Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, January 10, 2012

மாற்றுத்திறனாளி விக்னேஷ்வர் படுகொலை

Bhuvaneshwaran 3

நில மோசடிக்கென்று தனி காவல்துறை விசாரணையெல்லாம் நடப்பதாக சொல்லப்படுகிறது.திமுக முன்னாள் அமைச்சர்களெல்லாம் கைதாகவாதாக பத்திரிகைகளில் படங்கல் வருகின்றன.ஆனால் என்ன ஆட்சி மாறினாலும் இந்த மாஃபியா கும்பலின்  ஆதிக்கம் தமிழகத்தை ஆக்டோபஸ் போல கவ்விக்கொண்டிருக்கிறது.

நேற்று தூத்துக்குடி மாவட்ட சிபிஎம் செயலாளர் கனகராஜ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.அவரது துணைவியார்  தலைக்காயத்துடன் மருத்துவமனையில் இருக்கிறார்,இன்று  இதோ நம் அன்புத்தோழன் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் செயல்வீரன் புவனேஷ்வரன் சென்னைக்கு அருகே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.நினைக்கவே நெஞ்சம் பதைக்கிறது.

திரு.புவனேஷ்வரன் அவர்கள் ஆவடி அருகே மோரே கிராமத்தில் நில மோசடிக்கு எதிராகக் கடந்த 5 ஆண்டுகளாகப் போராடி வருபவர்.அப்பகுதியிலுள்ள வீராபுரம் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாலராகவும் பணியாற்றி வருபவர்.தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக கடந்த ஆண்டு சிலருக்கு மோசடியாளர்களிடமிருந்து நிலம் மீட்டுத்தரப்பட்டது.புவனேஷ்வரன் உள்ளிட்ட இன்னும் சிலருடைய அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படவில்லை.சட்டரீதியாகவும் ஜனநாயக அடிப்படையிலும் அவர் தொடர்ந்து போராடி வந்த சூழலில் நேற்று 10 ஆம் தேதி பட்டப்பகலில் அவர் நில மோசடிக்கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும்.உரிய தண்டனை பெற வேண்டும்.நில மோசடியாளர்களுக்கு உடந்தையாக இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரிக்கப்பட்டுக் கைது செய்யப்பட வேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய நிலம் மீட்டுத்தரப்பட வேண்டும்.கொலை மிரட்டல் பற்றி அறிந்தும் மெத்தனமாக இருந்த காவல்துறையும் விசாரிக்கப்பட வேண்டும்.

அனைவரும் கண்டனக்குரல் எழுப்புவோம்.அவர் அனைத்துவகை மாற்றுத்திரனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்டப்பொருளாளராகப் பணியாற்றியவர்.

தீரமிக்க ஒரு தோழனை இழந்து நிற்கும் அவருடைய இயக்கத்துக்கும் குடும்பத்துக்கும் தோள் கொடுப்போம்.

Bhuvaneshwaran 4

Monday, January 9, 2012

நக்கீரன் அலுவலகத்தின் மீது தாக்குதல் தமுஎகச கண்டனம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக்குழு

11,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625011

421,அண்ணாசாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018

நக்கீரன் அலுவலகத்தின் மீது தாக்குதல்

தமுஎகச கண்டனம்

முதல்வர் ஜெயல்லிதா அவர்கள் மீது அவதூறுச் செய்தி வெளியிட்ட்தாக்க் கூறி சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகத்தை அதிமுக தொண்டர்கள் 300 பேர் திரண்டு சென்று தாக்கி அங்குள்ள பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர்.ஒரு சட்ட மன்ற உறுப்பினர் தலைமையில் இந்த அராஜகம் நிகழ்ந்துள்ளது.பத்திரிகையில் செய்தி வெளியிட்டால் அதன் மீது கருத்து மாறுபாடு இருக்கும் பட்சத்தில் சட்டபூர்வமாக வழக்குத்தொடுத்தோ பிரஸ் கவுன்சிலில் முறையிட்டோ எதிர்ப்பைத் தெரிவிக்க ஜனநாயகப் பூர்வ வழிகள் பல இருக்க அதையெல்லாம் கைவிட்டு இப்படி நேரடித் தாக்குதலில் ஆளும் கட்சியினரே இறங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியது.முதல்வர் அவர்களும் இச்செயலைக் கண்டனம் செய்யாத்து வருத்த்துக்குரியது. திருச்சியில் நக்கீரன் பத்திரிகையை எரித்தபோது அதிமுக தொண்டர் ஒருவர் தீக்காயத்துக்கு ஆளானதும் நடந்துள்ளது.இத்தகைய கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வன்முறைகளை தமுஎகச வன்மையாக்க் கண்டனம் செய்கிறது.

அதே சமயத்தில் பரபரப்பான வியாபாரத்துக்காக செய்திகளை வெளியிடுவதில் எந்த எல்லைக்கும் செல்ல்லாம் என்கிற நக்கீரனின் போக்கை ‘பத்திரிகை சுதந்திரம்’ என வரவேற்க முடியாது என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்

ச.தமிழ்ச்செல்வன் சு.வெங்கடேசன்

மாநிலத்தலைவர் பொதுச்செயலாளர்

மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்/வலைத்தளத்தில் வெளியிடுமாறு வேண்டுகிறோம்

சு.வெங்கடேசன்

9-1-2012

காவல் கோட்டம் – ஓர் அனுபவம்

இந்த நேரத்தில் தமிழ்பேப்பர்.நெட் டில் வெளிவந்துள்ள இக்கட்டுரை முக்கியத்துவமும் சுவாரஸ்யமும் பெறுகிறபடியால் கீழே தந்துள்ளேன்.

சி.சரவணகார்த்திகேயன்

“Good writers write the kind of history good historians can’t or don’t write.” – Daniel Aaron

சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலை நான் வாசித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தாலும், அதற்கு 2011 சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கும் இவ்வேளையில் அதைப் பற்றி எழுத முயல்வது பரிசுத்த‌மான‌ சந்தர்ப்பவாதமாகவே படுகிறது. ஆனாலும் இப்போதேனும் இந்த நாவல் குறித்த கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு அமைந்ததே என்றே எடுத்துக்கொள்கிறேன்.

காவல் கோட்டம் என்கிற பிரம்மாண்டமான நாவல் வெளியாகியிருக்கிறது என்ற தகவல் டிசம்பர் 2008 வாக்கில் சிறுபத்திரிக்கைகள் வாயிலாக அறிந்திருந்தாலும் அது குறித்த முதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆண்டிறுதி ஆனந்த‌ விகடன் இதழில் வெளியிடப்பட்ட விகடன் அவார்ட்ஸ் 2008 தான். அதில் அவ்வாண்டின் சிறந்த நாவல் என்று காவல் கோட்டம் நாவலைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

பிப்ரவரி 2009 காலச்சுவடு இதழில் ஆ. இரா. வேங்கடாசலபதி காவல் கோட்டம் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை (களவியல் காரிகை) வெளியாகி இருந்தது.

மார்ச் 2009 தீராநதி இதழில் வெளியான எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய விமர்சனக் கட்டுரையான ‘காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்’ (பகுதி-1, பகுதி-2) தான் அடுத்த‌ தூண்டுகோல். அதில் விழுந்திருந்தது வெறுப்பின் சாயை மட்டுமே என்பது நாவலைப் படிக்காமல் கட்டுரையின் பாணியிலேயே தெரிந்து விட்டது.

ச.தமிழ்ச்செல்வன் மற்றும் ம.மணிமாறன் ஆகியோர் இதைக் கண்டித்து மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தனர். மேலாண்மை பொன்னுச்சாமியும் ‘காவல் கோட்டம் : மீள் விசாரணை – ஆயிரம் பக்க அதிசயம்’ என்று நாவலைப் புகழ்ந்துரைத்து ஒரு விமர்சனம் எழுதினார். ஜெயமோகனும் சற்று நாசூக்காக இதைக் கடிந்து எழுதியிருந்தார் (“முன்நிலைபாடுகளும் கசப்புகளும் இல்லாமல் வாசிப்பதே”). எஸ்.ரா.வின் மொழியா இது என செல்வேந்திரன், ஹரன் ப்ரசன்னா, யாழிசை லேகா உள்ளிட்ட சில வலைப்பதிவர்களும் ஆச்சரியம் காட்டி இருந்தனர்.

ஜ.சிவகுமார் என்ற சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை ஆகிய நாவல்களுடன் காவல் கோட்டத்தை ஒப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார்.

பிற்பாடு அக்டோபர் 2009ல் ஜெயமோகன் காவல் கோட்டம் பற்றி மிக விரிவாக தன் வலைப்பதிவில் எழுதினார் (பகுதி-1, பகுதி-2, பகுதி-3, பகுதி-4, பகுதி-5). அவர் இதுகாறும் வேறு ஏதேனும் நாவலுக்கு இது போன்றதொரு நீண்ட விமர்சனம் எழுதி இருக்கிறாரா என்பது சந்தேகமே. இந்தத் தனித்துவமே எனை வசீகரித்தது.

அதன் காரணமாகவே சு.வெங்கடேசனின் எந்தப் படைப்பையும் அதற்கு முன்பு படித்ததில்லை என்ற போதிலும் ஜனவரி 2010 சென்னைப் புத்தகக் காட்சியில் காவல் கோட்டம் நாவலை வாங்கினேன். கொஞ்சமும் மெருகு கலையாத புது மணப்பெண் மாதிரி காத்திருந்தது காவல் கோட்டம்.

பின் 2010ன் கோடையில் என்பதாக ஞாபகம் – காவல் கோட்டத்தை முதன் முதல் ஸ்பரிசித்தேன். கிட்டதட்ட ஒரு மாதம் போல் நீடித்த நீண்ட கூடல் அனுபவமது. கூடலை நீட்டிப்பதற்காக அல்லாமல் தொடர்வதற்காக Start and Stop Technique பயன்படுத்த வேண்டி இருந்தது. இடையில் சற்றே இளகிக் கொடுத்தாலும் இறுதி வரை மிகுந்த உழைப்பையும் பொறுமையையும் கோரும் ஓர் அடங்காப் புரவியாகவே இருந்தது காவல் கோட்டம். சமீபத்தைய மறுவாசிப்பிலும் கூட‌ அப்படியே தான்.

எந்த சந்தர்ப்பத்திலும் நாவலின் எந்தப் பகுதியையும் என்னால் தொடர்ச்சியாய் மூன்று மணி நேரத்திற்கு மேல் படிக்க இயலவில்லை. இடைவெளி எடுத்துக் கொண்டு அதுவரை படித்ததை கிரகித்து உள்வாங்கி ஜீரணித்த பின்பே அடுத்த பகுதியை மீண்டும் தொடர வேண்டி இருந்தது. இதன் அர்த்தம் காவல் கோட்டம் நாவல் சுவாரஸ்யமாய் இல்லை என்பதில்லை. இதன் அடர்த்தியும், செறிவும் அத்தகைய அக்கறையை, கவனத்தைக் கோருகிறது. இதை ஒரு வாசிப்பு என்று சொல்வதை விட ஓர் அனுபவம் என்பதே சரி. இதற்கு முன்பு இத்தகையதோர் அனுபவத்தைத் தந்த நாவல் என்றால் அது ஜெயமோகனின் விஷ்ணுபுரம் தான்.

நாவல் இதுவரை மூவாயிரம் பிரதிகள் விற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமற்றதொரு தகவல் வழி அறிகிறேன். அது உண்மையெனில் அதில் ஒரு சதவிகிதம் பேராவது (அதாவது முப்பது பேர்) இந்நாவலை முழுக்க ஊன்றிப் படித்திருப்பார்களா என்கிற என் அடிப்படைச் சந்தேகத்தை நேரடியாக‌வே இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

*

நாவல் பற்றிப் பேசப்புகும்முன் தமிழில் என் வரலாற்று நாவல் வாசிப்புத்தகுதியை கொஞ்சம் எடை போட்டுக் கொள்வோம். இதுவரை கல்கி, சாண்டில்யன், அகிலன், கருணாநிதி, ர.சு.நல்லபெருமாள், ஜெகசிற்பியன், விக்கிரமன், அரு.ராமநாதன், ப.சிங்காரம், பிரபஞ்சன், சுஜாதா, பாலகுமாரன், ரா.கி.ரங்கராஜன், கௌதம நீலாம்பரன், கவிஞர் வைரமுத்து, விசாலி கண்ணதாசன் ஆகியோர் எழுதிய குறைந்தபட்சம் நூறு சரித்திரப் புதினங்களையேனும் வாசித்திருப்பேன்.

அண்ணாத்துரை, ந.பார்த்தசாரதி, கோவி. மணிசேகரன், ஸ்ரீவேணுகோபாலன், கண்ணதாசன், மு.மேத்தா, இந்திரா சௌந்தர்ராஜன், பா.விஜய் ஆகியோர் எழுதிய சரித்திர நாவல்கள் எதையும் படித்ததில்லை. தமிழின் முதல் நாவலான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் படித்ததில்லை. பி. ஆர். இராஜமையர் எழுதிய முதல் தொடர்கதையான கமலாம்பாள் சரித்திரம் படித்தது இல்லை. தமிழின் முக்கிய சரித்திர நாவல் முயற்சிகளாகக் குறிப்பிடப்படும் சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம், பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் இரண்டையும் படித்ததில்லை. கள்ளர் பற்றிப் பேசும் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை இரண்டையும் கூட இதுவரை படித்ததில்லை.

வாசித்தவரையில் கீழ்க்காணும் நாவல்கள் முக்கியமானவையாகப் படுகின்றன: பொன்னியின் செல்வன் (கல்கி), ஜலதீபம் (சாண்டில்யன்), கல்லுக்குள் ஈரம் (ர.சு. நல்லபெருமாள்), புயலிலே ஒரு தோணி (ப.சிங்காரம்), வீரபாண்டியன் மனைவி (அரு.ராமநாதன்), பொன்னர் சங்கர் (கருணாநிதி), வானம் வசப்படும் (பிரபஞ்சன்), நான் கிருஷ்ணதேவராயன் (ரா.கி.ரங்கராஜன்) மற்றும் உடையார் (பாலகுமாரன்).

சு.வெங்கட்டேசனின் காவல் கோட்டம் இவற்றையெல்லாம் விஞ்சி நிற்கிறது. அவ்வகையில் நான் வாசித்தவற்றில் மிகச்சிறந்த சரித்திர நாவல் இது தான்.

*

காவல் கோட்டம் என்கிற வரலாற்று நாவல் 2 பெரும் பாகங்களாக (முடி அரசு, குடி மக்கள்), 10 உட்பிரிவுகளாக (மதுரா விஜயம், பாளையப்பட்டு, யூனியன் ஜாக், இருளெனும் கருநாகம், தாதுப்பஞ்சத்திற்கு முன், மெஜுரா சிட்டி, பென்னிங்டன் ரோடு, ரயில் களவு, CT ACT, பட்ட சாமி), 115 அத்தியாயங்களில், 1048 பக்கங்களில் மிகப்பிரம்மாண்டமாக விரிகிறது. காவல் கோட்டம் நாவலின் வெளித்தோற்றத்தில் மட்டுமல்லாது உள்ளடக்கம் வரை ஊடுவி நிற்கிறது அந்த‌ மகா பிரம்மாண்டம்.

மதுரையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ச‌மணமலையின் அடிவாரத்திலிருக்கும் கீழக்குயில்குடி என்கிற கிராமத்தில் களவையும், காவலையும் தம் குலத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்த‌ கள்ளர் இனத்தவரின் அறுநூறு ஆண்டுகால வரலாற்றை, தொடர்புடைய ராஜாங்க நடவடிக்கைகள், அரசியல் நிகழ்வுகளுடன் வழங்குகிறது காவல் கோட்டம். புனைவுக்காக சமணமலை அமணமலை ஆகிவிட்டது; கீழக்குயில்குடி தாதனூர் ஆகிவிட்டது.

1310ல் மதுரையில் நடந்த மாலிக் கஃபூர் படையெடுப்பில் தொடங்கும் நாவல் 1910ல் பெருங்காமநல்லூரில் நடக்கும் பிரிட்டிஷாரின் துப்பாக்கிச் சூட்டில் முடிவடைகிறது. கிட்டதட்ட தொடங்கிய நிலைமையிலேயே முடிகிறது கள்ளர்களின் வாழ்க்கை. வித்தியாசம் பார்த்தால் ஆரம்பத்தில் அகதிகள்; கடைசியில் அடிமைகள். அப்போது முகமதியன்; இப்போது ஆங்கிலேயன்.

இந்த நாவல் பிரதானமாய் கள்ளர் பற்றியது தான் என்றாலும், அதன் ஊடுபாவாய் மதுரையின் சரித்திரம் விளம்ப‌ப்படுகிறது. எப்படி காந்தியின் வரலாற்றை இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தவிர்த்து விட்டு எழுதி விட‌ முடியாதோ, ஹிட்லரின் வரலாற்றை இரண்டாம் உலகப்போரைத் தவிர்த்து விட்டு எழுதி விட‌ முடியாதோ, அது போல் தான் கள்ளரின் வரலாற்றை மதுரை ந‌கரின் சரித்திரத்தைத் தவிர்த்து விட்டு எழுத முடியாது. கள்ளர் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் மதுரையின் அரசியல் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. போலவே மதுரையின் பல‌ முக்கிய நடவடிக்கைக‌ளை கள்ளர்களின் செயல்கள் தாம் தீர்மானிக்கின்றன.

நாவலின் மேலோட்டமான கதைச்சரடை சற்று அறிமுகம் செய்து கொள்வோம்.

மாலிக்கஃபூரின் மதுரைப் படையெடுப்பில் கோட்டைக்காவலனான கருப்பணன் இறந்து பட, அவன் கர்ப்பிணி மனைவி சடச்சி தப்பிப்பிழைத்து சிசு ஈனுகிறாள். அவளது ச‌ந்ததி கள்ளர் இனமாக தாதனூர் என்ற இடத்தில் நிலைகொள்கிறது. விஜயநகர அரசி கங்கா தேவி தன் இனமழித்த முகமதிய சுல்தானை பழிவாங்க மதுரை மீது போர் தொடுக்கிறாள். மதுரை விஜயநகர அரசின் வசமாகிறது. சிலபல வாரிசுச்சண்டைகளுக்குப்பின் கிருஷ்ணதேவராயர் விஜய நகர அரசராகிறார். அவர் திறமையான தளபதியான விஸ்வநாதரை மதுரையை ஆட்சிசெய்ய அனுப்புகிறார்.

மதுரையில் நாயக்கர் ஆட்சி உதயமாகிறது. மதுரைக் கோட்டை விஸ்தரிக்கப்பட்டு பிரம்மாண்டமான முறையில் கட்டப்படுகிறது. மதுரையைச் சுற்றி பாளையங்கள் பிரிக்கப்படுகின்றன. திருமலை நாயக்கர் காலத்தில் தாதனூர்க்காரர்களுக்கு மதுரை கோட்டைக் காவல் உரிமை வழங்கப்படுகிறது. அவருக்குப் பின் நாயக்கர் அரசுகள் பல தலைமுறையாக‌ சதிகளிலும், துரோகங்களிலும் சிக்கி உழன்று தவிக்கிறது.

பின்னர் கிழக்கிந்திய கம்பெனி மதுரையை எடுத்துக் கொள்கிற‌து. தொடர்ந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆளுமைக்குக் கீழ மதுரை வருகிறது. பிளாக்பர்ன் என்ற கலெக்டரின் காலத்தில் இட விஸ்தரிப்பைக் காரணம் காட்டி மதுரைக் கோட்டை இடிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் அரசிலும் தன் மதுரை நகர காவல் உரிமையை தாதனூர்க்காரர்கள் மீட்டுக் கொள்கிறார்கள். அரசு சார்பில் கச்சேரி (போலீஸ் ஸ்டேஷன்) அமைக்கப்படுகிறது. மதுரைக்கு அருகே மிஷனரி பள்ளி, மியூசியம், காட்டன் மில், ரயில் நிலையம் ஆகியன வருகின்றன. மதுரை நவீனமாகிறது.

தாது வருஷத்தில் கடும் பஞ்சத்தையும் பின் தொடர்ந்து கொள்ளை நோயையும் மதுரை சந்திக்கிறது. நிறைய உயிர்ச்சேதம் நிகழ்கிறது. முல்லைப்பெரியாறு அணை கட்ட ஆரம்பிக்கிறார்கள். அரசு தாதனூர்க்காரர்களின் காவல் உரிமையை ரத்து செய்கிறது. எதிர்த்தவர்கள் சிறைபடுகிறார்கள்; சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.

தாதனூர்க்காரர்கள் வேறுவழியின்றி வெளிகிராமங்களில் காவல் பிடிக்கிறார்கள்.

தாதனூருக்கு பென்னிங்டன் ரோடு அமைக்கப்படுகிறது, ஒரு சிறைச்சாலையும் அருகிலேயே கட்டுகிறார்கள். குற்றப்பரம்பரைச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. தாதனூர்க்காரர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்படுகின்றன. தினசரி அந்த சிறைச்சாலையில் ஆஜராக உத்தரவிடப்படுகிறது. நல்லூரிலிருக்கும் கள்ளர்கள் மீது பிரிட்டிஷ் போலீஸார் துப்பாக்கி ச் சூடு நடத்துவ‌தோடு முடிகிறது நாவல்.

இந்த நாவலின் 10 பக்கங்களிலிருந்து தான் வசந்தபாலனின் அரவான் திரைப்படக் கதை எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். படத்தில் வருவதாய்ச் சொல்லப்படும் வரிப்புலி, கொம்பூதி, சிமிட்டி என்ற பெயரில் கதாபாத்திரங்கள் ஏதும் நாவலில் இல்லை. நாவலில் வரும் சின்னான், மாயாண்டி கதை (அத்தியாயங்கள் 37, 38 மற்றும் 40) சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்ப‌ட்டிருக்கலாம் என்பது contextual understanding அடிப்படையிலான என் ஊகக்கணக்கு. அத‌ல்லாதும் இருக்கலாம்.

இது தவிர கமல்ஹாசனின் கனவுப்படமான மருதநாயகம் கதையும் (அத்தியாயம் 32) இதில் வருகிறது. ஆனால் நாயக வழிபாடாக அல்லாமல் சந்தர்ப்பங்களின் காரணமாக கும்பினியை எதிர்க்கும், இக்கட்டின் போது கேட்ட குத்தகையைத் தரத் தயாராகும், இறுதியில் உடல்துண்டாகி ஊருக்கூர் வீசப்படுமோர் அவலச்சித்திரமே மருதநாயகம் யூசுஃப் கான் பற்றி நாவலில் அளிக்கப்படுகிறது. மருதநாய‌மும், கட்டபொம்முவும் ஒரே நாளில் (அக்டோபர் 16) ஆனால் வெவ்வேறு ஆண்டுகளில் தூக்கிடப்பட்டிருக்கிறார்கள் – முன்னவர் 1764ம் ஆண்டு; பின்னவர் 1799ம் ஆண்டு.

*

களவு பற்றிய நான் சுவைத்த முதல் கலை அனுபவம் 1990களின் இறுதியில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான களவுக்கலை என்ற சுவாரஸ்யமான நாடகத்தொடர் தான். பின்னர் கல்கியின் கள்வனின் காதலி நாவல் முதல் பாலாவின் அவன் இவன் திரைப்படம் வரை எழு த்திலும், காட்சியிலும் பல கள்வர்கள் கடந்து போய் விட்டார்கள். கடைசியாய் இப்போது சு.வெங்கடேசனின் காவல் கோட்டம்.

கோட்டம் என்ற சொல்லுக்கு இருவிதப் பொருள் கொள்ளலாம். நிர்வாகத்திற்காகப் பகுத்திருக்கும் பிரிவு ஒன்று (உதாரணம் வருவாய் கோட்டம்). மற்றது ஒருவருக்கு எழுப்பப்படும் நினைவிடம் (உதாரணம் வள்ளுவர் கோட்டம்). காவல் கோட்டம் என்ற தலைப்புக்கு இந்த இரு பொருளுமே பொருந்துகின்றன‌. மதுரையின் காவல் பிரிவைக் கவனித்துக் கொண்டவர்களின் கதை என்ற அர்த்தத்திலும். காவல் காரர்களின் நினைவாய் எழுப்பப்படும் ஒரு நினைவுப்புனைவு என்ற வகையிலும்.

ஆனால் நாவலின் உள்ளடக்கத்தோடு ஒப்பிடுகையில் இந்தத் தலைப்பு பொருத்திப் போகிறதா என்று பார்த்தால் ஆம் என்று சொல்வதில் தயக்கம் இருக்கிறது. களவு போவது என்பது காவல் பெறுவதற்கான உத்தி என்ற கருத்து நாவல் நெடுகிலும் மறுபடி மறுபடி வலியுறுத்தப்பட்டிருந்தாலும், நாவல் முழுக்க முழுக்க களவைப் பற்றியே பேசுகிறது, அதைக் கொண்டாடுகிறது, அதை மகத்துவப்படுத்துகிறது.

களவின் சம்பவங்களும், சாத்தியங்களும் மிக நுட்பமாய் விவரிக்கப்படுகிற‌து. மாறாக காவல் என்பது ஆங்காங்கே இடைவெளி நிரப்பும் சிறு செய்தியாய் மட்டுமே சொல்லப்படுகிறது. உண்மையில் இது களவுக் கோட்டம் தான்.

காவல் கோட்டம் நாவலின் இலக்கியரீதியான செவ்வியல் உச்சங்கள் என்றால் களவு பற்றிய விவரணைகளும், கோட்டை இடிக்கப்படும் நிகழ்வுகளும், பஞ்ச காலம் பற்றிய பகுதிகளுமே ஆகும். இது தவிர தாதனூரில் நடக்கும் திருமணம், மரியாதை, சடங்குகள், வரிகள், பலிகள் ஆகியவை பற்றிய பகுதிகள் கள்ளர் இன வரைவியல் ஆவணமாகக் கொள்ளத்தக்கவை. ஆனால் ஆவணம் என்பதைத் தாண்டி இவை யாவும் சுவாரஸ்யமான நடையில், பாந்தமான இடங்களில் உட்செருகப்பட்டிருக்கின்றன எனப்து தான் இந்நாவலை முக்கியமானதாக்குகிறது.

பாலகுமாரனின் உடையார், கடிகை போன்ற‌ நாவல்களிலும் இது போன்றதான‌ விவரணைகள் இடம் பெறுகின்றன. ஆனால் அவை ஒருவித வறட்டு நடையில் எழுதப்பெற்று வெறும் ஆவணமாகத் தேங்கி விடுகின்றன. அதாவது அவற்றில் கலை ஊக்கம் இல்லை; அல்லது குறைவாய் இருக்கிறது. வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் ஆகிய நாவல்களிலும் இது போன்ற சித்தரிப்புகள் வருகின்றன. ஆனால் அவை அந்த நாவலுக்கு தேவையிற்ற துருத்தல்களாய் உருத்திக் கொண்டிருக்கின்றன. அதாவது இவற்றில் கலை ஊக்கம் இருந்த போதிலும் நாவலை செம்மையுறப் பயன்படுவதில்லை.

எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் நாவலில் வெக்கை குறித்து நிறைய இடங்களில் விவரித்திருப்பார். அதில் கணிசமானவை ஒரே மாதிரியானதாகவும் (monotonous), தட்டையானதாகவும் சில இடங்களில் எரிச்சலூட்டுவதாகவுமே அமைத்திருக்கும் (வெக்கை எரிச்சலூட்டத்தானே செய்யும்!). அதே போல் காவல் கோட்டம் நாவலில் பல இடங்களில் – குறைந்தபட்சம் நூறு இருக்கும் – இருள் குறித்த விவரணைகள் இடம்பெறுகின்றன. ஆனால் எவ்விடமும் அவை அலுப்பூட்டுவதில்லை. எல்லாமே கவித்துவத்துடன் தத்துவார்த்தமாக அமைத்துள்ளன. அதை நினைத்துப் பார்க்கும் போதே பிரம்மிப்பு ஏற்படுகிறது. இந்த இருள் குறித்த பகுதிகளை மட்டும் தொகுத்து ஒரு சிறுநூலாக வெளியிடலாம் (கவிதை?) என்று கூட ஓரெண்ணம் ஏற்படுகிறது.

பனைமரத்தில் கட்டிவைத்து கள்ளர்கள் கல்லெறிந்து சிவானந்தய்யர் கொல்லப் படும் காட்சியே நாவலின் புறம் சார்ந்த ஆக‌ உக்கிரமான பகுதி. இது போக‌ அக எழுச்சி உக்கிரங்கள் ஆங்காங்கே மலரவிழ் மொட்டாய் சாத்தியப்பட்டிருக்கின்றன.

*

அறுநூறு வருட காலத்தை அடைத்து நிற்கிறது என்பதால் இந்நாவலில் எந்தப் கதாபாத்திரத்தையும் முதன்மைப் பிரதானமெனக் கொள்ளவியலாது. அப்படிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் கள்ளர்கள் தாம் இந்நாவலின் நாயக‌ர்கள். நாவல் முழுக்க மன்னர்களும் மக்களும் வருகிறார்கள், போகிறார்கள் – ஆனால் இடையில் தம்மை எழுதுமொழி வரலாற்றிலோ, வாய்ப்பாட்டு வரலாற்றிலோ அழுந்தப் பதித்துக் கொள்கிறார்கள். நாவலைப் படித்து முடிக்கையில் விசுவநாத நாயக்கரும், மாயாண்டிப் பெரியாம்பிளையும், ஆங்கிலக் கலெக்டர் பிளாக்பர்னும், சிவானந்தய்யரும், டேவிட் சாம்ராஜும் உச்சம் பெற்று மனதில் நிற்கிறார்கள்.

பொதுவாய் வரலாற்றுப் புதினங்களில் பெண் கதாபாத்திரங்கள் கவர்ச்சித் தாரகைகளாகவோ, மதிப்பிற்குரிய மங்கையராகவோ என்ற இரு எதிரெதிர் நிலைகளில்மட்டும் பதிவு பெற்றிருக்கின்றனர் (பொன்னியின் செல்வன், உடையார் மட்டும் விதிவிலக்கு). ஆனால் காவல் கோட்டம் நாவலில் வரும் பெண்களைப் பற்றிய பதிவுகள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கின்றது. பேரனுக்காக நாட்டை ஆளும் பொறுப்பேற்றுப் பின்னாளில் அவனாலேயே பலி வாங்கப்படும் ராணி, தன் இனத்தை வதைக்க முனையும் ஐரோப்பியக் காவலனின் கழுத்தைக் கடித்துக்குதறும் கிழவி, பஞ்சகாலத்தில் எந்த எதிர்பார்ப்புமின்றி தன் செல்வத்தைக் கரைத்து ஊருக்கே கஞ்சி ஊற்றும் தாசி, தன் இனம் சிந்திய ரத்தத்திற்குப் பழிதீர்க்க நேரடியாக போரிலிறங்கி சுல்தானைக் கொல்லும் அரசி, தமக்குள் மட்டுமல்லாது ஆண்க‌ளுடனும் கூட‌ பாலியலை சர்வ சுதந்திரமாய் பேசித்திரியும் பெண்டிர் என்று பெண்களின் பன்முகங்கள் நாவலெங்கும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. விஜயநகரப்பெண்கள், நாயக்கர் பெண்கள், கள்ளர் பெண்கள், அக்ரஹாரப் பெண்கள் என்று பரவி விரியும் நாவலில் ஆங்கிலேயப் பெண்களில் ஒருவரைப் பற்றிக் கூட பெரிய அளவிலான விவரணைகள் இல்லை.

திருமலை நாயக்கர் அரண்மனையிலேயே புகுந்து ராஜமுத்திரையைக் களவாடி விடும் கழுவன் என்ற தாதனூர்க்கள்வனைப் பாராட்டி கோட்டைக்காவல் உரிமை தருகிறார் மன்னன் என்றொரு செய்தி இடம் பெறுகிறது. ஆனால் இதே கதையில் களவாடியவனை வஞ்சகமாக வரவழைத்துக் கொன்றதாகவும் ஒரு வெர்ஷனை ஏற்கனவே வேறெங்கோ படித்திருக்கும் நினைவு. நாயக்கர் தந்த கோட்டைக்காவல் உரிமை தான் நாவலின் அச்சு. அதை மையமிட்டுத்தான் நாவலின் அத்தனை சம்பவங்களுமே சுழல்கின்றனை. இந்த உரிமையை விட்டுத்தராதிருக்கும் பொருட்டு தான் இறுதியில் கள்ளர் இனமே அழிய நேரும் சூழ்நிலை உருவாகிறது.

மனிதன் எழுத்தின் வழி, கதைகளின் வழி, அகழ்வுகளின் வழி வரலாற்றைத் தரிசிக்கிறான். அஃறிணை பொருட்களோ எத்தனை ஆண்டு கால வரலாறு என்றாலும் தாமே காத்திருந்து நேரிலேயே பார்த்துக் கொள்கின்றன‌! அப்படி சந்திரஹாச வாளும், சாளுவ கட்டாரியும் ஒரு கட்டம் வரை நாவல் முழுக்கவே புராதனக்குறியீடாய் சமயங்களில் மௌனசாட்சியமாய் உடன் பயணிக்கின்றன.

*

நாவலுக்கென்று பத்து ஆண்டு காலம் உழைத்ததாகச் சொல்கிறார் ஆசிரியர். நாவலில் அடங்காமல் பொங்கி வழியும் தகவல்களைப் பார்க்கும் போது அது எள்ளளவும் மிகையில்லை என்று தெரிகிறது. இந்த தகவல்கள் தாம் சாதனை.

நாவல் முழுக்க சு.வெங்கடேசனின் செறிவான மொழிநடை காணக்கிடைக்கிறது. கதையின் போக்கில் நிகழ்வுகளைத்தாண்டி அவரது நடை நம்மைக் கட்டியணைத்த படியே நகர்த்திச் செல்கிறது. இத்தகைய வசீகர‌ நடை சமகால எழுத்தாளர்களில் மூவருக்கு மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது – முதலில் எஸ்.ராமகிருஷ்ணன், அடுத்தது இரா.முருகன், அப்புறம் க.சீ.சிவக்குமார். இத்தனைக்கும் கதையின் கணிசமான பகுதிகள் கள்ளர்களின் பேச்சு மொழியிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதிலும் கூடப் புகுந்து பிரமாதப்படுத்தி இருக்கிறார் சு.வெங்கடேசன் (அது சரி, வசந்தபாலனின் அரவான் படத்துக்கு சு.வெங்கடேசன் தான் வசகர்த்தாவா?).

காவல் கோட்டம் நாவல் எதைப் பேசுகிறது என்பது தெளிவாய் இருக்கிறது – கள்ளர்களின் கதையினூடாய் மதுரை வரலாற்றின் ஒரு அபாரமான‌ குறுக்கு வெட்டுச் சித்திரத்தை அளிக்கிறது. ஆனால் அந்நாவல் முன்வைக்கும் அரசியல் என்ன என்ற கேள்விக்கு தெளிவாய் பதிலிறுக்க முடிவதில்லை. காவல் கோட்டம் களவை நியாயப்படுத்த முயல்கிறதோ எனத் தோன்றுகிற‌து. நமது சமூகத்தின் இன்றைய சிந்தனை முறையானது திருட்டு என்பதை அரசியல் சாசனப்படியான குற்றம் என்று புற‌ அளவில் வரையறுத்ததோடு மட்டுமல்லாது, அதன் அக நீட்சியாக திருட்டை ஓர் ஒழுக்கக்கேடான நடவடிக்கையாகவும் சித்தரித்து வைத்திருக்கிறது. எப்படி யோசித்துப் பார்த்தாலும் அச்சித்தாந்தம் சரியென்றே மனதுக்குப் படுகிற‌து. ஆனால் காவல் கோட்டம் நாவலோ அதற்கு நேரெதிராய் களவை வீரமெனச் சித்தரித்து, சமகால மனங்களில் திருட்டு பற்றி நிலவும் பொதுப்புத்திக் கருத்துக்களைக் கேள்விக்குள்ளாக்குகிற‌து. ஒரு கட்டத்தில் களவு தாம் அறமோ என்று கூட‌ எண்ண வைத்து விடுகிற‌து. என் பாட்டன் திறமான கள்வன் என்பது எவ்வகையில் எனக்குப் பெருமை தரும் என்பது விளங்கவில்லை. ஒருவகையில் அவமானம் ஏதுமில்லை என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

நாவலின் பலவீனமான கட்டங்கள் என நாயக்கர் காலம் நேரடி வரலாறாய்ச் சொல்லப்படும் ஆரம்பப் பகுதியையும், உயிர்ப்பின்றிச் சொல்லப்பட்டிருக்கும் குற்றப்பரம்பரைச்சட்டம் வரும் இறுதிப்பகுதியையும் சொல்லலாம். அதிலும் நாவல் தன் முடிவை நெருங்கிச் செல்லும் உச்ச வேளையிலும் களவுக்கலை பற்றிய நுண்விவரணைகள் தொடர்ந்தபடியே இருப்பது (அத்தியாயங்கள் 110 மற்றும் 112) கவனம் கலைப்பதோடு ஒரு கட்டத்தில் ஆயாசமூட்டுகிறது.

தொடர்புடைய‌ வரலாற்றின் சில பகுதிகளை மட்டும் ஏன் தொடவில்லை என்பது புரியவில்லை. உதாரணமாக ஊமைத்துரை வரலாறு விரித்துச் சொல்லப்படுகிறது (அத்தியாயம் 33); ஆனால் கட்டபொம்மு வரலாற்றை ஒற்றை வரியில் கடந்து விட்டார். குஞ்சரம்மாள் கதை சொல்லப்படுகிறது (அத்தியாயம் 77); ஆனால் நல்லதங்காள் கதை சொல்லப்படுவதில்லை. சொல்லப்படாத பின்னதுகளுக்கும் கள்ளர்களுக்கும் தொடர்பில்லை என்று காரணம் சொன்னால் சொல்லப்பட்ட முன்னதுகளுக்கும் கள்ளர்களுக்குமே அதே அளவு சம்மந்தம் தான் இருக்கிறது.

கள்ளர் இனத்தில் பிறந்து மிஷனரி பள்ளியில் படித்து பாதிரியாராக மாறும் டேவிட் சாம்ராஜ் பாத்திரம் இன்னும் தெளிவோடு கட்டமைக்கப்பட்டிருக்கலாம்.

இவ்வளவு பெரிய வரலாற்று நாவலுக்கு அடிக்குறிப்புகள் இல்லை, விரிவான முன்னுரை மாதிரியான விஷயம் இல்லை (இறுதியில் ஆசிரியர் குறிப்பு என்று சொல்லி மூன்று பக்கங்கள் தரப்பட்டிருந்தாலும் அதில் பெரிதாய் எந்தத் தகவலும் இல்லை). இதன் காரணமாக நாவலில் எவை வரலாற்று ஆவணங்களின் அடிப்படையிலானவை, எவை உறுதிப்படுத்தப்படாத கேள்விப்பட்ட செய்திகள், எவை முற்றிலும் கற்பனை சார்ந்த‌ புனைவு என்பதில் வாசகன் குழம்புகிறான்.

நாவலின் இலக்கியத்தரம் ஒரு சைனுசாய்டல் அலை (Sinusoidal Wave) கணக்காய் அமைந்திருக்கிறது. விஸ்வநாதர் காலத்தில் சமநிலையில் தொடங்கும் நாவல், நாயக்கர் காலத்தில் எதிர்மறை நிலைக்குச் சென்று விட்டு, கும்பினியர் காலத்தில் சமநிலைக்குத்திரும்பி, பிரிட்டிஷ் அரசின் காலத்தில் உச்சமெய்தி, தாதுப்பஞ்சத்தில் சமநிலைக்கு வந்து, குற்றப்பரம்பரைச்சட்டத்தின் போது எதிர்மறைக்குப் போகிறது.

*

ஒரு பத்தாண்டுகளாக அப்துல் ரகுமான், வைரமுத்து, சிற்பி பாலசுப்ரமணியம், ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, புவியரசு என்று அராஜக அட்டூழியம் செய்து வந்த சாகித்ய அகாதமி, கடந்த இரு வருடங்களாகத் தான் மறுபடி தகுதி வாய்ந்த‌ படைப்புகளுக்கு விருது வழங்கி வருகிறது. 2010ல் நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதைத்தொகுதிக்கும், இப்போது 2011ல் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலுக்கும் தரப்பட்டிருக்கிறது. இரண்டுமே தமிழினி வெளியீடுகள்.

சு.வெங்கடேசனுக்கு அளிக்கப்பட்ட விருது தொடர்பாய் இரண்டு பிழையான தகவல்கள் முன்வைக்கப்படுகின்றன. மிக இள‌ம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறுபவர் சு.வெங்கடேசன் என்பது ஒன்று. காரணம் 1972ல் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற போது ஜெயகாந்தனுக்கு வயது 38. இப்போது விருது பெறும் சு.வெங்கடேசனின் வயது 40. ஒருவேளை விருது பெறும் இரண்டாவது மிக இளையவராக வேண்டுமானால் இருக்கக்கூடும்.

இரண்டாவது ஒரே நாவல் எழுதிய படைப்பாளிக்கு எப்படி விருது கொடுக்கலாம் என்கிற கேள்வி. உண்மையில் சாகித்ய அகாதமி விருதானது ஒரு குறிப்பிட்ட படைப்புக்கு வழங்கப்படுகிறதே ஒழிய ஒரு படைப்பாளுமையின் ஒட்டுமொத்த எழுத்துச் சாதனையைக் கணக்கில் கொண்டு அளிக்கப்படுவதில்லை (ஞானபீட விருதுகள் வேண்டுமானால் இப்போபோதெல்லாம் அப்படி வழங்கப்படுகின்றன)‌. விருது பெற்றவர்களில் கணிசமானவர்கள் விருது பெறும் காலத்தில் இலக்கிய வாழ்வினின்று ரிட்டயர்ட் ஆகி விட்டிருந்தார்கள் என்பதால் (அதற்குத் தான் ஒருவேளை விருதோ!?) நம் பொதுப்புத்தியில் இது படைப்பாளிக்கான விருது; படைப்புக்கானது அல்ல என்ற எண்ணம் உறைந்திருக்கலாம். அது விருதுக் கமிட்டியின் பிழையல்லவே. அதனால் ஒரே படைப்பு தான் எழுதி இருக்கிறார் என்றாலும் அது தகுதியானது என்றால் சாகித்ய அகாதமி வழங்கப்படுவதே முறையானது. இம்முறை அந்த விதிமுறை சரியாகப் பின்பற்றிருக்கிறது.

இளம் வயதில் அதுவும் முதல் நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றிருப்பது சமீப‌த்தைய சாதனை என்றால் அழகியலும், வரலாறும் ஒத்திசைத்து இயங்கும் ஒரு பிரம்மாண்டத்தைப் யாத்தளித்தது அவரது நீண்ட கால சாதனை என்பேன்.

சு.வெங்கடேசனுக்கு என் மனப்பூர்வமான‌ வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

VERDICT: அவசியம் நிச்சயம் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல். DON’T MISS IT.

பின்னிணைப்புகள்:

  1. சு.வேங்கடேசனின் விக்கிபீடியா பக்கம்
  2. சு.வேங்கடேசனின் தினமலர் பேட்டி
  3. சு.வேங்கடேசனின் சில கட்டுரைகள்

0

சி.சரவணகார்த்திகேயன்

Wednesday, November 2, 2011

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக் குழு அலுவலகம்

421,அண்ணா சாலை,சென்னை-600018

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும்

தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் புதிதாக சென்னை பள்ளிக் கல்வி இயக்கக (டிபிஐ) வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் இன்று (2.11.2011) அறிவித்துள்ளார். 1.1.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு, சமுதாய வளர்ச்சியில் நூலகங்களின் தலையாய பங்கு குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுததப்பட்ட இந்த நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஒலி, ஒளி தொகுப்புகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.

முந்தைய அரசின் தவறுகள் காரணமாக தமிழக மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய போது புதிய அணுகுமுறைகள் பற்றிய எதிர்பார்ப்புகளுடனேயே இருந்தார்கள். ஆனால் அஇஅதிமுக அரசு அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு மாறாக, அரசியல் பகையுணர்வுடன் செயல்படுவதிலேயே முனைப்புக் காட்டுகிறது. தலைமைச் செயலகக் கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது அந்த அரசியல் பகையுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாகவே இருக்கிறது.

நூலகத்தை மாற்றுவதற்குச் சொல்லப்பட்டிருக்கிற காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை. அறிவு சார் பூங்கா அமையவிருக்கும் இடத்தில்தான் ஒரு பொதுநூலகமும் அமைய வேண்டும் என்பது மக்களை திசைதிருப்புவதற்கான மேலோட்டமான காரணமாகவே இருக்கிறது. டிபிஐ வளாகம் பள்ளிக் கல்வி சார்ந்த துறையினரும் மாணவர்களும் வந்துசெல்கிற இடம். அங்கு இப்படியொரு பொதுநூலகத்தை நிறுவுவது அந்த வளாகத்தின் செயல்பாட்டுக்கும் இடையூறாகவே அமையும். தனியொரு இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்திருப்பது அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. தற்போதைய அண்ணா நூலக வளாகத்தின் இடப்பரப்பைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி அதனை வலுப்படுத்த முடியும்.

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை அங்கு எழுப்ப முடியும். தேவையான உள்கட்டுமானங்களோடு அந்த மருத்துவமனை வளாகத்தைத் திட்டமிட்டு உருவாக்க முடியும்.

அதைச் செய்ய மனமில்லாமல், முந்தைய அரசால் கட்டப்பட்டது என்ற காரணத்திற்காகவும், அதற்கு முன் அஇஅதிமுக அரசு தலைமைச்செயலகத்தை அமைக்கத் தேர்வு செய்து பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் கைவிடப்பட்ட இடத்தில் இப்படியொரு கட்டடம் இருப்பதா என்ற தேவையற்ற ஆத்திரத்தாலும் தற்போதைய அண்ணா நூற்றாண்டு வளாகத்தை மாற்றுவது அரசியல் முதிர்ச்சியைக் காட்டவில்லை.

ஆகவே அரசின் இந்த முடிவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அரசு தனது முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறது. அரசு இதனை ஏற்க மறுக்குமானால் கல்வியாளர்கள், புத்தக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரைத்திரட்டி மாநிலந் தழுவிய போராட்டத்தில் சங்கம் ஈடுபடும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

ச.தமிழ்ச்செல்வன் சு.வெங்கடேசன்

மாநிலத்தலைவர் மாநிலப்பொதுச்செயலாளர்

மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்,வலைத்தளத்தில்,தொலைக்காட்சியில் வெளியிடுமாறு வேண்டுகிறோம்.

சு.வெங்கடேசன்

பொதுச்செயலாளர்

Saturday, October 29, 2011

தமிழகம் இன்று

(டைம்ஸ் இன்று தீபாவளி மலருக்காக மனுஷ்யபுத்திரன் கேட்டுக்கொண்டதற்கிணங்க அனுப்பப்பட்ட குறிப்புகள் –முழுமையாக இங்கு.)

rural

1.கற்றுத்தருதலின் பிரச்னைகள்

கற்றல்-கற்பித்தல் தொடர்பான சொந்த யோசனை உள்ள ஆசிரியர்கள் யாரும் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை.அரசாங்கப் பயிற்சிப்பள்ளிகளில், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகளில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து இந்த கற்பித்தல் உத்தியோகத்துக்கு வந்து சேர்கிறார்கள்.என்ன மரியாதை இருக்கும் இந்தக் கற்றுத்தரும் பணியின் மீது அவர்களுக்கு?முதல் பிரச்னை இது.அப்புறம்....

டிசம்பருக்குள்ளே போர்ஷனை முடிக்கணும்

பிப்ரவரிக்குள்ளே ரிவிசன் டெஸ்ட்டுகள் மூணு முடிக்கணும்.

பசங்க சரியாப் படிக்கலேன்னா டீச்சர்ஸ் என்னா சார் பண்ண முடியும்? அதிகாரி எனக்கு மெமோ கொடுக்கறாரு?நான் போயி பரிச்சை எழுதவா?

சார்.. புரியுதா புரியலியாண்றது முக்கியமில்லை..ரிசல்ட்தான் முக்கியம்.போங்க போய் நல்லா டிரில் பண்ணுங்க பசங்களை..

சின்ன கிளாஸ் டீச்சர்ஸ் ஒண்ணுமே சொல்லித்தராமே ஒரு கூட்டல் கழித்தல் கூட சரியா கத்துத்தராம மேலே அனுப்பிடறாங்க..நாங்க டென்த் ப்ளஸ்டூ டீச்சர்ஸ்தான் சாக வேண்டியிருக்கு.. எல்லாக் கெட்ட பேரும் எங்களுக்குத்தான்..

ப்ளஸ் டூ விலே 200 பசங்க சார்.ஒரே ஒரு இங்கிலீஸ் டீச்சர் நான் மட்டும்தான்.மைக் வச்சுத்தான் பாடம் நடத்தறேன்.டெஸ்ட் வச்சா பேப்பர் திருத்தியே கை வீங்கிப்போகுது..கவர்ன்மெண்ட் ஸ்கூல் லட்சணம் இதுதான் பாத்துக்கிடுங்க..

இவை நம் பள்ளி வளாகங்களில் அன்றாடம் கேட்கும் உரையாடல்கள்.கற்றுத்தருதலின் பிரச்னைகளாக நம் ஆசிரிய நண்பர்கள் உணர்வது எல்லாம் இவற்றுக்குள் அடங்கி விடும். இவை எல்லாமே இன்னும் பல லட்சம் ரோபோக்களை உருவாக்கும் போராட்டத்தின் பிரச்னைகள்தாம்.கற்றுத்தருதலின் பிரச்னைகள் அல்ல. கல்வி என்பது இதுவல்லவே?

சார்..நாம ஸ்கூல் டூர் போனப்போ டில்லி வரைக்கும் அவ்வளவு தூரம் போனாலும் பூமி தட்டையாத்தானே சார் இருக்குது?ஆனா பூமி உருண்டைன்னு படிக்கிறோம்?

மிதக்கிற டெக்டோனியம் பிளேட்டுகளுக்கு மேலேதான் கடலும் நிலமும் இருக்குதுன்னா நாம் படகு வீடு மாதிரி இருக்கிறோமா?அப்படின்னா அசையாம இருக்கிறோமே எப்படி ?

நாமளும் அவங்களை மாதிரிதானே இருக்கிறோம்.அப்புறம் எப்படி நாம மட்டும் கீழ்ச்சாதி ஆனோம்?சாதின்னா என்னா?

கற்பித்தலின் சவால்களை நம் பள்ளிகள் இன்றுவரை சந்தித்தே இல்லை.குழந்தைகளாக கல்விச்சாலைகளுக்குள் நுழைந்து இளைஞர்களாக யுவதிகளாக அவர்கள் வெளியேறும் காலம் வரையான 15 ஆண்டுகளில் என்ன கற்றுத்தருகிறோம்?. கடந்த பல நூற்றாண்டுகளாக மனிதகுலம் சேகரித்து வைத்துள்ள அறிவு மற்றும் பண்பாட்டுச் சுரங்கத்திருந்து எவ்வளவை நம் குழந்தைகள் எடுத்துச்செல்லும் விதமாக கற்றுத்தருதல் நடக்கிறது?அதில் என்ன பிரச்னைகள்?அதை விவாதிக்க நம் நாட்டில் இப்போது அவசியம் இல்லை.கல்வியின் பொருளறிந்து கற்பித்தல் நடக்கும்போதுதானே நாம் அதுபற்றிப் பேசலாம்.

2.மாற்றுக்கல்வி முயற்சிகள்

கற்பவரும் கற்பிப்பவரும் சேர்ந்து விமர்சனப்பூர்வமாக இந்த உலகத்தையும் பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்ளும் நிகழ்வுப்போக்கே கல்வி.அது அதிகாரப்பூர்வமான கல்விச்சாலைகளில் நடக்காததால் இந்தப்புரிதலோடு உள்ளும் புறமும் நடக்கும் எல்லா முயற்சிகளையுமே மாற்றுக்கல்வி முயற்சிகள் எனலாம். வழமையான பள்ளிகளில் வழமையான பாட போதங்களைத்தாண்டி நடைபெறுகிற பல நிகழ்வுகள் மாற்றுக்கல்வி முயற்சிகள்தாம்.பேச்சுப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு திறன்களுக்கான போட்டிகள்,பள்ளிகளுக்கு எழுத்தாளர்கள் உள்ளிட்ட சமூக மனிதர்களை அழைத்துப் பேச வைப்பது.சமூகசேவைக்காக கிராமப்புறங்களுக்கு அழைத்துச்சென்று பத்துநாள் முகாம் போடுவது,என்.சி.சி முகாம்கள்,பள்ளி ஆண்டுவிழாக்களில் பங்கேற்பது என இவையெல்லாம் சரியான புரிதலோடு செய்யப்பட்டால் எல்லாமே மாற்றுக்கல்வி முயற்சிகள்தாம்.

இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சிலகாலம் மிகுந்த உற்சாகத்தோடு இரவுப்பாடசாலைகளைப் பல மாவட்டங்களில் நடத்தினர். பள்ளிக்கூடத்தின் பாட்த்திட்டமும் புத்தகங்களும் தேர்வு முறையும் பிரம்பும் அவர்கள் மனங்களில் ஏற்படுத்தியிருக்கும் அன்றாடக் காயங்களுக்கு மருந்தாக அந்த இரவுப்பாடசாலைகள் இருந்தன.அவற்றை நட்த்தியவர்கள் அதே தெருக்களைச் சேர்ந்த மூத்த அல்லது முன்னாள் மாணவர்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர்,நாகப்பட்டினம் மாவட்டங்களில் இந்தப் பாடசாலைகள் மிகப் பரவலாகவும் சிறப்பாகவும் நடைபெற்றன.

மதுரையில் அக்‌ஷரா,பட்டுக்கோட்டையில் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் பள்ளி ,சென்னையில் சில பள்ளிகள் ,திருச்சியில் எஸ்.ஆர்.வி.மெட்ரிக்குலேசன் பள்ளி எனச் சில முறைசார்ந்த பள்ளிகள் மாற்றுக்கல்வி முயற்சிகளில் ஈடுபடுகின்றன.அவை மிக முக்கியமான அனுபவங்களைத் தந்துள்ளன.பல நல்ல முன்னுதாரணங்களை அவை உருவாக்கியுள்ளன.பட்டுக்கோட்டைப் பள்ளியில் வீட்டுப்பாடம் ,பிரம்பு,அதிகமான தேர்வுகள் ஏதும் வைப்பதில்லை.மாறாக வேறுவிதமான வீட்டுப்பாடங்கள் தருகிறார்கள்.

பிள்ளைகளுக்கு நமது மரபான கலைகளான கரகாட்டம்,தப்பாட்டம் போன்றவற்றிலும் நாடகங்கள் நடத்துவதிலும் பயிற்சி அளித்துப் பல ஊர்களுக்குப் பள்ளி வேனிலேயே அழைத்துச்சென்று நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.பள்ளிக்கூடம் இப்படி கரகாட்ட்த்தில் அக்கறை காட்டினால் படிப்பை பிள்ளைகள் தாங்களே பார்த்துக்கொள்கிறார்கள். எந்த வன்முறையும் இல்லாமல் பத்தாம் வகுப்பில் பட்டுக்கோட்டை மாணவர்கள் 98 சதம் தேறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் தேசிய அறிவியல் நிறுவனத்தின் விருதை இப்பளி மாணவர்கள்தாம் பெறு வருகிறார்கள்.

திருச்சி எஸ்.ஆர்.வி.பள்ளி ஆண்டு முழுவதும் சமூகத்தை மானவர்களுக்கு அறிமுகம் செய்யும் கனவு மெய்ப்பட.. என்கிற நிகழ்வை நடத்தி வருகிறது.வெளிக்காற்று உள்ளே வரட்டும் என்கிற தலைப்பில் கோடைகாலப் பயிலரங்கை நட்த்துகிறது.

நான் அறிய மேற்கூறிய சில பள்ளிகளின் ஆசிரியர்கள் மட்டுமே ஜன்னலில் ஒரு சிறுமி,பகல் கனவு,ஜான் ஹோல்ட்டின் கல்வி சார்ந்த புத்தகங்கள் எல்லாம் வாசித்தவர்களாக பாவ்லோ பிரையர்,மாண்டிசோரி போன்ற பெயர்களை அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கல்வி முயற்சிகலும் மாற்றுக்கல்வி முயற்சிகளே.அறிவியல் இயக்கத்தின் துளிர் இல்லங்களில் ஒரு பைக் மெக்கானிக் சிறப்பு அழைப்பாளராக வந்து ஒரு பைக்கை அக்கு வேறு ஆணிவேறாகக் கழட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். இதுதானே மாற்றுக்கல்வி.சமூகத்தை விமர்சனப்பூர்வமாகப் பார்க்கப்பழக்குவது.கஞ்சி குடிப்பதற்கிலார்.அதன் காரணம் இவையெனும் அறிவுமிலார் வாழும் ஒரு சமூகத்தில் காரணம் எவை என்னும் அறிவை வழங்குவது மட்டுமே மாற்றுக்கல்வியாக இருக்க முடியும்.

சாதியக்கூறுகளும் மீறல்களும்

தமிழகக் கிராமங்களில் சாதி முதல் பார்வையில் பளிச்செனத்தெரிவது புவியியல் தளத்தில்.சாதி ரீதியான தெருக்கள்.ஒதுக்குப்புறமான தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள்.அங்கிங்கெணாதபடி இந்தப்புவியியல் விதிப்படிதான் இப்போதும் கிராமங்கள் இருக்கின்றன.(நகரங்களும் அப்படித்தான். அங்கே பளிச்சென்று தெரியாது. ஆனால் தோண்டிப்பார்த்தால் இப்புவியியல் ரீதியான சாதி அங்கும் தெரியும்).இதில் மீறல் என்பது சில வடிவங்களில் இப்போது வெளிப்படுவதைக் காண முடியும்.ஒன்று, ஊருக்குள் வரும் டவுண்பஸ் கிராமத்திலேயே நின்று திரும்பி விடுகிறது.சேரிவரை வருவதில்லை.ஆகவே சேரிமக்கள் கிராமத்துக்கு வந்து நிற்க நிழலின்றிக்காத்திருந்து பஸ் ஏற வேண்டும்.சேரிவரை பஸ் வரணும் என்று தலித் மக்களும், சேரிவரை போனால் பள்ளுப்பறையெல்லாம் முதல்ல ஏறி சீட்டுப்போட்டு உக்கார்ந்துட்டு வருவான் நாம ஸ்டாண்டிங்லே போகணும்.ஆகவே பஸ் சேரிக்குப்போக்க்கூடாது என்று கிராமத்து மக்களும் என பஸ் போராட்டமாக அது வடிவம் கொண்டு நிற்கிறது பல ஊர்களில்.சாதிக்காரர்கள் வந்தால் பஸ்ஸில் முதலில் உட்கார்ந்துவிட்ட தலித்துகள் எழுந்து அவர்களுக்கு சீட் கொடுக்கும் அடிமைத்தனமெல்லாம் இப்போது கிராமப்புறங்களில் முற்றாக ஒழிந்து விட்டது ஆறுதலான மீறல்.ஆனாலும் சேரி இன்றும் ஒதுக்குப்புறமாகத்தான் இருக்கிறது என்பது பருண்மையான புவியியல் உண்மை.

படிப்பு ,வேலைவாய்ப்பு காரணமாக பொருளாதாரரீதியில் சற்றே முன்னேறிய தலித் மக்களில் ஒரு சிறு பகுதியினர் கிராமத்தில் சொந்தமாக நிலம் வாங்கிப் பயிர் செய்ய முன்வருகின்றனர்.பன்னெடுங்காலத்து நிலத்தாகம் தீர அவர்கள் உற்சாகத்துடன் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.நேற்றுவரை கூலியாக இருந்தவன் இன்று சமமாக விவசாயம் செய்ய வந்துவிட்ட யதார்த்த்த்தை சீரணிக்க முடியாத உயர்சாதி மனோபாவம் வயற்காட்டில் நீர்பாய்ச்சும் வாய்க்கால் தகராறாக வெடித்துக் கொலைகள் வரை செல்கிற போக்கு தென் மாவட்டங்களில் பரவலாக உண்டு.இது சாதியின் இருப்புக்கும் மீறலுக்குமான அடையாளம்தான்.

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே என்றொரு தமிழ்த்திரைப்படப்பாடல் உண்டு.மயானக்கரையில் நின்று அப்பாடலை ஒருவர் பாடுவதாக வரும்.ஆனால் தமிழகத்தில் எல்லாச் சாதியினருக்கும் ஒரே சுடுகாடு என்பது இன்றும் உருவாகவில்லை.மாநகரத்து மின்மயானங்கள் ஒரு வேளை விதிவிலக்காக இருக்கலாம்.எல்லா கிராமங்களிலும் சாதிரீதியான சுடுகாடுதான்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக இதுபற்றி நாங்கள் ஒரு சர்வே நட்த்தியபோது அரசாங்கத்தின் செலவில் கட்டப்பட்ட மயானங்களுமே சாதிக்கு ஒன்றாகத்தான் கட்டப்பட்டுள்ளதைக் கண்டோம்.இன்னும் பல ஊர்களில் பஞ்சம சாதிகளுக்கு மயானக்கரை என்ற ஒன்ரே இல்லாத நிலை நீடிக்கிறது.

தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சியும் வட மாவட்டங்களில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் வந்த பிறகு உள்ளூரில் தீண்டாமைக்கு எதிராக அவர்கள் போராட முடியாவிட்டாலும் பெருநகரங்களில் மாநாடுகள் போடும் போதெல்லாம் சாதி மறுப்பு உணர்வு பொங்க ஒருவித மீறல் சமூக மனநிலைக்கு ஆளாவது நடக்கிறது.இது நாளை உள்ளூர் எதிர்ப்புகளுக்கும் பீறல்களுக்கும் இட்டுச்செல்ல ஒரு கருத்துநிலை முன் தயாரிப்பாக இருக்கும் என நம்பலாம். இட்துசாரிகளும் அருந்த்தியர் அமைப்புகளும் இணைந்து உருவாக்கியுள்ள தீண்டாம ஒழிப்பு முன்னணி போன்ற எல்லாச்சாதியினரும் கொண்ட பொது அமைப்புகள் சாதி எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதும் இப்போது துவங்கியுள்ளது ஆரோக்கியமான போக்கு ஆகும்.

4.இடம் பெயர்தல்

நான் சிறுவனாக இருந்த 50-60 களில் பஞ்ச காலங்களில் எங்கள் பகுதி மக்கள் மூட்டை முடிச்சுகளோடு தஞ்சாவூருக்குப் பஞ்சம் பிழைக்கப்போவது உண்டு.நான்கைந்து மாதங்கள் அங்குபோய் விவசாயக் கூலி வேலை பார்த்து நெல் மூட்டைகளுடன் ஊர் திரும்புவார்கள்.தஞ்சாலூரு போனா கருதறுத்துப் பிழைக்கலாம் காஞ்சீவரம் போனா காலாட்டிப்பிழைக்கலாம் என்று பாட்டி சொல்லுவாள்.இப்பழமொழிகள் நமக்குச் சொல்வது என்ன?ஏழை உழைப்பாளி மக்கள் பிழைப்புத்தேடி ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்தார்கள் என்பதைத்தான்.காலம் காலமாகத்தொடரும் இத்துயரம் இன்றும் தொடர்கிறது.

திருப்பூர் நகரம் ஒரு மினி தமிழ்நாடாகவே இருக்கிறது.எல்லா முனைகளிலிருந்தும் திருப்பூருக்கு பஸ்களின் வழித்தடங்கள் உண்டு.பிழைப்பு இழந்த தமிழகத்தின் கிராமப்புற ஏழைகள் படையெடுப்பது திருப்பூராக இருக்கிறது.அங்கே ஒரு நரக வாழ்க்கைதான் அவர்களுக்குக் காத்திருக்கிறது.என்றாலும் துரத்தும் ஊர்களை விட்டுப் பிரிந்தே தீரவேண்டியிருக்கிறது.நானறிந்த தென் மாவட்டங்களிலிருந்து திருப்பூர்,சென்னை புறநகர்ப்பகுதிகள்,ஓசூர்,ஆந்திர,கர்நாடக கல் குவாரிகள் எனப் பல திசைகளை நோக்கி மக்கள் இடம்பெயர்கிறார்கள்.பணம் புரட்ட முடிந்தவர்கள் வளைகுடா நாடுகளுக்குத் தப்பிச்செல்கிறார்கள்.

இது ஒருபுறம் எனில் தமிழகத்துக்குப் பிழைப்புத் தேடி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினசரி வந்திறங்கும் பீகார்,ஒரிஸ்ஸா மற்றும் ஆந்திர மாநில மக்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.கு.அழகிரிசாமியின் திரிபுரம் கதைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

” பட்டினிப்பட்டாளங்கள் ஏதோ நம்பிக்கையுடன் ஒரே சாலையில் எதிர் எதிர் திசையில் பிரயாணம் செய்வது பஞ்சத்தின் கோரமான அலைக்கழிவுகளில் ஒன்று “ 1949இல் கு.அழகிரிசாமி எழுதிய கதை இது.எந்த முன்னேற்றமும் இன்றுவரை இல்லையே என மனம் பதறுகிறது.சுதந்திரம் நமக்கு எதைத்தான் கொண்டு வந்ததோ தெரியவில்லை.

மத்தியதர வர்க்கத்து வாழ்வில் இடப்பெயர்ச்சி என்பது வெள்ளைக்காரன் காலத்திலிருந்து இருப்பதுதான்.விவசாயம் சார்ந்த வாழ்வை விட்டு அரசாங்க உத்தியோகம் சார்ந்து வாழப்புகும் அத்தனைபேருக்கும் இடப்பெயர்வு உண்டு.

ஆண்கள் இடம்பெயர்ந்து சம்பாதிக்கப்போவது சங்க காலம் தொட்டு இருப்பதுதான் -பொருள்வயின் பிரிவு.ஆனால் இன்று கூட்டம் கூட்டமாகப் பெண் குழந்தைகள் சுமங்கலித்திட்டம் என்பது போன்ற பல பேர்களில் ஊர்கடத்தப்பட்டு ஏதேதோ மில்களின் எந்திரங்களுக்கிடையே வதைபட்டுக்கொண்டிருக்கும் அவலம் நம் கண் முன்னே அரங்கேறிக்கொண்டிருக்கிறது.அவர்களின் கதைகளைக் கேட்டால் –சொல்லாமலே பெருமூச்சில் கரைந்துபோன கதைகள் ஓராயிரம் -நமக்கு ரத்தக்கண்ணீர்தான் கொட்டும்.தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் நாகை,திருவாரூர்,தஞ்சைப் பகுதிகளில் கிராமங்களில் இன்று இளைஞர்களே இல்லை.யுவதிகளும் இல்லை.எல்லாம் இடம்பெயர்ந்து டிருப்பூர் போன்ற பகுதிகளுக்குச் சென்று விட்டனர்.அரசின் விவசாயக்கொள்கையும் இறால் பண்ணைகளின் வருகையும் அவர்களைத் துரத்தி விட்டுள்ளதை வெறிச்சோடிக்கிடக்கும் அவ்வீதிகளில் காணலாம்.

மதுரை,திருச்சி பஸ் நிலையங்களில் ஓர் இரவை நாம் கழிக்க நேர்ந்தால் கூட்டம் கூட்டமாக மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் இப்பக்கமும் அப்பக்கமுமாக அலைவதைக் காணநேரும்.சனிக்கிழமைகளில் திருப்பூரிலிருந்து வரும் அத்தனை பஸ்களிலும் ரயில்களிலும் மக்கள் தொங்கிக்கொண்டு வருவதைப் பார்ர்க்க முடியும்.இடப்பெயர்வின் காட்சி வடிவமாக அது இன்றைக்கும் நடந்துகொண்டிருக்கிறது.ஆட்சிகள் நிலையாக இருக்கின்றன.அமைப்புகள் நிலையாக இருக்கின்றன.மக்கள்தாம் நிலையற்று வேரற்று அலையும் காலமாக நம் காலம் இருக்கிறது.

5.கிராமப்புறப்பெண்களின் கல்வி,சுகாதாரம்

என்னைச்சுற்றிலும் பீடிசுற்றும் பெண்கள்.கால்களை அகட்டி நடுவில் வட்டச்சுளகை வைத்துக்கொண்டு பீடி இலைகளோடு அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.எத்தனையோ தொழில்களில் எங்கள் பெண்கள் காலை முதல் மாலைவரை -செங்கல் சூளைகளில்,வயல் வெளிகளில்,தீப்பெட்டியில் பட்டாசுத்தொழிலில் -என உழைத்து வருகிறார்கள்.அவ்வத் தொழில்சார்ந்து உடல் உபாதைகள், வியாதிகள் அவர்களுக்கு வந்து சேர்கின்றன.பெண்ணாகப்பிறந்ததால் உண்டாகும் பிரச்னைகள் தனி.எல்லாவற்றுக்கும் மருந்து தேடி அவர்கள் போவதில்லை.போக நேரமில்லை என்பதுதான் முக்கியக் காரணம்.ஊருக்குள்ளேயே ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தால் போய் விடுகிறார்கள்.பக்கத்து ஊருக்குப்போய் வைத்தியம் பார்க்க நேரம் இருப்பதில்லை.இழுத்துக்கிட்டா கிடக்கு இப்பம் ஆஸ்பத்திரிக்குப் போக.. என்று வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஆரம்ப சுகாதார நிலையமும் அரசு மருத்துவமனைகளும் மட்டுமே அவர்களுக்கான நோய்நீக்கும் ஏற்பாடுகளாக உள்ளன.தனியார் மருத்துவமனைகள் பற்றி அவர்கள் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை.ஆகவே அரசு மருத்துவமனைகள் மிக மிக முக்கியமானவை ஆகின்றன.எளிய மக்களின் வாழ்வில் அவை வகிக்கும் பங்கு மகத்தானது.ஆயிரம் கோளாறுகளும் ஊழலும் உள்ளே இருந்தாலும் அரசு மருத்துவமனைகள் - கண் கலங்கிச்சொல்கிறேன் -எம் பெண்களின் குறைநீக்கும் கோவில்கள்தாம்.

இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.முதலில் வீடுகளில் பெண்களுக்கான சத்தான உணவுக்கு வழியில்லை.எல்லோருக்கும் உணவளித்தபின் தனக்கானதை அவள் எடுத்துக்கொள்கிறாள்.நகர்ப்புறத்து இந்தப் பண்பாடு இப்போது கிராமத்துக்கும் வந்துவிட்டது.பெரும்பாலான பெண்கள் ரத்தசோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபற்றி அறியாமலும் அறிந்தாலும் கவனிக்க வாய்ப்பின்றி வண்டி ஓடுற வரைக்கும் ஓடட்டும் என்று போய்க்கொண்டிருக்கிறார்கள்.

படிப்பு பரவலாகியுள்ளது.கிராமத்துப் பெண் குழந்தைகள் எல்லோருமே ஆரம்பப்பள்ளியில் சேர்ந்துவிடுகிறார்கள்.பால்வாடிக்குப் போகும் பழக்கம் இன்னும் சின்ன வயதிலேயே 2 வயசில் வந்துவிடுவதால் பள்ளி செல்லும் பழக்கம் வந்துவிடுகிறது.படிப்பைத் தொடர்வதில் இன்னும் பிரச்னை இருக்கிறது.பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தபிறகு பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கும் பழக்கம் வெகுவாக்க் குறைந்துள்ளது.உள்ளூரில் பள்ளி இருந்தால் அதில் இருக்கும் வகுப்புவரை படிப்பதில் சிக்கல் இல்லை.அருகமைப்பள்ளிகள்,பொதுக்கல்வி என்கிற நம் கனவுகள் நிறைவேறினால் அது பெண்கல்விக்குத்தான் பெரும் பேறாக அமையும்.இன்று கிராமத்துப்பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான தனிக் கழிப்பறைகள் கிடையாது.ஓலைத்தடுப்புத்தான் எங்கும் இருக்கிறது.மாத விலக்குக் காலங்களில் எம் குழந்தைகள் ஒதுங்க பள்ளிகளில் தனியான ஏற்பாடே கிடையாது. கழிப்பறை இல்லாத பள்ளிகளுக்கு கணிணி மட்டும் வந்து சேர்ந்து விடுகிறது.கேலிக்கூத்துதானே.

இன்னும் கல்லூரிகளுக்குப் போவது என்பது கிராமப்புறத்தில் உள்ள படித்த வர்க்கத்தினரின் பிள்ளைகளுக்கு மட்டுமே வாய்க்கிறது.மார்க் அடிப்படையில் சீட் என்னும் போது கிராமப்புறப் பெண்குழந்தைகள் கல்லூரிகளில் கிடைக்கும் பாட்த்தை எடுத்துப் படிக்க வேண்டிய நிலைதான் வாய்க்கிறது.ட்யூசன் வசதிகள் எதுவும் இல்லாத கிராமப்புறப் பெண்குழந்தைகளுக்கென எல்லாப் பாடப்பிரிவுகளிலும் (கல்லூரிகளில்)இட ஒதுக்கீடு செய்வது அவசியம்.

Saturday, October 22, 2011

‘‘எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட்''

ச.தமிழ்ச்செல்வன் நேர்காணல் – 2011 அக் 30-த சண்டே இந்தியன் இதழில்

நேர்கண்டவர் : பேராச்சி கண்ணன்

ச. தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் THI_6313 சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்தவர். தற்போது மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இருளும் ஒளியும், அரசியல் எனக்கு பிடிக்கும் உட்பட முப்பது நூல்களை வெளியிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கும் இவர், தமிழகம் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருப்பவர். தமுஎகச மற்றும் இடதுசாரிகளின் பங்களிப்புகள், முற்போக்கு எழுத்து உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பேராச்சி கண்ணனிடம் தெளிவாகப் பதிலளிக்கிறார்

தமிழின் நம்பிக்கை அளிக்கும் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானவர் நீங்கள். பிறகு முற்றிலும் களச்செயல்பாட்டாளராக மாறிவிட்டீர்கள். ஏன் இந்தத் தேர்வு?

எல்லா மனிதர்களுக்குமே புறச்சூழல் தான் அகத்தூண்டுதலைத் தீர்மானிக் கிறது. என்னுடைய வாழ்க்கையில் புறச்சூழல் தூண்டுதல்தான் எழுதக் காரணமானது. எழுத்து முக்கியம்தான். ஆனால் அதைவிட களப்பணி முக்கியமானதாக இருக்கிறது. இது ஒரே நாளில் எடுத்த முடிவல்ல. எழுதிக் கொண்டே களப்பணி செய்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் களப்பணியே அதிகமாகிவிட்டது. படைப்பாளியின் நோக்கம் மக்களுக்குச் சொல்லவேண்டும் என்பதுதான். நாம் பார்த்த கண்டடைந்த வாழ்வனுபவங் களை சகமனிதர்களுக்குச் சொல்வது தானே எழுத்து. இருந்தும் கதை வழியாகச் சொல்வதைவிட, நேரடியாகச் சொல்வது உடனடி தேவை என்ற உணர்வு எனக்குள் தோன்றியது. மேலும் சுதந்தரத்திற்குப் பிறகு நடந்த மாபெரும் பண்பாட்டு இயக்கம் அறிவொளி இயக்கம். அப்படிப்பட்ட மக்கள் இயக்கம் அழைக்கும்போது வீட்டில் சும்மா இருக்கமுடியாது. அதனால் களப்பணிக்கு வந்தேன். இப்போது நேரமின்மையால் எழுத முடியவில்லை. ஆனால் நான்கு இரவுகள் கிடைத்தால் போதும் ஒரு சிறுகதை எழுதிவிடுவேன்.

தொடர்ந்து சிறுகதைகள் எழுதாமல் போனதில் வருத்தம் உண்டா?

கதை எழுத முடியவில்லையே என்ற வருத்தம் ஒவ்வொரு நாளும் எனக்குள் இருக்கிறது. நாம் யார் என்ற அடையாளம் இருக்கிறது. எனக்கு சிறுகதை எழுத்தாளர் என்ற அடையாளம் உள்ளது. ஆனால் நேரம் தான் போதுமானதாக இல்லை. இப்போது நிறைய பேர் எழுத வந்துள்ளனர். இது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். ஆனால் மின்னணு ஊடகம் வந்த பிறகு மக்களின் வாசிப்புத்திறன் குறைந்துள்ளது. நல்ல நூல்களை வாசிக்கும் வாசகர்கள் குறைந்துவிட்டனர். இப்போது மேலோட்டமாக வாசிக்கும் மனநிலை வாசகர்களிடையே உள்ளது. இது ரிமோட் கண்ட்ரோல் மனநிலை. சுவாரசியமான சேனல் பார்க்கலாம்; இல்லையெனில் மாற்றிவிடலாம். ஆனால் அதேநிலையில் புத்தகங்களையும் மேற்கொள்ள முடியாது. உள்ளே போனால் படித்து தான் ஆகவேண்டும். அதற்கான காலம் எடுத்துதான் வாசிக்கவேண்டும். மேலும் தற்போது வெகுஜன இதழ்களில்கூட கதைக்கான இடம் என்பது இல்லாமல் போய்விட்டது. சில இதழ்களில் ஒரு பக்க கதை மட்டும் போடுகின்றனர். காரணம் சந்தையில் மதிப்பு இல்லை என்பதுதான். சீக்கிரம் சலிப்படைவது என்பது இன்றைய காலத்தின் மனநிலையாக இருக்கிறது.

ஒரு கலாச்சார இயக்கமாக தமுஎகசவின் செயல்பாடுகள், தமிழகத்துக்கு செய்திருக்கும் பங்களிப்புகள் பற்றிக் கூறுங்களேன்?

தமிழ்நாட்டில் ஏழே கால் கோடி பேர் உள்ளனர். அதில் சில லட்சம் பேர்களைத் தொடுபவர்களாக நாங்கள் இருக்கிறோம். தமுஎகச தமிழ்ச் சமூகத்தின் மனச்சாட்சி. அந்தந்த நேரத்தில் மனச்சாட்சி என்ன பேசுமோ அதை எழுத்தாளர்கள் பேச வேண்டும். எழுத்தாளர்கள் என்ன பேசவேண்டும் என்பதை தமுஎகச சொல்லிக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக விவசாயிகள் தற்கொலைகள் நடக்கும்போது, அதைப் பற்றி ஏன் பேசவில்லை என்று கேட்கிறோம். எந்த ஊடகமும் சாதாரண விவசாயிகள் பற்றியோ, தொழிலாளிகள் பற்றியோ பேசுவதில்லை. முதல் பக்கத்தில் அவர்களைப் பற்றிய முக்கியமான செய்திகூட போடுவதில்லை. நாங்கள் மக்களின் மனச்சாட்சியாக இருந்து அதைப்பற்றி பேசுகிறோம். அன்று 35 பேருடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 21 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்தளவு வளர்ச்சி உள்ளது. பங்களிப்பைப் பொறுத்தவரை கலை இலக்கிய இரவு என்ற பண்பாட்டுத் திருவிழாவை நடத்து கிறோம். அதன்மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருக்கும் திறன் வாய்ந்தவர்களை அந்த மேடையில் ஏற்றுவோம். அடுத்து தெரு சினிமா இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளோம். நல்ல திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை தெருக்களில் போட்டுக் காண்பிப்பது. இதன் மூலம் மக்களின் சினிமா ரசனையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அடுத்து நாட்டுப்புற ஆய்வுகள் இயக்கம் தொடங்கி யுள்ளோம். 1960&ல் ஜீவானந்தம் தலைமையில் பேராசிரியர் நா.வானமாமலை பொறுப்பில் நாட்டுப்புற இலக்கியங்களை, கலைகளை தொகுத்து வளர்த்தெடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அதில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. இவை எத்தனையோ மாவட்டங்களில் தொகுக்கப்படாமல் உள்ளன. விடுகதை, சொலவடை, நாட்டுப்புறக் கதைகள், பொருட்கள் சார்ந்த பண்பாடு என நிறைய பிரிவுகள் உள்ளன. இதில் எப்படி ஆய்வு செய்வது, தொகுப்பது என்பது பற்றி பயிற்சி கொடுத்துள்ளோம். அடுத்து உள்ளூர் வரலாறு எழுத பயிற்சி கொடுக்கிறோம். இதையெல்லாம் தமுஎகசவால் மட்டுமே செய்யமுடியும். நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியம் கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டதற்கு தமுஎகசவின் போராட்டம்தான் காரணம்.

கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தை குறுக்கும் நெடுக்குமாய் பயணம் செய்து இருக்கிறீர்கள். தமிழகம் எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

தமிழகத்தில் இளைஞர்கள், இளம் பெண்கள் யாரும் சொந்த ஊர்களில் இல்லை. ஏனெனில் பிழைப்பிற்கு இங்கே வழியில்லை. பிழைப்புத் தேடி இடம் பெயர்ந்து அலைகின்றனர். நான் பார்த்த பெரிய துயரம் இது. அடுத்த துயரம் அழிக்கமுடியாத சாதிய உணர்வு. அது மக்களிடையே இறுகிப் போய் உள்ளது. சிறுபான்மையினராக இருக்கும் மக்களான அருந்ததியினர், அரவாணிகள் எல்லோரும் தங்கள் குரலை வலுவாக உயர்த்தி வெளிவந்துள்ளனர். மாற்றுத்திறனாளி கள் இன்று ஒருங்கிணைந்துள்ளனர். ஒடுக்கப்பட்ட அனைவரும் இன்று வெளிவந்துள்ளனர். அடுத்து அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள் வர்க்கம் குறைந்துவிட்டது. தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த முறையில் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற, இரக்கமற்ற, அறிவில்லாத நாற்கர சாலைகள் வந்துள்ளன. இதனால் கிராமங்கள் துண்டாகிக் கிடக்கின்றன. இதில் சாதாரண மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அடுத்து தமிழகத்தில் குடிப்பழக்கம் அதிகமாகியுள்ளது. தொழிலாளிகள், படைப்பாளிகள், இளைஞர்கள் என அனைவரும் போதைக்கு அடிமையாகியுள்ளனர். ஏனெனில் பிரச்னைகள் அதிகமாகி விட்டன. பிரச்னைகளைச் சமாளிக்க தெரியாமல் அல்லாடுகின்றனர். பொருளாதாரப் பிரச்னைகளை பண்பாட்டுத் தளத்தில் வைத்துத் தீர்க்க முயற்சி செய்கின்றனர். இதனால் அதிலிருந்து தப்பிக்க போதைக்கு அடிமையாவதும், கோவிலுக்குச் செல்வதும், சினிமாவிற்குச் சென்று மகிழ்ச்சியாக இருப்பதும் அதிகரித்துள்ளது.

அறிவொளி இயக்கத்தில் உங்கள் செயல்பாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பணிகள் தமிழகத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

அறிவொளி இயக்கம்தான் கல்வி என்பது முக்கியம் என்பதை மக்கள் மத்தியில் அழுத்தம் திருத்தமாக உணர்த்திய இயக்கம். அறிவொளி இயக்கத்திற்கு வந்தவர்கள் அனைவரும் படிக்காதவர்கள். முதியோர் கல்வி என்பது வேறு. அறிவொளி இயக்கம் என்பது வேறு. நாங்கள் 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களை மட்டுமே சேர்த்து நடத்தினோம். ஏனெனில் இவர்கள்தான் நாளைய பெற்றோர். இவர்கள் படிக்கமுடியவில்லை என்றாலும் அவர்களது குழந்தைகளின் கல்வியை உணர்த்தினோம். இதனால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகமானது. பள்ளிகளின் தேவையும் அதிகமானது. கல்வி குறித்து மக்களிடையே அக்கறை ஏற்பட்டது. பள்ளிகள் ஏன் இப்படி இருக்கின்றன என்ற கேள்வியையும் மக்களிடையே எழச் செய்தது. கல்விக்காக இன்று வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் அளவிற்கு மக்கள் வந்ததற்கு அறிவொளி இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் காரணம். இதனால் அரசும் பல திட்டங்களை வகுத்தது. தமிழகம் முழுவதும் கல்வி சம்பந்தமான நிறைய மாற்றங்கள் வந்தன.

தமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் இடதுசாரி இயக்கங்களுக்கு இருந்த செல்வாக்கு இப்போது இல்லாமல் போய்விட்டதே... என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

இடதுசாரி இயக்கங்கள் இன்று நிறையவே வளர்ந்துள்ளார்கள். ஆனால் மற்ற கட்சிகள் அதைவிட வேகமாக வளர்ந்துள்ளன. காரணம் இடதுசாரிகள் உண்மையான, அடிப்படையான பொருளாதார மாற்றத்திற்குப் போராடி வந்தனர். ஆனால் மக்கள் பண்பாட்டு ரீதியாகப் பேசுபவர்கள் பக்கம் போய்க் கொண்டிருக்கின்றனர். பண்பாட்டு ரீதியான விஷயங்களில் இடதுசாரிகள் கவனம் செலுத்தினால்தான் வேகமாக முன்னேறமுடியும். திராவிட இயக்கம் மொழி சார்ந்து பேசி வளர்ந்தது. இன்று தலித் அமைப்புகள் ஓரளவு வளர்ந்துள்ளன. ஆனால் எந்த அமைப்பும் தலித் மக்களுக்கு நிலம் தேவை என்று பேசவில்லை. நிலம் கிடைத்தால்தான் முன்னேற முடியும் என்பது அடிப்படை உண்மை. அன்றிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு நிலம் வேண்டி போராடி வரும் ஒரே கட்சி இடதுசாரி இயக்கம் தான். ஆனால் தலித் மக்கள் தலித் அமைப்புகளுக்குப் பின்னால்தான் சென்றனர். காரணம் அன்றாடம் அவர்கள் அனுபவிக்கிற ஒடுக்குமுறையை அந்தக் குரல் வெளிப்படுத்தியது. அவர்கள் பொருளாதாரத்தைப் பேசவில்லை; உணர்ச்சிகளை மட்டுமே பேசினர். உணர்ச்சிகரமான மக்களாக இந்திய மக்கள் இருப்பதால் உண்மையான அரசியலைப் பேசும் இடதுசாரிகள் வளரவில்லை. இப்போதுதான் அவர்கள் பண்பாட்டுத் துறையில் கவனம் செலுத் தத் தொடங்கியுள்ளனர். சாதிய பிரச்னை யில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை ஏற்படுத்தியுள்ளோம். உத்தபுரம் ஆரம்பித்து இதுவரை 25 சாதிய சுவர்களை இடித்துள்ளோம். கலை இலக்கியத் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதனால் எதிர்காலத்தில் இடதுசாரிகள் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

அரசு விருதுகள் தேர்வுக்குழுவில் இடதுசாரிகள் இருந்துகொண்டு அமைப்பு சார்ந்த சராசரியான எழுத்தாளர்களுக்கு விருதுகளைத் தருகிறார்கள் என்ற விமர்சனம் உள்ளதே?

தேர்வுக்குழுவின் தகுதியைப் பொறுத்து விருதுகள் வழங்கப்படுகின்றன. பெயரை மட்டும் அறிவிக்காமல் எதற்காக கொடுக்கிறோம் என்பதை வெளிப்படையான விளக்கத்தோடு அறிவிக்கவேண்டும். அப்போதுதான் கேள்வி எழுப்ப முடியும். தமுஎகச ஆரம்பித்து 36 ஆண்டுகள் ஆகிறது. எங்கள் அமைப்பு சார்ந்து யாருக்கும் சாகித்ய அகாதெமி விருது கிடைத்ததில்லை. இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும் கொடுத்ததில்லை. தமுஎகசவில் இருந்து முதல் முறையாக சாகித்ய அகாதெமி வாங்கியது மேலாண்மை பொன்னுச்சாமி மட்டும்தான்.

உ.ரா. வரதராஜனின் தற்கொலையை முன்வைத்து உங்கள் கட்சி ஒழுக்க வாதப் பிடியில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது பற்றி?

அவர் தற்கொலை செய்துகொண்டது ரொம்ப தவறான முடிவு. அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கியமான வழிகாட்டி. எனக்கு அந்தச் சம்பவம் மனரீதியாக அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் செய்த தவறு உறுதியான பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியில் நடவடிக்கை என்பது திருந்துவதற்கு அளிக்கும் ஒரு வாய்ப்பு. அவரைக் கட்சியில் இருந்து நீக்கவில்லை. இருந்த பொறுப்பில் இருந்து அடுத்தகட்ட பொறுப்பிற்குப் போட்டனர். அதனைச் சரி செய்து திருத்திக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். இதுமாதிரி நிறைய உதாரணங்கள் உள்ளன. சில விஷயங்களை நாம் ஏற்றுக்கொண்டுதான் வந்தோம். என்னுடைய நலனை பொதுநலன் மற்றும் கட்சியின் நலனிற்கு உட்படுத்துவேன். கட்சியின் நலனை மக்களின் நலனிற்கு உட்படுத்துவேன் என எழுதி கையெழுத்திட்டுதான் வந்துள்ளோம். இதனை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. சும்மா கட்சியைத் திட்டுவதற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர். இந்த விஷயத்தை நாங்கள் ஒழுக்கரீதியாகப் பார்க்கவில்லை. இருந்தும் மக்கள் எங்களை எப்படி பார்க்கிறார்கள்? என்பது முக்கியம். மக்களிடையே கம்யூனிஸ்ட் பற்றி எதிர்பார்ப்பு உள்ளது. கம்யூனிஸ்ட் இப்படி இருக்கலாமா? என்றுதான் நினைப்பார்கள். எந்த மக்களுடன் வேலை செய்கிறோமோ அங்கே கம்யூனிஸ்ட் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழவேண்டும்.

ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பொதுநலன்தான் முக்கியம் என்று இருக்கவேண்டும். அதாவது கம்யூனிஸ்ட் என்பவன்தான் வாழும் காலத்தில் மனித குலம் சேகரித்து வைத்துள்ள அத்தனை அறிவையும் உள்வாங்கவேண்டும். அறிவாளியாக, படைத்தளபதியாக இருக்கவேண்டும். உலகத்திலேயே மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும் சபலம், சலனம் இல்லாதவனாகவும் இருக்கவேண்டும். சுயஒழுக்கத்தை அவனே உருவாக்க வேண்டும். விமர்சனம், சுயவிமர்சனம் என்பதை கறாராக வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். சுற்றி நடப்பதை, இருப்பவர்களை, சமூகத்தை விமர்சனம் செய்ய வேண்டும். தன்னையும் சுயவிமர்சனப்படுத்திக் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட்டாக வாழ்வது என்பது மனரீதியான விஷயம். மிகப்பெரிய ஞானிகளால் கூட ஒரு சரியான கம்யூனிஸ்ட் தோழரின் மனஇடத்திற்குப் போக முடியாது. எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட். இவன் அடைகிற மனஉளைச்சல் யாரும் அடையமுடியாது. அடுத்தவர்களுக்காக அடி, உதை வாங்குவதில் ஏற்படும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை என்று நினைப்பவர்களும் அவர்கள் தான்.

இராணுவப் பணி உங்கள் ஆளுமையில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றிக் கூறுங்கள்?

நான் இராணுவத்திற்குப் போகும்போது காந்தியவாதியாகப் போனேன். அந்த வாழ்க்கை என்னை மார்க்சியவாதியாக மாற்றியது. இந்த நாட்டின் சொத்து களை, மக்களைப் பாதுகாக்க தேச எல்லையில் இருந்து பணியாற்றுகிறோம். ஆனால் உண்மையில் கோடிக்கணக் கான மக்கள் சொத்தோ சுகமோ இல்லாமல்தான் வாழ்கின்றனர். பிறகு யார் சொத்தைப் பாதுகாக்க தேச எல்லையில் நிற்கிறோம் என்ற கேள்வி எழுந்தது. தேசம் என்பது மக்கள்; எல்லையல்ல. மக்களின் நல்வாழ்வு தான் தேசம். எல்லோருக்கும் நல்வாழ்வு கிடைக்க மக்களோடு இருந்துதான் போராட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதனால் ஐந்தரை ஆண்டு பணியை முடித்துக்கொண்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.

தாத்தா தொடங்கி சகோதரர்கள் வரை நாடகம், எழுத்து என்ற தொடர்பைக் கொண்ட குடும்பம் உங்களுடையது. உங்களுக்கும் கோணங்கிக்கும் முருகபூபதிக்கும் படைப்புரீதியாக உரையாடல்கள் நடக்குமா?

இதில் எங்கள் அப்பாவை விட்டுவிட்டீர்கள். அவரும் எழுத்தாளர் தான். இரண்டு நாவல், ஒரு சிறுகதை தொகுப்பு எழுதியுள்ளார். எல்லோருமே இலக்கியத் தொடர்பு உள்ள ஆட்கள் தான். இப்போது வீட்டில் நான்கு எழுத்தாளர்கள் உள்ளோம். நாங்கள் நாலு பேருமே நாலு திசையில் இருக்கிறோம். அவரவர் பாணியில் மக்களை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறோம்.

கோணங்கியின் கதைகள் புரியவில்லை என்று சொல்லப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

புரியாத தன்மை இருக்கிறது. ஆனால் அதுமட்டும்தான் இலக்கியம் என்று கோணங்கியின் எழுத்துகளை மட்டுமே படிப்பவர்கள் ஐநூறு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு அந்த எழுத்து முறை புரிகிறது; பிடித்திருக்கிறது. ஆனால் எனக்கு அதில் விமர்சனம் இருக்கிறது. அப்படி எழுத வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஓரளவு வாசிப்புள்ள மக்களுக்காவது அந்த எழுத்து புரிய வேண்டும். ஆனால் அவர்கள் (கோணங்கியும் முருகபூபதியும்)எது இலக்கியம் என்று நினைக்கிறார்களோ அப்படி எழுதுகிறார்கள். அதை சாதாரணமாக எழுதவில்லை. அதில் கடுமையான உழைப்பும் இருக்கிறது.அது அவர்களின் சுதந்திரம்.

இன்றைய உலகமயமாதல் சூழலில் தமிழகப் பின்னணியில் இடதுசாரிகளின் தேவையும் பங்களிப்பும் என்ன?

இடதுசாரிகள் இல்லை என்றால் மக்களை நூறு சதவிகிதம் அடிமையாக்கிவிடுவார்கள். ஒரு கட்டம் வரை குட்ட குட்ட குனிந்துகொண்டேதான் இருப்பார்கள் மக்கள். சுதந்தர காற்று தமிழகத்தில் இருப்பதற்கு கம்யூனிஸ்ட் மட்டும்தான் காரணம். இன்று வேலை செய்யும் அத்தனை பேருக்கும் சங்கம் என்ற ஒன்றை வைத்து குரலை உண்டாக் கியது கம்யூனிஸ்ட் கட்சிதான். இல்லை யென்றால் குரலே இல்லாமல் இந்தச் சமூகம் அடிமையாகியிருக்கும்

rd flag

Friday, October 21, 2011

மீண்டும் கொல்லப்பட்ட இமானுவேல் சேகரன்

immanuel-1

 

 

paramakkudi

 

 

 

paramakkudi-2

காரிருள் சூழ்ந்த 1950களின் கரிய வானத்தில் தாரகைபோல் ஜொலித்த மகத்தான போராளி இமானுவேல் சேகரன், ஆதிக்க சாதியினரால் 1957இல் முதலில் கொல்லப்பட்டார். எனினும் ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் அவர் உயிர்த்துடிப்பாக வாழ்ந்து வருகிறார். நினைவுகளிலும் அவர் வாழ்ந்திருக்கக் கூடாதென அஞ்சும் ஆதிக்க சாதியும் அதன் பாதுகாவலனான அரசும் மீண்டும் மீண்டும் அவரைக் கொன்று சாய்க்கிறது. ஃபீனிக்ஸ் பறவையைப் போல அவர் மறுபடியும் பிறக்கிறார். பிறக்கிறார், பிறப்பார் என்பதை அறியாமல்.

1952இல் இராணுவப் பணியை உதறிவிட்டு மக்களிடம் பணியாற்ற இராமநாதபுரம் பகுதிக்கு வந்து சேர்ந்த அவரை 6 ஆண்டு காலமே வாழ அனுமதித்தது ஆதிக்க சாதி. அந்த 6 ஆண்டு கால மின்னல் வாழ்க்கையில் அவர் செய்த “குற்றங்கள்” ஏராளம். அவற்றில் சில:_

1. தேவேந்திரகுலச் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளராகி தொலைபேசி மற்றும் வாகன வசதி இல்லாத அந்நாட்களில் ஊர் ஊராகச் சென்று ஒடுக்கப்பட்ட மக்களை அமைப்பாகத் திரட்டினார்.

2. அப்பகுதியின் ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைக்கும் அடாவடிகளுக்கும் ஆளான எல்லா சாதிகளைச் சேர்ந்த மக்களையும் நேச அணியாக ஒன்றுபடுத்தினார்.

3. பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி முதலான இடங்களில் வணிகர்களை மிரட்டி ‘மாமூல்’ வசூலித்து வந்த கூட்டத்தின் அடாவடிகளை மக்கள் ஒத்துழைப்புடன் தடுத்து நிறுத்தினார். வணிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

4. 1953 சித்திரைத் திருநாளில் இராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டைக் கூட்டினார். தென் தமிழகமே அங்கு திரண்டது.

5. பேரையூர் பெருமாள் பீட்டர் அவர்களுடன் இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்திடப் பணியாற்றினார்.

6. பண்பாட்டு ஒடுக்கு முறையின் வெளிப்பாடாகத் திகழ்ந்த கிராமப்புறக் கோவில் திருவிழாக்களில் ஊதியமில்லாத தொண்டூழியமாக தாழ்த்தப்பட்ட மக்கள் செய்து வந்த பறையடித்தல், இலவசமாக வைக்கோல் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை இலவசமாக வழங்குதல், ஊரைச் சுத்தம் செய்தல் போன்றவற்றை நிறுத்தினார். கோவில் பணிகள் எல்லாவற்றையும் சமத்துவமான முறையில் வேலைப்பிரிவினை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதன் காரணமாக பல ஊர்களில் பொதுவிழாக்கள் நின்றன. தாழ்த்தப் பட்டோர் தனி விழாக்கள் நடத்தலாயினர்.

7. இரட்டைக்குவளை எதிர்ப்பு மாநாட்டை அருப்புக்கோட்டையில் நடத்தியதோடு மட்டுமன்றி பலமுறை எச்சரித்தும் கேளாத டீக்கடைகளை மக்களைத் திரட்டிச் சென்று நேரடி நடவடிக்கைகளிலும் இறங்கியது _ சட்ட பூர்வமாக எண்ணற்ற வழக்குகளைப் பல தேநீர்க் கடைகளின் மீது பதிவு செளிணிதது.

8. 1957 மார்ச் பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு வாக்களிக்காத மக்களை _ குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களை அடையாளம் கண்டு ஆதிக்க சாதியினர் தாக்கியதைக் கண்டித்து இயக்கம் நடத்தியது,

“முத்துராமலிங்கத் தேவரின் சாயல்குடிக் கூட்டத்திற்குப் பிறகு அரிசனங் களும் காங்கிரசு ஆதரவாளர்களும் முதுகுளத்தூர் மறவர்களின் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். பல கிராமங்களில் சட்டம் ஒழுங்கே இல்லை. உடனடியாகத் தலையிடவும்’’ எனத் தமிழக முதல்வருக்குத் தந்தி அனுப்பினார்.

9. தந்தி அனுப்பிவிட்டுச் சும்மா இருக்கவில்லை. தாக்குதல்களை எதிர் கொண்டு திருப்பித் தாக்க மக்களுக்குப் பயிற்சி அளித்தார். எதிர்த்தாக்குதலால் நிலை தடுமாறிய ஆதிக்க சாதியினர் “பாதுகாப்பு’’ கோரி அரசுக்கு மனுவும் தந்தியும் அனுப்பினர். அந்தத் தந்தியை விட இந்தத் தந்தி அரசை வேகமாக இயக்கி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எல்லாரையும் அழைத்தது.

இப்படி அடுக்கடுக்கான குற்றங்களைப் புரிந்த இமானுவேல் மீது ‘இயல்பாக‘க் கோபம் கொண்டது சாதியம். எல்லாவற்றுக்கும் மேலாக 9 மணி பேச்சுவார்த்தைக்கு சரியான நேரத்துக்கு வந்து காத்திருந்த எல்லா சாதித்தலைவர்களும் தாமதமாக பசும்பொன் முத்துராமலிங்கர் நுழைந்த போது எழுந்து நின்று மரியாதை செய்ய, இமானுவேல் தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். பேச்சுவார்த்தையில் முத்துராமலிங்கரின் பேச்சுக்குப் பேச்சு இமானுவேல் பதிலளித்தார். மாவட்ட ஆட்சியர் இறுதியாக சமாதானத்தை வலியுறுத்தி எல்லாத் தலைவர்களும் கையொப்பமிட்ட துண்டறிக்கையை வெளியிடலாம் என்றார். அப்போது உ.முத்துராமலிங்கர் அது பயனளிக்காது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு படிக்கத் தெரியாது என்றார். உடனே தலையிட்ட இமானுவேல் பிற எந்தச் சாதியாரையும் விட அதிகமான படிப்பறிவு கொண்டவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று பதிலளித்தார்.

இவ்வளவு திமிர் 1957இல் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவருக்கு எப்படி இருக்கலாம்? ஆகவே மேற்சொன்ன அடுக்கடுக்கான கொடும் குற்றங்களைப் புரிந்த இமானுவேல் சேகரனுக்கு இராமநாதபுரம் மாவட்ட சாதியம் மரணதண்டனை என்று தீர்ப்பு எழுதி ஒரு பஷீமீளியில் பாரதி நினைவு நாள் சொற்பொழிவாற்றி விட்டு வீடு திரும்பிய அவரைப் படுகொலை செளிணிது, தீர்ப்பை உடனே நிறைவேற்றியது.

இன்று 2011ல் கூட ஒரு வரலாற்று நோக்கில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் அரசியல் வாழ்க்கையை விருப்புவெறுப்பின்றி சார்பு நிலையின்றி அச்சமின்றி விமர்சித்து எழுதிட முடியாத நிலையே நீடிக்கிறது. எனில் 1957இல் இவ்வளவு துணிச்சலாக எழுந்து நின்ற இமானுவேல் சேகரன், ஒரு பள்ளப்பயலுக்கு இவ்வளவு திமிரா என்கிற கேஷீமீவியோடு கொல்லப்பட்டதில் வியப்பில்லை.

தன் உயிரை எடுத்து வைத்து இமானுவேல் பற்ற வைத்த விடுதலை நெருப்பு பற்றிப்படர்ந்தது. தென் மாவட்டங்களில் எப்பொழுதும் போல தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கலாம், அடிக்கலாம், உதைக்கலாம், வெட்டிச் சாய்க்கலாம் என்கிற கதை முடிவுக்கு வந்து விட்டது. அடித்தால் பதிலடி கிடைக்கும் என்கிற யதார்த்தம் நடைமுறைக்கு வந்துவிட்டது.

தஞ்சை மண்ணில் தாழ்த்தப்பட்ட மக்களின் மகத்தான தலைவராக செங்கொடியுடன் உயர்ந்த தோழர்.பி.சீனிவாசராவ் முழங்கிய ‘அடித்தால் திருப்பி அடி’ என்கிற முழக்கத்தின் எதிரொலிகளாகவே தென் மாவட்டங்களில் தலித் மக்கள் திருப்பித் தாக்கிய எதிர்வினைகளைப் பார்க்க வேண்டும். இராமநாதபுரத்திலோ தமிழகத்தின் இதர பகுதிகளிலோ ஒரு சீனிவாசராவ் தோன்றும் வரை வரலாறு காத்திருக்காதல்லவா? வரலாறு இமானுவேல் சேகரனையும் பெருமாள் பீட்டரையும் ஜார்ஜ் ஜோசப்பையும் படைத்துத் தந்தது. பிற்காலத்தில் ஜான் பாண்டியனையும் டாக்டர் கிருஷ்ணசாமியையும் தொல் திருமாவளவனையும் படைத்தளித்தது. இத்தலைவர்களில் சிலர் முன்வைத்த முழக்கங்களில் குறிப்பிட்ட சாதிகள் மீதான துவேஷ உணர்வு வெளிப்பட்டிருக்கலாம். அவற்றை நாம் விமர்சிக்கலாம்.

ஆனால் அத்தகைய கோஷங்களுக்குப் பின்னால் ஏன் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் அணி திரண்டார்கள் என்கிற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக விடை காண வேண்டுமல்லவா? ஆதிக்க சாதிகளின் வல்லந்தம் தலித் மக்களின் மனங்களில் ஏற்படுத்தியுள்ள வரலாற்றுக் காயங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இத்தலைவர்கள் முன்வைத்த ‘துவேஷ‘ முழக்கங்கள் மருந்தாக அமைந்தன.

பண்பாட்டு ரீதியாகப் பன்னெடுங்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் உயர்சாதியினர் மீதும் சாதிய அமைப்பின் மீதும் தீராக் கோபம் கனன்று கொண்டேதான் இருக்கும். அதை வெளிப்படுத்த முடியாத வன்முறையான புறச்சூழல் நிலவும் போது அது நாட்டுப்புறப் பாடல்களாக கதைகளாக சொலவடைகளாக வெளிப்பட்டு நிற்கும். அத்தனை விதமான நாட்டுப்புற ஆட்டங்களிலும் கதைகளிலும் பிராமணர்கள் கேலிக்கு உள்ளாக்கப்படுவதும் பகடி செய்யப்படுவதும் இன்று வரை தொடர்வதை நாம் இந்தக்கோணத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும்.

“வெள்ளாளன் போன வழி வெட்டவெளி”

“பிண்டத்துக்கு பிராமணன்

துண்டத்துக்கு துலுக்கன்

தெண்டத்துக்கு சம்சாரி

என்பன போன்ற சொலவடைகளையும் நாம் அடித்தட்டு மக்களின் வாழ்வனுபவ வரலாற்றின் பின்னணியில் வைத்தே புரிந்து கொள்ள வேண்டும்.

இதே எதிர்பண்பாட்டு மனநிலை தான் “இமானுவேல் சேகரன் குரு பூஜை” “தெய்வத் திருமகன் இமானுவேல் சேகரன்” போன்ற சொற் சேகரங்களை தலித் மக்கள் சுவரொட்டிகளிலும், ஃபிளக்ஸ் பேனர்களிலும் எழுதி வைப்பதிலும் ஒளிந்திருக்கிறது என்பதை கருத்தியல் ரீதியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. இந்த வார்த்தைகள் எவையும் ‘காப்பி ரைட் ‘ வாங்கப்பட்ட வார்த்தைகளுமல்ல. இன்றைய பரமக்குடிப் படுகொலைகளின் பின்னணியில் இத்தகைய வார்த்தைகளுக்கு ஒரு பங்கு இருக்கிறது.

நினைவஞ்சலி, வீரவணக்கம் போன்ற பல வார்த்தைகள் தமிழில் இருக்க தலித் மக்களின் ஒரு பகுதியினர் குருபூஜை என்கிற ‘வார்த்தை’யைத் தேர்வு செய்ததற்கும் ஒரு வரலாற்று ரீதியான பின்புலமும் சமூக உளவியலும் இருக்கிறது என்பதைப் பதட்டமின்றி நம் தமிழ்ச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏன் இந்த வார்த்தையைத்தான் தேர்வு செய்ய வேண்டுமா? இந்த வார்த்தையை ஏன் தேர்வு செய்யக் கூடாது? என்கிற இரு கேள்விகளும் இன்று முன் வைக்கப்படுகின்றன. வார்த்தைகள் மொழியிலிருந்து எடுத்தாளப்படவில்லை. வலிமிகுந்த வரலாற்றிலிருந்தும் வஞ்சம் தீர்க்கப்படாத கோபத்திலிருந்தும் எடுத்தாளப் படுகின்றன என்பதை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

ஆனாலும் இந்த ‘வார்த்தைப் போரை நடத்துவது சிறிய பகுதிதான். பெருவாரியான மக்கள் இம்மானுவேல் ‘சாமி கும்பிட‘ப் போவதாகவே பெருவழக்காகப் பேசுகின்றனர். இமானுவேல் சேகரனுக்குப் பால்குடம் எடுத்து விரதம் இருந்து அணியணியாகச் செல்வதை ஒரு பண்பாட்டு நடவடிக்கையாகக் கைக் கொண்டுள்ளனர்.யதார்த்த்த்தில் தீராத சாடிய நெருக்கடியை ஒடுக்கப்பட்ட மக்கள் இப்படிப் பண்பாட்டு ரீதியான சடங்குகள்,விழாக்கள் மூலம் ஆற்றுப்படுத்திக்கொள்வது உலகெங்கும் உள்ள வழக்கம்தான்.

ஆதிக்க சாதியினரும் நிலைமைக்கேற்ப தமது தந்திரோபாயங்களை மாற்றி வருகின்றனர். ஊரோடு மலையில் ஏறி உட்கார்ந்து கொள்வது அதில் ஒரு வடிவம். தாமே நேரடியாகச் சென்று தாக்குவதை நிறுத்திவிட்டுத் தம் சார்பாகக் காவல்துறையை ஏவிவிடும் நடைமுறையை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.. தாமிரபரணிக் கரையில் 17 உயிர்களைக் காவல்துறை பலி கொண்டபோது இமானுவேல் சேகரன் 17 முறை கொல்லப்பட்டதாகவே கருதினோம்.

காங்கியனூரில் வயிற்றில் மிதித்தார்கள். செட்டிப்புலத்தில் தடிகொண்டு தாக்கினார்கள். மதுரை மண்ணில் தலைவர்களைத் தூக்கி எறிந்தார்கள்.. உத்தப்புரத்தில் என்னதான் செய்யாமல் விட்டார்கள்? சாதியம் காத்திடக் காவல்துறையும் அரசும் எடுத்திட்ட முயற்சிகள் தாம் எத்தனை எத்தனை? இவை அத்தனை அடிகளும் இமானுவேல் சேகரனின் மீது விழுந்த அடிகள்தானே?

தென்பகுதி தலித் மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து விட்ட இமானுவேல் சேகரனின் சித்திரத்தை தடிகொண்டு அடித்தும் பூட்ஸ் கால்களால் மிதித்தும் எனப் பலவித வடிவங்களிலும் அழிக்க முயன்று தோற்றுப்போன அரசும் காவல்துறையும் இன்று அதே பரமக்குடியில் இமானுவேல் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகிலேயே மீண்டும் ஆறுமுறை இமானுவேல் சேகரனைக் கொலை செய்துள்ளது.

இமானுவேல் சேகரன் ஒரு காங்கிரஸ்காரர். நம்பிய காங்கிரசால் கழுத்தறுக்கப்பட்டவர். அவருடைய துணைவியாரையும் நான்கு பெண் குழந்தைகளையும் கூடப் பராமரிக்கவோ, வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யவோ காங்கிரஸ் முன் வரவில்லை என்பது வரலாறு. அவர் காங்கிரஸ்காரரா கிறித்தவரா மதம் மாறிய இந்துவா பட்டாளத்துக்காரரா என்பது எதுவுமே முக்கியமல்ல. இன்று அவர் தென் தமிழகத்து ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் விடுதலையின் சின்னம். சாதி ஒழிப்புப் போராட்டத்தின் உயிர்த்துடிப்பு.

அவரை ஒரு சாதியின் தலைவராகப் பார்ப்பதை மாற்ற வேண்டும். அதற்கு எல்லா சாதிகளையும் சேர்ந்த ஜனநாயக எண்ணம் கொண்ட மக்கள் அவரை விடுதலையின் சின்னமாக மனதார ஏற்க வேண்டும். அவர் ஒருபோதும் சாதி வெறுப்பை முன் வைத்ததில்லை. சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றிணைக்கும் அரசியலையே முன் வைத்தார்.

அம்பேத்கர் தன் வாழ்வில் சாதியத்தின் வடிவமாக பிராமணியத்தை எதிர் கொண்டார். இமானுவேல் சேகரன் இராமநாதபுரத்தில் பிராமணியத்தின் வடிவமாக வேறொரு சாதியை எதிர்கொள்ள நேர்ந்தது. இது வரலாறு.இது அவர் செய்த குற்றமல்ல.

வர்க்கப் போராட்டம் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்று தளங்களிலும் நடைபெறுவது. இந்தியாவின் வர்க்க ஏற்பாடான சாதியக் கட்டமைப்புக்கு எதிரான போரும் இம்மூன்று தளங்களிலும் நடைபெறுவதை, நடைபெற வேண்டியதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

அவ்வகையில் சாதி எதிர்ப்புப் போர்த் தியாகிகளெல்லாம் வர்க்கப் போர்த் தியாகிகளாகப் போற்றத்தக்க தியாகிகளல்லவா?

இமானுவேல் சேகரனின் தியாகத்தைப் போற்றுவோம்!

தோழர் இமானுவேல் சேகரனின் தியாகத்துக்கு வீர வணக்கம் செய்வோம்!

 

(பி.கு. இக்கட்டுரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தும் அணையா வெண்மணி இதழில் வெளியாகியுள்ளது)

 

back_inner_wra(2)

Thursday, April 21, 2011

மறுபக்கம்

comrades

அப்போது அது எந்தத்தொகுதி யார் போட்டியிட்டார்கள் என்பதெல்லாம் நினைவில் இல்லை.நான் சந்தித்த முதல் தேர்தல் 1962 தேர்தல்தான்.அப்போது எனக்கு வயது 8.இரண்டாம் வகுப்பிலோ மூன்றாம் வகுப்பிலோ இருந்தேன்.சாத்தூர் தொகுதியில்தான் எங்கள் ஊர்  மேட்டுப்பட்டி ரொம்ப காலமாக இருக்கிறது.ஆகவே 62 தேர்தலில் எங்கள் தொகுதியில் காமராஜர்தான் போட்டியிட்டார் என இப்போது அறிய முடிகிறது..அவரை எதிர்த்து சுதந்திராக் கட்சியின் சார்பாக ராமமூர்த்தியும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஒருவரும் போட்டியிட்டனர். கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெயர் நினைவில்லை.தலைவர்களை அழைத்துக்கொண்டு எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரான கலிங்கல் மேட்டுப்பட்டியைச்சேர்ந்த காங்கிரஸ்காரர் சங்குத்தேவர் எங்கள் தெரு மடத்துக்கு வந்தார்.எங்கள் தெற்குத்தெரு ஆண்களெல்லாம் மடத்தில் கூடினர்.அதில் காமராஜர் இருந்தாரா என்பது சரியாக நினைவில்லை.அக்கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.

தேர்தல் நாளுக்கு முந்தின இரவில் நான்கு கம்யூனிஸ்ட்டுகள் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள் அதில் ஒருவர் எங்கள் அத்தை மகன்.அவர்தான் மற்ற 3 பேரை அழைத்து வந்தது.எங்கள் பாட்டி ரொம்ப பயந்து விட்டாள்.அப்போது திமுக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.எங்கள் பாட்டி திமுகவை ‘கட்சி’ என்றுதான் சொல்லுவாள். திமுக என்று ஒரு பெயர் அக்கட்சிக்கு இருப்பதே அவளுக்குத் தெரியாது.காங்கிரசை மட்டுமே அறிந்திருந்த அவளுக்கு காங்கிரசோடு கட்சி கட்டும் ஒரு கூட்டத்தை கட்சி என்று அழைப்பதே சரி என்று பட்டு அவ்வாறே அழைத்தாள்.அவள் மட்டுமல்ல.எங்கள் தெருவில் பெரியவர்கள் எல்லோருமே திமுகவை கட்சி என்றுதான் அழைத்தார்கள்.கம்யூனிஸ்ட்டுக்கட்சி ஒன்று மூன்றாவதாக வீட்டுக்குள் வந்துவிட்டதே என்று பயந்தாள்.அடிக்கடி தகராறுகளும் நடந்ததால் அவளுக்குப் பயம்.சொந்தக்காரர்களின் வீடுகளுக்குப் போய் இந்த நாலு கம்யூனிஸ்ட்டுகளும் ஓட்டுக்கேட்டார்கள்.அவர்களும் சரி சரி சீக்கிரம் போயிருங்க என்று அனுப்பி வைத்தார்கள்.தேர்தல் எங்கள் ஊரைவிட்டு ஒரு அரைமைல் தூரத்தில் இருந்த நான் பின்னர் படித்த உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அதிகாலையில் கம்யூனிஸ்ட்டுகளோடு நானும் சேர்ந்து பள்ளிக்குச் சென்றேன். வாக்களிக்க வரும் மக்களிடம் கதிர் அரிவாள் மறந்திடாதீங்க என்று சொல்லிக்கொண்டிருந்தோம்.வந்த கம்யூனிஸ்ட்டுகளில் ஒருவர் பூத் ஏஜண்டாக உள்ளே சென்றுவிட்டார்.

மீதி நேரமெல்லாம் அந்தக் கம்யூனிஸ்ட் எனக்குப் பல கம்யூனிஸ்ட் கதைகள் சொல்லிக்கொண்டிருந்தார்.அவருடைய அப்பா சிறையில் இருந்தபோது கட்சியின் ரகசிய அறிக்கை ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தாராம்.அப்போது போலீஸ் பார்த்துவிட அவர் அப்படியே லபக் கென்று அந்தப்பேப்பரை கசக்கிச் சுருட்டி வாயில் போட்டு விட்டாராம்.போலீஸ் ஓடி வந்து அவருடைய தொண்டைக்குழியைப் பிடித்து கக்குடா கக்குடா என்று அடித்திருக்கிறார்.ஆனால் அவர் போராடி விழுங்கி விட்டார். போலீசார் ஏமாந்தனர்.இப்படியான கதைகளாக அவர் சொல்லிக்கொண்டிருந்தார்.நேரம் ஆக ஆக பாடிக்கு வந்த பயம் எனக்கும் வர ஆரம்பித்தது.அப்போது தேர்தல் பணிக்கு வந்திருந்த போலீஸ்காரர்கள் ரெண்டுபேர் அப்பக்கமாக வந்தனர்.எனக்கு லேசாக உதறல் எடுத்தது.

அவர்கள் இருவரும் இந்தக் கம்யூனிஸ்ட்டுகளை முறைத்துப்பார்த்தனர்.இந்தக் கோட்டுக்கு அப்பாலே போய் நில்லுங்க என்று கத்தினார் ஒரு போலீஸ்.அந்தக் கோட்டுக்குத்தான் நாங்க வரப்பாடாது.இந்தக்கோட்டுக்கு நாங்க வரலாம்.ரூல்ஸ் தெரிஞ்சா சொல்லுங்க இல்லேன்னா வாயப்பொத்திக்கிட்டுப் போங்க என்று கம்யூனிஸ்ட் தொண்டர் பதிலடி கொடுத்தார். போலீச்காரருக்கு மீசை துடித்தது.கொஞ்ச நேரம் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அப்படியே போய்விட்டார்.எனக்குப் பயம் வந்து கொஞ்சம் போய்விட்டது.நம்மகிட்டே நடக்குமா என்று கம்யூனிஸ்ட் கட்டைவிரலை என்னிடம் ஆட்டிக்காண்பித்தார்.

நான் பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்வேன் என்று அப்போது யாருக்குத் தெரியும்.ஆனால் இப்போது நினைத்துப்பார்கிறேன்.கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் தியாகங்களை மக்களிடம் எடுத்துரைப்பதால் மக்கள் மதிப்பார்கள் என்பது ஒருபகுதி உண்மை மட்டும்தான்.இன்னொரு பெரிய உண்மை கம்யூனிஸ்ட் என்றால் அடி உதை வாங்கணும் என்கிற பய உணர்வையும் எதுக்கு அவங்கவழிக்கு நாம போகணும் என்கிற தப்பிக்கிற மனநிலையையும் அது உருவாக்குகிறது என்பதையும் கணக்கில் கொண்டு மக்களிடம் பேச வேண்டியிருக்கிறது.

எதையெல்லாம் யோசிக்க வேண்டியிருக்குடா சாமி.

Saturday, February 5, 2011

தமிழ் கற்றல்

tamil சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பள்ளித் தமிழாசிரியர்களுடன் உரையாட நேர்ந்தது அல்லது வாய்த்தது.அவர்களில் பலருக்கும் தமிழாசிரியர் என்றால் பள்ளிகளில் யாரும் மதிப்பதில்லை.அறிவியல் பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கு இருக்கும் மரியாதையும் மதிப்பும் எங்களுக்கு இல்லை என்று மிக வருந்திப் பேசினார்கள்.மொழிப்பாடம் என்று வந்தாலும் ஆங்கில ஆசிரியர்களுக்கு இருக்கும் மரியாதை எங்களுக்கு இல்லை.காலை வகுப்புக்கள் எல்லாம் கணிதம்,அறிவியல் போன்ற பாடங்களுக்கே ஒதுக்குகிறார்கள்.தமிழ் வகுப்புக்கள் எல்லாம் மதிய நேரமே தருகிறார்கள்.கேட்டால் ’தமிழ்தானே’ என்கிறார்கள். என்று பலவிதமான மனக்குமுறல்களை அவர்கள் ’கொட்டினார்கள்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழகமெங்கும் பஞ்சாயத்துக் கட்டிடங்கள் உட்பட அனைத்து அரசுக் கட்டிடங்களிலும் நியான் விளக்குகள் தமிழ் வாழ்க என்று மின்னிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் செம்மொழி மாநாட்டைப் பார்த்த அலுப்பே நமக்கு இன்னும் தீராத ஒரு பின்னணியில் இந்தத் தமிழாசிரியர்களின் உள்ளத்துக் குமுறல்களைக் கேட்க நேர்ந்தது.

நாம் பின்னோக்கிப் போனால் ஒரு காலத்தில் படிப்பென்றாலே அது தமிழ் இலக்கியம் படிப்பதுதான் என்று இருந்ததை அறிகிறோம்.உ.வே.சாவின் என் சரித்திரத்தில் அவர் கற்ற கதையை விரிவாகச் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.ஆனாலும் நீண்ட்ந் நெடுங்காலமாகத் தமிழ் கற்றல் அல்லது கற்பித்தல் என்றாலே ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,வாக்குண்டாம், நல்வழி,நன்னெறி போன்ற போதனா இலக்கியப்பாடங்களை நெட்டுருச்செய்யும் பணி என்றே இருந்துள்ளது.நவீன காலத்தில் இந்தியா நுழைந்தபின்னும் கூட தமிழ் கற்பித்தலில் அறிவியல்பூர்வமான மாற்றங்கள் நிகழவில்லை.

அதற்கு முக்கிய காரணம் நம் சூழல்தான். தமிழ் என்பது மொழியாக மட்டுமின்றி ஒரு அரசியல் அணிதிரட்டலுக்கான சாதனமாகவும் பயன்படுத்தப்பட்ட சூழல் இந்தக் கற்பித்தல் முறையையும் பாதித்துள்ளது. மொழி இனத்தோடும்,இன உணர்வு கொள்வதோடும் இணைக்கப்பட்டதில் மாற்றங்களை மறுத்துப மொழியின் புனிதம் / தூய்மை காக்கிற மனநிலையோடும் பிணைக்கப்பட்டது.நாங்கள் அறிவொளி இயக்கத்தில் முதல் பாடமாக ஆனா ஆவன்னா வைக்காமல் பட்டா,படி என்று வைத்தபோதும் தமிழ்சார் அறிவாளிகளிடத்திருந்து எதிர்ப்பு வந்தது.70களில் இலங்கையில் தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளைப் புகுத்திய போது தமிழறிஞர்களிடமிருந்து வந்த கடும் எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது பற்றி ஒரு கட்டுரையில் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகின்றார்.

திராவிட இயக்க அரசியலின் ஒரு பகுதியாக தமிழாசிரியர் என்பவர் இன உணர்வு மிக்கவராக /இன உணர்வை ஊட்டுகிற சமூகக்கடமையை ஆற்றுபவராக சமூகத்தில் மதிக்கத்தக்க ஒரு மனிதராக முன்னிறுத்தப்பட்டார்.ஆகவே தமிழாசிரியர்கள் ஒரு காலகட்டம் வரை தமிழகத்தில் மதிப்புப் பெற்றவர்களாகவே இருந்தனர்என்பது உண்மை.மு.வ, நா.பார்த்தசாரதி போன்றோரின் பல நாவல்களில் கதாநாயகர்களாகத் தமிழ் படித்த இளைஞர்களும் தமிழாசிரியர்களும் நடமாடினார்கள்.

காலமாற்றத்தில் திராவிட இயக்கத்தாரின் கேமிரா தமிழாசிரியர்களை விட்டு விட்டு வேறு திசைகளை நோக்கிக் கவனம் குவிக்கப் போய்விட்ட பின்னணியில் தமிழாசான்கள் ‘கைவிடப்பட்டவர்கள்’ ஆனார்கள்.பட்டிமன்றங்களின் பேசுபொருளாக தமிழ்க் காவியங்களும் காப்பியங்களும் இருந்தவரைக்கும் அங்கேயும் தமிழாசிரியர்களின் கொடி பறந்த காலம் இருந்தது.மாமியாரா மருமகளா பழைய சினிமாவா புதிய சினிமாவா என்று பட்டிமண்டபத்துப் பாடு பொருள்களும் மாறிவிட்டபோது அவர்களுக்கு அங்கேயும் இடமில்லை.தெருக்களில் தமிழ் கேட்கக் கூட்டமுமில்லை என்றானது.எல்லாம் ஒருசேரத் தமிழகத்தில் நடந்து முடிந்த போது வெந்த புண்ணில் வேல்பாய்ச்ச மைய அரசின் கல்விக்கொள்கைகளில் மாற்றம் ஏற்பட தொழிற்கல்வி முக்கிய இடம் பிடிக்க மருத்துவம்,பொறியியல் நோக்கித் தமிழகமே தொங்கோட்டம் ஓடத் தமிழின் நிலையும் தமிழாசிரியர் நிலையும் கல்விப்புலத்துக்கு உள்ளேயும் சமூக வெளியிலும் படு கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டன.ஆங்கிலத்திலும் கூட அமெரிக்கன் ஆங்கிலம்தான் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளதையும் அவதானிக்க வேண்டும்.

இத்தனைக்கும் மேலாக தமிழாசிரியர்கள் பாவம் ,மரபு வழிப்பட்ட தமிழ் கற்பித்தல் மூலம் ஆசிரியர்களாகி, வேறு ஏதும் தெரியாத அப்பாவிகளாக பள்ளிகளில் உலவிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. அறிவியல்,கணிதம்,பொருளாதரம் கற்றோருக்குக் கொஞ்சமாவது தமிழும் தமிழ் இலக்கணமும் இலக்கியமும் தெரிந்துதான் இருக்கிறது.ஆனால் தமிழாசிரியருக்கோ தமிழைத்தவிர வேறு எதுவுமே தெரியாது.தமிழிலும் நவீன இலக்கியம் பற்றி ஒன்றும் தெரியாது.70களுக்குப் பிறகுதான் நமது பல்கலைக்கழகங்கள் சிறுகதை,புதுக்கவிதை போன்றவற்றையும் இலக்கியம்தான் தமிழ்தான் என்று ஏற்றுப் பல்கலைப்படியேற அனுமதித்தன.

இன்று தமிழ் இலக்கிய உலகில் ஆண்மொழி,பெண் மொழி,உடல்மொழி,ஆதிக்கசாதி மொழி , ஒடுக்கப்பட்டோர் மொழி என்று என்னவெல்லாமோ வந்து விட்டது.அது எதுவுமே நமது தமிழாசிரியர்களுக்குத் தெரியாது.மொழியியலில் எத்தனை தூரம் சென்று விட்டார்கள்.நமக்குத் தெரிந்த நோம் சாம்ஸ்கியும் லெவிஸ்ட்ராசும் தமிழாசிரியர் யாருக்குமே தெரியாது. நாஞ்சில்நாடனைக்கூடத் தெரியாத தமிழாசிரியர்கள்தான் நம் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கிறார்கள்.

சூழலும் சரியில்லை.தாமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை நம் அன்புக்குரிய தமிழாசான்களுக்கு எவரேனும் புரியும் வகையில் எடுத்துரைத்து அவர்கள் கரை சேர வழி வகுக்க வேண்டும்.தமிழ்ப் பாடம் கற்பிப்போர் வெறும் மொழியை-அதன் கட்டமைப்பை மட்டும் கற்றுத்தருபவர்களாக அல்லாமல் சிந்தனையைத் தூண்டுபவராக பிள்ளைகளின் படைப்பாற்றலைத் தூண்டுபவராக வளர்த்தெடுப்பவராக சதா தன்னைத் தற்காலப்படுத்திக்கொள்பவராக சகல துறைசார் அறிவும் பெற்றவராக இருப்பது மிக மிக அவசியம்.வேறு பாட ஆசிரியர்களைப்பார்க்கிலும் தமிழாசிரியரே நமக்கு மிக மிக முக்கியமானவர் என்பதைத் தமிழ்ச் சமூகமும் உணர வேண்டும்.மொழி ,பண்பாட்டின் விளைபொருளாகவும் பண்பாட்டை உருவாக்கும் முக்கியக் கூறாகவும் பண்பாட்டு அடையாளமாகவும் பண்பாட்டு அம்சங்களைத் தலைமுறை தலைமுறைக்கும் எடுத்துச்செல்லும் சக்திமிக்க(காலத்தை ஊடறுத்துப்பாயும்) ஊடகமாகவும் திகழ்கிறது என்பதை தமிழர்களாகிய நாம் உணரவில்லை என்பதன் அடையாளமாகத்தான் இத்தனை பலவீனமான தமிழாசிரியர்களை நம் பிள்ளைகளுக்கு நாம் தந்திருக்கும் நிலை இருக்கிறது.

இது ரொம்ப ரொம்ப முக்கியமான ,கவலைக்குரிய ஒன்றாக எனக்குப்படுகிறது.

Wednesday, September 8, 2010

விளையாட்டென்பது சும்மா விளையாட்டல்ல….

ipl

டெல்லியில் நடைபெற உள்ள 19-ஆவது காமன்வெல்த் விளையாட்டிலும் கைவைத்து ’விளையாடிவிட்ட’ இந்திய அதிகாரிகள்,துணைபோகும் அமைச்சர்கள் பற்றி நாள்தோறும் ஒரு செய்தியை நாம் வாசித்துக்கொண்டிருக்கிறோம்.போபர்ஸ் பீரங்கியிலிருந்து ,மாட்டுத்தீவனம், சுடுகாட்டுக்கொட்டகை என எல்லாவற்றிலும் விளையாடிய நம் மகானுபாவர்கள் விளையாட்டில் மட்டும் எப்படி விளையாடாமல் இருப்பார்கள்.நக்குற நாயிக்கு செக்குன்னு தெரியுமா செவலிங்கம்னு தெரியுமா? அது பற்றி ஏராளமான கட்டுரைகள் தினசரி பத்திரிகைகளில் வந்து கொண்டே இருக்கின்றன.ஆகவே இக்கட்டுரை அதுபற்றிப் பேசாமல் இன்னும் அதிகம் பேசப்படாத விளையாட்டைப்பற்றிய சில விடயங்களைப் பற்றிப் பேசவிருக்கிறது.

* * *

வாஞ்சிநாதன் ஆஷ் துரையைச் சுட்ட 1911 ஆம் ஆண்டுதான் காமன்வெல்த் விளையாட்டுக்களுக்கான மூல விதை நடப்பட்டது.அந்த ஆண்டில் இங்கிலாந்தின் மன்னனாக ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டிக் கொண்டதை ஒட்டி அவன் இந்தியாவுக்கு வருவதை எதிர்த்தே- அந்த எதிர்ப்பை உலகுக்காட்டவே -வாஞ்சி ஆஷைச் சுட்டுக்கொன்றார்.(வாஞ்சியைப் பற்றிய கணிப்புகள் இன்று மாறி வந்தாலும் அவர் சுட்டது ஐந்தாம் ஜார்ஜ் மன்னனின் வருகையை ஒட்டியே என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை). நேர்மாறாக அதே ஐந்தாம் ஜார்ஜ் பதவியேற்றதைக் கோலாகலமாகக் கொண்டாடுவதற்காக அதே 1911இல் இங்கிலாந்தில் ஒரு விளையாட்டுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.ஆஸ்திரேலியா,கனடா,தென் ஆப்பிரிக்கா,இன்கிலாந்து போன்ற நாடுகள் அப்போட்டியில் பங்கேற்று மன்னர் முடிசூட்டிக்கொண்டதை விளையாடிக் களித்தன.அதற்கு சாம்ராஜ்ஜிய விளையாட்டு விழா என்று பேர் வைத்தார்கள்.1930இல் அவ்விளையாட்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜிய விளையாட்டு எனப்பேர் பெற்று 1954இல் அது கனடா நாட்டில் விளையாடப்பட்டபோது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுக்கள் என்று பேர் பெற்று 1970 இங்கிலாந்தில் விளையாடப்பட்டபோது பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டுக்கள் என்றாகி மீண்டும் 1978இல் கனடாவில் காமன்வெல்த் விளையாட்டுக்கள் என்கிற இன்றைய நாமத்தைப் பெற்றது.

காமன்வெல்த் என்பது 54 நாட்டு அரசுகளின் ஒரு கூட்டமைப்பு.அந்த 54இல் 52 நாடுகள் ஒவ்வொரு காலகட்டத்தில் பிரிட்டனுக்கு அடிமைப்பட்டிருந்த முன்னாள் காலனி நாடுகள்.ஆகவே காமன்வெல்த் என்பது பழைய ராஜவிசுவாசிகளின் சங்கம் என்பதாக ஆரம்பத்தில் தோற்றம் கொண்டிருந்தது.இந்நாடுகளின் மீது அரசியல்,பொருளாதார நிர்ப்பந்தம் செலுத்த இவ்வமைப்பை இங்கிலாந்து பயன்படுத்தும் சாத்தியமும் அப்போது இருந்தது.ஆகவே காமன்வெல்த்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது (தற்காலப்படுத்தப்படுவதற்கு முந்திய )கட்சித்திட்டத்திலேயே குறிப்பிட்டது.

1971 சிங்கப்பூர் பிரகடனம் காமன்வெல்த்தில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் சுயாதிபத்திய உரிமை பெற்ற சமமான மதிப்புள்ள உறுப்பினர்கள் என்றும் இவ்வமைப்பின் லட்சியம் ஜனநாயகம்,மனித உரிமைகள்,நல்லாட்சி,சட்டத்தின் ஆட்சி,உலகசமாதானம் போன்றவைதான் என அறிவித்தது.இந்த காமன்வெல்த் விளயாட்டுகள் ஒன்றுதான் அப்படி ஒரு அமைப்பு இருப்பதை ஞாபகப்படுத்தும் நிகழ்வாக இருக்கிறது.இது தவிர வேறுசில அமைப்புகளும் காமன்வெல்த்தில் இருக்கின்றன.காமன்வெல்த் இடுகாட்டுக் கமிசன் என்பது உலகெங்கும் பரவிக்கிடக்கும் 2500 போர்வீரர் கல்லறைத்தொகுதிகளைப் பராமரிக்கிறது.உலகப்போர்களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்காகப் போரிட்டு மடிந்த போர்வீரர்களின் கல்லறைகளாகும்.இதுபோல பண்பாடு,கலை இலக்கியம் போன்றவற்றுக்கான சில அமைப்புகளும் இயங்குகின்றன.ஆகவே 1950களில் இருந்த காமன்வெல்த் பற்றிய கணிப்புகள் இன்று மாறியுள்ளன.

எனினும் அதன் தலைவராக இப்போதும் எலிசபெத் ராணியே இருக்கிறார்: தலைமையகம் நிரந்தரமாக லண்டனின் மல்பரோ மாளிகையிலேயே இருக்கிறது:என்பது போன்ற உண்மைகளால்

ராஜவிசுவாச சங்கம் என்கிற அதன் தோற்றம் முற்றிலும் மறையாமல் தொடரத்தான் செய்கிறது-அதன் செயலாளர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறார் –அவர் ஐ.நா.பொதுக்குழுவில் ஒரு பார்வையாளராக அனுமதிக்கப்படுகிறார் என்றாலும் கூட.

இப்படியான ஒரு அமைப்பின் ஒரு பகுதியான விளையாட்டுத்தான் காமன்வெல்த் விளையாட்டு 2010 ம் என்பதை நாம் மறந்துவிட முடியாது.இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாட்டின் முக்கிய நகரம் ஒன்றில் நடத்தப்படுகிறது.சென்ற காமன்வெல்த் போட்டிகள் 2006இல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.2014 இல் ஸ்காட்லாண்டிலும் 2018இல் இலங்கை அல்லது ஆஸ்திரேலியாவிலும் நடைபெற இருக்கிறது.

இந்த விளையாட்டுக்களை பல உறுப்பு நாடுகள் புறக்கணித்த வரலாறும் உண்டு.பெரும்பாலும் தெனாப்பிரிக்காவில் பன்னெடுங்காலமாக அமலில் இருந்த (இன்றும் தொடரும்) நிறவெறிக்கொள்கைக்கு எதிரான உணர்வுடன் 1978இல் நைஜீரியா புறக்கணித்தது.1986இல் தாட்சரின் தெனாப்பிரிக்காவுக்கு ஆதரவான விளையாட்டுக் கொள்கை காரணமாக 32 நாடுகள் காமன்வெல்த் விளையாட்டைப் புறக்கணித்தன.

* * *

இவ்விதம் விளையாட்டில் அரசியல் ஊடாடுவது என்பதைத் துவக்கி வைத்தவன் ஜெர்மானிய பாசிஸ்ட் ஹிட்லர்தான்.1931இல் அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடத்த ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்தது.முதல் உலகப்போருக்குப் பின் சர்வதேச சமூகத்தால் ஒதுக்கப்பட்டிருந்த ஜெர்மனி(ஒவ்வொரு உலகப்போருக்குப் பின்னும் தோற்ற நாடுகள் ஒலிம்பிக்கிற்கு அழைக்கப்படவில்லை) மீண்டும் உலக நிகழ்வு ஒன்றை நடத்தும் வாய்ப்பைப்பெற்றது.ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜெர்மனியில் நிகழ்ந்த அரசியல் கொந்தளிப்புகள் ஹிட்லரை 1933இல் ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தின.ஜெர்மானிய ஆரிய இனமே உலகின் ஈடு இணையற்ற தலைமை இனம் என்கிற முழக்கத்தோடு இனச்சுத்திகரிப்புக் கொடும் செயல்களைக் கட்டவிழ்த்துவிட்டிருந்த ஹிட்லரின் கையில் கிடைத்த இந்த வாய்ப்பை அவன் தன் ஆரியக்கொள்கைகளை – ஆரிய ஜெர்மனியின் சிறப்பை- அதன் மீது உலகம் வைத்துவந்த விமர்சனங்களைப் புறந்தள்ளி -உலகுக்கு எடுத்துச் சொல்லும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டான்.

அதற்கு முன்வரை ஜெர்மனியில் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களாக இருந்த பலர் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு தேசிய விளையாட்டு அமைப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்- அவர்கள் யூதர்கள் என்கிற காரணத்துக்காக.ஆரியர்களைத்தவிர வேறு யாராலும் விளையாட்டிலும் ஜெர்மானிய தேசியத்தின் பெருமையை உயர்த்திப்பிடித்திட முடியாது என்று வாதிடப்பட்டது.ஜெர்மானிய பாக்சிங் அசோசியேசன் அந்நாட்டின் மிகச்சிறந்த பாக்சிங் வீரரான எரிக் சீலிக்கை அவர் யூதர் என்பதற்காக வெளியேற்றியது.டேனியல் ப்ரென் என்கிற உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் வீரர் ஜெர்மனியின் டேவிஸ் கோப்பை க்ளப்பிலிருந்து தூக்கி எறியப்பட்டார்-யூதர் என்பதற்காக.இப்படிப் பல அற்புதமான வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அவர்கள் ஒன்றுகூடி யூத விளையாட்டு வீரர்களுக்கான அமைப்புகளைத் துவக்க முற்பட்டுக்கொண்டிருந்த வேளையில் 1936 ஒலிம்பிக் வந்து சேர்ந்தது.

ஆரம்பத்தில் ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துவதில் அவ்வளவு ஆர்வம் காட்டாதிருந்த ஹிட்லர் அதில் உள்ள விளம்பர அம்சத்தை அவருடைய கொள்கை பரப்பு அமைச்சர் ஜோசப் கோயபெல்ஸ் (’ஒரு பொய்யை நூறு முறை திரும்பத் திரும்பச்சொன்னால் அது உண்மையாகிவிடும் ’ என்கிற தத்துவத்தை உலகுக்கு வழங்கியவர்) எடுத்துக்கூறியபின் பிரம்மாண்டமாக ஒலிம்பிக் நிகழ்வை நடத்தினான் ஹிட்லர்.உலகில் இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலேயே பிரம்மாண்டமான நிகழ்வு 1936இல் ஹிட்லர் நடத்தியதுதான் என்று கூறப்படுகிறது.லட்சோபலட்சம் மக்கள் பேரணிகளாகவும் அலையலையான கூட்டங்களாகவும் அந்நிகழ்வில் ஆரிய முழக்கங்களோடு பங்கேற்றனர்.ஜெர்மானிய வீரர்கள் பதக்கம் பெற மேடையேறியபோதெல்லாம் லட்சோபலட்சம் மக்கள் எழுந்து நின்று ஹிட்லர் பாணியில் சல்யூட் அடித்து முழக்கமிட்டனர்.அன்று தொலைக்காட்சி வந்திருக்கவில்லை.வானொலி மட்டுமே இருந்தது.வானொலியை முழுமையாகக் கைக்கொண்டு ஜெர்மனியின் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் உள்ள மக்கள் வானொலி மூலம் ஒலிம்பிக் விளையாட்டுக்களைக் கேட்டு மேலும் தேசியப்பெருமிதமும் ஆரிய உணர்வும் கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்பட்டது.வெளி உலகுக்கு நாங்கள் ஒன்றும் இனவெறியர்கள் அல்ல என்று காட்டிக்கொள்ளவும் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஹிட்லரின் ஒலிம்பிக்கை புறக்கணிக்க வேண்டும் என்கிற குரல் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் வலுவாக எழுந்தது.தலைமறைவு வாழ்க்கையில் இருந்த ஜெர்மானிய சோசலிஸ்ட்டுகளும் கம்யூனிஸ்ட்டுகளும் பெர்லின் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்குமாறு உலக மக்களுக்கு அறைகூவல் விடுத்தனர்.ஆனால் ஒலிம்பிக் கமிட்டி விளையாட்டில் அரசியலைப் புகுத்த அனுமதிக்க மாட்டோம்.ஹிட்லர் பாசிஸ்ட் என்றால் அது உங்கள் பிரச்னை.ஒலிம்பிக் கமிட்டி சொல்லும் தேவைகளை நிறைவேற்றிக்கொடுத்தால் போதும் பெர்லினில் நடத்துவதை யாரும் தடுக்க முடியாது என்று கமிட்டி கூறிவிட்டது.விளையாட்டின் அடிப்படை சமத்துவம்.நாஜிக்களின் அடிப்படை இனச்சார்பு.ஆகவே அடிப்படையிலேயே கோளாறு இருப்பதை கமிட்டி பார்க்கத் தவறிவிட்டது.

* * *

அரசியல் காரணங்களுக்காக விளையாட்டைப் பல நாடுகள்/வீரர்கள் புறக்கணித்த சம்பவங்கள் பல உண்டு.ஒலிம்பிக் மட்டுமல்ல உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளாகக் கருதப்படும் ஒலிம்பிக்,ஆசியன் கேம்ஸ்,காமன்வெல்த் போட்டிகள் இம்மூன்றுக்குமே இது நேர்ந்துள்ளது.

சமாதானம்,நல்லெண்ணம்,விளையாட்டின் மகத்துவம் இவற்றையே தன் லட்சியமாக ஒலிம்பிக் கொண்டிருந்தபோதும் நீண்ட காலம் சோவியத் யூனியனும்,மக்கள் சீனமும் அழைக்கப்படாமலிருந்தது அரசியல் காரணங்களுக்காகத்தான்.அரசியலுக்கு அப்பாற்பட்டது விளையாட்டு என்று திரும்பத்திரும்ப ஒலிம்பிக்,ஆசிய விளையாட்டு,காமன்வெல்த் போன்ற அமைப்பினர் சொல்லிக்கொண்டிருந்தாலும் இம்மூன்று மெகா விளையாட்டுக்களும் பிறந்த காலத்திலிருந்தே அரசியலோடுதான் நகர்ந்துகொண்டிருக்கின்றன.அரசியலுக்கு அப்பால் எதுவும் இல்லை.அரசியலற்றது என்று எதுவும் இருக்க முடியாது-விளையாட்டு உட்பட என்பதே நமது கருத்து.அது எந்த அரசியலாக இருக்க வேண்டும் என்பதே இக்களத்தில் நடக்கும் போராட்டம்.

விளையாட்டல்லாத கீழ்க்கண்ட விசயங்கள் விளையாட்டுக்குள் இருப்பதை நாம் கவனத்தில் கொண்டு விவாதிக்க வேண்டியுள்ளது :-

1. இவ்விளையாட்டுக்கள் வெறும் விளையாட்டுக்களாகப் பார்க்கப்படுவதில்லை.ஒரு வீரர் வெற்றி பெற்றால் அது அந்த வீரரின் திறனாகப் பார்க்கப்படுவதில்லை.மாறாக அவரது நாடு வென்றதாகக் கருதப்படுகிறது.தேசியக்கொடிகள் ஆட்டப்படுகின்றன.அந்நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஒரு போர் வெற்றி போல ஆக்கப்படுகிறது.தேசியப்பெருமிதம் ஊதி வளர்க்கப்பட( நன்றி-ஹிட்லர்) இவ்விளையாட்டுக்கள் பயன்படுகின்றன.இந்திய பாக்கிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை இந்துத்வா சக்திகள் தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துவது ஒரு உதாரணம்.

2. விளையாட்டுக்கள் பணமுதலைகளான கார்ப்பொரேட்டுகளின் ஆதிக்கத்துக்குள் வந்து விட்டன.விளையாட்டுக்களை வழங்குவது(ஸ்பான்சர்) ,வீரர்களை தத்தெடுத்து தங்கள் கம்பெனி தயாரிப்புக்களுக்கான விளம்பரங்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்துவது ,ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தையே கம்பெனி விலம்பரத்துக்குப் பயன்படுத்துவது என்று தொடங்கி விளையாட்டின் ஒவ்வொரு அம்சமும் வியாபாரமாகிக் கிடக்கிறது. தொலைக்காட்சி அலைவரிசைகளின் நிகழ்ச்சிகளுக்கான விளம்பரமாகவும் பயன்படுகிறது.ஆசியன்,ஒலிம்பிக் மற்றும் பல கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நிறுவனங்கள் தாங்களே பெரும் பணம் படைத்த கார்ப்பொரேட்டுகளாகி அக்கமிட்டிகளுக்கான தேர்தல் போன்றவை பணமும் வன்முறையும் ஊடாடும் நிலை வந்துள்ளது. விளையாட்டு மொத்தத்தில் பணம் தொடர்பான ஒன்றாக ஆகிவிட்டது.

3. விளையாட்டென்பது எல்லோரும் பங்கேற்கும் நிகழ்வு என்பதற்காகவும் கூடி விளையாடும் சமூக அனுபவத்துக்காகவுமே நம் எல்லோராலும் காலம் காலமாகக் கொண்டாடப்படுகிறது.ஆனால் அது இப்போது வெற்றி வெற்றி என்பதையே இலக்காகக் கொண்டதாக மாறிவிட்டது.அதிலும் தங்கப்பதக்கம் பெற்றவரே கொண்டாடப் படும்போது. மீடியாக்களில் கவனம் பெறும்போது தோற்ற வீரர்களின் உழைப்பும் ஈடுபாடும் மனநிலையும் கேலிக்குரியதாகிரது.பெருவாரியான வீரர்கள் தோற்பதற்காகவே இத்தனை காலம் உழைத்தது போல ஆகிவிடுகிறது.எப்படியாவது வெற்றி ஈட்ட வேண்டும் என்பதால் வீரர்கள் ஊக்க மருந்துகள் போதை வஸ்துக்களைப் பயன்படுத்துதல் போன்ற சிதைவுகளும் அரங்கேறுகின்றன.

4. விளையாட்டுக்களிலும் ஆணாதிக்கமே நிலவுவது நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று.பெண் வீரர்களுக்கு பயிற்சியாளர்களோ நிதி அளித்து உதவுபவர்களோ கிடைப்பதில்லை.நாடுகளும் பெண்களை அனுப்புவதில் பெரிய முயற்சிகள் செய்வதில்லை.பெண்கள் விளையாடும் விளையாட்டிலும் பாலியல் வக்கிரம் எங்கும் பரவிக்கிடக்கிரது.டென்னிஸ் வீராங்கனைகளின் உடை,நீச்சல் உடை போன்றவை விவாதத்துக்குள்ளாகின்றன.புதுக்கோட்டை சாந்திக்கு ஏற்பட்ட அவமானம் ஒரு ஆண் வீரருக்கு ஏற்பட்டதுண்டா?

5. எல்லா சர்வதேச விளையாட்டுக்களும் ஐரோப்பிய விளையாட்டுக்களாகவே உள்ளன.ஹாக்கி ஏதோ ஒரு ஓரத்தில் இடம் பிடித்துள்ளது.மேற்கத்திய நாடுகள் அல்லாத நிலப்பரப்புகளின் பல்லாயிரம் விளையாட்டுக்களுக்கு சர்வதேச விளையாட்டரங்குகளில் எந்த இடமும் இல்லை.

6. வன்முறைக்கு மரியாதை செய்யும் பாக்சிங்,மல்லுக்கட்டு போன்ற விளையாட்டுக்கள் மட்டுமின்றி ரசிகர்களை வெறி கொள்ள வைத்துத் தோற வீரர்களை மைதானத்துக்குள் புகுந்து அடிப்பது, வெற்றி தோல்வி சார்ந்து கலகம் மற்றும் ரகளையில் ஈடுபடுவது மற்றும் சில சந்தர்ப்பங்களில் நாடுகளுக்கிடையேயான போருக்குக்கூடக் காரணமாக அமையும் அளவுக்கு –விளயாட்டுகளில் இன்று வன்முறைக்கான வித்து புதைந்து கிடக்கிறது.சர்வதேச விளயாட்டுக்களின் கொள்கை முழக்கங்களுக்கு நேர் முரணானதல்லவா இது.

7. பெரும் கூட்டம் கூடுவதால் தீவிரவாதம் இவ்விளையாட்டுக்களை தம் நிகழ்ச்சி நிரலுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.மூனிச் ஒலிம்பிக்கில் நடந்த படுகொலைகள் ஓர் உதாரணம்.ஆகவே அதைத்தடுக்க ராணுவம் போலீஸ் என்று குவித்து வைக்க வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது.

8. ஒவ்வொரு ஒலிம்பிக்,ஆசியன் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுக்கள் நடந்த நாடுகளிலும் அதற்கான இடம்,விளையாட்டுக் கிராமம் போன்றவற்றை உருவாக்கும்போது அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் துரத்தப்பட்ட –மாற்று வாழ்விடம் கொடுக்கப்படாத கொடுமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.பல்லாயிரக்கணக்கான அல்ல பல லட்சம் மக்கள் இவ்விளையாட்டுக்களால் வீடிழந்து நிற்கிறார்கள்.வீடுகள் மட்டுமல்ல சாலையோர வியாபாரம் செய்து பிழைத்தவர்கள் போல பல தொழில்கள் அழிந்து வாழ்விழந்தவர் எண்ணிக்கையும் வளர்ந்து விரிகிறது.இவர்களின் கண்ணீரின் மீதுதான் தேசியப் பெருமிதம் வளர்க்கும் இவ்விளையாட்டுக்கள் எழும்பி நிற்கின்றன என்பது எவ்வளவு வேதனையான உண்மை.

9. விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள்,அமைப்புகளில் எந்த ஜனநாயகமும் இல்லை.

இவ்வாறான எதிர்மறை அம்சங்களாக நாம் பட்டியலிடுவது விளையாட்டுக்கள் கூடாது என்பதற்காக அல்ல விளையாட்டு கொடியவர்களின் கூடாரமாகவும் ஊழல் பெருச்சாளிகளின் கைப்பாவையாகவும் கார்ப்பொரேட்டுகளின் சொத்தாகவும் ஏழைகளுக்கும் உண்மையான விளையாட்டுத்திறன்களுக்கும் எட்டாக்கனியாகவும் மாறிவிடக்கூடாதே என்பதற்காகத்தான்.இன்னும் பேச நிறைய உண்டு.விளையாட்டை விளையாட்டாக நாம் எடுத்துக்கொண்டுவிட முடியாது என்பதை மட்டும் சொல்லி இப்போதைக்கு முடிக்கலாம்.