Wednesday, April 1, 2009

நோஸ்டால்ஜியாவின் அரசியல்

 

chimp primitive 1

நான் உயிர்மை இதழில் ‘விடுபட்ட வார்த்தைகள்’
என்றொரு தொடர் எழுதிக்கொண்டிருந்தேன்.
அது பின்னர் பேசாத பேச்செல்லாம் என்கிற தலைப்பில்
புத்தகமாகவும் வந்தது.அது வந்துகொண்டிருந்தபோதும் இப்போதும்
அதுபற்றிப் பேசும் சில நண்பர்கள் வெறும் நோஸ்டால்ஜிக்காக
நீங்கள் எழுதுவதில் என்ன அரசியல் இருக்கிறது என்று கேட்டதுண்டு.
இவ்வலைப்பக்கத்தில் கூட ஒரு அன்பர் அதே பழைய கேள்வியைக்
கேட்டுள்ளார்.நான் யோசித்துப்பார்க்கிறேன் ‘வெறும்’ என்கிற
அடைமொழியுடன் தாழ்த்திப் பேசத்தக்கதா நோஸ்டால்ஜியா?

நோஸ்டால்ஜியா என்பது பழசை நினைத்துப்பார்க்கும் செயல் என்று 
நான் பார்க்கவில்லை.அதை ஆதிநிலைகளுக்குத் திரும்ப விழையும்
மனதின் அசைவு என்றும் தன் ஆதி அடையாளங்களைத் தேடும்
மனித மனதின் செயல்பாடு என்றும்தான் பார்க்கிறேன்.

காலனிய காலத்தில் காலனிப்படுத்தும் வேலையில் இங்கிலாந்தை
விட்டுத் தூர தூர தேசங்களுக்கு வாழப்போன ஆங்கிலேயர்கள்
தங்கள் நாட்டில் விட்டு வந்த அந்தத் தேம்ஸ் நதியையும்
பனிமலைகளையும் நினைத்து ஏராளமான கவிதைகள் படைத்தனர்.
அதே போல காலனிப்படுத்தப்பட்ட நாட்டின் மனிதர்கள் காலனியவாதிகள்
வருகைக்கு முன்னர் தங்கள் நாட்டில் நிலவிய சூழலை எண்ணி ஏங்கிப்
பாடியுள்ளனர்.ஆஸ்திரேலியா ,ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கப் பகுதிகளில்
குடியேறப்போன காலத்து ஆங்கில இலக்கியத்தில் இத்தகு மனநிலை
இயங்குவதைப் பார்க்கலாம்.

காலனிப்படுத்தப்பட்ட நம் போன்ற நாடுகளில் பாரதி போன்ற படைப்பாளிகள்
‘முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே...’ என்றும்
மன்னும் இமயமலை எங்கள் மலையே என்று எமக்கான சொந்த அடையாளங்கள்
இந்த மண்ணில் ஏராளம் உண்டு என்று உரத்துப்பேசியதும் இத்தகைய
உளவியலில் இருந்துதான்.இன்று தேசமெங்கும் சிதறிக்கிடக்கும் நம் ஈழத்தமிழ்ச்
சகோதரர்களும் சகோதரிகளும் தங்கள் நாட்டின் மரங்களுக்காகவும் மலைகளுக்காகவும்
விடும் பெருமூச்சை ‘ வெறும் ‘ நோஸ்டால்ஜியா என்றா கூறுவோம்?

தவிர, அந்தக்காலத்திலே.... என்று ஒருவித ஏக்கத்துடன் பேசுவதில்
நிகழ்காலத்தின் மீதான  விமர்சனம் அடங்கியிருப்பதாக நாம் பார்க்கலாம்.

ஒருவகையில் மார்க்சியம் என்பதும் மனித சமூகத்தின் நோஸ்டால்ஜியாவில்
இருந்தே பிறந்ததாகக் கூறமுடியும்.

ஆதியிலே பூமியே இல்லாத காலம் ஒன்று இருந்தது.450 கோடி ஆண்டுகளுக்கு
முன்னால் பூமி தோன்றியது அல்லது உருவானது.அப்போது அதில் உயிர்கள் இல்லை.
பின்னர் அமீபா போன்ற ஒருசெல் உயிரிகள் தோன்றின.பின்னர் பரிணாம வளர்ச்சியில்
பலசெல் உயிரிகளான மீன்கள்,பறவைகள்,விலங்குகள்,பின்னர் மனிதர்கள் தோன்றினர்.
அப்போது இப்பூமியில் கோயில்கள் இல்லை,சர்ச்சுகள் இல்லை, மசூதிகள் இல்லை,
சாமிகள் இல்லை.சொத்து-தனிச்சொத்து என்றும் ஏதும் இல்லை.எதுவும் யாருக்கும்
சொந்தம் இல்லை.எல்லாம் எல்லோருக்கும் -சகல ஜீவராசிகளுக்கும்-சொந்தம்-அதாவது
பொதுவுடமை.ஆதிப்  பொதுவுடமை பூமி. ஆகா... அந்தக்காலத்தில்... என்று நம்
எல்லோருக்காகவும் நோஸ்டால்ஜிக்காக கார்ல் மார்க்ஸ் கனவு கண்டான்.அந்த ஆதிப்
பொதுவுடமை சமூகம் மீண்டும் வந்தால்...?

அந்த நோஸ்டால்ஜியாவிலிருந்து பிறந்த மார்க்சியம் உலக
வரலாற்றின் திசைகளைத் திருத்திய்மைத்தது.

வாழ்க நோஸ்டால்ஜியா!

21 comments:

Boston Bala said...

---உயிர்மை இதழில் ‘விடுபட்ட வார்த்தைகள்’
என்றொரு தொடர்---


அந்தக் கட்டுரைகளை தொடர்ந்து ஆர்வத்துடன் வாசித்து வந்தேன்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பசங்க எல்லாரும் குளிக்கும்போது தோழி நீங்கதான் கல்லெறிந்ததாக நினைத்துக் கொண்டு புன்முறுவலிப்பது இன்னும் மனசோரமாக சிரித்துக் கொண்டிருக்கிறது.

எதார்த்தமான நகைச்சுவை & அருமையான விவரிப்பு.

நன்றி.

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணாச்சி நானெல்லாம் எழுதுறேன்னு ரவுடி வேஷம் போடுறதே நோஸ்டால்ஜியாவ வச்சுத்தான்.

வாழ்க நோஸ்டால்ஜியா!

மண்குதிரை said...

//இன்று தேசமெங்கும் சிதறிக்கிடக்கும் நம் ஈழத்தமிழ்ச்
சகோதரர்களும் சகோதரிகளும் தங்கள் நாட்டின் மரங்களுக்காகவும் மலைகளுக்காகவும்
விடும் பெருமூச்சை ‘ வெறும் ‘ நோஸ்டால்ஜியா என்றா கூறுவோம்?//


//ஆகா... அந்தக்காலத்தில்... என்று நம்
எல்லோருக்காகவும் நோஸ்டால்ஜிக்காக கார்ல் மார்க்ஸ் கனவு கண்டான்.அந்த ஆதிப்
பொதுவுடமை சமூகம் மீண்டும் வந்தால்...?//

சரியான கருத்து.

Deepa said...

//நோஸ்டால்ஜியா என்பது பழசை நினைத்துப்பார்க்கும் செயல் என்று
நான் பார்க்கவில்லை.அதை ஆதிநிலைகளுக்குத் திரும்ப விழையும்
மனதின் அசைவு என்றும் தன் ஆதி அடையாளங்களைத் தேடும்
மனித மனதின் செயல்பாடு என்றும்தான் பார்க்கிறேன். //

ஏப்ரல் மே மாதம் வருகிறது. ஒரு காலத்தில் தெருவெங்கும் குழந்தைகள் விளையாடியதையும், தெருவோரம் யாரோ வீடு கட்ட குவித்து வைத்த் மணலைப் பீச் என்று நினைத்துக் குதியாட்டம் போட்டதையும், அழுக்கு என்றால் அப்படி ஒரு அழுக்காக உடம்பு கை கால்கள் ஆனதையும் திட்டிக் கொண்டே அம்மாவோ அக்காவோ குளிப்பாட்டி விட்டதையும் சுகமாக அசை போட்டுக் கொண்டிருந்தேன். இது ஒரு வியாதி போல. நாம் பழசையே நினைத்துக் கொண்டிருக்குறோமோ என்ற குற்ற உணர்வுடன்.

இல்லை! வாழ்க நோஸ்டால்ஜியா!
நன்றி சார்!

Anonymous said...

உற்பத்திமுறையை பின்னோக்கி செலுத்துவதுதான் மார்க்சியம் என நீங்கள் கருதுவதாகப் புரிந்து கொள்ளலாமா

மார்க்சு தனது எந்த எழுத்தில் இது சமூகத்தின் நோஸ்டால்ஜியாவின் விளைவுதான் மார்க்சியம் எனச் சொல்லி உள்ளார். அது உண்மை என கொண்டால் வரலாற்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் எப்படி நோஸ்டால்ஜியாவில் செயல்படும்

Anonymous said...

எங்கு பார்த்தாலும் ஒரே நோஸ்டால்ஜியா வியாதியா இருக்கே. வாழ்க நோஸ்டால்ஜியா அதற்காக அரசியல்ல மட்டுமல்ல தமிழிலும்கூட நாம் நோஸ்டால்ஜியாவா ஆகமுடியுமா தம்பி. இன்னும் சில நாட்களில் அழிந்துப் போகக்கூடியதற்குதான் நோஸ்டால்ஜியா பொருந்தும். நோய் பிடித்தவன் கடைசி காலத்தில் ஊர்திரும்புவதே நோஸ்டால்ஜியான்னு ஒரு விளக்கம் இருக்கு. மொத்தத்தில் வலைப்பதிவில் நோஸ்டால்ஜியா ஆராய்ச்சி செய்ய வைத்த தமிழ் வாழ்க.

ச.தமிழ்ச்செல்வன் said...

வந்த உள்ளங்களுக்கு நன்றி.பேரிலி நண்பர் கேட்டது நல்ல கேள்வி.ஆதி நிலையான ஆதி புராதன பொதுவுடைமை சமூகத்தின் பொதுவுடைமை என்கிற அம்சம் மட்டுமே மார்க்ஸ் எடுத்துச்சொன்னது.அதன் சகல பலவீனங்களையும் தவிர்த்த நவீன உற்பத்தி முறையோடு நவீன விஞ்ஞானத்தோடு இணைத்துக் கனவு கண்டவர் மார்க்ஸ். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

ஊர்சுத்தி... said...

வணக்கம் தோழரே...

நீங்களும் வலைக்குள் விழுந்து விட்டீர்கள்...மிக்க மகிழ்ச்சி...

-சரவணன் (ரயில்வே ) மதுரை.

Anonymous said...

Tamil ! many times "Rememberance is the only paradise"-because day by day good values are being erroded.Bad things and thoughts are growing due to social conditions and hard life.So It is no surprice to see back the life & history with disappointment and expectations.Past has many attractive ,emotional and subjectives feelings.it cannot be touched by anyone and force---R>selvapriyan-Chalakudy.

Muruganandan M.K. said...

நோஸ்டால்ஜிah- "ஆதி அடையாளங்களைத் தேடும்
மனித மனதின் செயல்பாடு"....

"அந்த நோஸ்டால்ஜியாவிலிருந்து பிறந்த மார்க்சியம் உலக
வரலாற்றின் திசைகளைத் திருத்தியமைத்தது. "
மனத்தில் ஊறப் போட்டு சிந்தித்தேன்.

வாழ்வின் பழைய பக்கங்களை அசைபோடும் இலங்கையர்களில் நானும் ஒருவன்.

subburam said...

நோஸ்டால்ஜியா குறித்து "ஆதிநிலைகளுக்குத் திரும்ப விழையும்
மனதின் அசைவு என்றும் தன் ஆதி அடையாளங்களைத் தேடும்
மனித மனதின் செயல்பாடு என்றும்தான் பார்க்கிறேன்." என்று மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். கடந்த காலத்தின் மேன்மைகளையும்,மென்மைகளையும் எண்ணி எண்ணிப் பார்ப்பது இயல்புதான். கடந்துபோன காலத்தையும்,நிகழ் காலத்தையும், எதிர் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் இந்த மனித இயல்புதானே மனிதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றது.புதிய கண்டுபிடிப்புக்களை, நாகரீகங்களைத் தந்துகொண்டு இருக்கின்றது. வாழ்க நோஸ்டால்ஜியா.

Anonymous said...

/ நோஸ்டால்ஜியா குறித்து "ஆதிநிலைகளுக்குத் திரும்ப விழையும்
மனதின் அசைவு என்றும் தன் ஆதி அடையாளங்களைத் தேடும்
மனித மனதின் செயல்பாடு என்றும்தான் பார்க்கிறேன்." என்று மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். கடந்த காலத்தின் மேன்மைகளையும்,மென்மைகளையும் எண்ணி எண்ணிப் பார்ப்பது இயல்புதான். கடந்துபோன காலத்தையும்,நிகழ் காலத்தையும், எதிர் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் இந்த மனித இயல்புதானே மனிதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றது.புதிய கண்டுபிடிப்புக்களை, நாகரீகங்களைத் தந்துகொண்டு இருக்கின்றது. வாழ்க நோஸ்டால்ஜியா. //

Anonymous said...

nostalgia is against to communist feelings ... it is true.. i can proove it...

What is your openion mr. thamizselvan

Anonymous said...

Interesting blog from the right person.

அருண்மொழிவர்மன் said...

எல்லாருக்குள்லும் எப்போதும் அந்த நனவிடை தோய்தல் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. மீட்டப்பசும் நினைவுகள், மீட்டப்படும் வீணை போல சுகமாக தாலாட்டிக்கொண்டேயிருக்கின்றன.

எப்போதும் எங்காவது சுற்றி திரியும் மனம் நினைவுகளை மெல்ல துயிலெழுப்பும்போது அது அழகிய ஒரு பதிவாகின்றது...

நீங்கள் உயிர்மையில் எழுதிய அந்த தொடரின் தொடர்ச்சியான வாசகன் நான்

ச.தமிழ்ச்செல்வன் said...

சரவணன் உங்க கல்யாணத்துக்கு வர முடியலே.நீங்க வலைப்பக்கத்துக்கு வந்தது அந்தக் குற்ற உணர்வை கொஞ்சம் குறைத்தது.நன்றி.பேரிலி நண்பர் wants to prove something.I am interested in life and lively things.proving anything to anyone or anything is not my area of interest.if he wants he can proceed his provedlife.

anyhow thanks for visiting

Anonymous said...

க‌டந்த காலம் அற்பவாதிகளுக்கு சொந்தமானது - காரல் மார்க்ஸ்

venu's pathivukal said...

dear Tamizh

It is again a stirring spiral of thoughts provoked by a simple question...it has come well.

Dwelling into Nostalgic thoughts enable mankind to relive their own lives...
most of the people sigh off the events of past...
In certain people's live, this nostalgic thoughts help them to get relieved of the unimpressive and lacklustre passage of time in the Present.

The old memories sometime provoke inner questions and guilt consciousness, but also issue its own judgement in favour of self and the interesting chain continues....

If one could spare time, sit by the side of any old human being, irrespective of the latter being educated or not, one is sure to gather literary rich materials in tons to speak on a variety of subjects on earth......Nostagia is the common man's natural gift set in the model of H G Wells time machine!

Nostalgia-provoked creative works have been by and large successful.

But for the social pioneers, revolutiuonaries and the like, it helps them to rejuvenate, rejoice and start working with even more greater vigour.

S V Venugopalan

21 parankusapuram street
rangarajapuram
kodambakkam
chennai 600 024.

phone:044 2483 2664.

Anonymous said...

அய்யா தமிழ் செல்வன் அவர்கள் மெய்யாலுமே கடந்த காலம் அற்பவாதிகளுக்கு சொந்தமானதுன்னு மார்க்ஸ் சொன்னாரா... இல்லேனாங்காட்டி இந்த சீர்குலைவுவாதிங்க் ஏதாவது சொல்லி உங்க நாஸடால்ஜியா கம்யூனிச அழகியலை சீர்குலைக்கப் பாக்காங்களா

Anonymous said...

ஆதிபொதுவுடமை,லெமுரியா,கொற்றவை என்று நோஸ்டால்ஜியா பேச தமிழ்நாட்டில் நிறையப் பேர்
இருக்கிறார்கள்.லெமூரியாவில்
நிலவியது வர்க்க-சாதி பேதமற்ற திராவிட ஆதிப்பொதுவுடமை
என்று எழுதினால் தமிழ்தேசியர்கள்,
மார்க்ஸியர்கள்,இடதுசாரிகள்,திராவிட
இயக்கத்தினர் என அனைவரது
ஆதரவையும் பெறலாம்.ஒரே மேடையில் ஜெயமோகனும்,சாரு
நிவேதிதாவும்,பா.செயப்பிரகாசமும்,
மதிமாறனும் உங்களை வாழ்த்துவார்கள். அப்படி ஒரு தொடர் எழுதுங்கள். தொட்டுக் கொள்ள பெயர்களை,இசங்களை
தமிழவன், நாகார்ஜீனனிடம் கேட்டுப்
பெறலாம்.அதற்காக கோணங்கியின்
நடையில் எழுதாதீர்கள், தமிழ் வாசகர் தாங்க மாட்டார்:).

காதர் அலி said...

நோஸ்டால்ஜியா அப்படினா என்னதுன்னு எனக்கு தெரியாது.ஆனா தமிழ்நாட்டு மக்கள் ஆட்டோகிராப் என்னும் படத்தை ஏன்?ஓடி ஓடி பார்த்தார்கள்.