்று தெரியவில்லை மகளே .... இந்த நாலு வரிகளை எழுதுவதைத் தவிர?

( இந்தக் கள ஆய்வினையும் பொது விசாரணையையும் இரு அமைப்புகள் ஏற்பாடு செய்தபோதும் அதற்காக மனக்கொதிப்புடன் பணியாற்றிய தோழர்கள் சாமுவேல்,சுகந்தி,சேகர்,தேவா,சின்னப்பராஜ் போன்றவர்களை நினைத்துப்பார்ப்பது அவசியம்)

Thursday, June 11, 2009

ஏப்ரல்மாதச் சூரியனைப் பிழிந்த சாறு..

solitude-1 நேற்றுத் தற்செயலாக பழைய ‘வேர்கள்’ இதழ்களைப் (பைண்டிங்) பார்த்துக்கொண்டிருந்தபோது இரண்டு விளம்பரங்கள் கவனத்தை ஈர்த்தது.அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத்தோன்றியது.அந்த விளம்பரம்:

I

செப்டம்பர் 97 இல் வெளிவருகிறது

கமலாதாஸ் கதைகள்

கமலாதாஸின் படைப்புக்கள் சில சமயம் ஒரு பழைய ஆல்பத்தைப்போல

இழந்துபோன துக்கத்தில் நம்மை ஆழ்த்துகிறது.வேறு சமயம் ய்தேச்சையாய் நம்மைக் கடந்துபோகும் ஒரு காட்சியமைப்பாய் சுற்றுப்புறம் பற்றி நமது கருத்தாக்கங்களைக் காயப்படுத்துகிறது.இளமைக்கால நினைவுகளின் அழுத்தி வைக்கப்பட்ட தேம்பலில் கரைந்து போகும் தருணத்திலும் ஓர் அறுவைச்சிகிச்சை நிபுணணின் உற்சாகத்தோடு காதல், தாம்பத்தியம் பற்றிய அங்கீகரிக்கப்பட்ட நம்பிக்கைகளைக் கீறி அறுக்கும் வேளையிலும் முற்றிலும் தனித்துவத்தை வெளிக்கொணர்கிறது.

1956ல் இருந்து கமலாதாஸ் எழுதிய படைப்புகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பு

ஒரு குறு நாவலும் பதின்மூன்று சிறுகதைகளும்

மொழிபெயர்ப்பு : நிர்மால்யா

பக்கங்கள் 168 விலை ரூ.45

இது ஒரு வேர்கள் வெளியீடு

II

கமலாதாஸ் கதைகள்:தமிழில் நிர்மால்யா

வௌவால்கள் சுற்றித்திரியும் பழைய நாலப்பாட்டு வீட்டின் அந்தி வேளைகள்,தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட ஒரு வேலைக்காரிப் பெண்ணின் விடை தெரியாத நிசப்தம்,படுக்கையில் காட்டெருமையின் வீரியத்தை வெளிப்படுத்தும் காதலன் உடம்பின் அடங்காத மூச்சிறைப்பு,கிளாசில் பிழிந்தெடுத்த ஆரஞ்சுச் சாற்றைப் போன்ற ஏப்ரல் மாதச்சூரியன்,நிர்வாண மனிதர்கள் நடனமாடும் பம்பாய் தெருவில் கோடைக்கால இறுதியில் வந்து சேரும் சிறிய மழை,மரணத்தைக் கண் முன் பார்த்த நாட்களில் தலையில் அறைந்தவாறு வரும் மருத்துவமனைப் படுக்கையின் மருந்து நெடி , மஞ்சள் துணி போர்த்தப்பட்ட நெருக்கமானவரின் பூதவுடல் போன்ற சுடர்விடும் நினைவுச்சித்திரங்களிலிருந்து உந்துதலும், உயிர்ப்பும் பெற்ற பதினான்கு சிறுகதைகள்

மேற்கண்ட இரு விளம்பரங்களை கமலாதாஸ் காலமாகி நிற்கும் இந்த நாட்களில் தற்செயலாகக் காணக்கிடைத்த இந்த நிமிடம் அபூர்வமான ஒரு மனநிலையைத் தந்துகொண்டிருக்கிறது.

வேர்கள் என்கிற பத்திரிகை மற்றும் அது முன்வைத்த இலக்கிய இயக்கம் இவ்விரண்டின் மீதும் இந்த நிமிடத்தில் மீண்டும் அளப்பரிய மரியாதை உண்டாகிறது.இராமலிஙம் என்கிர அந்த மகத்த்தான மனிதரும் அவரோடு துணை நின்ற நெய்வேலி நண்பர்களும் 90களில் நடத்திய வேர்கள் இயக்கம் இடையில் நின்று போனாலும் அது இதோ இந்த நிமிடத்திலும் மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்தியபடி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.ஆகவே சிறு சிறு கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு சமயங்களில் மனம் சோர்வடைந்துபோகும் அன்பர்கள் மனம் துவள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.நமக்கு என்றைக்கும் அழிவில்லை.

மேலே கண்ட விளம்பரப்படி கமலாதாசின் கதைகளை வேர்கள் வெளிக்கொண்டு வர முடியவில்லை.வேறு யாரேனும் கொண்டு வந்தார்களா என்பதும் எனக்குத் தெரியவில்லை.வந்திருந்தால் அது இன்று மீண்டும் மறுபதிப்பு வந்தால் நல்லது.விபரம் தெரிந்த நண்பர்கள் தெரிவிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.புத்தகம் வராவிட்டாலும் கூட இந்த விலம்பரத்தின் வரிகள் கமலாதாசின் எழுத்தின் சாரத்தைப் பிழிந்து தந்துள்ளன எனலாம்.நிர்மால்யாதான் இவ்வரிகளை எழுதியிருக்க வேண்டும்.அவர் இப்போது எங்கிருக்கிறார் என்ன செய்துகொண்டிருக்கிரார் என்பதும் நான் அறியமாட்டேன்.

ஆனால் மேற்கண்ட இரண்டாவது விளம்பரத்தில் உள்ள ஒரு வரி மாற்றப்பட வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.கிளாசில் பிழிந்தெடுத்த ஆரஞ்சுச் சாற்றைப்போன்ற ஏப்ரல் மாதச் சூரியந் என்கிற வரிதான் அது. அவருடைய ஒரு கவிதை இப்படித்துவங்கும் The April sun squeezed like an orange in my glass –அவ்வரியிலிருந்தே இவ்விளம்பர வரி எடுக்கப்பட்டதெனில் மொழிபெயர்ப்பு சரி செய்யப்படவேண்டுமல்லவா?

சரி.

கமலாதாசின் கவிதை ஒன்று ‘வேர்கள் ‘அக்-டிச-96’ இதழில் வந்தது.அதைக் கீழே தருகிறேன்:-

சில வாசகர்களோடு

இரண்டு வார்த்தை

போனிலும் கடிதத்திலும்

விஷம் கக்குபவர்களே

என்னை வெறுப்பவர்களே

உங்கள் இகழ்ச்சியை நான்

கடந்து வாழ்கிறேன்.

என் கவிதை கோழி –எச்சத்தைத் தண்ணீராய் கழித்ததைப்

போல இருக்கிறது என எழுதி அறிவித்த நண்பரே,

என் புகைப்படம் தனக்கு சுய இன்பம் செய்ய

கொஞ்சமும் உதவவில்லை எனத் தெரிவித்த

அறியப்படாத இளைஞனே

உங்கள் மனதின் அகோரத்தையும்

நான் கடந்து வாழ்கிறேன்

என் இலக்கியப்படைப்புகள் குறிக்கோள் இல்லாதவை

எனத் தெரிவிக்க மட்டும்

மதியம் உறங்கிக் கொண்டிருந்த

என் கணவரை எழுப்பி என் வீட்டு

வாசற்படிக்கு வந்த அறிவுஜீவி,

நான் உங்கள் ஏளனத்தையும் கடந்து வாழ்கிறேன்.

ஆம்,இதோ நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

சிரிக்கிறேன்,பாடுகிறேன்,உறங்குகிறேன்

தூக்க மாத்திரைகளைத் தேடி மருந்துக்கடைகளில்

ஏறி இறங்குவதில்லை நான்

நீங்கள் ஒவ்வொருவரும் மண்ணாகிவிடும்போதும்

மிஞ்சியிருப்பேன் நான்

மையால் கருமைப்படுத்திய என் இரு விழிகளுக்கும்

தொலைவில்-வெகு தொலைவில், ஒரு வற்றாத

நீர் நிலையைப்போல என் கண்ணீர்

தேங்கி நிற்கிறது

இருப்பினும் நான் அழுவதை நீங்கள்

காணமாட்டீர்கள் ஒரு போதும்.

(தமிழில்-நிர்மால்யா)

கவிதை எழுதவோ அல்லது ஏது காரணமாகவோ பொது வெளியில் வந்து உலவும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது போன்ற ஒரு கவிதை எழுத அவசியம் இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கிறேன்.எவ்வளவு மோசமான ஓர் ஆணாதிக்கச் சுழலில் நாம் வாழ விதிக்கப்பட்டிருக்கிறோம்.

வாழ்க வேர்கள்!

வாழ்க கமலா அக்கா!

Sunday, April 12, 2009

அரிவால் அரிவாளாகிக் கதிரான கதை

soviet woman

ஆதியிலே வார்த்தை இருந்தது என்று ஆன்மீகமாகப் பேசிக்கொண்டாலும் சொற்கள் மனித உடல் வந்த பிறகு குரல்-குரல் நாண்கள்-மூளை எல்லாம் வந்த பிறகு ரொம்ப காலம் கழித்து வந்த ஜூனியர்தான்.சரி.பீடிகையை இழுக்காமல் மேட்டருக்கு வந்து விடுகிறேன்.தேர்தல் பிரச்சாரத்துக்காக பாடல்கள் தயாரிப்பது/உருவாக்குவது/படைப்பது அப்புறம் அவற்றை ( உருப்படிகள் என்று சு.ரா தன் கடைசி நாட்களில் படைப்புகள் பற்றிக் குறிப்பிட்டது ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது) கேசட் அல்லது சிடியில் பதிவு செய்வது என்கிற வேலையைப் பல ஆண்டுகளாகச் செய்து வந்தாலும் சமீப காலங்களில் Recording theatre கள் பெற்றுள்ள டிஜிட்டல் தொழில்நுட்ப மாயத்தில் சொற்கள் பெற்றுள்ள treatment – மற்றும் சொற்கள் நம்மோடு கொண்டுள்ள உறவின் இணைப்புகள் பன்முகப்பட்டு நிற்பது போன்றவற்றை வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன. ஒலிபதிவுக்கூடத்தில் எப்பக்கமும் தப்ப முடியாத துல்லியத்துடன் சொற்கள் நம்ம்முன் பிரசன்னமாகின்றன.சரி. மகனே மேட்டருக்கு வா.

கடந்த சில பத்தாண்டுகளுக்கு மேலாகவே இயக்க மேடைகளில் பாடிவரும் மக்கள் செல்வாக்குப்பெற்ற கலைஞர்கள் சிலருக்கு சில சொற்களுடன் பிடிபடாத ஒரு உறவு இருப்பதும் சில எழுத்துக்களை அவர்களால் ஒருபோதும் சரியாக உச்சரிக்கவே முடியாது என்பதும் தெரிய வந்தது.

அருந்ததிமக்கள் எழுச்சியின் சின்னம்

அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்

என்ற வரியை அவர் பாட வேண்டும். அரிவாள் என்று அவரால் பாடமுடியவில்லை.அரிவால் என்றே பாடிக்கொண்டிருந்தார்.அதனால் டேக் ஓகே ஆகாமல் ரீடேக் ரீடேக் என்று போய்க்கொண்டிருந்தது.நேரம் ஆக ஆக தியேட்டர் வாடகை பில்லும் ஏறுமல்லவா? ஒரு உண்டியல் பார்ட்டி எவ்வளவு சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் என்பதைச் சொல்லி விளக்க வேண்டியதில்லை. ஒரு ‘ல்’ என்கிற எழுத்து ‘ள்’ ஆகாத சிக்கலில் 600 ரூபாய்க்கு மேல் மீட்டர் ஓடிக்கொண்டிருந்தது.இந்த 600 ரூபாயை வசூலிக்க நம் தோழர்கள் எத்தனை வீட்டு வாசலில் நின்று உண்டி அடித்திருப்பார்கள் என்கிற பதட்டம் எனக்கு அதிகமாகிக்கொண்டிருந்தது. சொல் காசாகவும் சொல் உண்டியலின் குலுக்கலாகவும் சொல் தோழர்களின் புழுதிபடிந்த கால்களாகவும் உருமாற்றம் பெற்று மனதில் விதவிதமான உணர்வலைகளைக் கிளப்பியபடி ஓடிக்கொண்டிருக்க கண்ணாடிக்கு அப்பால் அந்தத்தோழர் அரிவாலை அரிவாளாக்கப் போராடிக்கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் நானும் லகர ளகர ழகரப் பிரச்னை உள்ள தோழர் அவர் என்று நினைத்து

பள்ளம்

வள்ளம்

குள்ளம்

என்று அவருக்கு விளக்கிக் கொண்டிருந்தேன்.அவர் பள்ளத்தைப் பள்ளமென்றார்.கள்ளத்தைக் கள்ளமென்றே சொன்னார்.அதே வேகத்தில் பாடுங்க என்று சொன்னதும் அரிவால் என்றே மாறா நிலையில் நின்றார்.பேசும்போது சரியாக உச்சரிப்பார்.பாடும்போது மட்டும் அவருக்கு ளகரப் பிரச்னை இருக்கிறதுபோலும் என்று முதலில் நினைத்தேன். ஆனால்..

உள்ளத்தின் அடியாழத் தில்நின்று-எம்

உதிரச் செங்கொடி அசைகிறது

என்கிற வரிகளை உச்சரிப்பு சுத்தமாக -மூன்று லகரங்களையும்- அலட்சியமாகப் பாடி எம்மை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தினார்.என்ன பிரச்னை அவருக்கு? எந்த இடத்தில் பிரச்னை? என்று தலை குழம்பிய அந்தப்போராட்டத்தினூடே ஒரு மின்னல் வெட்டியது எனக்கு.

’அரிவாள் மற்றும் சுத்தியல் தானே’

என்று ஒரு வரி எழுதி இதைப்பாடுங்க தோழர் என்று கொடுத்தேன். எந்த உச்சரிப்புப் பிழையும் இல்லாமல் கச்சிதமாக அவ்வரியைப் பாடிவிட்டார்..உடனே இன்னொரு வரியை வேகமாக எழுதி இதைப்பாடுங்க என்றேன்,

‘அந்த ஆழ் கிணற்றுக்குள் விழுந்தே’

என்ற வரியை

‘அந்த ஆள் கிணற்றுக்குள் விழுந்தே ‘ என்று பாடினார்.அப்பாடா என்று என் மனக் குழப்பம் தீர்ந்தது.இதுதானா உன் பிரச்னை தோழா?

எனக்கு அண்ணன் கந்தர்வன் பல கூட்டங்களில் ரசித்துச் சொன்ன ஒரு சோவியத் கதை உடனே நினைவுக்கு வந்தது.

கூட்டுப்பண்ணை விவசாயத்தில் சோவியத் நாட்டிலேயே மிக அதிக விளைச்சல் செய்த பெண்மணி என்கிற லெனின் விருது பெற்ற பெண்ணைப் படமெடுக்க பத்திரிகையாளர் ஒருவர் அந்தக்கிராமத்துக்கு வருகிறார்.அந்தப் பெண்மணியிடம் பேட்டியெல்லாம் முடித்து புகைப்படம் எடுக்கும் கட்டம் வருகிறது.அவருடைய குழந்தைகளோடு நிறுத்தி ஒரு படம் கணவரோடு நிறுத்தி ஒரு படம் ஒட்டுமொத்தக் குடும்பத்தாரோடும் சேர்த்து ஒரு படம் தெருவில் வைத்து ஒரு படம் ஊர்மக்களைச் சுற்றிலும் உட்காரவைத்து நடுவில் இவரை நிற்க வைத்து ஒரு படம் ஊர்த்தலைவரோடு ஒரு படம் என்று படங்களை எடுத்துத் தள்ளினார். ஆனால் அவர் எதிர்பார்த்து வந்த ஒரு படம் மட்டும் கிடைக்கவில்லை- அமையவில்லை. என்ன எதிர்பார்த்து வந்தோம் என்ன கிடைக்கவில்லை என்பது அக்கலைஞனுக்குப் பிடிபடவில்லை. ஆனால் இத்தனை படத்திலும் கிட்டாத ஒன்றுதான் தான் தேடி வந்த படம் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது அவனுக்கு. துக்கத்தில் மனம் அமிழ்ந்து கொண்டிருக்க அவன் படங்களை மேலும் ஒரு ரோல் எடுத்து முடித்தான்( அதுதானய்யா கலைஞன் வாங்கி வந்த சாபம்! எந்நாளும் துன்பத்தில் உழலும் சாபம்! எதற்கென்றே பிடிபடாத துயரத்தில் உழலும் சாபம்)

கடைசியில் அவன் துக்கத்துடன் விடை பெற்றான்.அப்பெண்மணியும் அவரது கணவரும் ஊர் எல்லை வரை வழியனுப்ப வந்தனர்.வயல் வெளிகளைத் தாண்டி பஸ் நிற்கும் பிரதான சாலை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அப்போது அக்கலைஞன் வயல் வெளியில் அப்பெண்மணியை நிறுத்தி ஒரு படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டான். உடனே ஓ என்று உற்சாகமாகத் தலையாட்டிய அப்பெண்மணி ஒரு குழந்தையைப்போல வயலின் நடு மையத்துக்கு ஓடினாள்.தன் செல்லமான பிள்ளைகளை அரவணைத்துத் தூக்குவது போல கோதுமைக் கதிர்களை வாரியணைத்துக்கொண்டு இப்போ எடுங்க படம் என்றாள்.கலைஞன் கேலிராவின் லென்ஸ் வழியாக க்ளோஸ்-அப்பில் அவலளப் பார்த்த அக்கணம் அவன் உடம்பே அதிர்ந்தது.இதுவரை அவன் பார்த்தும் பேசியும் வந்த பெண்மணி அங்கே இல்லை. வாரியணைத்த அக்கதிர்களுக்கு நடுவே முகத்தில் அத்தனை சோபையுடன் அத்தனை சிரிப்புடன் முகத்தின் ஒவ்வொரு துணுக்கிலும் ஒளிந்து நின்றிருந்த சிரிப்பெல்லாம் ஒருசேர வெளிப்பட்டு நின்ற பேரழகுடன் அப்பெண்மணி சுடர்ந்துகொண்டிருந்தாள்.இதுதான் இதுதான் என்று மனம் துடிக்க கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிய பார்வை மறைத்தபோதும் குத்து மதிப்பாக அவளுடைய முகத்தைக் குறிவைத்துப் படங்களை எடுத்தான்.

கதிர்களோடு அதாவது தன் உழைப்பின் குழந்தைகளோடு நிற்கும்போது மட்டுமே வெளிப்படும் அந்தப்பேரழகு! அந்தப் பெருமிதம்!

அந்த அரிவால் தோழர் பிரச்னை அற்புதமான இந்தக்கதையை நினைவுபடுத்திவிட்டது.மனித மனம் எப்போது யாருடைய நினைவைக் கிளறி விடும் எதுபற்றிய நினைப்பைத் தூண்டிவிடும் என்று திட்டவட்டமாக யாரால் சொல்ல முடியும்? இப்பதிவில் நான் எழுதத்திட்டமிட்டது சொற்கள் பற்றித்தான்.ஆனால் பாருங்கள் சோவியத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டேன்.

கதிரைப்பறித்தால் அவள் சிரிப்பு போய்விடும். அரிவாளையும் சுத்தியலையும் அடுத்தடுத்து வைத்தால் இவரின் உச்சரிப்பு போய்விடும் என்று பசுவைப் பனை மரத்தில் கட்டி இப்போதைக்கு முடிக்கிறேன்.எழுத நினைத்த சொற்கள் பற்றிய பதிவை நாளை எழுதி முடிக்க முயற்சிக்கிறேன்.நன்றி. வணக்கம்.

Monday, March 30, 2009

பெண் பாவம் நம்மைப் பின் தொடர்கிறது...

samiyal1copy

 

ஆண்களுக்கான சமையல் குறிப்புகள் என்று ஒரு புத்தகம் எழுதினேன்.
மறுபதிப்பில் அதை ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது என்று பேர் மாற்றம்
செய்து வெளியிட்டேன்.இரண்டு பதிப்புகளும் நல்ல விற்பனைதான்.

சேலத்தில் தோழர்கள் அசோகன்,ஷேக் அப்துல்லா , கவிஞர் நிறைமதி முன் முயற்சியில்
ஆண்களுக்கான சமையல் பட்டறை ஒன்று நடத்தினோம்.80 பேர்வரை
பங்கேற்றனர்.

முதலில் இந்தப் புத்தகத்தலைப்பும் பட்டறை பற்றிய அழைப்பதழும்
புன்சிரிப்பை கேலியான கருத்துக்களை வரவழைத்தாலும்
பலர் சீரியஸ்ஸாக பெண்களின் வேலைப்பளு,ஏமாற்றித்திரியும்
ஆண்மனம் பற்றியெல்லாம் மனம் திறந்து பேசத்துவங்கினார்கள்.
பழைய காலம் போல இல்லை .பெண்கள் எங்கே அடிமையாக இருக்கிறார்கள்?
ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.வீட்டில் அவள்தான் ராணி
என்கிற அறுதப்பழைய ஆண்களின் திமிரான பொய்களை இப்போது பேசுவதில்லை.
பெண்களின் நிலைமை மோசம்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

அடேயப்பா இந்த இடத்துக்கு ஆண்மனதைக் கொண்டு வந்து
சேர்ப்பதற்கு எத்தனை பெண்விடுதலை இயக்கங்கள் எவ்வளவு போராட்டங்கள்
எத்தனை எரிப்புகள்  எத்தனை வழக்குகள் எத்தனை உயிர்ப்பலிகள்?
எல்லாம் பல ஆயிரம் ஆண்டுகள் நடந்து முடிந்தபின் ஆண் மனம் இளகி வந்து
ஆமாமா  பெண்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளும்  இடத்துக்கு
வந்து சேர்ந்திருக்கிறோம்.இது ஒரு முன்னேற்றம்தானா என்றால் ஆம் என்றுதான்
சொல்லியாக வேண்டும்.ஆனால் இந்த இம்மி அசைவுக்கு இத்தனை காலமா?

இந்தப்புத்தகத்தை எழுத எனக்கு உந்துதலாக இருந்தது சமைப்பதைத்தவிர
வாழ்வில் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காது மறைந்து விட்ட என் அம்மாவின்
அகாலத்தில் எம்மைப் பிரிந்துவிட்ட எங்கள் ஒரே தங்கையின் வாழ்க்கைகளை
ஒருநாள் அறிவோடு உற்றுப் பார்த்தேன்.அதுதான்.

நம் கூடவே வாழும் பெண்களை ஆண்களாகிய நாம் just  ஒரு கவனமின்மையில்
இழந்துகொண்டிருக்கிறோம்.வீடுகளின் தீண்டாச்சேரிகளாக இன்னும் சமையலறைகள் நீடிக்கும்
அவலம்-கொடுமை வெகு இயல்பாக நடந்துகொண்டிருக்கிறது.

சமைக்கிறதுதான் பெரிய பிரச்னையா சார் என்று சிலர் கேட்பதுண்டு.
எப்போதாவது ஆண்கள் சமைப்பதுண்டு அல்லது சமையலில்
help  பண்ணுவது உண்டுதான்.ஆனால் நாம் கோருவது சமைப்பது
என்னுடைய வேலைதான் என்று மனதார ஏற்றுக்கொண்டு தினசரி
ஆண் சமைக்க வேண்டும்.

என்னிடம் கேட்டால் ஒரு மாத காலம் நம் வீட்டுப் பெண்களை
அடுக்களைப்பக்கமே வரக்கூடாது என்று தடுத்து விட்டு
முற்றிலும் மூணு வேளையும் ஆண்கள் மட்டுமே சமைத்துப் போட்டால்
ஆண்கள் எல்லோருமே நல்லவர்களாக மாறி விடுவார்கள்.ஆண்கள் யார்?இந்தப்
பெண்கள் பெற்ற பிள்ளைகள்தானே?ஆகவே திருந்திவிடுவார்கள் என்று நம்பலாம்.

அடுப்படிக்குள் நாம் நுழைந்தால் அங்கே சுழலும் புகையில்
ஆயிரம் ஆண்டுகளாய் சிதைந்துபோன நம் பாட்டிகளின்
அம்மாக்களின் அக்கா தங்கைகளின் கனவுகள் கலந்திருப்பதைக்
கண்டுணரலாம்.பொசுங்கிப்போன அவர்களின் ஆசைகள்
ஏக்கங்களின் அடர்த்தியை நாம் அடுப்படிக்காற்றில்
சுவாசிப்போம்.

ஆகவே ஆண்கள் சமைப்பது என்பது வெறும் சோறு குழம்பு
வைக்கும் ஒரு  physical work sharing  அல்ல.மனரீதியாக
நம்மை நல்லவர்களாக மாற்றும் ரசவாதம் நடக்கும்
சோதனைச்சாலைகளாக நம் அடுப்படிகள் திகழ முடியும்.

வக்கணையாகப் புத்தகம் எழுதிவிட்டு
நான் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்.வீட்டில் இருந்தால்தானே
நான் சமைப்பேன்.இப்படியும் பல ஆண்கள் ஊரை
ஏமாற்றிக்கொண்டு அலைகிறோம்.

பெண்களுக்கு நாம் செய்துவரும் பாவங்களுக்கும்
துரோகங்களுக்கும் மன்னிப்பே கிடையாது.

குறைந்தபட்சம் தின்று திரியாமல் சமைப்பது
துவைப்பது பெருக்குவது என்று வீட்டு வேலைகளையாவது
செய்யத்துவங்கலாம்.வெட்டிப்பேச்சு எதுக்கு?