Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Monday, July 19, 2010

சிதம்பரம் தெற்கு வாசல்-கருணாநிதி நக்கலும் தோழர் அருணனின் பொறுப்பான எதிர்வினையும்

(தீக்கதிர் நாளேட்டில் தோழர் அருணன்,தலைவர்,தமுஎகச எழுதிய கட்டுரை கீழே-இன்னும் சில கட்டுரைகளை அடுத்தடுத்து வெளியிடுவோம்.கொலையை ஜோதியில் குளித்தான் என்று மறைத்த அந்தணர்கள் சார்பாக தினமலர் வெளியிட்ட கட்டுரையில் வந்துள்ள செய்திகள் நாம் ஏற்கனவே அறிந்த ‘கதைகள்’தாம் .அதைப்படித்துவிட்டு சில நண்பர்கள் பதட்டமடைந்து பின்னூட்டம் அனுப்பியுள்ளனர்.தெற்கு வாசல் என்ற ஒன்றே இல்லை என்று ஒரே போடாகப் போட்டுள்ளனர்.நம் பயணம் தொடரும்)

சிதம்பரம் நடராஜர் கோவிலின் தென்புற வாசலைத் திறந்துவிடச் சொல்லி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அங்கு நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை தொலைக்காட்சி மூலம் கண்டபோது மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்று அந்தச்சுவரைப் பார்த்து ஆவேசப் பெருமூச்சு விட்ட வர்களில் நானும் ஒருவன்.
சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் வரும் நந்தன் கதையைப் படித்து விட்டு, அவன் வாழ்ந்த பகுதிகளை நேரில் சென்று பார்க்க ஆசைப்பட்டேன். அவன் பிறந்த மேற்கானாட்டு ஆதனூர் போனேன். அவன் வழிபட்ட திருப்புன்கூர் போனேன். அங்கே அவன் வெட்டிய குளத்தைப் பார்த்தேன். அங்கிருந்து சிதம்பரம் வந்தவன், நடராஜர் கோவிலின் தென்புற வாசல் வழியாக நுழைந்தேன். அங்கே அடுத்த பிரகாரத்தை சுவர் வைத்து அடைத்திருந்தார்கள்! நந்தன் நடந்த பாதை அந்த அளவில் மூடப்பட்டது! அவன் நடந்த பாதை வழியாக இப்போது நம்மால் நடராஜர் சன்னதிக்குப் போக முடியாது! ஏனென்றால் அன்று நந்தன் செய்தது மீறல்! வருணாசிரமவாதிகளின் தடையை மீறி அவன் நடத்திய கோவில் நுழைவு! ஆம், தமிழகத்தில் முதன்முதலாகக் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தியவன் நந்தனே!
இப்படிச் சொல்லும்போது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். அவனைத்தான் எரித்துவிட்டார்களே, அதற்குப்பிறகு அரூப வடிவில்தானே கோவிலுக்குள் நுழைந்தான். அது எப்படி மீறலாகும்? கோவில் நுழைவுப்போராகும்? புராணமயப்படுத்துதல் என்பது நடந்தவற்றை ஆதிக்கவாதிகள் தங்களது வசதிக்கு ஏற்ப அதீதப்புனைவு செய்வதாகும். அவர்கள் யதார்த்தத்தை அமானுஷ்ய கற்பிதத்தால் மூடிவைப்பார்கள். பகுத்தறிவு கொண்டு அந்த மூடியைத் திறந்து பார்த்தால்- அதாவது கட்டுடைத்துப் பார்த்தால்- யதார்த்தம் மீண்டும் வெளிப்படும்.
இன்றைக்குச் சுமார் ஆயிரத்துநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் சுந்தரர். இவர் பாடிய திருத்தொண்டத் தொகையில்தான் முதன்முதலாக நந்தன் பற்றிய குறிப்பு வருகிறது. செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் என்கிற ஒற்றை வரி அது. இன்றைக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி. இவர் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் நந்தன் பற்றி நான்கு வரிகள் உள்ளன. அதில்தான் அவன் பிறந்த ஊர் ஆதனூர் என்பதும், பிறந்த சாதி புலையர் என்பதும் வருகிறது.
இந்த ஐந்து வரிகளை வைத்துக் கொண்டு மட்டும் சேக்கிழார் அவ்வளவு விரிவாகப் புராணம் பாடியிருக்க முடியாது. நந்தனைப் பற்றிய நினைவுகளைச் சுமந்து நின்ற நாட்டுப்புற இலக்கியங்கள் மக்கள் மத்தியில் இருந்திருக்க வேண்டும். அவற்றைத்தான் புராணமயப்படுத்தியிருக்கிறார் சேக்கிழார். அப்படியும் நடந்த உண்மைகளை முழுசாய் மறைக்க முடியவில்லை.
கோவில் என்றாலே அந்தக்காலத்தில் சிதம்பரத்தைக் குறித்தது. அந்த அளவுக்கு சைவ சமயத்தவர் அதன் பெருமை பேசி வந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட நந்தனுக்கு சித்தமொடுத் திருத்தில்லைத் திருமன்று சென்று இறைஞ்ச ஆசை பிறந்தது என்கிறார் சேக்கிழார். அதாவது கோவிலுக்குள் சென்று திருமன்று தரிசிக்க - சன்னிதானத்தை தரிசிக்க- ஆசை பிறந்தது. ஆனால் அது கூடாத ஆசை, ஆகாத ஆசை. ஒன்றியனே தருதன்மை உறுகுலத்தோடு இசை வில்லை என்று அந்த ஆசை தனது குலத்திற்குப் பொருந்தாது என்று- அவனே நினைத்துக் கொண்டதாகவும் சேக்கிழார் கூறுகிறார்.
ஆசைக்கும் இயலாமைக்கும் இடையில் கிடந்து அல்லல்பட்டு, பின்னர் ஆசை மீறி நாளை போவேன் என்று தனக்குத்தானேயும், பிறரிடமும் சொல்லிக்கொள்வான். இதுவே அவனுக்குப் பட்டப்பெயராகிப் போனது. அந்தப் பெயராலேயே சுந்தரரும், நம்பியாண்டார் நம்பியும் அவனை அழைத்திருக்கிறார்கள். சேக்கிழாரும் அப்படியே சொல்லியிருக்கிறார்.இதிலிருந்து நந்தனின் நோக்கமும் திட்டமும் கோவிலுக்குள் நுழைவதாக இருந்தது என்பது நிச்சயமாகிறது.
ஒருநாள் ஆதனூரை விட்டுக் கிளம்பி சிதம்பரம் வந்து சேர்ந்தான். ஆனால் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. அவ்வளவு கட்டுத்திட்டம். என்ன செய்வது என்று அவன் யோசித்துக்கொண்டிருந்தான். இந்த இடத்தில்தான் சேக்கிழார் தனது அமானுஷ்ய கற்பிதத்தைச் சேர்க்கிறார். சிவபெருமானே நந்தனின் கனவில் வந்து இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி முப்புரிநூல் மார்பருடன் முன் அணைவாய் என்றாராம். அவனது கனவில் மட்டுமல்ல தில்லை மூவாயிரவர் ஒவ்வொருவருடைய கனவிலும் போய்ச் சொன்னாராம். அவர்களும் வேறு வழியின்றி வெய்ய தழல் அமைத்து தந்தார்களாம். அந்தத் தீக்குண்டத்தில் நந்தன் இறங்கினானாம். பின்னர் இம்மாயப் பொய்தகையும் உரு ஒழித்துப் புண்ணியமாம் முனி வடிவாய் மெய்நிகழ் பெண்ணூல விளங்க மீண்டும் எழுந்தானாம்.
நல்லது. எழுந்தவன் என்ன ஆனான் அவனுக்கு கிடைத்த புது உருவத்தோடு கோவிலுக்குள் போனானா? போனான். நல்லது. அதற்குப் பிறகு என்ன ஆனான்? திரும்பி வந்தானா? சொந்த ஊர் திரும் பினானா? தனக்கு கிடைத்த சிதம்பர தரிசனம் பற்றி தன் மக்களுக்குச் சொன்னானா? ஆதனூரில் மகிழ்வோடு வாழ்ந்தானா? அதெல்லாம் தெரியாது. யாருக்கும் தெரியாது. சொன்னவர் யார்? சாட்சாத் சேக்கிழார்!
இந்த உச்சகட்டப் பாடலை நோக்குங்கள்- தில்லைவாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்திக்/கொல்லை மான் மறிக்கரத்தார் கோபுரத்தைத் தொழுதி இறைஞ்சி/தில்லைபோய் உட்புகுந்தார் உலகுய்ய நடமாடும்/எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்க்கும் கண்டிலரால் புது உருவெடுத்தவர் கோபுர தரிசனத்தோடு நிற்கவில்லை. நெல்லை போய் உட்புகுந்தார்-கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டார். போனவர் உல குய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார் அதாவது நடராஜமூர்த்தியை அடைந்துவிட்டார். அதற்குப் பிறகு யாரும் அவரைக் கண்டிலர்!
விஷயம் தெளிவாகிறது. எரியுண்ட பிறகு ஒரு மனிதர் புதுவடிவம் எடுத்தார் என்பது அறிவுக்குப் பொருந்தாத விஷயம். உண்மையில் விஷயம் தலைகீழாக இருந்திருக்க வேண்டும். அதாவது, தீயில் புகுந்து வந்து கோவிலுக்குள் போகவில்லை. கோவிலுக்குள் தடாலடியாக நுழைந்ததால் தீக்குள் புகுத்தப்பட்டான் நந்தன். இதுவே நடந்திருக்கக் கூடியது. அதனால்தான் நந்தன் நடத்தியது கோவில் நுழைவுப்போராட்டம் என்கிறோம்.
தீண்டப்படாதோர் எனப்பட்டோர் இப்படி தர்மசாத்திர விதிமுறைகளை மீறினால் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அப்படிச் செய்யப்படலாம் என்று அந்த தர்ம சாதிரங்களே வகுத்துள்ளன. அப்படி நந்தன் எரித்துக் கொல்லப்பட்டிருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. வருணாசிரமவாதிகள் காட்டிய ஒரே சலுகை அவனையும் நாயன்மார்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி, புராணம் புனைந்து அந்த மக்களைச் சாந்தப்படுத்தியது.
இப்படி நந்தன் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்தது தென்புற வாசல் வழியாகத்தான். இதற்கு அசைக்க முடியாத ஆதாரம் பெரிய புராணத்திலேயே உள்ளது. நந்தனை எரியூட்ட தீக்குண்டம் - ஹோமக்குண்டம்- எங்கு அமைக்கப் பட்டது தெரியுமா? தென்திசையின் மதில்புறத்துப் பிறை உரிஞ்சும் திருவாயிலின் முன்னாக என்கிறார் சேக்கிழார். அதாவது, தென்திசையின் திருவாயில் முன்பாக! இப்போதும் ஓமக்குளம் எனப்படுவது கோவிலுக்குத் தென்திசையில்தான் உள்ளது!
இந்தத் தென்புற வாசலைத்தான் சுவர் எழுப்பி அடைத்துவிட்டார்கள் கோவில் நிர்வாகத்தார். இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? நந்தன் நுழைந்த வாசல் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? தீண்டாமை வெறியானது காலந்தோறும் எழுந்தும், தணிந்தும், எழுந்தும் வந்துள்ளது. ஆட்சி மாற்றங்கள், புதிய மதங்களின் வருகை என்று பல விதமான தாக்கங்களுக்கு மத்தியில் அது செயல்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்தத் தென்புற வாசல் திறந்துதான் இருந்தது. இன்னொரு கட்டத்தில் அது அடைக்கப்பட்டது. இப்போதும் கோவிலின் உள்புறம் அங்கே வாசல் இருந்ததற்கு அடையாளமாக ஒரு பெரிய மரக்கதவு உள்ளது. மரக்கதவுக்குள் கைவிட்டு தட்டிப்பார்த்தேன் தடுப்புச்சுவர் இருந்தது. சுவருக்கு எதற்கு மரக்கதவு? ஆக சுவர் இடையிலே எழுந்திருக்கிறது. தீண்டாமை வெறி அதிகமான ஒரு கட்டத்தில் எழுந்திருக்கிறது.
சிதம்பரம் நடராசர் கோவிலுக்குச் சற்றுத் தொலைவில் நந்தனுக்குத் தனிக்கோவில் இருக்கிறது. இதைக் கட்டியவர் சகஜானந்தர் என்கிற பஞ்சமர்குலத் தலைவர். இவர் காங்கிரஸ் இயக்கத்திலும் தீவிரமாக இருந்தவர். இந்தக் கோவிலுக்கு 1934ல் அடிக்கல் நாட்டியவர் யார் தெரியுமா? மகாத்மா காந்தி! அதற்கான கல்வெட்டு அங்கே உள்ளது.
இப்படித் தனிக்கோவில் எழுந்ததற்குக் காரணம் என்று அங்கிருந்த ஒரு பெரியவர் என்னிடம் சொன்னது - சிதம்பரம் நடராஜர் கோவிலின் தென்புறவாசல் அருகே நந்தனாருக்குச் சன்னதி உள்ளது. அங்கும் இப்படி நந்தனார், நடராஜர் சிவகாமியோடு காட்சியளிக்கிறார். ஒரு பஞ்சமர் குலத்தவருக்கு தனிச் சன்னதியா என்று அதைச் சுவர் வைத்து அடைத்துவிட்டார்கள். இது வெளிவாசலுக்கு ஏற்பட்ட கதி. இந்தச் சன்னதியின் உள்வாசல் கோவிலுக்குள் நடனசபைக்கு அருகே உள்ளது. அதையும் அடைத்து விட்டார்கள். மரக்கதவு போட்டுப் பூட்டி விட்டார்கள். இந்தக்கொடுமையை எதிர்த்தார் சகஜானந்தர். நந்தனார் சன்னதியைத் திறந்துவிடவேண்டும் என்று தில்லை மூவாயிரவராகிய தீட்சதர்களுடன் வாதாடினர். அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் நந்தனார் தீப்புகுந்த ஓமக்குளத்துக்கு அருகே இப்படியொரு போட்டிக்கோவிலை உருவாக்கினார்.
கோவில் இப்போது தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் வந்துவிட்டது. தென்புற வாசலை அடைத்துக்கொண்டிருக்கும் அந்தச்சுவரைக் கலைஞர் அரசு அகற்ற வேண்டும். அது இரண்டு விஷயங்களைத் தீர்த்து வைக்கும். ஒன்று, நந்தன் நுழைந்த வாசல் என்கிற காரணத்தால்தான் அப்படிச்சுவர் வைத்து அடைக்கப்பட்டது என்று மக்கள் நெஞ்சில் காலங்காலமாக இருந்து வரும் காயம்-அந்தச் சரித்திர ரணம் ஆறிப்போகும். இரண்டு, அங்கே நந்தனுக்கு ஏற்கெனவே தனிச்சன்னதி இருக்குமேயானால் அதுவும் மக்களின் வழிபாட்டுக்கு வரும். கோவிலுக்குள்ளும் சமத்துவபுரம் உருவாகும்.
இப்படியொரு சமத்துவத்தை உருவாக்கத் தனது ஆட்சியில் வாய்ப்பு இருப்பதை உணர்ந்த அந்தச்சுவற்றை அகற்று வதற்குப் பதிலாக போராட்டக்காரர்களைக் கேலி செய்திருக்கிறார் முதல்வர் கலைஞர். நந்தனார் இருந்தாரா இல்லையா என்று பெரியாரைத்தான் கேட்க வேண்டும என்கிறார். பெரிய புராணத்தில் வரும் நாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், காரைக்காலம்மையார், தில்லைவாழ் அந்தணர்கள் எல்லாம் இருந்தார்களா, இல்லையா என்பது பற்றியும் இப்படிச் சந்தேகத்தைக் கிளப்புவாரா கலைஞர்? அவ்வளவுதான் சைவப் பண்டிதர்கள் இவரைப் பிடிபிடியென்று பிடித்துவிடுவார்கள். அவர்கள் எல்லாம் வாழ்ந்தது உண்மை என்றால், நந்தன் வாழ்ந்ததும் உண்மைதான். அதுமட்டுமல்ல, நந்தன் பிறந்த, நடமாடிய ஊர்கள் எல்லாம் அதே பெயரில் இப்போதும் உள்ளன. அந்தத் தில்லைவாழ் அந்தணர்களின் வாரிசுகள் என தீட்சதர்களும் இருக்கிறார்கள்.
நந்தன் சிதம்பரம் கோவிலுக்குள்ளேயே போகவில்லை என்கிறார் முதல்வர் கலைஞர். சேக்கிழாராவது புதிய உருவத்தில் உள்ளே போனான் என்று பாடியிருக்கிறார். சோழனின் அன்றைய முதலமைச்சராவது அந்த அளவுக்கு உண்மையை ஒப்புக்கொண்டார். தமிழகத்தின் இன்றைய முதலமைச்சரோ அவன் உள்ளே போகவேயில்லை என்று அடித்து விடுகிறார். உள்ளே போனான், அதனால்தான் தீட்டு என்று சொல்லி வாசலை அடைத்தார்கள் எனச் சொல்லுகிறவர்களைக் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறார். போனதைப் பார்த்தவர்கள் இல்லை என்கிறாரே, போகாததை உறுதி செய்ய இவர் மட்டும் என்ன அந்தக் காலத்தில் வாழ்ந்தவரா? தான் போகவில்லை என்று நேரே இவரிடம் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிப் போட்டுக் கொண்டு நந்தன் சொன்னானா? இப்படியெல்லாம் கேட்க நம்மாலும் முடியும் என்பதை முதல்வர் உணரவேண்டும்.
பெரியாரின் சீடர், அண்ணாவின் தம்பி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் கலைஞர், வருணாசிரமவாதிகளின் வறட்டு வக்கீலாக மாறக்கூடாது. எந்தவொரு போராட்டத்தையும் அரசுக்கு எதிரானதாகப் பார்த்து எரிச்சல் அடையக்கூடாது. இது ஜனநாயக நாடு. பல கோரிக்கைகளும், அவற்றுக்கான போராட்டங்களும் எழத்தான் செய்யும். அவற்றின் நியாயத்தன்மை குறித்தே முதலில் யோசிக்க வேண்டும். அதுவே ஒரு ஆட்சியாளருக்கு அழகு.
நந்தன் பற்றி சேக்கிழார் பாடியதை கலைஞர் மீண்டும் படிக்கட்டும். அது பற்றிய புதிய ஆய்வுகளைத் தேடிப்பெறட்டும். அவரது கூட்டணியில் உள்ள திருமாவளவன் இந்தச்சுவரை அகற்றச் சொல்லி முன்பு போராட்டம் நடத்தினார். ஆகவே, அவரிடமும் இதுபற்றிக் கேட்கட்டும். போராட்டத்திற்கு ஆதரவாக விடுதலையில் தலையங்கம் வந்திருக்கிறது. அவர்களிடமும் கேட்கட்டும்.
இதை விடுத்து ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம். அதுவும் தாழ்த்தப்பட்டோரின் அந்நாளைய, இந்நாளையத் தலைவர்களைப் பற்றிப் பேசும் போது மேலும் நிதானம் வேண்டும். வருணாசிரமம் எனும் கொடூர சமூக ஆயுதத்தால் சித்ரவதைக்கு ஆளானவர்கள் அவர்கள். அந்த வலி இன்னும் இருக்கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச வேண்டாம்.

Thursday, July 15, 2010

நந்தன் நடந்த பாதை

thillai 1

பத்திரிகைச் செய்தி

சிதம்பரம் நடராசர் ஆலயத்திற்கு தலித் சமுகத்தின் நந்தன் சென்ற பாதையை மறைத்து அடைக்கப்பட்டுள்ள கதவைத் திறந்திடவும், தடுப்புச் சுவரை அகற்றிடவும் வலியுறுத்தி புதனன்று (ஜூலை 14) எழுச்சி மிகு போராட்டம் நடைபெற்றது. அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசமைப்பு சாசனத்திற்கு விரோதமாக ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடைப்பை அகற்றுவதற்கு மாறாக, தமிழக அரசின் காவல்துறையினர் அந்தக் கதவை திறக்கக் கோரி போராடியவர்களைக் கைது செய்தனர். நந்தன் சென்ற பாதையில் தாங்களும் நடந்து சென்று இப்போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

மேற்கண்ட போராட்டத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிதான் நடத்தியது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் அம்முன்னணியின் உயிர்ப்புள்ள ஓர் அங்கம்.நானும் எமது அமைப்பைச் சேர்ந்த படைப்பாளிகள் பலரும் நேற்றைய (14.7.10) மறியலில் பங்கேற்றுக் கைதானோம்.

இன்று சில தொலைக்காட்சிகளில் அந்தப் பாதைக்கும் நந்தனுக்கும் தொடர்பில்லை.அது வேறு காலம் இது வேறு காலம் என்று வரலாற்று அறிஞர் என்ற பேரில் ஒரு பக்தர் பேட்டி கொடுப்பதைக் காட்டினார்கள். தமிழக அரசும் சிதம்பரம் ஆலயத்தில் ட்ய்ஹமிழக அரசு மேற்கொண்டுவரும் நல்ல காரியங்களைக் கெடுக்கவே இப்படிப் போராட்டங்கள் நடத்தப்படுவதாகக் கண்டனம் செய்துள்ளதாக அச்சேனல் (ஜீ தமிழ்)கூறியது. நல்லது.உத்தப்புரம் பிரச்னையில் அத்தனை தடியடி நடத்தியபிரகும் கம் என்று உட்கார்ந்திருக்கும் தமிழக அரசு தில்லைவாழ் அந்தணர்களுக்காகவேனும் வாய் திறந்திருப்பது வரவேற்கத்தக்கது.

சிதம்பரம் நடராசர் கோவில் கட்டப்பட்டது கி.பி.600 வாக்கில் இருக்கலாம்.நந்தன் வாழ்ந்ததும் திருப்புன்கூரில் அவர் சிவனைத் தரிசித்ததும்( சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று நந்திக்கு சிவன் ஆணையிட்டதும்) பின்னர் அத்தைரியத்தில் சிதம்பரம் கோவிலுக்குள் அவர் நுழைந்ததும் அங்கே அவர் தில்லைவாழ் அந்தணர்களால் தீயில் தள்ளி உயிரோடு எரிக்கப்பட்டதும் கி.பி.700 களில் நடந்தது.சிதம்பரம் கோவிலின் இன்றய கட்டட அமைப்பு பின்னர் குலோத்துங்க சோழன் மற்றும் பல குறுநில மன்னர்கள் செல்வந்தர்களால் கி.பி.1000த்தை ஒட்டி அல்லது அதற்கு முன் வெவ்வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டவை.ஒரே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டவை அல்ல.நந்தன் வாழ்ந்த ஊர் ஆதனூர் அது சிதம்பரம் கோவிலின் தெற்கு வாசல் பக்கம்தான் இருக்கிறது. தெற்குவாசல் கட்டப்பட்டு அது பின்னர் ஏன் சுவர் வைத்து மறிக்கப்பட்டது என்பதற்கான சரியான சால்ஜாப்புகளை தில்லைவாழ் அந்தணர்களோ தமிழக அரசோ இதுவரை சொல்லவில்லை.உண்மையில் அது நந்தன் நடந்ததால் தீட்டான பாதை என்பதற்காகவே அடைக்கப்பட்டது.இது ஒரு lore – வழக்காறாகவும் மக்கள் மத்தியில் நம்பிக்கையாகப் புழங்குவது.எரித்துக்கொன்ற நந்தன் கொலை வழக்கை தானே தீயில் (ஓமக் குளத்தில்) (ஓமக்குளமும் கோவிலுக்குத் தெற்கேதான் இருக்கிறது) இறங்கி ஈசனின் ஆணைப்படி பறையன் என்னும் பிறப்பால் ஏற்பட்ட தீட்டை எரித்து பிராமணனாக புது அவதாரம் எடுத்துத் திருநாளைப்போவாராகக் கோவிலுக்குள் நுழைந்தார் என அந்தணர்கள் கதை கட்டி விட்டதைப் போல இப்பாதை குறித்தும் பல கதைகளை அந்தணர்கள் உலவ விட்டுள்ளனர்.அவையும் சில நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருப்பதால் இப்போது அவற்றையெல்லாம் இப்போராட்டக் காலத்தில் பலரும் ‘அவுத்து’ விடுகின்றனர். தெற்குவாசலும் கீழ வாசலும் குடமுழுக்கு நேரம் தவிர மற்ற நேரங்களில் பயன்பாட்டில் வைப்பதில்லை . ஆகவே தெற்குவாசல் மூடப்பட்டது என்று சில தீட்சிதர்கள் நேற்று எங்களிடம் கூறினர். அப்படியானால் கீழவாசல் ஏன் சுவர் வைத்து மறிக்கப்படவில்லை என்கிற கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை.

thillai-3

மற்ற சைவக்கோவில்களைப்போல அல்லாமல் இக்கோவிலில் நடராசர் தெற்கே பார்த்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு நேராக இருக்க வேண்டிய நந்தியை அவரைப் பார்க்க விடாமல் சுவர் வைத்து மறைத்துள்ளனர்.இது சைவ ஆகம விதிகளுக்கே புறம்பானதாகும் என்று சைவ அறிஞர்கள் கூறுகின்றனர்.இப்படி ஆகம விதிகளையே புறக்கணித்துச் சுவர் எழுப்பியிருக்கிறார்கள் என்றால் சும்மா ஏப்பை சாப்பையான காரணங்களுக்காக அதைச் செய்திருக்க முடியாது.பாதை நந்தன் வருகையாலும் கொலையாலும் தீட்டுப்பட்டது என்கிற வலுவான காரணத்தாலேயே அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் துணிபு.

எல்லாவற்றையும் கணக்கில் கொண்டே தீண்டாமை ஒழிப்பு முன்னணி இப்பிரச்னையைக் கையில் எடுத்துள்ளது.நேற்று நடைபெற்ற போராட்டத்துக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது நானும் உடன் இருந்தேன்.கோவில் அதிகாரி எங்களிடம் உச்சநீதிமன்றம் மறு உத்தரவு வரும்வரை இக்கோவிலிலின் கட்டமைப்பில் எதையும் மாற்றக்கூடாது(புதிதாக எதையும் கட்டவும் கூடாது.இடிக்கவும் கூடாது) என்று தடை உத்தரவு பிறப்பித்திருப்பதால் இச்சுவரை இப்போது இடிக்க முடியாது என்றுதான் கூறினார்.உடனிருந்த கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார்,காவல்துறை அதிகாரிகள் எல்லோருமே இச்சுவர் ஏன் வந்தது என்பது எல்லோருக்குமே தெரியும் சார் நாங்க என்ன சார் செய்ய முடியும் கவர்மெண்ட்டுதானே முடிவு எடுக்கணும் என்றுதான் கூறினார்களே ஒழிய இது நந்தன் நடந்த பாதை என்பதற்காக அடைக்கப்படவில்லை என யாருமே கூறவில்லை.

இதே பிரச்னைக்காக முன்னர் தோழர் தொல்.திருமா தலைமையில் ஒரு போராட்டம் நடைபெற்றுள்ளது.அவருக்கு அந்தணர்கள் எதிர்சேவை செய்து அவருக்குப் பரிவட்டம் கட்டி உள்ளே அழைத்துச்சென்றபடியால் மனம் குளிர்ந்து போராட்டத்தைக் கைவிட்டார் என்று கேள்விப்பட்டோம்.இப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இதே பிரச்னைக்காக அடுத்த வாரம் களத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளது. எல்லாருமே முட்டாள்கள் அல்லர்.சரித்திர ஞானம் அற்றவர்களும் அல்லர்.எந்தப் போராட்டத்தையும் மாசு மருவற்ற தன் சாதனை ஆட்சிக்கு எதிரான கலகமாகவே பார்ப்பதை விடுத்து இன்னும் மிச்சம் மீதியிருக்கும் (இருப்பின்) தந்தை பெரியாரின் வாசனையில் கொஞ்சத்தையேனும் பயன்படுத்தி இச்சுவரை இடிப்பதற்கான வழிமுறைகளைத் தமிழக அரசு காண வேண்டும்.

thillai-2

13ஆம் தேதி தீக்கதிரில் வெளியான முழக்க வரிகளைக் கீழே தருகிறேன் :

நந்தன் அழைக்கிறான்

ச.தமிழ்ச்செல்வன்

நந்தன் அழைக்கிறான்

நானிலமே கிளர்ந்தெழுக !

பிறப்பின் தீட்டழிக்க

நெருப்பில் குளித்தெழுந்து

புறப்பட்டு வா எனவே

ஈசன் சொன்னான் எனக்

கட்டிவிட்ட கதைக்குள்ளே

எரிகின்றான் நந்தன் எரிகின்றான்.

அவன் உடலம் எரிந்து

எலும்புகள் தெறிக்கையில்

சிரித்துக் கைகொட்டிச்

சுற்றிநின்ற சாதியத்தின்

வேரறுத்து வீழ்த்திடவே

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக.

அவன் நடந்து வந்த பாதை

நடராசன் கோவிலிலே

தீட்டுப் பட்டதெனச்

சுவரெழுப்பி மறித்தார்கள்.

நந்தன் மடிந்துவிட்டான்

நெருப்பிட்டுக் கொலை செய்த

அந்தணரும் மரித்து விட்டார்.

சுவர் இன்னும் நிற்கிறது -

சுற்றிவரும் போதெல்லாம்

சாதியால் தாழ்த்தப்பட்ட எம்

சரித்திரத்தை நினைவூட்டி.

அந்நினைவுகளின் வலி மறக்கத்

திமிர்ந்து நிற்கும் இச்சுவர் தகர்த்து

வரலாற்றை நேர் செய்ய வா.. .. ..

நெருப்புக்கு உள்ளிருந்து

கங்குகளில் சொல்லெடுத்து

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக!

நாட்டு மக்கள் நீர் அருந்த

நாடெல்லாம் குளம் வெட்டிக்

கோயிலும் கோபுரமும்

உயர்ந்திடவே மண்சுமந்து

கட்டி முடித்த கோவில்

எட்டி உதைத்ததாலே

காயம்பட்ட இதயத்தின்

எரிகின்ற நெருப்பாக

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக!

வரலாற்றைப் படைத்தவர்கள்

வரலாறாய் வாழ்ந்தவர்கள்

வரலாற்றின் பக்கங்களில் ஒரு

வரியிலும் இடம் பெறாதவர்கள்

அவ்வலியின் நினைவை மட்டும்

சுமந்தபடி வாழ்பவர்கள்

வலிகளின் நினைவுகளை

நித்தம் புதுப்பிக்கும் இச்

சிதம்பரத்துச் சுவர் தகர்த்துச்

சீர்படுத்த வேண்டுமெனச்

சாதியரால் சதித்துக் கொலையுண்ட

சரித்திர நாயகனாம்

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக!

தில்லைவாழ் அந்தணர்கள்

தின்று செழித்திடவே

சொந்தக்கோவிலாகச்

சிதம்பரத்து நடராசன்

சிறைப்பட்டுக் கிடந்த காலம்

தேவாரம் திருவாசகம் எனச்

செந்தமிழும் சிறைப்பட்ட கொடுங்காலம்.

சாதிகாத்த அரசுகள்

சரிந்து வீழ்ந்தபின்னும்

சாதிக்கு எதிராகத் தமிழ்ச்சாதியை

எழுப்பி விட்ட காவிய நாயகனாம்

பெரியாரின் வழிநின்று

சமத்துவபுரம் எழுப்பும்

சனநாயக காலத்திலும் ஒரு

சாதிச்சுவர் இன்னும் நின்று சிரிப்பதா?

அரசின் கைகளில் கோவில் வந்தபின்னும்

அச்சுவர் மட்டும் இன்னும் அசையாமல் நிற்பதா?

நந்தன் கேட்கின்றான்

நானிலமே பதில் பேசு.

Wednesday, March 3, 2010

நித்யானந்தம் என்கிற இளைஞன்

nithya5 சன் நியூஸ் தொலைக்காட்சி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிய சுவாமி நித்யானந்தாவின் படுக்கையறைக்காட்சியை நானும் பார்த்தேன்.இந்துத்வா ஆசாமிகள் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி அவசர அவசரமாக அவர் அல்ல எங்கள் அடையாளம் என்று பிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்னைகளுக்குப் பொருளாதாரத் தளத்தில் அல்லது அரசியல் தளத்தில் தீர்வுகாணப் போராட வேண்டும். அதற்குத் தயாராகாத மக்கள் பண்பாட்டுத்தளத்தில் சாமி,கோயில்,பூஜை என்று தீர்த்துக்கொள்ள முயலும் பழக்கம் அபினியைப்போல மயக்கிக்கொண்டிருக்கும் நம் சமூகத்தில் இதுபோன்ற சாமியார்கள் வருவதும் சமயங்களில் பிடிபடுவதும் சகஜம்.

எனக்கு அக்காட்சியை பார்த்தபோது நித்யானந்தா என்கிற அந்த 33 வயது இளைஞனின் மீது பச்சாதாப உணர்வு ஏற்பட்டது.பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார் வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. அவனும் சாதாரண மனிதன்தானே.சின்னப்பையனான அவன் அவனோடு விரும்பி உறவு கொள்ளும் பெண்ணோடு இருக்கும் கணத்தைப் படம் பிடித்து ஊருக்கே காட்டுவது நாகரிகமாக எனக்குப்படவில்லை.காஞ்சி சாமிகள், பிரேமானந்த சாமிகள் போல பெண்களிடமிருந்து அவன் வல்லந்தம் செய்ததாக புகார் வராமல்- அவர்கள் இருவரும் காதலால் ஒருமித்தது போன்ற ஒரு வீடியோ காட்சியைக் காட்டும் போது அய்யோ பாவம் அவன் என்கிற உணர்வுதான் முதலில் எனக்கு ஏற்பட்டது.

அவன் பிரம்மச்சர்யத்தை ஊருக்கு உபதேசம் செய்பவனாக இருந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கையை இப்படி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறான் என்பதற்காக அவனைக் குற்றம் சாட்டலாம்.அது சரி.கோடிக்கணக்கான சொத்துக்கு தலைவனாக இருப்பதில் இதுவரை எந்த விதிமீறலும் இல்லாமலா இருந்திருக்கும்? அதைப்பற்றியெல்லாம் தோண்டி எடுத்து வெளியே போட்டு அவனைக்கிழிக்கலாம். இவனை மட்டுமல்ல இவனைப்போல ஊரை ஏமாற்றும் அத்தனை சாமியார்களின் சொத்துக்குவிப்புகளும் கிழிக்கப்பட வேண்டும்.அத்தனையும் ஏமாந்த எளிய மக்கள் கொடுத்த சொத்து.ஆட்சியில் இருப்பவர்களே சாமியார்களிடம் மோதிரம் வாங்கிக்கொண்டு திரியும்போது அவர்களின் பொருளாதாரக்குற்றங்களை யார் கேள்வி கேட்பார்கள்?

அதிலும் இந்த நித்யாப் பையன் அமெரிக்கா ,ஐரோப்பாவெல்லாம் போய் கார்ப்பொரேட் கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்களின் மன அழுத்தங்களை சரி செய்ய தியான வகுப்புகள் நடத்துகிறவன்.பன்னாட்டுக் கம்பெனிகளோடு தொடர்புடையவன்.தமிழகப் போலீஸ் போய் அவனைக்கைது செய்தாலும் சுலபமாக வெளியே வந்து விடுவான்.

பாலியல் குற்றம் இல்லாமலே ஏராளமான பிற குற்றங்கள் புரியாமல் சட்டத்தை ஏமாற்றாமல் எந்தச்சாமியாரும் கோடிக்கணக்கான சொத்துக்களைச் சேர்க்க முடியுமா? சாயிபாபா,அமிர்தானந்தா தொடங்கி எத்தனையோ ஆனந்தாக்களும் கிறித்துவ சாமியார்களும் இந்தத் திசையில் விசாரிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டுப் பிடிபட வேண்டியவர்களாவர்.

மக்களை மயக்குவதற்கும் மனித மனங்களை கார்ப்பொரேட்டுகளின் சரக்குகளுக்கேற்ப தகவமைப்பதற்கும்தான் நவீன அபினிகளாக நாங்கள் வந்து விட்டோமே நீ என்ன எனக்குப் போட்டியாக என்று சன் டிவிக்குக் கோபம் வந்துவிட்டது போலும்.அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுத் தாளித்து விட்டார்கள்.

ஒரு விரிவான பகுத்தறிவுப் பண்பாட்டு இயக்கத்தை ( முன்னெப்போதையும் விட இப்போது வலுவாக) நடத்த வேண்டிய காலமாக இன்றைய காலம் இருக்கிறது.