Thursday, July 5, 2012

மாநில திரைப்பயண நிறைவு விழா

ஜூன் 16 அன்று சென்னையில் துவக்கப்பட்ட மக்களை நோக்கிய திரைப்பயணம்-இந்திய சினிமாவின் நூற்றாண்டை நினைவு கூர்ந்த –இன்னும் தொடரும் என்கிற முழக்கத்தோடு முதல் கட்ட நிறைவு விழா

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற உள்ளது.வாய்ப்புள்ளோர் பங்கேற அன்புடன் அழைக்கிறோம்.

Invitation

Wednesday, June 20, 2012

Mobile theatres to take serious cinema to masses across state- by Tha.mu.e.ka.sa.-The Hindu news dated 16th jun 2012

clip_image001

CoimbatoreDelhiHyderabadKochiMaduraiMangaloreThiruvananthapuramTiruchirapalliVijayawadaVisakhapatnam

 

News » States » Tamil Nadu

CHENNAI, June 16, 2012

 

news story by B. Kolappan

 

clip_image002

Thr propaganda van of the Tamil Nadu Progressive Writers and Artists Association carrying projector and other materials for screening films on the streets. Photo: M. Karunakaran

Multiple screenings to mark a century of Indian cinema

Today, only some film-buffs might remember Avan Amaran, a film with strong Marxist moorings, highlighting the relentless struggle of the working class.

Released in 1958, after being subjected to massive editing by the Censor Board for its “strong political message,” the film failed to make a mark in the box office, despite a good story, excellent direction (by Veena S. Balachandar and Leftist producer S. Nagarajan) and an impressive cast.

And now, fifty four years after its release, the film will be screened again by the Tamil Nadu Progressive Writers and Artistes Association — however, not in theatres, but on the streets, in as many as 600 places all over the State.

“Not just Avan Amaran, beginning Saturday in Chennai, the Association will screen many short films, documentaries and world class films including Charlie Chaplin's comedies to mark the 100th anniversary of Indian cinema. As many as 1,500 of them will be screened in 15 days,” says S. Tamilselvan, president of the Association.

The film movement affiliated to the Association has already sent 15 copies of 25 short films and documentaries to be screened in 15 districts. Directors and producers of the short films and documentaries will be invited for discussions during the screening.

“Our objective is to create an audience for serious cinema. Every year, many good films are made out of individual efforts but they are not given any attention due to lack of patronage. We want to take the films to the people,” noted Mr. Tamilselvan.

The Association has in its possession over 500 movies in various languages that have made a mark across the world. Moreover, in every district, the Association has a bank of CDs and DVDs. Many of these will be screened during the next fortnight.

“There is no point in just blaming the film world for making B-grade commercial films. We have to inculcate a taste for alternative and serious film among the masses. This screening will go a long way in fulfilling such an objective,” Mr. Tamilselvan said.

Film director Karuna, who is also the co-ordinator of the film movement of the Association, said films had been classified to suit various sections.

“We will screen a different set of movies in schools and colleges, and a different variety on the streets,” he said.

The Association has good prints of some of the best Iranian and Chinese movies, besides films by Indian directors such as Satyajit Ray, Mrinal Sen and others.

“The Iranian movie, Children of Heaven, will be a feast for school children,” Mr. Karuna said. Akrinai, a short film on transgenders, Aarayatha Theerpu, which depicts the plight of members of the Irula community working in granite quarries, and Ezhumalai Jama, a film on ‘therukoothu' artistes will also be screened.

Keywords: century of Indian cinema, mobile theatres

Wednesday, June 13, 2012

தமுஎகச வின் இரு பெரும் விழாக்கள்

தமுஎகச சார்பாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஜூன் 16 முதல் ஜூலை 5 வரை 600 மையங்களில் தமிழின் சிரந்த குறும்பட ஆவணப்படங்கள் மற்றும் முழு நீளத் திரைப்படங்களை மக்கள் மத்தியில் திரையிட விரிவாகத் திட்டமிட்டுள்ளோம்.அத்திரைப்பயணத்தின் துவக்க விழா ஜூன் 16 மாலை சென்னை கோடம்பாக்கம் கங்காராம் ஹாலில் நடைபெறுகிரது.

ஆண்டுதோறும் தமுஎகச வழங்கும் இலக்கியப் பரிசளிப்பு விழா பண்பாட்டு மலர் வெளியீட்டு விழா திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் 17 அன்று முழுநாள் நிகழ்வாக சென்னையில் ரிசர்வங்கி எதிரே உள்ள கப்பல் சிப்பந்திகள் நல மையத்தில் நடைபெற உள்ளது.

இவ்விரு விழாக்களுக்கான அழைப்பிதழ்கள் கீழே.அவசியம் வருக என அன்புடன் அழைக்கிறோம்.

 

THAMUEKASA 2012 1

THAMUEKASA 2012 2

அன்புடன் அழைக்கிறோம்

invitation - front invitation-inside

Friday, June 8, 2012

வழியெங்கும் புத்தகங்கள்

bk reading நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் பள்ளிக்கு எதிரே ஒரு வாசக சாலை இருந்தது.அதில் சாணி மெழுகிய திண்ணையில் விரித்த ஓலைப்பாயில் தினசரிகள்,வார,மாத இதழ்கள் கிடக்கும்.பெரிய ஆட்கள் உட்கார்ந்து படித்துக்கொண்டிருப்பார்கள்.அப்போது பொடியன்களான நாங்கள் சிலர் அவ்வப்போது உள்ளே நுழைந்து எதையாவது வாசிப்போம்.பிறகு மணியடிக்கவும் ஓடிவிடுவோம்.அப்படி ஒருநாள் ஒரு வார இதழில் வாசித்த பெட்டிச்செய்தியில் , பகத்சிங்கைத் தூக்கு மேடைக்கு அழைத்த போது அவர் லெனின் எழுதிய ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார் என்றும் அதை முழுதாகப் படித்து முடிக்கும்வரை கால அவகாசம் கேட்டார் என்றும் படித்து முடித்ததும் மகிழ்ச்சியோடு தூக்கு மேடைக்குப் போனார் என்றும் எழுதியிருந்தது.பாருய்யா சாகப்போற நேரத்திலே கூடப் படிச்சிருக்கான்...அவன் மனுசனா.. நாம மனுசங்களா என்று பெரியவர்கள் ரெண்டுபேர் பேசிக்கொண்டதையும் கேட்டேன்.அந்த செய்தியும் பேச்சும் என் மனதில் ஆழப்பதிந்து விட்டது.

பின்னர் பெரியவனாகிக் கோவில்பட்டியில் கல்லூரியில் படித்த காலத்தில்(1970-71) பஸ் நிலையத்துக்கு எதிரே என்சிபிஹெச் புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன்.சிவப்புப் புத்தகங்களின் அணிவகுப்பில் லெனின் எழுதிய புத்தகங்களைத் தேடிப்பார்த்துக்கொண்டிருந்தேன்.மேசை அருகே சேர் போட்டு அமர்ந்திருந்த வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை மனிதர் ஒருவர் என்ன புத்தகம் தேடுறே தம்பி என்று கேட்டார்.’பகத்சிங் சாவதற்கு முன்னால் படித்த லெனின் புத்தகம்’ என்று சொன்னேன்.உடனே அவர் அரசும் புரட்சியும் ‘என்ற நூலை எடுத்துக்கொடுத்தார்.என்னை இன்றும் செதுக்கிக் கொண்டிருக்கும் புத்தகமாக அது இருக்கிறது.இதையும் சேர்த்துப்படி என்று அந்தச் சிவந்த மனிதர் ஏங்கல்ஸ் எழுதிய குடும்பம் ,தனிச்சொத்து,அரசு ஆகியற்றின் தோற்றம் என்கிற புத்தகத்தையும் அன்பளிப்பாக எனக்கு வழங்கினார்.அந்த இரண்டு புத்தகங்களும் நூற்றுக்கு மேற்பட்ட முறைகள் என்னால் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டு பைண்டிங் கிழிந்து தாள் தாளாக ஆகிவிட்டாலும் பொக்கிஷம் போலக் கையில் வைத்திருக்கிறேன்.அதே நூல்களின் வேறு இரு பிரதிகள் அப்புறம் வாங்கிவிட்டாலும் அந்தப் பெரியவர் கொடுத்ததுதான் என் புத்தகமாக என் வாசிப்புக்கான சொந்தப் பிரதியாக பிரியத்துடன் வைத்திருக்கிறேன்.அந்தப்பிரதி பேசுவது போல வேறு பிரதிகள் என்னோடு நெருங்கிப் பேச முடிவதில்லை.அந்தப் புத்தகங்களை எனக்கு எடுத்துக் கொடுத்த பெரியவர் பெயர் எஸ்.எஸ்.தியாகராஜன் என்பதும் அவர் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பதும் அவர் என் சித்தப்பாவின் நண்பர் என்பதும் பின்னர் அறிய நேர்ந்த கூடுதல் தகவல்கள்.

அரசு என்பது காலம் காலமாக எப்போதும் இருந்து கொண்டிருக்கும் ஒன்று- அது எல்லா மக்களுக்கும் பொதுவான ஒரு நிர்வாக ஏற்பாடு மட்டும்தான் என்கிற என் பொதுப்புத்தியை வெடிகொண்டு தகர்த்தன இவ்விரு புத்தகங்களும்.தீர்க்க முடியாத வர்க்கப்பகைமையின் விளவுதான் அரசு.தனிச்சொத்தைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையின் பெயர்தான் அரசு என்பதும் வரலாற்றில் தனிச்சொத்து தோன்றுவதற்கு முன்னால் அரசு என்கிற வன்முறைக்கருவி இருந்திருக்கவில்லை என்பதும் இவ்விரு புத்தகங்களால் தெளிவானது.அப்போது இலக்கிய வாசிப்பில் நான் நா.பார்த்தசாரதியிடமிருந்து விடைபெற்று ஜெயகாந்தனின் ஆளுகைக்குள் வந்துகொண்டிருந்த காலமாகவும் இருந்தது.பொன்விலங்கும் குறிஞ்சிமலரும் அந்த நாட்களில் என் மனதுக்கு நெருக்கமான நாவல்களாக இருந்தன.அரவிந்தனைப்போல சத்தியமூர்த்தியைப்போல தேசம் பற்றிய பொங்கும் பெருமிதத்தோடும் ஒருவித கற்பிதமான சத்திய ஆவேசத்தோடும் சிலபல நா.பா. கொட்டேசன்களோடும் ஒரு பூரணியை அல்லது பாரதி-கல்யாணியைத் தேடும் இளைஞனாக இருந்துகொண்டிருந்தேன்.கோகிலா என்ன செய்துவிட்டாள் என்கிற குறுநாவல்தான் ஜெயகாந்தனில் நான் முதலில் வாசித்தது.அப்படியே அவர் இழுத்துக்கொண்டு போய்விட்டார்.பாரீசுக்குப் போவின் கலை சார்ந்த தத்துவ விவாதங்களில் பிரமித்து அக்கினிப்பிரவேசத்தில் குளித்தெழுந்த கங்காவைப் பின்தொடர்ந்து சிலநேரங்களில் சில மனிதர்களைச் சந்தித்துச் சினிமாவுக்குப் போன சித்தாளுவுடன் ரிக்‌ஷாவில் ஏறி எம்.ஜி.ஆரின் பட வால் போஸ்டரை உடம்பில் சுற்றிக்கொண்டு அலைந்தேன்.விகடனில் அவர் எழுதிய வசீகரமான தொடர்களை விடாமல் வாசித்துக்கொண்டிருந்தேன்.ஆனால் வெகு சீக்கிரமாக நான் ஜெயகாந்தனிடமிருந்து விடைபெற்றுக் கொள்ள நேர்ந்தது. புதுக்கவிதை பொங்குமாங்கடல்போலப் பொங்கிப் பிரவகித்துக்கொண்டிருந்த நாட்களாக அவை இருந்தன.பழைய தடைகளை எல்லாம் உடைத்துக்கொண்டு மொழி புதிய எல்லைகளில் பிரவேசித்த அனுபவத்தில் நின்று ஜெயகாந்தனின் சத்தமான குரலை முன்போலக் கேட்க முடியவில்லை.வண்ணநிலவன்,வண்ணதாசனிடம் மிக இயல்பாக வந்து சேர்ந்தேன்.வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலையும் தோழர் பால்வண்ணம் கொடுத்த ஜூலியஸ் பூசிக்கின் தூக்குமேடைக்குறிப்புகளையும் ஒரே சமயத்தில் படித்துக்கொண்டிருந்தேன்.இந்தப்பிரியங்களும் பாசங்களும்தான் வாழ்க்கை என்று கடல்புரத்துப் பிலோமிக்குட்டி சொன்னதையும் சிறைக்குள்ளே உலகத்தொழிலாளர் மீதான பாசத்துடன் ஜூலியஸ் பூசிக் மேதினம் கொண்டாடியதையும் ஒரே நேர்கோட்டில் வைத்து வாசித்துக்கொண்டிருந்தேன்.உன் அடிச்சுவட்டில் நான் புத்தகத்தையும் அதே நேரம் வாசித்து அந்த ட்ராயைப்போல உலகத்தின் மக்கள் எல்லோருக்காகவும் சாகத் தயாராகிக்கொண்டிருந்தேன்.வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற சிறுகதைத்தொகுப்பின் அகல விரித்த வார்த்தைப் பரப்பில் தீட்டப்பட்ட நுட்பமான ஓவியங்களைக் கண்டு மனம் நடுங்கி ’எச்சங்கள்’ சிறுவர்களின் எச்சிற்சோடாக் குடிக்கும் காட்சியைக்கண்டு மனம் பதறி அச்சிறுவர்களுக்காகப் போராட உறுதிகொண்டேன்- கண்ணீரைத்துடைத்துக்கொண்டு.

இப்படியான மனநிலையோடு பாலியல் சார்ந்த குழப்பங்களும் கூடவே ஓடிவந்து கொண்டிருந்த ஒரு வயதில் –அப்போதுதான் ராணுவத்திலிருந்தும் திரும்பியிருந்தேன் –ராணுவமுகாம்களில் வாசிக்கக் கிடைத்த கமலாதாஸ் அக்காவும் சஸ்தி பிரதாவும் பாரதி முகர்ஜியும் இன்னும் என்னோடு இருந்துகொண்டிருந்தார்கள்.குறிப்பாக சஸ்தி பிரதாவின் HE AND SHE, MY GOD DIED YOUNG போன்ற நாவல்களும் கமலாதாசின் என் கதையும் கவிதைகளும் கதைகளும் இருட்டுக்குள் என்னை இழுத்துக்கொண்டே இருந்தன.இருட்டு எப்போதும் மயக்கம் தரவல்ல வசீகரத்தோடு கூடியதுதானே.

கல்லூரிநாட்களின் இறுதியில் அறிமுகமான ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவ உரையாடல்களையும் இன்னும் விடாமல் வாசித்துக்கொண்டிருந்தேன். அவருடைய COMMENTARIEES ON LIVING இரண்டு தொகுதிகளும் BEYOND VIOLENCE மற்றும் THE AWAKENING YEARS ,அவருடைய கிருஷ்ணமூர்த்தி நோட் புக் போன்ற நூல்கள் என்னோடு இருந்தன.அப்போதைய என்னுடைய பட்ஜெட்டில் அவற்றை வாங்கியது பெரிய செலவுதான்.என்றாலும் ஜே.கிருஷ்ணமூர்த்தி அப்படி ஈர்த்தார்.கேள்வி பதில் பாணியிலான அவருடைய உரைகள் அன்று என்னை ஆட்டி வைத்தன.

நீங்கள் ஒரு குழுவோடு உங்களை ஏன் அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள்? ஒரு இனத்தோடு-ஒரு மதத்தோடு- ஒரு இயக்கத்தோடு?ஒரு கூட்டத்தோடு உங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் கணத்தில் உங்கள் படைப்பாற்றல் (CREATIVITY) மறும் கேள்வி கேட்கும் சுரணை முற்றுப்பெற்று விடுகிறது.என்கிற ஜே.கே யின் முன்வைப்பு நீண்ட காலம் என்னை அலைக்கழித்தது.

ஆனால் ஆர்.கே.கண்ணன் மொழிபெயர்ப்பில் வாசித்த ஜார்ஜ் பொலிட்சரின் மார்க்சீய மெய்ஞ்ஞானம் நூல் என்னைப் பிடித்திழுத்துப் பிரகாசிக்கும் சூரிய வெளிச்சத்தில் தள்ளிவிட்டது.இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைப் பச்சைக்குழந்தைகளுக்குச் சொல்வதுபோலச் சொன்ன புத்தகம் அது.அதைத்தொடர்ந்து ராகுல்ஜியின் வால்கா முதல் கங்கை வரை நூலையும் பொதுவுடமைதான் என்ன என்கிற புத்தகத்தையும் வாசித்ததில் மனம் மேலும் துலக்கமானது.வரலாற்று ரீதியாக ஒரு கதை வடிவில் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தையும் மனித குல வரலாற்றின் முக்கியமான பக்கங்களையும் பேசிய வால்கா முதல் கங்கை வரை வாசித்து அதில் வரும் ஒரு கதாபாத்திரமான ரேக்காபகத் என்கிற பெயரைப் புனைபெயராகக் கொண்டு சில கதைகளைச் செம்மலரில் எழுதினேன்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியிடமிருந்தும் சஸ்தி பிரதாவிடமிருந்தும் கமலாதாசிடமிருந்தும் முறையாக விடைபெற்று வர மாரீசு கான்போர்த்தின் இயக்கவியல் பொருள் முதல்வாதம் நூலும் சோவியத் வெளியீடாக அன்று வந்த Marxist Ideology என்கிற அட்டவணைகள் நிறைந்த எளிய புத்தகமும்தாம் கை கொடுத்தன.மனம் என்பதின் செயல்பாடுகள் பற்றியும் உள்மனம்-வெளி மனம்-ஆழ் மனம் மற்றும் அறிவு-உணர்வு என்பவற்றின் அடிப்படை அறிவியல் உண்மைகளோடும் இயக்கவியலைப் புரிய வைத்த இப்புத்தகங்கள் என் வாழ்க்கையையும் வாழ்க்கைக் கண்ணோட்டத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டன.

என் பசிக்குத் தீனியாக அப்போது சென்னை புக்ஸ் பாலாஜி பல நல்ல நூல்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார்.போல்ஷ்விக் கட்சியின் வரலாறு அப்போது வெளியாகியிருந்தது.அந்தக் கறுப்பு ஞாயிறு பற்றிய பக்கங்கள் என் மனதைப் பாதித்தன.பின்னர் பேட்டில்ஷிப் பொடெம்கின் திரைப்படத்தைப் பார்த்தபோது ஒடெஸ்ஸா படிக்கட்டுகள் காட்சி மீண்டும் என்னைப் போல்ஷ்விக் கட்சியின் வரலாற்றைப் படிக்க வைத்தது.சோவியத்யூனியனைப்போலவே அன்று கிழக்கு ஜெர்மனியிலிருந்தும் ஏராளமான மார்க்சிய அடிப்படை நூல்கள் வந்து கொண்டிருந்தன.அப்புத்தகங்கள் சோவியத் புத்தகங்களைப்போல சிவப்பு வண்ணத்தில் அல்லாமல் நீல வண்ன அட்டைகளுடன் இருக்கும்.ப்ளூ மார்க்சிஸ்ட்ஸ் என்று அவற்றைப்பற்றிய ஒரு கேலியான சிரிப்பு கோவில்பட்டித் தோழர்களிடம் இருக்கும்.

பிளெக்கனோவின் இரு புத்தகங்கள் அந்தத் தருணத்தில் தெளிவான பார்வையைத் தந்தன.வரலாற்றில் தனி நபர் பாத்திரம் என்கிற நூலும் கலையும் வாழ்க்கையும் என்ற நூலும்.அப்போது கு.சின்னப்ப்பாரதியின் தாகம் நாவலும் டி.செல்வராஜின் மலரும் சருகும் நாவலும் வந்துவிட்டிருந்தன.இதுதான் எனது பாதை எனத் தீர்மானிக்க இவ்விரு நாவல்களும் பிளெக்கனோவின் நூல்களும் வழிகாட்டின என்பேன்.

இவ்வளவு புத்தகங்களுக்குப் பிறகுதான் நான் 1848இல் மார்க்சும் ஏங்கல்சும் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையை வாசித்தேன்.ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது என்று துவங்கி எத்தனை இலக்கியப்பூர்வமான மொழிநடையில் உலகத்தொழிலாளர்களை ஒன்றுசேர அறைகூவி அழைத்த புத்தகம் அது.இன்றுவரை அப்புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருக்கிறேன்.ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒரு புதிய தெளிவு கிடைத்துக்கொண்டே இருக்கிறது.எதைப்பற்றி எழுதப்போனாலும் பேசப்போனாலும் கம்யூனிஸ்ட் அறிக்கையை ஒருமுறை பார்த்துக்கொள்வது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.அப்போது Radical review பத்திரிகையில் இ.எம்.எஸ். அவர்களின் நேர்காணல் ஒன்று வெளியாகி இருந்தது.CPI-CPM-CPI-ML என்பது அந்நேர்கணலின் தலைப்பு அதைப்படிச்சிட்டு அப்புறம் இதைப்படி என்று தோழர் பால்வண்ணம் என்னிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சித்திட்டம் என்கிற நூலையும் மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை அறிக்கை என்கிற சிறு நூலையும் கொடுத்தார். கட்சித்திட்டம் என்றால் ஏதோ அது அவர்கள் கட்சியைப்பற்றியும் அவர்களின் வழியைப் புகழ்ந்தும் எழுதியிருக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு அது ஓர் ஆழமான வரலாற்று ஆவணம்போல பல உண்மைகளை அடுக்கி மக்கள் ஜனநாயகப்புரட்சிக்கு மக்களை அழைக்கும் புத்தகமாக இருந்து என்னை ஆச்சர்யப்படுத்தியது.

சோவியத் நூல்களைச் சரளமாக வாசிக்கும் பழக்கம் இதற்குள் வந்துவிட்டிருந்தது.கார்க்கியைவிட அன்று என்னை மிகவும் ஈர்ப்பவராக தஸ்தாவ்ஸ்கியே இருந்துகொண்டிருந்தார்.வெண்ணிற இரவுகளின் பனி பொழியும் பாதைகளில் காதல்வயப்பட்ட இளைஞனாக நான் நடந்துகொண்டிருந்தேன்.சிங்கிஸ் ஐத்மாத்தோவின் ஜமீலாவைக் காதலிக்கும் பலகோடி உலக இளைஞர்களில் நானும் ஒருவனாக நிலவொளியில் நீந்திக்கொண்டிருந்தேன்.கோகோலின் மேல்கோட்டை அணிந்து இருமிக்கொண்டு அந்தோன் செகாவின் கதைகளுக்குள் ஆறாவது வார்டில் ஒரு பாத்திரமாக மனப்பிறழ்வுடன் அலைந்து கொண்டிருந்தேன்.இவான் துர்கனேவின் முதற்காதல் என்கிற குறுநாவல் என்னை அந்நாவலில் வரும் சிறுபையனாகவே மாற்றியது.டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலில் வரும் ஏமாற்றுக்காரப் பெண்ணும் அவள்மீது காதல் கொண்டு வாழ்நாள் முழுக்க அவள் பின்னாலேயே ஏமாந்து அலையும் அந்த இளைஞனும் அந்தக்காதலின் புனிதமும் மனதைத் தாக்கினாலும் இது ஒரு கிறித்துவப்பார்வையுடன் எழுதப்பட்ட நாவல் என்று டால்ஸ்டாயையே விமர்சிக்கும் அளவுக்கு அப்போது வளர்ந்துவிட்டிருந்தேன்.

உண்மையில் அன்றைய பல இளைஞர்களைப்போலவே நானும் மொழிபெயர்ப்பு நூல்கள் என்னும் பெரும் கடலில் விழுந்து கிடந்தேன்.நட் ஹாம்சனின் நிலவளம் நாவல் மனித வாழ்க்கையை ஆதியிலிருந்து புரிந்து கொள்ள உதவிய வரலாற்று ஆவணம் போல வந்து சேர்ந்த்து.அந்நாவலில் வரும் மேல் உதடு பிளந்த பெண்ணின் வயிற்றில் பிறந்த அவளைப்போலவே மேல் உதடு பிளந்த குழந்தையை அவள் யாருக்கும் தெரியாமல் மண்ணில் புதைக்கும் காட்சியில் இன்னும் மனம் உறைந்துபோய்க் கிடக்கிறேன்.நிலவளம் போலத் தமிழில் வந்த ஒரு புத்தகமாக அப்போது சா.கந்தசாமியின் சாயாவனம் நாவலை இயற்கையை வெல்லும் மனிதக்கதையாகப் புரிந்து கொண்டேன்.இன்று அதே கதையை இயற்கையை அழித்த மனிதன் சீரழியும் கதையாகப் புரிந்துகொள்கிறேன். வி.ஸ.காண்டேகரின் எரிநட்சத்திரம் நாவலில் வரும் புரட்சிகர இளைஞனாக என் ஆசிரியர்களுடன் வாதம் செய்திருக்கிறேன்..வங்கத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகள் ஏராளம்.விபூதிபூஷனின் இலட்சிய இந்து ஓட்டல், பங்கிம் சந்திரரரின் விவசாய எழுச்சியை மையமாக்க் கொண்ட வந்தேமாதரம் பாடலைத் தந்த ஆனந்த மடம் நாவல் ,வெளிநாட்டுக்குப் பிழைக்கப்போகும் உயர்சாதி இளைஞன் பற்றிய பாரதி நாவல் எனப்பல நாவல்கள். தாகூரின் கீதாஞ்சலி வாசித்துத் தலை நிமிர்த்தி நடந்திருக்கிறேன்.வங்க நாவல்களின் தத்துவப் பார்வையை விட என்னோடு எளிமையாகவும் நெருக்கத்துடனும் பேசிய கதைகளாக மலையாள எழுத்தாளர்களின் படைப்புகள் இருந்தன.வைக்கம் முகம்மது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும் குறுநாவல்களும் பஷீரின் சிறுகதைகளும் கேசவ்தேவின் நடிகையும் ஓர் அழகியின் சுயசரிதையும் என் திருமணத்துக்கு அன்பளிப்பாக வந்த என்.பி.டி.யின் சமீபத்திய மலையாளச்சிறுகதைகள் தொகுப்பும் என ஒரு வளமான பங்கு கேரளத்திலிருந்து வந்து கொண்டிருந்தது.அந்த அளவுக்குத் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு ஏதும் செல்லவில்லை என்பது இன்றுவரை தீராத ஒரு சோகம்தான்.

இந்த சந்தர்ப்பத்தில் நான் தொழிற்சங்க இயக்கத்தில் கூட்டங்களில் பேசுகிற ஆளாக மாறிப்போனதால் தேவையை ஒட்டித் தேடிப்படிக்கும் பழக்கமும் வந்து விட்டது.அப்படி வாசித்த புத்தகங்களில் என்னை மிகவும் பாதித்த புத்தகம் என தோழர் இ.எம்.எஸ். அவர்கள் எழுதிய INDIAN PLANNING IN CRISIS என்கிற நூலையும் அதன் தொடர்ச்சியாக வந்த CRISIS INTO CHAOS என்ற நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பொருளாதார அமைப்பு குறித்து எழுந்த விவாதங்கள் 1948இல் திட்டக்கமிஷன் உருவாக்கப்பட்ட பின்னணி அதன் பின் இயங்கிய வர்க்க அரசியல் பற்றியெல்லாம் தெளிவாக விளக்கிய நூல்கள் இவை.இ.எம்.எஸ் மீது ஏற்பட்ட ஈர்ப்பு அவர் எழுதிய எல்லா நூல்களையும் தேடி வாசிக்கத் தூண்டியது.அவரது இந்திய வரலாறு-ஒரு சுருக்கமான வரலாறும், நான் ஏன் கம்யூனிஸ்ட் ஆனேன் என்கிற நூலும் அப்போது தமிழில் கிடைத்தன.பின்னர் அவரது A HISTORY OF INDIAS FREEDOM STRUGGLE என்கிற புத்தகம் வந்ததும் ஓடிப்போய் வாங்கிப்படித்தேன்.இப்போது அது தமிழிலேயே கிடைக்கிறது.நம் நாட்டின் கடந்த கால வரலாற்றை ஒரு மார்க்சிய நோக்கில் பயில இதைவிடச் சிறந்த புத்தகம் வேறொன்றும் இல்லை.பின்னர் வேதங்களின் நாடு வந்தது.இந்தியாவில் சாதிகளின் தோற்ரம் பற்றிய ஒரு புதிய விளக்கத்தை இந்நூல் தந்த்து.

அங்கிருந்து என் வாசிப்பு வரலாற்று நூல்களின் மீது ஆவலுடன் தாவியது.குறிப்பாக இந்திய வரலாறு,தமிழக வரலாறு குறித்து என்ன துண்டுத்தாள் கிடைத்தாலும் வாங்கி வாசித்துத் தீவிரமாக்க் குறிப்புகளும் எடுத்துக்கொண்டிருந்தேன்.இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சிலின் நூல்கள் பலவற்றை அப்போது என்.சி.பி.எச் வெளியிட்டுக்கொண்டிருந்தது.என்சிபிஎச் கிளை பொறுப்பாளர் ஒருவரிடம் ரகசியமாக்க் கணக்கு வைத்துக்கொண்டு மாத்த் தவனையில் அந்த எல்லா வரலாறு நூல்களையும் வாங்கிக் குவித்து வெறிகொண்டு படித்துக்கொண்டிருந்தேன்.டி.டி.கோசாம்பியின் பண்டைய இந்திய வரலாறு,ராகுல்ஜியின் ரிக் வேத கால ஆரியர்கள்,ரோமிலா தாப்பரின் வரலாறும் வக்கிரங்களும்,சுவீரா ஜைஸ்வாலின் வைஷ்ணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,ஆர்.பி.ஷர்மாவின் பண்டைய இந்தியாவில் அரசு நிர்வாகத்தின் தோற்றம்,விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்கள்,பி.சி.ஜோசியின் 1857 புரட்சி ,சுசோபன் சர்க்காரின் வங்காள மறுமலர்ச்சி என எண்ணற்ற புத்தகங்கள்.படித்த நூல்களை நோட்டுப்போட்டுக் குறிப்புகளாக எழுதி வைத்துக்கொண்டிருந்தேன் –எதற்கென்று தெரியாமலே.இவ்வாசிப்பில் 1857 புரட்சியை ஒரு தனித்த சிறப்பு வாய்ந்த நூலாக உணர்ந்தேன்.ஒரு வரலாற்று நூல் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமான நூலாக இது அமைந்தது.ஏற்கனவே 1857 சிப்பாய்ப் புரட்சி பற்றி வேறு சில நூல்களையும் நான் வாசித்திருந்தேன்.மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் முயற்சியில் 1957இல் அரசு வெளியிட்ட 1857 என்கிற விரிவான ஆங்கில நூலையும் பட்டாபி சீத்தாராமையா எழுதிய 1857 கலகம் என்கிற நூலையும் சவர்க்காரின் இந்தியப்புரட்சி நூலையும் வாசித்திருந்தாலும் அவை எதுவும் பி.சி.ஜோஷியின் நூலுக்கு ஈடாக நிற்கவில்லை.1857 புரட்சி பற்றிய வரலாறுக் காரணங்கள்,அன்றைய பத்திரிகைகளில் அது பற்றி வந்த செய்திகள்,நாட்டுப்புறப்பாடல்கள் ,பிற நாட்டு அறிஞர்கள் அப்புரட்சி பற்றி எழுதிய குறிப்புகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய முழுமையான நூலாக அது வந்திருந்தது.என்னைப்போன்ற அன்றைய இளம் வாசகர்களுக்குச் சரியான தீனியாக அது அமைந்தது.கோ.கேசவனின் எழுத்துக்களை நான் இந்த சமயத்தில்தான் வாசிக்க வாய்ப்புக் கிடைத்தது.அவரது சமூகமும் கதைப்பாடல்களும் என்கிற சின்னஞ் சிறிய புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை இருக்கிறது.பாளையக்காரர்களின் காலத்தைப்புரிந்துகொள்ள தமிழில் இதைவிடச் சிறந்த நூல் ஏதும் இல்லை என்பேன்.அவரது மண்ணும் மனித உறவுகளும், இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் மற்றும் இயக்கமும் இலக்கியப்போக்குகளும் போன்ற நூல்களையெல்லாம் ஒருசேரத் தேடித் தேடி வாசித்தேன்.இயக்கங்களில் பணியாற்றும் தோழர்களுக்குக் கல்வி புகட்டும் மொழியில் அவர் எழுதினார்.அவரது மறைவு இட்து சிந்தனை உலகுக்குப் பேரிழப்பாகும்.

இப்போது கதைகள் எழுதவும் துவங்கியிருந்தேன்.ஒரு திட்டமிட்ட பாடத்திட்ட அடிப்படையில் இலக்கியங்களைக் கற்பது என்று முடிவு செய்து கால வாரியாக நூல்களைப் பட்டியலிட்டு நூலகங்களிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் நிறைய சொந்தமாகவும் வாங்கிப் படிக்கலானேன்.(இந்த வைராக்கியம் ஓராண்டுக்கு மேல் நீடித்தது எனக்கு ஆச்சரியமே-அவ்வளவு நீண்ட காலத்துக்கு என் புத்தி ஒரு நிலையில் நிற்பது –வாசிப்பைப் பொறுத்து-அபூர்வம்தான்)

1920களின் முக்கிய உரைநடை இலக்கிய எழுத்துக்கள் என பாரதியின் சிறுகதைகளையும் அவரது சந்திரிகையின் கதை என்னும் நாவலையும் அ.மாதவய்யாவின் குட்டிக்கதைகளையும் வ.வே.சு.அய்யரின் மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பையும் படித்தேன்.சமூகத்துக்கு ஏதேனும் சொல்லத்துடித்த கதைகளாக அவற்றை உணர்ந்தேன்.மாதவய்யா கதைகளின் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் நான் எதிர்பாராதவை.சிறுகதை என்னும் வடிவம் பூரணமாகக் கைவராத படைப்புகளாக இம்மூவரின் கதைகள் இருந்தன.ஆனாலும் சிறுகதையின் துவக்கம் சமூக அக்கறை கொண்ட்தாகவே இருந்தது-உள்மனப் பயணம் பற்றியதாக இல்லை என்பது குறிக்கத்தக்கது.

1925இல் இம்மூவரும் மறைந்து விட்ட பின் புதுமைப்பித்தனும் கு.ப.ராஜகோபாலனும் மௌனியும் முன்னுக்கு வந்தனர்.இப்போதுபோல ஒட்டுமொத்தத் தொகுப்புகள் அக்காலத்தில் இல்லை.மௌனியின் அழியாச்சுடர் ஒரு தொகுப்புதான் வந்திருந்தது.என்னைப்போலவே(!) மிகக் குறைந்த எண்ணிக்கையில் கதை எழுதியவர் அவர் என்பதாலும் சிறுகதைகளின் திருமூலர் என்று புதுமைப்பித்தன் அவரைப்பற்றிச் சொன்னதாலும் அவரை ஆவலுடன் வாசித்து ஏமாந்தேன்.அன்றுமுதல் இன்றுவரை மௌனி என்னை வசீகரிக்கவில்லை.புதுமைப்பித்தனின் காஞ்சனை,புதுமைப்பித்தன் கதைகள் ,துன்பக்கேணி போன்ற பத்துத்தொகுப்புகள் என் கையில் இருந்தன.ஒவ்வொரு கதையும் எனக்குப் பாடம் சொன்ன கதைதான்.இலங்கைக்குப் போய் பரங்கிப்புண் பெற்ற மருதாயியின் சோகமும் கடவுளோடு ஒருநாள் கழித்த கந்தசாமிப் பிள்ளையின் எள்ளலும் மகாமசானம் என்று சென்னைப்பட்டணத்தை மயானம் என்று சொல்லி முதலாளித்துவத்தின் முகத்தில் அடித்த கோபமும் அவருக்கன்றி யாருக்கு வரும்? கு.ப.ராவின் சிறிது வெளிச்சம் தொகுப்பின் கதைகள் இன்றைக்கும் மனதை ஈர்ப்பவையாக இருக்கின்றன.சிறிது வெளிச்சம்,ஆற்றாமை,மெகருன்னிசா போன்றவை இறவாப்புகழ் பெற்ற கதைகள்தாம்.

40களின் படைப்பாளிகளில் நான் தடுமாறி விழுந்தது கு.அழகிரிசாமியின் மடியில்தான்.இன்றைக்குவரை எனக்கு ஆதர்சம் அவர்தான்.நான் கதை எழுதிய ஒவ்வொரு நாளும் அவரது மடியில் உட்கார்ந்து கதை எழுதுவதான உணர்வே எனக்கு இருக்கும்.எளிய வார்த்தைகளில் எங்கள் கரிசல் மனிதர்களின் கள்ளமில்லாத உள்ளத்துடன் கதை சொன்ன அவர்தான் எமக்கு அப்பா.அவரது சிரிக்கவில்லை,தவப்பயன்,அன்பளிப்பு,கற்பக விருட்சம் போன்ற 11 தொகுப்புகள் அன்று என் கைவசம் இருந்தன. அது பற்றிய அளவற்ற கர்வமும் எனக்கு இருத்து.அவற்றை மொத்தமாக வாங்கிப்போன ஜோதிவிநாயகம் திருப்பித்தராமலே போய்விட்டது ஒரு சோகம்தான்.இன்று மொத்தக்கதைகளின் தொகுப்பு வந்துவிட்டாலும் அந்த என் புத்தகங்கள் போன சோகத்தை அது ஈடு செய்யவில்லை.

50-60 களின் இலக்கிய ஆளுமைகளாக அசோகமித்திரனும் கி.ராஜநாராயணனும் சி.சு.செல்லப்பாவும் ஜி.நாகராஜனும் சுந்தரராமசாமியும் லா.ச.ராமாமிர்தமும் என் வாழ்வில் வந்து சேர்ந்தார்கள்.சென்னை வாழ்வின் கீழ் மத்தியதர வாழ்வைக்களனாக்க் கொண்ட அசோகமித்திரனின் சிறுகதைகளைப்(காலமும் ஐந்து குழந்தைகளும் ) பார்க்கிலும் என்னைப் பாதித்தவை அவரது அற்புதமான நாவல்களான கரைந்த நிழல்கள்,தண்ணீர்,பதினெட்டாவது அட்சக்கோடு போன்றவைதாம்.தண்ணீரில் வரும் ஜமுனாவின் துக்கம் நம்முடையதாகிவிடும்.அதை ஒரு குறியீட்டு நாவல் என்று அப்போது பேசிக்கொள்வார்கள்.பத்னெட்டாவது அட்சக்கோடு ஹைதராபாத்தைக் கதைக் களனாகக் கொண்டு இந்து முஸ்லீம் கலவரத்தில் சிதையும் மனித மாண்புகள் பற்றி நுட்பமாகப் பேசிய நாவல்.கி.ரா எங்க காட்டுப் பெரியவர். வேட்டி,கிடை,கன்னிமை போன்ற சிறுகதைத் தொகுப்புகளாலும் கோபல்லபுரம் மற்றும் கோபல்லபுரத்து மக்கள் ஆகிய நாவல்களாலும் கரிசல் வாழ்வின் பல பரிமாணங்கலை எளிய பேச்சுவழக்கில் கதைகளாக்ச் சொன்னவர் கி.ரா.பிரசாதம் சிறுகதைத் தொகுப்புத்தான் சுந்தரராமசாமியின் எழுத்துக்களில் நான் முதலில் வாசித்தது.புளியமரத்தின் கதையை ரொம்ப்ப் பின்னாளில்தான் வாசித்தேன்.அவருடைய எழுத்தின் மீது ஏற்பட்ட ஒரு வசீகரமும் மோகமும் இன்றுவரை தீரவில்லை.ஜே.ஜே.சில குறிப்புகள்தான் அவருடைய மாஸ்டர்பீஸ்.கருத்துரீதியாக அந்நாவலில் விமர்சனம் எனக்குண்டெனிலும் மொழி மற்றும் உத்தி ரீதியில் அது வந்த காலத்தில் மிக முன்னதாகப் பாய்ந்த படைப்பு அது.லா.ச.ராவை அன்று வாசித்தபோது பிரமிப்பாக இருந்தது.மொழியின் எல்லைகளை இவ்வளவு தூரம் விரிக்க முடியுமா என்று வியந்ததுண்டு.பின்னர் 90களில் அபிதாவை எடுத்து வாசித்தபோது என்னால் வாசிக்கவே முடியாத அயர்ச்சி ஏற்பட்டது.ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு குறுநாவலும் நாளை மற்றொரு நாளே நாவலும் தமிழ் நவீன இலக்கியம் அதிகம் பேசாத பக்கங்களைப் பேசின.எல்லோரும் வாழ்க்கையை முன்வாசல் வழியாகப் பார்க்கும்போது ஜி.நாகராஜன் புழக்கடை வழியே அதைப் பார்க்கிறார் என்ற சு.ரா.வின் கருத்து முற்றிலும் சரிதான்.இன்றும் என்னை ஈர்க்கும் ஒரு எழுத்து ஜி.நாகராஜனுடையது.

70-80 களில் நானும் மைதானத்தில் இறங்கியிருந்தேன்.எனக்கு முன்னால் பிரபஞ்சனும்,வண்ணநிலவனும்,வண்ணதாசனும்,பூமணியும்,பா.செயப்பிரகாசமும் ,கந்தர்வனும் மேலாண்மை பொன்னுச்சாமியும் போய்க்கொண்டிருந்தார்கள்.

தொழிற்சங்க மற்றும் இலக்கிய உலகத்தோடு நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்து சில வேலைகளைச் செய்தபோது என் அறிவுலகின் வாசல்கள் இன்னும் அகலத் திறந்தன.கே.கிருஷ்ணகுமாரின் இயற்கை,சமுதாயம்,மனிதன் என்ற புத்தகம் எளிமையாக மனித குலவரலாற்றினூடாக அறிவியல் செய்த பயணம் பற்றிப் பேசியது. அறிவியல் இயக்கம் எனக்குச் செய்த மாபெரும் உதவி சில தலை சிறந்த மனிதர்களை எனக்கு அறிமுகம் செய்ததுதான். ச.மாடசாமி,டாக்டர் சுந்தரராமன்,டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன்,டாக்டர் ராமானுஜம்,டாக்டர் (?) செந்தில்பாபு போன்ற அறிஞர்கள் எனக்கு முற்றிலும் புதியதோர் உலகத்துப் புத்தகங்களை வாரி வழங்கிய கொடை வள்ளல்களாக அமைந்தனர்.

எளிய மக்களின் மனதோடு பேசும் கலையைக் கற்றுத்தந்த பேராசிரியர் ச.மாடசாமியின் எனக்குரிய இடம் எங்கே? அவரவர் கிணறு,சொலவடைகளும் சொன்னவர்களும் ஆகிய மூன்று நூல்களும் வாசிப்பவரின் மனங்களை விசாலமாக்கும் தன்மையுடையவை..சொலவடைகள் புத்தகம் கடுமையான உழைப்பையும் ஈடுபாட்டையும் கோரிய புத்தகம்.டாக்டர் சுந்தரராமன் தான் எமக்கு அந்தோனியோ கிராம்ஷியையும் மிஷேல் பூக்கோவையும் அறிமுகம் செய்து வைத்தவர்.அவருடைய அறிமுகத்தால் உந்தப்பெற்றுத் தேடிப் பிடித்து வாசிக்க முயன்ற புத்தகங்களென கிராம்ஷியின் PRISON NOTE BOOK மற்றும் CULTURAL WRITINGS ஆகிய இரு நூல்களையும் குறிப்பிட வேண்டும்.தோழர் தொ.மு.சி.ரகுநாதனின் கடைசி நாட்களில் இப்புத்தகங்களை அவர் கேட்கக் கொண்டுபோய்க் கொடுத்த சந்தோஷமும் எனக்குக் கிட்டியது.சவுத் விஷன் பாலாஜி வெளியிட்ட (எஸ்.வி.ஆர்-கீதா) அந்தோனியோ கிராம்ஷி-வாழ்வும் சிந்தனையும் அக்காலத்தில் முதல் அறிமுக முயற்சி.இப்போது விடியலில் அதைவிட நல்ல புத்தகங்கள் வந்துவிட்டன.

செந்தில்பாபு வரலாற்றாளர் எரிக் ஹோப்ஸ்வாம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டார்.இப்போது அவரை விடவே முடியவில்லை.நான் முதலில் வாசித்த்து அவரது AGE OF EXTREMES தான் .நான் வாசித்த வரலாற்று நூல்களில் CLASSIC என்று இந்நூலைத்தான் சொல்வேன்.20ஆம் நூற்றாண்டைப்பற்றிய ஒரு முழுமையான பார்வையை இந்நூல்தான் வழங்கியது.அவருடைய Nations and Nationalism,Age of Empires,Age of Capitalism, சமீபத்திய Globalisation,Democracy and Terrorism போன்ற நூல்கள் வரலாற்றின் பக்கங்களைப் புரிந்துகொள்ள உதவிய நூல்கள்.ஒவ்வொரு நூற்றாண்டும் நமக்குச் சில வார்த்தகளை விட்டுச்செல்கின்றன என்கிற அவருடைய வரியும் மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு-நினைவு படுத்திக்கொண்டே இருப்பது வரலாற்றாளனின் கடமை என்கிற வரியும் மறக்க முடியாதவை.

த.வி.வெங்கடேஸ்வரன் திருவனந்தபுரத்தில் இருந்தபோதும் இப்போது டெல்லியில் இருக்கும்போதும் அவ்வப்போது அறிய புத்தகங்களை எனக்கு அறிமுகம் செய்பவராக இருக்கிறார்.முக்கியமாக புவியியல் நூல்களின் அரசியலை எனக்குப்புரிய வைத்து Jared Diamond என்கிற அற்புதமான புவியியல் எழுத்தாளரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.Jared Diamond இன் Why Geography என்கிற நூல் புவியியல் கற்பதன் அவசியத்தையும் உன்னதத்தையும் எனக்கு உணர்த்தின.அவருடைய இன்னொரு புத்தகமான GUNS,GERMS AND STEEL இதுவரையிலும் பார்க்காத ஒரு புதிய புவியியல் கோணத்தில் உலக வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவியது.வரைபடங்களின் அரசியலையும் வரைபடங்களின் வழியே வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் SUSAN GOLE அவர்களின் நூல்கள் சில உதவின.குறிப்பாக INDIA WITHIN GANGES- இண்டியா இந்த்ரகேஞ்சம் என்கிற அவரது நூல் ஐரோப்பியர்களின் பார்வையில் ஆதி காலந்தொட்டு இந்தியா பற்றிய சித்திரங்கள் எவ்விதம் மாறி மாறி வடிவம் கொண்டன என்பதை விளக்குகிறது.- இப்பாதையில் புத்தகங்களோடு என் வாழ்வில் குறுக்கிட்ட இன்னொரு ஆளுமை சேலம் சகஸ்ரநாமம்.நானும் அவரும் சேர்ந்து மனிதகுல வரலாறு,சமூக வரலாறு, கட்சித்திட்டம் போன்றவற்றை நழுவுபடக்காட்சிகளாகத் தயாரிக்கப் பெரும் திட்டங்கள் தீட்டினோம்.(நடக்கிறதோ இல்லையோ கனவுகளை விரித்துக்கொண்டே இருப்பதுதான் வாழ்வின் ஆதாரம் இல்லையா).மனித குல வரலாறு தொடர்பான சமீபத்திய பல நூல்களை அவர் பல ஊர்களிலிருந்து தருவித்தார்.ஒரு மேப் பாணியிலான கண்காட்சியைத் தயாரித்து ஆளுக்கு ஒரு செட் வைத்துக்கோண்டோம். சில ஊர்களுக்குக் கொண்டு சென்றோம்.அதற்குள் பவர் பாயிண்ட் என்கிற இன்னும் சிறப்பான வடிவம் வந்துவிட்டது.அவர் மூலம் வாசிக்க்க் கிடைத்த புத்தகங்களில் முக்கியமானவையாக JaredJared Diamond எழுதிய DioThe Rise anf Fall of Third Chimpanzee யையும் by Robert Wright எழுதிய The Moral Animal என்கிற நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.மரபணு ஆராய்ச்சிகளின் விளைவாக மனித குலம் பிறந்தது ஆப்பிரிக்கா கண்ட்த்தில்தான் என்பது நிரூபணமான பிறகு இந்நூல்களை வாசித்தது நம் வேர்களை இன்னும் நெருக்கமாக அடையாளம் காண உதவியது. நமது ஆதி விலங்கினத் தொடர்பு எவ்விதம் இன்றுவரை நம் பண்பாட்டு வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்பதையும் நாம் ஏன் இவ்விதமாக வாழ்கிறோம் என்பதற்கான டார்வினிய அடிப்படையிலான விளக்கத்தை இந்நூல்கள் அளிக்கின்றன.

90களில் சோவியத் யூனியன் சிதறுண்டதும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள் வீழ்ச்சியடைந்ததும் பண்பாட்டுத்தளத்தில் நாம் பணியாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. எனது பார்வையும் இயக்கத்தின் பார்வையோடு சேர்ந்து மாற்றம் பெற்றது.அம்பேத்கரின் நூற்றாண்டு அவரது சிந்தனைகளின் மீது கவனத்தைத்திருப்பியது எனலாம்.அவரது நூல்கள் தமிழில் வெளியாகத் துவங்கியதும் ஈர்ப்புக்கு ஒரு வடிவம் கொடுத்தது.அவருடைய இந்தியாவில் சாதிகள் என்கிற கொலம்பியா பல்கலைக்கழக உரையும் புத்தரும் அவரது தம்மமும் என்கிற நூலும் காந்தியும் காங்கிரசும் தீண்டாதோருக்குச் செய்தது என்ன என்கிற நூலும் முதல் வாசிப்பிலேயே வாசகனின் கண்ணோட்டத்தை மாற்றியமைத்தன.அவரைப்பற்றிய புத்தகங்களில் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியின் அம்பேத்கர் ஆய்வு மையம் வெளியிட்ட அம்பேத்கர்-ஒரு பன்முகப்பார்வை ஒரு நல்ல எளிமையான அறிமுக நூலாகவும் DR.AMBEDKAR AND UNTOUCHABILITY- என்கிற CHRISTOPHER JAFFRELOT அவர்களின் நூல் அவரது சிந்தனைகளின் அறிமுகமாகவும் எனக்கு வாசிக்கக் கிடைத்தன.மராட்டிய அரசு வெளியிட்டுள்ள 40க்கு மேற்பட்ட அம்பேத்கர் நூல்வரிசையில் 20க்கு மேற்பட்டவற்றை வாங்கி வைத்து அவ்வப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். முழு தொகுதிகளையும் வாங்கியாக வேண்டும்.அவருடைய ஆய்வு முறையும் ஆழ்ந்தகன்ற வாசிப்பும் ஒவ்வொரு வார்த்தையிலும் குமுறும் அவரது கோபாவேசமும் அம்பேத்கரை என் மனதின் உச்சத்தில் கொண்டு வைத்துள்ளது-மிகத் தாமதமாக அவரிடம் வந்து சேர்ந்தோமே என்கிற குற்ற உணர்ச்சியுடன்.

தந்தை பெரியாரின் நூல்களில் பெண் ஏன் அடிமையானாள்? மற்றும் திராவிடர் கழக வெளியீடுகளான பெரியார் களஞ்சியம் பத்துத் தொகுதிகள் (பெண்ணியம்,சாதி மட்டும்)வாங்கி வாசித்திருந்தாலும் வழக்குகளைச் சந்தித்து வெற்றி கண்டு பெரியார் திராவிடர் கழகத்தோழர்கள் வெளியிட்ட பெரியாரின் குடி அரசு எழுத்துக்களின் 27 தொகுதிகளை வாங்கி பரீட்சைக்குப் படிப்பது போல (ஒரு கூட்ட்த்தில் பேச வேண்டி இருந்ததால்)படித்த அனுபவம் அலாதியானது.பெரியாரின் எழுத்துக்களில் மிளிரும் கிண்டலும் கேலியும் நாட்டுப்புறக் கதைகளும் சொலவடைகளும் தனியே விவரித்து எழுதத்தக்கவை. காதல் பற்றிய அவரது கிண்டலான கருத்துக்கள் முதல் வாசிப்பில் எனக்கு வியப்பூட்டின. மக்கள் மொழியில் மக்களிடம் பேசிய மகத்தான தலைவராக அவர் மனதில் உயர்ந்து நிற்கிறார்.கிராம்ஷி சொல்லும் Organic Intellectual இவர்தான் என்று தோன்றியது.

பெண்களின் நிலை குறித்துத் தொடர்ந்து பேசி வந்தாலும் வலுவான புத்தகங்கள் வாசிக்க்க் கிடைக்காத சூழலில் எழுத்தாளர்-பத்திரிகையாளர் ஏ.எஸ்.பத்மாவதி அவர்கள் வீட்டுக்கு ஒருமுறை சென்றபோது அரிய பல நூல்களை அப்படியே எனக்கே எனக்கு என அள்ளிக்கொடுத்து விட்டார்.அவற்றில் – SIMON DE BEUOVA எழுதிய நான் ரொம்ப காலமாகத் தேடிக்கொண்டிருந்த THE SECOND SEX என்கிற புத்தகமும் இருந்தது.பிரான்ஸ் நாட்டையும் ஐரோப்பாவையும் குலுக்கிய அப்புத்தகம் பெண்நிலையில் நின்று இவ்வுலகைக் காணப் புதிய சாளரங்களைத் திறந்து விட்டது.The Beauty Myth மற்றும் Sacrificing Ourselves ஆகிய இரு புத்தகங்களும் வ.கீதா எழுதிய Gender மற்றும் Patriarchy ஆகிய இரு நூல்களும் பெண்ணியம் தொடர்பான என் பல குழப்பங்களுக்கும் விடையளிப்பதாக அமைந்தன.

நெல்லைக்குப் பணியாற்ற வந்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியும் தமிழறிஞர் தொ.பரமசிவமும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனும் எனக்குச் செய்துள்ள உதவிகள் சொல்லாலே விளக்கிவிட முடியாதவை.இந்திய-பாகிஸ்தான் பிரிவினை குறித்த சில முக்கியமான புத்தகங்களை சலபதிதான் எனக்கு வாங்கித்தந்தார்.ஊர்வசி புட்டாலியாவின் The Otherside of Silence கமலா பாஷின் எழுதிய Borders and Boundaries ஆகிய இரு நூல்களும் எந்த வரலாற்று நூலும் இதுவரை சொல்லியிராத தேசப்பிரிவினையின் காயங்களைத் திறந்து காட்டின.இந்தியாவின் விடுதலை என்பது பெண்களின் உடம்பின் மீது எழுதப்பட்ட ஒரு வரலாறுதான் என்பதை இவ்விரு நூல்களும் நம் முகத்திலறைந்து சொல்கின்றன.கண்ணீரில் கரைந்தபடி வாசித்த நூல்கள் இவை.எஸ்.ராமானுஜம் மொழி பெயர்ப்பில் வெளியான மண்ட்டோ படைப்புகள் இவ்வரிசையில் ஓர் மகத்தான நூலாகும்.

தொ.பரமசிவன் அவர்களின் அறியப்படாத தமிழகம் என்கிற நூல் தமிழகப்பண்பாட்டு வரலாற்றில் உண்மையிலேயே அறியப்படாத ஒரு தமிழகத்தை அறிமுகம் செய்து பலத்த அதிர்வுகளை உண்டாக்கிய நூல்.அந்நூலை நாங்கள் எம் தோள்களில் சுமந்து சென்று விற்பனை செய்தோம்.இன்று அவருடைய எல்லாக் கட்டுரைகளும் பண்பாட்டு அசைவுகள் என்கிற நூலாக வந்துள்ளது.நாட்டார் தெய்வங்களி வரலாற்றை ஆய்வு செய்து வெளிக்கொண்டுவந்த வாழும் நா.வானமாமலை என நான் மதிக்கிற தோழர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் அடித்தள மக்கள் வரலாறு, கொலையில் உதித்த தெய்வங்கள்,கிறித்துவமும் சாதியும் ,மந்திரங்கள் சடங்குகள் என அவரது ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு எழுத்தும் தமிழகப் பண்பாட்டு வரலாற்றைக் கட்டமைக்க உதவும் அடிப்படையான நூல்களாக அமைந்துள்ளன.சின்ன வயதிலேயே பெரும் சாதனைகள் புரிந்தவராக நான் மதிக்கும் ஆ.இரா.வேங்கடாசலபதியின் அந்தக்காலத்தில் காப்பி இல்லை,நாவலும் வாசிப்பும்,திராவிட இயக்கமும் வேளாளரும்,முச்சந்தி இலக்கியம் உள்ளிட்ட பல நூல்கள் தமிழில் வரலாற்று நூல்களின் வரிசையில் மிக முக்கிய இடம் பிடிப்பவை.

தமிழகத்தில் நானறிந்த ஒரே பொருளாதார வரலாற்றாய்வாளரான முனைவர் கே.ஏ.மணிக்குமாரின் 1930களில் தமிழகம் என்கிற நூலும் முதுகுளத்தூர் கலவரம் குறித்த அவரது 1957 RIOTS என்கிற நூலும்(அச்சில்) தமிழக வரலாற்றுக்கு அரிய பங்களிப்புகளாகும்.முத்துராமலிங்கத்தேவர் பற்றிய ஒரு விருப்பு வெறுப்பற்ற கணிப்பை மணிக்குமார் அவர்களின் இந்நூல் செய்துள்ளது குறிப்பிட்த்தக்கது.1930களில் தமிழகம் நூலை முன் வைத்து புதுமைப்பித்தனின் கதைகள் சிலவற்றை ஆய்வு செய்து பார்ப்பது அவசியம்.30களின் பொருளாதார மந்தம் பற்றி பல கதைகளில் புதுமைப்பித்தன் அழுத்தமாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ளார்.

நான் சந்தித்த மனிதர்கள் எல்லோருடைய முகங்களுமே எனக்குச் சில புத்தகங்களாகவே மனதில் தோன்றுகின்றன.புத்தகம் சுமந்த (புத்தகங்களை நானும் என்னைப் புத்தகங்களும் ) வரலாறுதான் என் கடந்தகாலமும் நிகழ்காலமும் எதிர்காலமுமாக இருக்க முடியும்.என் மனப்போக்கின் ஒவ்வொரு திருப்பத்தையும் நடப்புகளும் நிகழ்வுகளும் தீர்மானித்ததை விட மேலே குறிப்பிட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களே தீர்மானித்தன என்று உறுதியாகச் சொல்லுவேன்.

சமீபத்திய வாசிப்பில் இளம்பிறை,குட்டி ரேவதி, சுகிர்தராணி,சல்மா,மாலதி மைத்ரி போன்ற பெண் படைப்பாளிகளின் கவிதைகளும் கதைகளும் லிவிங் ஸ்மைல் வித்யாவின் தன் வரலாறும் ப்ரியாபாபுவின் எழுத்துக்களும் என்னைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளன என்பேன்.இவர்களைப்பற்றி இப்படி ஒட்டுமொத்தமாக ஒரு வரியில் எழுதுவது நியாயமில்லை.ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான வாழ்வை முன்வைத்துப் பேசுகிறார்கள்.பொதுவான அம்சம் ஒன்றுண்டு என்பதால் பொதுவாக்க் குறிப்பிட்டேன்.வாசிக்கும் ஆண் மனதைக் குற்ற உணர்வு கொள்ளச்செய்யும் படைப்புகளாக இவை யாவும் உள்ளன என்பதே அது.

கீரனூர் ஜாகிர் ராஜாவின் வடக்கேமுறி அலிமா,யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி மற்றும் சேகுவேரா இருந்த வீடு போன்ற படைப்புக்கள் சமீபத்தில் நான் வாசித்து அதிர்வுக்குள்ளான உயிர்த்துடிப்புள்ள படைப்புக்கள்.இஸ்லாமிய வாழ்க்கைப் பின்புலத்தோடு மனித வாழ்வை, நம்பிக்கைகளை , மனித மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் நாவல்களைத் தொடர்ந்து எழுதி வரும் ஜாகிர் ராஜாவின் எழுத்துக்களில் தனித்துவமான ஒன்றாக வடக்கே முறி அலிமாவை நான் மதிப்பிடுகிறேன்.ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற புஷ்பராஜாவின் புத்தகமும் ராஜனி திரானகம எழுதிய முறிந்தபனை யும் காட்டிய ஈழப்போராட்ட்த்தின் மறுபக்கத்தையும் முழுமையான சித்திரத்தையும் வலி மிகுந்த வாழ்க்கையையும் துக்கத்தின் உச்சியில் பிறக்கும் பகடியாக யோ.கர்ணன் தன் சிறுகதைகளில் எழுதிச்செல்கிறார்.சேகுவேரா இருந்த வீடு ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தின் குறியீடாக அமைந்துவிட்ட்து.

கோ.ரகுபதியின் தலித்துகளும் தண்ணீரும் சமீபத்தில் நான் வாசித்த மிக முக்கியமான புத்தகம்.பாவங்களைக் கழுவும் புனித வஸ்துவாகக் கருதப்படும் தண்ணீரைக் குடிப்பதற்காக தலித்துகள் நடத்தி வரும் போராட்டங்களை வரலாற்று ரீதியில் விளக்கும் இந்நூல் பரவலாக வாசிக்கப்பட வேண்டிய நூலாகும்.சு.கி.ஜெயராமன் தொடர்ந்து எழுதிவரும் புவியியல் சார் புத்தகங்களான குமரி நில நீட்சி,மணல் மேல் கட்டிய பாலம் போன்றவை இன்றைய இந்துத்துவப் புரட்டுகளையும் புளுகுமூட்டைகளையும் எதிர்கொள்ள உதவும் முக்கியமான புத்தகங்கள்.

என் இலக்கிய வாசிப்பு குறித்துப் பாதியிலேயே நிறுத்தி விட்டேன்--500 புத்தகங்களுக்கு மேல் அது வளரும் என்பதால்.

.இவையெல்லாம்தான் என் புத்தகங்கள்.இவற்றை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டுதான் என் அன்றாடம் நகர்கிறது.இன்னும் கூட வாசிக்காத பல புத்தகங்கள் என் அலமாரிகளில் இருக்கின்றன.வாழ்வு முடிவதற்குள் நம்மிடம் இருக்கும் புத்தகங்களையாவது நாம் வாசித்து முடிப்போமா என்கிற சந்தேகம் அவ்வப்போது வரத்தான் செய்கிறது.என்றாலும் வாசிக்காமல் முடியாது.வாசித்தாலும் தீராது.

இப்படிச் சொல்ல உங்களுக்கும் நிறையவே இருக்கும்.

எப்படி எழுதுவது ?-விவாதத்துக்கான குறிப்புகள்

 

hosur-5 (ஓசூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய இளம் படைப்பாளிகளுக்கான படைப்பூக்க முகாமில் –மே 18,19,20-2012 இல் வாசிக்கப்பட்ட கட்டுரை)

பேனாவால் எழுதலாம்.

பென்சில் கொண்டு எழுதுவாரும் உளர்.

நேரடியாக கணிணியில் தட்டுவார் இன்று அதிகம்.

ஒருவர் சொல்ல ஒருவர் எழுத அல்லது தட்டச்சு செய்ய என்கிற நடைமுறையும் உள்ளது.

இந்த ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட மனநிலையைக் கோருவதாக இருக்கிறது.பேனாவால் தாளில் எழுதியவர் கணிணிக்குச் சென்றபோது ஒரு சிறிய உளவியல் நெருக்கடிக்கு ஆளாகித்தான் பழக்கமானார். யோசித்துக்கொண்டே இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட நிமிடத்தில் கணிணியின் திரை காணாமல் போகும்.கையால் எழுதும் ‘க’ வும் ’ற’ வும் என்னுடைய ’க’ வாகவும் ’ற’ வாகவும் இருந்தது.கணிணியில் யாரோ வடிவமைத்து வைத்திருக்கும் ’க’ வை எடுத்து அதில் என் எண்ணங்களைச் சொல்ல நேர்கிறது. அந்த என்னுடைய என்கிற சொந்த உணர்வு மறைந்து போகிறது.கையால் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிப் பின் அதை அச்சில் பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி இதில் குறைந்து விட்டது.கணிணியில் எழுதும் படைப்பு மனதை மின்சாராமும் மின் வெட்டும் கூடத் தகவமைக்கிறது.

சொல்லச்சொல்ல எழுதுவதில் ஒருவர் காத்திருக்கிறாரே என்கிற நெருக்கடி இருந்துகொண்டே இருக்கும்.அதையும் வென்றவர்கள் உண்டு. இன்னும் நாம் எங்கே உட்கார்ந்து எழுதுகிறோம்- தனி அறையிலா,கூட்ட்த்து நடுவிலா பொது இடத்திலா என்பதெல்லாம்கூட எழுத்தின் போக்கைப் பாதிக்கத்தான் செய்யும்.

எப்படி எழுதினாலும் அதை எழுத்தென்போம்.இங்கு இந்த நடைமுறை உண்டாக்கும் உளவியல் பற்றி நாம் விரிவாகப்பேசப்போவதில்லை-அதுவும் அவசியமே என்றபோதும். எழுத்தின் தொழில்நுட்பம் அல்லது நல்ல வார்த்தையில் சொன்னால் எழுதும் கலை பற்றி சற்றுப் பேசிப்பார்க்கலாம்.

எழுதும் கலையில் மூன்று அம்சங்கள் மிக முக்கியமானவையாகின்றன.

1.உள்ளடக்கம்

2.உருவம்/அழகியல்

3.படைப்பு மனநிலை

அ.உள்ளடக்கம்

எதை எழுதுவது என்கிற பொதுவான புரிதல் விரிவாகத் தனியே பேசப்பட வேண்டியது.அவரவர் வர்க்க நிலை சார்ந்து பிறந்த நிலப்பரப்பு-காலம்-சாதி-பால் சார்ந்து எதை எழுதுவது என்பதை படைப்பாளி தீர்மானிக்கிறார்.நாம் இங்கு பேச எடுத்துக்கொள்வது அதுவல்ல. ஒரு குறிப்பிட்ட சிறுகதை அல்லது கவிதைக்கான ஒரு குறிப்பிட்ட உள்ளடக்கம்/கருப்பொருள் பற்றியே.ஒரு படைப்பின் உருவத்தை படைப்பாளி தேர்வு செய்யும் இந்த உள்ளடக்கமே தீர்மானிக்கிறது.

வெண்மணிக் கொடுமையை அதன் முழுமையான வரலாற்றுப் பின்னணியோடு கவிதையில் சொல்ல முயன்ற நவகவிக்கு ஒரு நெடுங்கவிதை என்கிற உருவமே கை கொடுத்தது.அதை உரைநடையில் சொல்ல முயன்ற இந்திரா பார்த்தசாரதிக்கும் சோலை சுந்தரபெருமாளுக்கும் பாட்டாளிக்கும் நாவல் என்கிற உருவம் பொருத்தமாக இருந்தது.தன் குருதிப்புனல் நாவலில் வெண்மணியை பிராய்டிய உளவியல் பார்வையில் இந்திரா பார்த்தசாரதியும் செந்நெல் நாவலில் விவசாயத்தொழிலாளர் நிலைபாட்டில் நின்று சோலை சுந்தரபெருமாளும் தன் கீழைத்தீ நாவலில் இடது தீவிரவாதப் பார்வையில் பாட்டாளி சொல்ல முற்பட்ட போது --ஒரே நிகழ்வு பற்றிய மூன்று வேறு வேறு உள்ளடக்கங்களாக அவை மாற்றம் பெறுகின்றன.இப்போது இந்திரா பார்த்தசாரதியின் உள்ளடக்கத்துக்கு ஏற்ற மொழியும் உத்தியும் வேறாகவும் சோலை சுந்தரபெருமாளின் வர்க்கநிலை சார்ந்த உள்ளடக்கத்துக்கான மொழியும் உத்தியும் வேறாகவும் அதிதீவிர நிலைபாட்டில் பேசிய பாட்டாளியின் உத்தியும் மொழியும் வேறாகவும் அமைவது தவிர்க்க முடியாததாகிறது.நவகவியும் புதுக்கவிதை என்கிற உருவத்தில் அல்லாமல் மரபுக்கவிதை என்கிற உருவத்திலேயே அதைச்சொல்ல நேர்கிறது.அதே வெண்மணியை தலித் மக்களின் குரலாக ஓர் ஆவேசத்தை பொது மேடைகளில் எடுத்துச்செல்ல இன்குலாப் “..எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க... நாங்க எரியும்போது எவன் மசிரப் புடுங்கப்போனீங்க..” என்று ஓர் இசைப்பாடல் வடிவத்தைக் கையில் எடுத்தார்.எந்த உள்ளடக்கம் என்பதும் –அதாவது ஒரே வெண்மணிக் கொடுமையின் எந்தப் பகுதியை உள்ளடக்கமாகக் கொள்கிறோம் என்பதும்- அதை யாருக்குச் சேர்க்கப்போகிறோம் என்பதும் இங்கு உருவத்தைத் தீர்மானித்ததைக் காண்கிறோம்.இன்னும் வெண்மணியின் சொல்லப்படாத கதைகளும் கவிதைகளும் எத்தனையோ வடிவங்களில் வரவேண்டிய பாக்கியும் இருக்கிறது.

அருணனின் கடம்பவனமும் மதுரையை மையமாகக் கொண்ட நாவல்தான்.சு.வெங்கடேசனின் காவல்கோட்டமும் மதுரையை மையமாகக் கொண்ட நாவல்தான்.நா.பார்த்தசாரதியின் பொன்விலங்கும் மதுரையைத்தான் சுற்றியது.அருணன் ஒரு அரசியல் சித்தாந்தப் போராட்ட்த்தைக் கருப்பொருளாக-உள்ளடக்கமாக்க் கொண்டார்.ஒரு இனக்குழுவின் வாழ்முறையை சு.வெ. உள்ளடக்கமாகக் கொண்டார்.நா.பா.வோ தேசியப் பெருமிதம் பற்றிய ஒருவித ஈர்ப்பையும் பிளேட்டோனியப் புனிதக்காதலையும் உள்ளடக்கமாகக் கொண்டார்.களம் ஒன்றாக இருந்தாலும் உள்ளடக்கம் வேறு வேறாக அமைந்த்தால் இம்மூன்று நாவல்களின் விரிவும் பரப்பும் அளவும் வடிவமும் மொழியும் முற்றிலும் வேறு வேறாக அமைந்த்தை நாம் பார்க்க முடிகிறது.

தன் கதைகளின் உள்ளடக்கம்- அவற்றின் நோகம் குறித்துப் புதுமைப்பித்தனுக்கு இருந்த தெளிவுதான் அவரது விதவிதமான எழுத்து முயற்சிகளுக்கு- சோதனைகளுக்கு- அடிப்படையாக அமைந்தது எனலாம்.

“பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ண உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல.பிற்கால நல்வாழ்வுக்குச் சௌகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடும் அல்ல.”

என்பார் அவர்.உள்ளடக்கம் மட்டுமல்ல எழுத்தாளனின் நோக்கமும் ஒரு படைப்பு எப்படி எழுதப்படுகிறது என்பதற்கு அடிப்படையாக அமையும் என்பதற்கு புதுமைப்பித்தன் ஒரு உதாரணம் எனலாம்.

ஆ.உருவம் அல்லது வடிவம்/அழகியல்

”தமிழில் இம்மாதிரி உரைநடை நவீனம் பொதுமக்களுக்குஇதுவரை அளிக்கப்படவில்லை.ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு ரசமாகவும் போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை கொள்கிறேன்.இம்மாதிரிப் புதிய முயற்சியில் ஏதாவது குற்றங்குறைகள் இருப்பின் பொருத்தருளுமாறு பொதுமக்களை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்”

மேற்கண்ட வரிகள் 1879ஆம் ஆண்டு வெளியான தமிழின் முதல் நாவலான பிரதாபமுதலியார் சரித்திரம் நூலுக்கு அதன் ஆசிரியர்(!) ச.வேதநாயகம் பிள்ளை.ரசமாகவும் போதனை நிறைந்ததாகவும் என்கிற இரண்டு வார்த்தைகளும் கூர்ந்து நோக்கத்தக்கவை.தெருக்கூத்தில் குற்றங்குறை இருந்தால் பொறுத்தருளக்கேட்கும் கூத்துக்கலைஞனைப்போல நாவல் என்கிற ஒரு புதிய உரைநடை இலக்கிய வடிவத்தை முதன் முதலாகக் கைக்கொள்ளும் எழுத்தாளன் பேசுகிறான்.

கவிஞனுக்கு அத்தகைய மனத்தடைகளோ தயக்கங்களோ இருப்பதில்லை.ஏனெனில் கவிதைக்கு மிக நீண்ட வரலாறும் ஏற்பும் இருக்கிறது.ஆதிப்புராதன சமூகங்களில் நிலவிய கூட்டு வாழ்க்கையிலேயே உழைப்புப் பாடல்கள் எனும் வடிவில் கவிதை பிறந்து விட்டது.இயற்கையை வேண்டியும் ஏவல்கொண்டு அடக்கியாளவும் அம்மக்கள் நடத்திய சடங்குகளில் உச்சாடஞ்செய்யப்பட்ட மந்திரங்களும் கவிதை வடிவில் அமைந்தன.ஆகவே கவிதைக்கு மந்திர சக்தி இருப்பதான நம்பிக்கை இன்றுவரை தொடர்கிறது.இசைபாடவும் வசைபாடவும் ஏற்றவராக்க் கவிஞர்களே கொள்ளப்பட்டனர் என்பார் கைலாசபதி.மார்க்சிய அறிஞர் காட்வெல் “ கவிதை கூட்டு மொழியின் வெளிப்பாடாகவும் பொதுமக்களின் உணர்ச்சி வெளிப்பாட்டின் வடிவமாகவும் அமைந்தது “ என்று குறிப்பிடுகிறார்.புதுக்கவிதை வந்தபோது இந்த இலக்கணமெல்லாம் அடிவாங்கியது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.தனி மனித உணர்ச்சியை மையமாகக் கொண்ட உரைநடை இலக்கியத்தின் கூறுகளை புதுக்கவிதை உள்வாங்கிப் பயணம் செய்தது.

நிற்க.

உருவம் என்பது கதை அல்லது கவிதை எப்படிச்சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பற்றியது.அஎன்ன சொல்கிறாய் என்பதை விட எப்படிச்சொல்கிறாய் என்பதுதான் முக்கியம் என வாதிடுவோர் எல்லாக்காலங்களிலும் இருப்பர்.நம்மைப்பொறுத்தவரை இரண்டும் சம முக்கியத்துவம் உடையவை.எதை நீ- எப்போது- எப்படிச்சொல்கிறாய் என்கிற மூன்றும் நமக்கு முக்கியம்.

ஒரு படைப்பின் உருவம் அல்லது வடிவம் பற்றிப் பேசுங்கால் “அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே”என்று தொல்காப்பியம் கூறுவதுபோல படைப்பின் உள் கட்டமைப்பு பற்றிப் பிரித்தும் விரித்தும் பேசியாக வேண்டும்.கதைக்கும் கவிதைக்கும் இது வேறு வேறாக அமையும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

1,மொழிநடை

2.உத்தி

3.பாத்திரப்படைப்பு

ஆகிய மூன்று கூறுகள் உருவத்தின் அடிப்படை அம்சங்களாகின்றன.

1.மொழிநடை

”எளிய பதங்கள்,எளிய நடை,எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம்,பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு,இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான்” என்கிற பாரதியின் முன்வைப்பில் உள்ள எளிமை ஒன்றை மட்டுமே பிடித்துக்கொண்டு நம் படைப்பு மொழி நின்றுவிடக்கூடாது.சுவை புதிது,பொருள் புதிது,சொல் புதிது என்றும் பாரதி சொன்னதையும் சேர்த்த்துக்கொள்ள வேண்டும்.நாம் எதைச் சொல்ல வருகிறோமோ யாருக்குச் சொல்லப்போகிறோமோ கதையில் எந்தக் கதாபாத்திரத்தின் வழியே அதைச் சொல்கிறோமோ அதற்கேற மொழி நடை அமைய வேண்டும்.இதுபற்றி ரகுநாதன் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும் “ தமிழில் எழுதி வந்தவர்கள் காதலாயினும் கையறு நிலையாயினும் ஒரே மாதிரி நடையில் ஒரே மாதிரி வேகத்துடன் பாவத்துடன்தான் எழுதினார்கள்” இது சரியல்ல.சொல்ல வரும் உணர்ச்சிக்கும் மொழி உகந்ததாக இருக்க வேண்டும்.தனித்தமிழ், செந்தமிழ் நடை என்பதெல்லாம் படைப்பிலக்கியத்தில் கவைக்குதவாதவை எனக் காலம் நிராகரித்துவிட்ட்தை நாம் உணர வேண்டும்.

தலித் இலக்கியம் தமிழில் முன்னுக்கு வந்த காலத்தில் அதன் மொழி குறித்துத்தான் அதிகமான சர்ச்சைகள் எழுந்தன.தொல்காப்பியர் காலந்தொட்டே இவ்விவாதம் இருந்துள்ளது.

“சேரி மொழியாற் செவ்வதிற் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்

புலனென மொழிப் புலனுணர்ந்தோரே” என்பது செய்யுளியலில் தொல்காப்பியர் கூற்று.இவ்வரிகளுக்கு

பேராசிரியர் உரை இவ்விதம் அமைகிறது “ சேரி மொழி என்பது பாடி மாற்றங்கள்.அவற்றானே செவ்விதாகக் கூறி ஆராய்ந்து காணாமைப் பொருட்டொடரானே தொடுத்துச்செய்வது புலன் என்று சொல்வார் புலனுணர்ந்தோர் என்றவாறு அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச்செய்யுளாகிய வேண்டுறைச் செய்யுள் போல்வன வென்பது கண்டுகொள்க” அதாவது நாடகத்தில் கூற்றுக்குரியோர்க்கு ஏற்றவண்ணம் பேச்சு அமைதல் வேண்டும் என்கிறார்கள்.அதாவது பாத்திரங்களின் மொழியாக வரும்போது மக்கள் மொழி இருக்கலாம்.ஆசிரியர் கூற்றாக வரும்போது பொதுமொழி இருக்கட்டும் என்பதே இதன் பொருள்.ஆனால் இன்று மு.ஹரிருஷ்ணன் போன்றோர் முற்றிலும் அவர்தம் வட்டாரப் பேச்சுமொழியிலேயே இடக்கரடக்கல் ஏதுமின்றிக் கட்டற்ற காட்டாற்று வெள்ளம்போல எழுத்த்துவங்கியுள்ளனர்.அத்தகைய மொழிக்கு வரவேற்பும் விமர்சனமும் சேர்ந்தே வருவதையும் பார்க்கிறோம்.அது படைப்பாளியின் சுதந்திரம்தான் என்றபோதும் வாசகனுக்கு நெருக்கமான மொழி என்பதும் முக்கியம் அல்லவா?

“கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்புச் சாதனமாக மட்டும் வைத்துத் தாவிச்செல்லும் நடை ஒன்றை அமைத்துக்கொண்டேன்.நானாக எனக்கு வகுத்துக்கொண்ட பாதை.தமிழ்ப்பண்புக்கு முற்றிலும் புதிது” –இது புதுமைப்பித்தன்.

“சொல்லும் பொருளும் நெஞ்சில் கண்ணாமூச்சி ஆடுகின்றன.வரம்புகள் கடந்த விஷயங்களை எழுத்தில் பிடிக்க முயல்கையில் அவை நழுவுகின்றன.ஊடலாடுகின்றன.பாஷையே பரிபாஷையாக மாறுகின்றது”-இது லா.ச.ராமாமிருதம்.

”மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்” என்பதும் “வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர் சுட்டு ஆகலான்” என்பதும் தொகாப்பிய பொருளதிகாரம்.அதாவது மரபு வழிக் கூறவில்லை எனில் பொருள் வேறுபடும் என்பதும் உயர்ந்தோர் கூறும் வழக்கால் மரபு தோன்றுகிறது.வழக்கை உருவாக்குவதும் செயல்படுத்துவதும் உயர்ந்தோரே என்பதும் இதன் விளக்கம்.

மொழியில் விழுத்திணை(உயர்குடி வழக்கு) என்றும் இழிசனர் வழக்கு என்றும் இரண்டாக இருந்து வந்த்தும் பக்தி இயக்ககாலம் வரை இழிசனர் வழக்கு எழுதா எழுத்தாகவே இலக்கியத்தில் இடமின்றிட் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட்தும் நம் மொழிவரலாற்றின் முக்கியமான பக்கங்கள்.

மேற்சொன்ன எல்லாவற்றையும் பகுத்தாய்ந்து பார்க்கையில் ஒரு படைப்பின் மொழி என்பது அலங்காரமாகப் படைப்பில் நான் இருக்கிறேன் பார்த்தாயா இல்லையா என்று துருத்திக்கொண்டு நில்லாமல் உள்ளடக்கத்திற்கும் நோக்கத்துக்கும் உணர்ச்சிக்கும் பொருத்தமானதாக வாசிப்புக்கு இடையூறாக நில்லாமல் அமைய வேண்டும்.ஈராயிரமாண்டுப் பாரம்பரியம் மிக்க நம் தமிழ் மொழியின் செறிவான சொற்களையும் இலக்கணத்தையும் இலக்கியங்களையும் கற்றுத்தேறாமல் அன்றாடப்புழக்கத்தில் உள்ள தேய்ந்துபோன அலுமினியப்பாத்திரங்கள் போன்ற குறைவான சொல்வளத்தைக் கொண்டே நம் படைப்பாளிகள் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விமர்சன-சுய விமர்சன-நோக்குடன் நாம் பார்க்க வேண்டும்.

இவ்வகையில் ரகுநாதன் –புதுமைப்பித்தன்- கு.அழகிரிசாமியின் பள்ளி (SCHOOL OF THOUGHT)மாணாக்கர்களாக நாம் இருப்பது நல்லது.க.நா.சு- மௌனி-சுந்தரராமசாமி என்கிற சொந்தப் பாரம்பரியமற்ற பள்ளி மட்டும் போதாது.மேனாட்டுக் கலைச்செல்வங்களுக்காக இவர்கள் பள்ளியில் நாம் அமர்வது அவசியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இடைக்காலத்தில் பின் நவீனத்துவ வாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்ள முயன்ற சிலரின் சொல் விளையாட்டுக்களில் நாம் வீழ்ந்துவிடக்கூடாது.லா.ச.ராவின் பரிபாஷை என்பதை சரியான அளவில் சரியான கோணத்தில் உள்வாங்க வேண்டும்.நீண்ட காலம் செய்யுளிலும் சூத்திரத்திலும் மந்திரத்திலும் பரிபாஷையாக முடங்கிக்கிடந்த மொழியை நடமாட வைக்க ’வழங்கும் வசன நடை’ ஒன்று வரப் பலகாலம் ஆனதை மறந்து விடக்கூடாது.அதே சமயம் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான பரிபாஷையாக உயிர்ப்புள்ள படைப்பு திகழமுடியும் என்பதையும் நாம் புரிந்து ஏற்க வேண்டும்.

மரபுகளை மீறாமல் புதியது பிறக்காது.மரபை முழுதாக அறியாமல் அதை மீறவும் முடியாது.மொழியிலும் சொல்புதிது வேண்டுமெனில் மரபுமீறல்கள் தவிர்க்க முடியாது.ஆனால் அதன் அவசியம் அதன் அளவு அதன் எல்லை குறித்த தன்னுணர்வு தேவை.

மக்கள் மொழியான நாட்டுப்புற இலக்கியங்களிலிருந்தும் பண்டைய தமிழிலக்கிய மரபிலிருந்தும் நம் படைப்புக்கான மொழியைப் பெற வேண்டும்.நாட்டுப்புற இலக்கிய வடிவங்களான பாடல்கள்,கதைப்பாடல்கள்,விடுகதைகள்,சொலவடைகள்,பழமொழிகள் போன்ற எல்லாவற்றிலிருந்தும் நாம் வார்த்தைகளை உருவி எடுக்கப்பழக வேண்டும்.இடையறாத வாசிப்பின் மூலம் நம் மனதில் தேக்கி வைக்கும் சொற்சேகரத்திலிருந்து படைப்பு மனம் தேவையானவற்றை தேவையான நேரத்தில் எடுத்துக்கொள்ளும்.

கிள்ளிப்போட்டுக் கிட்ட நிக்கலாம்..அப்படி ஒரு இருட்டு..

அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லை உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லை.

சாமியே சைக்கிள்ளே போகுது பூசாரி புல்லட் கேட்கிறாரு

போன்றவையும் நமக்குத்தேவை.காமம் செப்பாது கண்டது மொழிமோவும் நமக்குத் தேவை.

புதுக்கவிதை பிறந்த காலத்தில் அதன் முக்கிய அம்சங்கள் பற்றிச் பேசிய க.நா.சு.,

“1. வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒருதரம் ஒலித்து உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்ப வேண்டும்.

2.முதலில் புரியாமலிருந்து படிக்கப் படிக்கப் புரியத்தொடங்குவதாக இருக்க வேண்டும்.

3.நள்ளிரவில் விழித்துக்கொள்ளும்போது திடுதிப்பென காரண காரியமேயில்லாமல் மனசில் தானே தோன்றிப் புது அர்த்தம் தரவேண்டும்.”

என்றார்.எழுத்தாளர் வாசகர் இருவருக்கும் பொதுவான அவரவர் மொழிக்கிடங்கிலிருந்துதான் பொது அர்த்தங்கள் கிடைக்கின்றன.கநாசு வின் பார்வை எப்போதும் முற்றிலும் ரசனை சார்ந்ததுதான்.ஆனால் இலக்கியத்துக்கு அது முக்கியம்.அது ஒரு முகம்.அவர் மேலே கூறும் அனுபவம் மொழியின் சாத்தியங்கள் சார்ந்த்து என்பதையே இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.முதலில் புரியாமல்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை.இந்த வரி மொழி சார்ந்த்தல்ல கவிதையின் உள்ளடக்கம்/அர்த்தம் சார்ந்த்து எனக்கொள்ளலாம்.

சொல்லாலே விளக்கத் தெரியலே அதைச் சொல்லாமலும் இருக்க முடியலே என்று பட்டுக்கோட்டையார் காதலுக்குச் சொன்னதை நாம் படைப்பு மொழிக்கும் பொருத்திப்பார்க்கலாம்.சொல்லிலிருந்து சொல்ல முடியாமைக்கும் சொல்ல முடியாததை உணரச்செய்வதற்குமாக நமது சொற்கள் நகரவேண்டியிருக்கிறது. ஜிப்ஸி சிறுகதையில் மக்சீம் கார்க்கி “ என் காதலை வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை.அந்த வயலினைக்கொண்டுவா.அதில் வாசித்துக்காட்டுகிறேன்” என்று எழுதியிருப்பார்.மனக்குகை ஓவியங்களானாலும் எழுத்தாளன் அவற்றைத் தன் வார்த்தைகளால்தான் வரையவேண்டியிருக்கிறது.சொல்லைப் புதுப்பித்துப் புதுப்பித்து அதில் தன் உயிரையும் சக்தியையும் ஏற்றித் தீ என்று எழுதினால் தாளில் தீப்பிடிக்கும் நிலைக்குக் கொண்டுசேர்க்க வேண்டும்.

எனக்கு இப்படியான மொழிதான் கை வருகிறது நான் என்ன செய்யட்டும் என்று ஒரு நவீன படைப்பாளி சொல்ல முடியாது.பொதுவாக எழுதுபவர் எல்லோருமே ஒரு மத்தியதரவர்க்க மனோபாவத்தில்(பிறப்பால் அப்படி இல்லாவிட்டாலும்)தான் இயங்குகிறோம்.மொழி குறித்த மனத்தடைகளுக்கு இந்த வர்க்கநிலையும் ஒரு காரணம்.நம் தலைகளில் நீண்டகாலமாக ஏற்றப்பட்டிருக்கும் மொழி குறித்த புனிதம்-தீட்டு என்கிற கருத்துக்கள் நாம் படைப்பில் ஈடுபடும்போது வந்து நின்று வழிமறிக்கின்றன.மொழியைச் சுதந்திரமாகக் கையாளவே நாம் நம்மை கீழ்வர்க்கப்படுத்திக்கொள்ளவும் அ-சாதிப்படுத்திக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

மௌனி,நகுலன்,கோணங்கி,ரமேஷ்-பிரேதன் போன்றோரின் மொழி வாசகப்பங்கேற்புக்கு எந்த வாசலையும் திறந்து வைக்காமல் நகர்வதாகும்.நவீன கவிதைகள் இதுபோல அசாதாரணமான வடிவ இறுக்கம் ,மொழிச்சிக்கனம்,படிம அடர்த்தி,உள்நோக்கிய பார்வை கொண்டு இயங்கியாக வேண்டும் என்பது நீண்டகாலமாக எழுதப்படாத விதியாக இருப்பதை நாம் காண்கிறோம்.முற்போக்குப் படைப்பாளிகளும் ஈழத்திலிருந்து வரும் படைப்புகளும் பெண் படைப்பாளிகளின் புதிய வரவும் தலித் எழுத்துக்களுமே இப்போக்கை சக்தியிழக்கச்செய்தன எனலாம். மொழியின் கட்டமைக்கப்பட்ட புனிதங்களை நவீன பெண் படைப்பாளிகள் தங்கள் ஆவேசமிக்க கவிதைகளால் உடைத்து நொறுக்கிவிட்டனர்-சில அதீதங்களும் இருந்தன என்றபோதும்.மொழியின் எல்லைகளையும் சாத்தியங்களையும் அவர்கள் விரிவாக்கமும் செய்துள்ளனர்.மிகசமீப காலமாக எழுத வந்துள்ள திருநங்கையரின் மொழி அவர்களின் ஈராயிரமாண்டுத் தனிமையையும் கேட்கப்படாத உடல்/மன வாதைகளையும் சுமக்க இயலாமல் திணறுவதைக் கான முடிகிறது.ப்ரியாபாபு அவர்களுக்கான பொதுமொழியில் பேசுகிறார் எனில் லிவிங் ஸ்மைல் வித்யா தனித்த வேதனையை மனச்சிதைவை கூர்மையான மொழியில் பேசுகிறார்.

புதிதாக எழுதத்துவங்கும் இளம் படைப்பாளி தலித்/பெண்/திருநங்கையர்/சிறுபான்மையினர் எழுத்துக்களைச் சுமக்கும் ’மொழிகளை’ வாசித்து உள்வாங்குவது அவசியம்.

இலக்கியம் மொழியின் சாத்தியக்கூறுகளால் ஆனதல்ல.மொழியின் ரூபத்தில் வாழ்வின் சாத்தியக்கூறுகளால் ஆனது என்பதை மட்டும் ஒருபோதும் நாம் மறந்துவிடலாகாது.

2.உத்தி

கதையின் முதல் வரி எப்படி அமைய வேண்டும்.முடிப்பு எப்படி இருக்க வேண்டும்.ஒரு நிகழ்வை எந்தக்கோணத்தில் நின்று பார்க்க வேண்டும்.எந்தக் கதாபாத்திரத்தின் பார்வையில் கதையைச் சொல்வது.நான் பேசுவதாகவே அமைப்பதா அவன் அவள் என்று போவதா அல்லது ரமேஷ்,சுசீலா என்று கதாபாத்திரங்களுக்குப் பேர் வைத்து நகர்த்துவதா.அல்லது மாடு பேசுவதாகவோ புளியமரம் அல்லது குளத்தங்கரை அரசமரம் பேசுவதுபோலவோ கதையைச் சொல்லுவதா, நனவோடை உத்தியா முற்றிலும் உரையாடலாகவே கொண்டு செல்வதா ,யாராக இருந்து கதையைச் சொல்லுவது– இது போன்ற பல நூறு சின்னச் சின்ன நுட்பங்களையே நாம் உத்தி என்ற பேரால் குறிக்கிறோம்.

தான் சொல்ல வந்ததை வாசகனுக்குக் கடத்த நினைத்த உணர்வை சரியாகக் கொண்டுசெல்ல படைப்பாளி கையாளும் கலைத் தந்திரங்களே உத்தி எனப்படும்.

வேலையற்ற இளைஞனின் மனநிலை பற்றிய கரையும் உருவங்கள் என்கிற தன் கதையை வண்ணநிலவன் ”அவன் தலையைக் குனிந்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான்” என்று துவக்கியிருப்பார்.சக்கிலியர் சமூகத்தின் வாழ்வைச்சொல்ல வந்த பூமணியின் பிறகு நாவல் “ ஏலேய் சக்கிலியத்தாயிளி மாடு பாருடா படப்புல மேயிறத..” என்று துவங்கும்.கம்யூனிஸ்ட் இயக்கத்தை லட்சியவெறி பிடித்த அகம்பாவமாகக் காட்டும் நோக்கத்துடன் எழுதப்பட்ட ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல் நாவல் கைக்கொள்ளும் உத்தியும் மொழியும் நாம் கவனிக்கத்தக்கவை.ஒரு நாவலுக்குள்ளேயே சிறுகதைகள்,நாடகம்,கவிதைகள்,கடிதங்கள்,கட்டுரைகள்,நினைவுக்குறிப்புகள் என மொழியின் எல்லா வடிவங்களையும் கொண்டுவரும் உத்தி படைப்பாளிக்கு நிறையச் சுதந்திரத்தை வழங்குவதைக் காண்கிறோம்.

சுந்தரராமசாமியின் புளிய மரத்தின் கதை ஒரு உத்தி எனில் ஜேஜே சில குறிப்புகள் முற்றிலும் வேறான ஒரு உத்தியில் எழுதப்பட்டுள்ளது.ஜேஜே என்னும் கற்பனைப் பாத்திரத்தை நிஜம்போலும் படைத்து ஒரு புதிய வழியை அவர் படைப்புலகுக்குத் திறந்து விட்டார்.சமீபத்திய வரவான கீரனூர் ஜாகீர்ராஜாவின் வடக்கேமுறி அலிமா முற்றிலும் புதிய ஒரு உத்தியைக் கையாண்டுள்ளது.ஆதவன் தீட்சண்யாவின் லிபரல் பாளையத்துக்கதைகள் உலகமய காலத்தைப் படம் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட புதுவகை உத்தி எனக் கூறலாம்.கன்னட/மராட்டிய அனுபவங்களிலிருந்து உரம் பெற்று தமிழில் எழுதப்பட்ட கருக்கு,சிலுவைராஜ் சரித்திரம் போன்ற தன் வரலாற்று நாவல்கள் ஒரு புதுவகை உத்திதாம்.

இந்த உத்தி,வடிவம்,மொழி பற்றிய தன்னுணர்வு ஏதுமின்றிக் களங்கமில்லாத கிராமத்து மனதுடன் கதை சொன்ன கு.அழகிரிசாமி அந்தக் களங்கமற்ற படைப்பு மனதின் காரணமாகவே பல அற்புதமான படைப்புகளைத் தந்து நாம் மேலே பேசிய முறைமைகளுக்கெல்லாம் சவாலாக விளங்குகிறார்.நாட்டுப்புற மொழியுடன் ஒரு தத்துவப்பார்வையை இணைத்துப் படைத்த கி.ராஜநாராயணனும் இவ்வரிசையில் வைக்கத்தக்கவரே.

3.படைப்பு மனநிலை

எதைச் செய்வதற்கும் ஒரு மனசு வேண்டுமல்லவா? மனசில்லாமல் செய்யும் எதுவும் ஜெயிக்காது.கதை ,கவிதை எழுதவும் ஒரு மனசு வேணுமல்லவா? அதையே படைப்பு மனநிலை என்கிறோம்.ஒருமுறை தமுஎச அன்று நடத்திய நாவல் முகாமுக்கு வந்திருந்த எழுத்தாளர் அசோகமித்திரனிடம் படைப்பு மனநிலை பற்றி நம் தோழர்கள் கேட்டபோது அவர் சொன்ன பதில் : ”அப்படின்னு தனியா ஒண்ணும் இல்லை.இதுதான் என் வெளிப்பாட்டு வடிவம் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையும் தன் ஏற்பும் அழுத்தமான சமூக அக்கறையுமே படைப்பு மனநிலையாக வடிவெடுக்கும்”

அதெல்லாம் ஒரு இன்ஸ்டிங்க்ட்-ஒரு ஸ்பார்க்-எனச்சொல்லி உழைப்பால் வருவதல்ல படைப்பு மனநிலை என்று ஒதுக்கிச்செல்ல முயல்வார் உளர்.ஒரு துளிர்ப்பும் வெடிப்பும் படைப்புக்கு முக்கையம் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை.ஆனால் ஒரு ஸ்பார்க்- மின்னல்கீற்று மட்டுமே படைப்பாக முடியாது.படைப்பை அது தூண்டலாம்.நன்கு பண்படுத்தப்பட்ட நிலம்போலத் தன் மனதை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும் படைப்பாளியின் மனதில் இந்துத் துளி வீழும்போதுதான் படைப்பு கிளை பரப்பி விரிகிறது.

இந்தத் “தயார் நிலை” என்பது என்ன?

இடையறாத வாசிப்பும் எழுத்து முயற்சியும் இன்னொருவர் நிலைபாட்டிலிருந்து தன்னையும் இந்த வாழ்வையும் பார்க்கும் மனப்பயிற்சியும் பிறர் வலிகளைத் தன் வலியாக உணரும் பண்பாடும்தான் இந்தத் தயார்நிலையாகும்.நான் யார் என்ற கேள்விக்கு மனித குல வரலாற்றின் நெடும்பாதையில் இன்று வாழ நேர்ந்த மனிதன் நான் எனப்பதிலுரைக்கும் மனமே இந்தத்தயார் நிலை.அறிவால் இவ்வுலகின் போக்கையும் பிரபஞ்ச இயக்கத்தையும் புரிந்துகொள்ளும் அறிவு மேதமையும் படைப்பாக்க உந்துதலும் இணையும் புள்ளிதான் இந்தத் தயார் நிலை.

பொதுவாக தமிழ்ப்படைப்பாளிகள் மத்தியில் அறிவுக்கு எதிரான ஒரு மனநிலை நீண்ட காலம் இருந்து வந்தது.இக்கதையை இவர் தன் மனதால் எழுதவில்லை.மூளையால் எழுதிவிட்டார் என்பது போன்ற விமர்சனக்குரல்களை நாம் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.இந்த்ப்பார்வையின் பின் உள்ள அரசியல் எதுவெனில் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வைச் சொல்லி விடாமல் முற்றிலும் ஒரு மத்திய தர வர்க்க மனோபாவமான உள்முகப்பயணம்தான் இலக்கியத்தின் அடிப்படை என்று நிறுவும் அரசியல்தான்.

இன்னொரு புறம் இலக்கியம் எதையும் சொல்ல வேண்டியதில்லை என்கிற போக்கும் லட்சியவாதத்துக்கு எதிர்நிலையில் அறம் என்பதை வைத்து(இரண்டும் எதிரானவையா?) ஒருமுகப்பட்ட மனிதப்பயணம் சாத்தியமில்லை என்கிற போக்கும் வளர்ந்து வருகிறதைப் பார்க்கிறோம்.சுந்தர்ராமசாமி அவர்கலின் ஒரு வாசகத்தையே இதற்குப் பதிலாகக் கூறலாம்:

“ இலக்கியம் சங்கீதம் அல்ல என்பதாலேயே அர்த்தமும் தத்துவமும் அதன் உடன் பிறந்த சங்கடங்கள் .எனவே தத்துவத்தின் ஒரு சாயலில் ,திட்ட்த்தின் ஒரு நிலையில் நின்றே தொழிலைத் தொடங்க வேண்டியதாக இருக்கிறது.எனினும் கலைஞன்,சிருஷ்டி கருமத்தில் முன்னேறும்போது, மனசை ஏற்கனவே பற்றியிருக்கும்முடிவுகள்,தத்துவச்சாயல்கள் இவற்றைத்தாண்டி ,சத்திய வேட்கை ஒன்றையே உறுதுணையாகக் கொண்டதன் விளைவால்,கலை சத்திய வெறி பெற்று, குறுகிய வட்டங்களை ‘நிரூபிக்க’க் குறுகாமல்,அனுபவத்தின் நானாவிதமானதும் மாறுபட்டதும் முரண்பட்ட்துமான சித்திரங்களின் மெய்ப்பொருளை உணர்த்த வேண்டும்.நான் நம்பும் கலை இது”- உடன்படவும் முரண்படவுமான உள்ளடக்கத்தோடு வந்து விழுந்துள்ள வரிகள் இவை.இவ்வரிகள் குறித்து நிறைய ஒட்டியும் வெட்டியும் பேச முடியும்.இப்போதைக்கு இலக்கியம் சங்கீதம் அல்ல.அதற்கு அர்த்தமும் தத்துவமும் வேண்டும் – இருந்துதான் தீரும் என்றுதான் சுந்தரராமசாமி கூறியிருக்கிறார் என்று அடிக்கோடிட்டு விட்டுச் செல்வோம்.

வாழ்க்கை என்னும் பேராற்றிலிருந்து ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கான வடிவமான கதை,கவிதை,நாவல்,காவியம் என்னும் பாத்திரத்தில் துளி நீரை/ஒரு குவளை நீரை/ஒரு வாளி நீரை/ஒரு அண்டா நீரை வாசகருக்கு அள்ளி வருகிறான்.அந்தத் துளி நீரிலும்கூட –குவளை நீரிலும் கூட- அப்பேராற்றின் வரலாறும் வாசமும் ருசியும் தன்மையும் அறியத்தக்கதாக –உணரத்தக்கதாக-உட்கொள்ளத் தக்கதாக இருந்திட வேண்டும்.அதற்கு உதவும் விதமாக நீரைச் சேந்திக் கொண்டுவர உதவும் உருவும் உத்தியுமே நாம் எப்படி எழுதுவது என்பதைக் கற்பிக்கும்.

-ச.தமிழ்ச்செல்வன்

என் சக பயணிகள்-19 கவிஞர் பரிணாமன்

parinaman for pp என்னைவிட ஆறேழு வயது மூத்தவரான கவிஞர் பரிணாமன் என் வாழ்நாள் முழுதும் என மனதுக்குள் இசைத்துக்கொண்டிருக்கும் பல வரிகளை எனக்குத்தந்தவர்.பொதுவுடமை இயக்கத்தின் பொக்கிஷங்களில் ஒருவராக அவரை எப்போதும் நான் கொண்டாடுவேன்.அவரை நான் அறியத்துவங்கியது நான் ராணுவப்பணியிலிருந்து திரும்பிய 1978-79 களில்தான் என்று நினைவு. கோவில்பட்டியில் சரஸ்வதி தியேட்டர் சாலையில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜீவா படிப்பகத்தில் ஓலைப்பாய் மீது கிடக்கும் மகாநதி இலக்கிய இதழின் வழித்தான் முதலில் அவரை அறிந்தேன்..அதை நடத்திய ஆசிரியர் குழுவிலும் பரிணாமன் இருந்தார் என்று நினைவு.மதுரையிலிருந்து அதை வெளிக்கொண்டு வந்தார்கள்.அப்போது மதுரையில் பரிணாமன்,சகுந்தலை,நவபாரதி என ஒரு வலுவான குழு கலை இலக்கியப் பெருமன்றத்தில் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.கல்பனா இதழிலும்கூட இந்தக் குழுவே பெரிய பங்களிப்பு செய்ததாக ஞாபகம்.

அப்புறம் அவருடைய முதல் கவிதைத்தொகுப்பான ஆகஸ்ட்டும் அக்டோபரும் கையில் கிடைத்தது.அதிலிருந்த பல கவிதைகளை எங்கள் கரிசல் குயில்கள் இசைக்குழுவைச்சேர்ந்த கிருஷ்ணசாமியும் சந்திரசேகரும் மெட்டமைத்துப் பாடத்துவங்கியிருந்தார்கள்.அப்போது அவ்விசைக்குழுவில் பின் பாட்டுப் பாடுகிறவனாகவும் குழு மேனேஜராகவும் நானும் ஊர் ஊராகப் போய்க்கொண்டிருந்தேன்.எங்கள் குழுவுக்கு அன்று உயிர் தந்த கவிகளாக பரிணாமனும் நவகவியும் பின்னர் ரமணனும் இருந்தார்கள்.

பின் பாட்டுப்பாடியே அவருடைய பல பாடல்கள் எனக்கும் மனப்பாடம் ஆகியிருந்தன.இடதுசாரி இயக்கத்திலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இணைந்து வேகத்துடன் மக்களிடம் சென்று பணியாற்றும் ஆவேசம் கொப்பளித்துக் கொண்டிருந்த அந்த நாட்களின் எம் மனங்களை அலைக்கழித்த இசைப்பாடல்களை பரிணாமன் வாரி வாரி வழங்கிக்கொண்டிருந்தார். ஒரு கட்டிடம் கட்டும் கொத்தனாராம் .படிப்பு ஒண்ணும் கிடையாதாம்.பாட்டு பாட்டு அப்படி ஒரு பாட்டுக்கட்டும் படைப்பாளியாம் என்று அவரைப்பற்றிய கசிவுகள் எங்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தன.ஆனால் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு மட்டும் கிட்டவில்லை.

எட்டயபுரத்தில் முற்போக்கு வாலிபர் சங்கம் ஜீவா காலந்தொட்டு ஆண்டுதோறும் பாரதி விழா நடத்தி வருகிறது.1981 இல் அங்கு நடந்த பாரதி நூற்றாண்டு விழாவில் அவர் கவிதை வாசிக்கிறார் என்று கேள்விப்பட்டு ஓடினோம்.பேண்ட் சட்டை அணிந்த ஒரு ஒல்லியான உருவம் மேடையேறி, பயந்தது போன்ற தொனியில் சன்னமான ஒரு குரலில் இசையோடு பாடத்துவங்கியது.

மண் எண்ணெய் விளக்கினிற்

பாட்டுக்கட்டி இந்த

மண்ணுக்குக் கொண்டு வந்தேன்

அந்த மாகவி இங்கெங்கோ

மறைந்து நிற்பானென்று

மனப்பால் குடித்து வந்தேன்

என்கிற ஆரம்ப வரிகளைப் பாடி ஒரு கணம் நிறுத்தினார்.கரவொலியால் எட்டயபுரம் அதிர்ந்தது.

கவி தவழ்ந்தோடிய காலடி மண்ணையும் கண்டுஞ்சென்றேன் முன்பு கொண்டுஞ்சென்றேன்.அவனது ஒரு நூறு ஆண்டுக்கவியரங்கில் ஆள வந்தேன்புகழ் சூழ வந்தேன்.. என்று பத்திக்குப் பத்தி கைதட்டலோடு அந்நெடுங்கவிதை நகர்ந்து கொண்டிருந்தது.கூட்டத்தின் கடைசியில் நின்றபடி அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.வீழ்க அணுகுண்டு வீசும் கொடுமைகள் வீழ்கவே யுத்தங்களே என்று உலகமெல்லாம் நல்லாருக்கட்டும் என்கிற நல்ல மனசோடு அவர் பாடி முடித்த்தும் என் கண்களில் கண்ணீர் மெல்லக் கசிந்தது.ஒரு ஏழைக்கவியின் உள்ளத்திலிருந்து இந்த வரிகள் –வாழ்க நிரந்தரம் வாழ்க நல் அமைதி வாழ்கவே சோசலிசம் என்று –சத்தியத்தின் குரலாய் இசையாய் வந்து என் உள்ளத்தில் வந்து இறங்கியபோது அடைந்த பரவச மனநிலையைச் சொல்லாலே விளக்கி விட முடியாது.அன்று அடைந்த அதே உணர்வை நான் மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற ஆண்டு சமயபுரம் எஸ்.ஆர்.வி.பள்ளியில் பெண் குழந்தைகள் சேர்ந்து “ எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்கிற பாடலைப்பாடிக்கேட்டபோதுதான் அடைந்தேன்.கவிகளும் குழந்தைகளும் இந்த உலகம் நல்லா இருக்கப் பாடும்போது அவ்வரிகளுக்குப் புது அர்த்தமும் புத்துணர்ச்சியும் கிடைத்து கேட்பவர் மனம் நடுங்கி விடுவதாக உணர்கிறேன்.

பிற கவிஞர்களையும் படைப்பாளிகளையும் பற்றி இத்தொடரில் எழுதியதுபோல இசைப்பாடல்களால் எம் நெஞ்சங்களை நிறைத்த பரிணாமன் பற்றி எழுதி வாசக மனங்களுக்குக் கொண்டு சேர்க்க முடியுமா என்கிற சந்தேகம் கூடவே வருகிறது.என் வாழ்வின் திருப்பங்களோடு அவர் தந்த வரிகள் பின்னிக்கிடக்கின்றன.தவிர அவ்வரிகளைக் கிருஷ்ணசாமி பாடக்கேட்க வேண்டியுமிருக்கிறது.இசையோடு தான் பரிணாமனும் பாடுவார்.

பாரதி பிடித்த தேர் வடமும் –நடு

வீதி கிடக்கிறது- அதைப்

பற்றிப் பிடித்து இழுப்பதற்கு ஊர்

கூடித்தவிக்கிறது.

நம்பிக்கை வைத்து நெம்புகோல் எடுத்து

நடப்போம் வாருங்கள் –நாம்

நடந்தால் தேர் நடக்கும் ; அன்றேல்

வெய்யில் மழையில் கிடக்கும்...

நம்பிக்கை வைத்து நெம்புகோல் எடுத்து நடப்போம் வாருங்கள் என்று வரிகள் உச்ச ஸ்தாயியில் சஞ்சாரிக்கும்போது ஒவ்வொரு முறையும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடித் தேரை நகர்த்தும் பெருமுழக்கம் என் மனதிலும் செவிகளிலும் காட்சியாக விரிந்து கிளர்ச்சியடைய வைக்கும்.அவருடைய எந்தக்கவிதையும்/ இசைப்பாடலும் கேட்போர் மனங்களில் சித்திரங்களாகவே விரியும்.

அவர் இசைத்த பாடல்களில் என் மனம் அடிக்கடி பாடிக்கொண்டிருக்கும் ஒரு பாடல் எங்களைத் தெரியலையா என்ற பாடல்.மக்களுக்கான போராட்டத்தில் எங்கள் இயக்கத்தோழர்கள் ஒவ்வொரு முறை கொல்லப்படும்போதும் யாருக்காகப் பாடுபட்டார்களோ அந்த வர்க்கத்து மக்களே அவர்களின் வீரமரணம் பற்றி அறியாதவர்களாக அவரவர் பாடுகளில் உழலும் காட்சியைக்காணும்போதும் கண்ட இழவையெல்லாம் முதற்பக்கத்தில் செய்தியாக்கும் ஊடகங்கள் எம் தோழர்களின் மரணங்களை ஒரு ஓரத்துப் பெட்டிச்செய்தியாகக்கூட வெளியிட மறுக்கும்போதும் 2000 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட ஏசுவுக்காக இப்போதும் கதறி அழும் உழைப்பாளி மக்கள் வாரம் ஒரு தோழரைப் பலி கொடுக்கும் இட்துசாரி இயக்கத்தைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும்போதும் என இது போன்ற தருணங்களிலெல்லாம் என் மனம் அழும்.அப்போது பரிணாமனின் இப்பாடல்தான் என் மனதில் இசைக்கும்.அப்பாடல் வரிகளின் வழியே என் துக்கத்தைக் கரைப்பேன்.பல முறை மனம் விரக்தியில் ததும்பும்போது இப்பாடலைச் சத்தமாகப் பாடியபடி ராத்திரி தெருக்களில் நடந்து சென்றதுண்டு.

எங்களைத் தெரியலையா-இந்த

இசையைப் புரியலையா?

திங்கள் ஒளியினில் துயில்வோரே-தினம்

சூரியத்தீயினில் உழைப்போரே

என்று துவங்கும் அப்பாடல் நாங்கள் யார் என்று உழைப்பாளி மக்களுக்கு அறிமுகம் செய்தபடி முன்னகர்ந்து பாடல் முடியும் போது பெருத்த நம்பிக்கையை விதைத்தபடி முடியும்.என் சோகம் மறைந்திருக்கும்:

ஆன்ம பலமுள்ள மானிடரே-எங்கள்

அணிவகுப்பைச் சற்றுப் பாருங்கள்

அமெரிக்க ஆதிக்கம் பின் வாங்க..

வியட்நாம் வென்றதைக் கூறுங்கள்

பூமியின் முகத்தை உழைப்பால் மாற்றிடும்

புயலின் சின்னங்களே-நம்

போரின்னும் முடியவில்லை-இந்தப்

பூமி முழுவதும் விடியும்வரை!

பொதுவுடமை இயக்கத்தில் நம்பிக்கையோடு இயங்கும் படைப்பாளியாக அவர் எனக்கு முன்னால் பாடியபடி நடந்து போய்க்கொண்டிருப்பதான ஒரு சித்திரம் எனக்கு எப்போதும் உண்டு.தண்ணீரைப்போல இலகுவான மனதுடன் இயங்கும் ஓர் எளிய அன்புள்ளம் பரிணாமன் என்கிற உணர்வு எப்பவும் எனக்குண்டு.

என்னை இக்கதிக்கு ஆளாக்கியவர்களில் ஒருவரான தனுஷ்கோடி ராமசாமியைப் போன்ற உலகின் சிறந்த அப்பாவிகளில் ஒருவர் இவர் என்கிற படிமமும் பரிணாமன் பற்றி அவரோடு நேரில் அதிகம் பழகாமலே எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. பல நிகழ்வுகள் அவரைப்பாதித்தது போலவே அவ்வக்காலங்களில் என்னையும் பாதித்துள்ளது.குறிப்பாக சோவியத் யூனியன் சிதைந்தபோது கதறியழுத தோழர்களில் ஒருவனாக அவரைப்போல நானும் இருந்தேன் என்பது அவரது கவிதை வழி அறிய நேர்கையில் இன்னும் மனம் நெருக்கமானது.தாயுண்டு தமிழுண்டு! நீ எங்கே சோவியத்தே?,புதிய ருசியா எழும், கவி வாக்குப் பொய்க்குமோ? மற்றும் ஒப்பாரியல்ல போன்ற கவிதைகளில் சோவியத் சிதைவைப் பாடித் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்.உண்மையில் சோவியத் தகர்வு 90களில் என் போன்ற பலரை தலைகுப்புறப் புரட்டிப்போட்டது உண்மை.அது பற்றிய மனப்பதிவுகளை நாங்கள் யாரும் இன்றுவரை எழுதவில்லை.

இப்படி எப்படி ஆனதுவோ?

எதிரியும் நம்பக்கூடியதோ? என்று துவங்கும் பாடல் நினைக்க நெஞ்சுக்கு வேதனைதான் நேரக்கூடாத சோதனைதான்! நன்றிக்கடன்பட்ட நாடெல்லாம் என்று காணும் அந்த சோவியத்தை?

ஆற்றலுக்கோர் அளவில்லை

என்பதனை உலகுக்குக்

காட்டிநின்ற பெருங்கனவே

கண்மணியே சோவியத்தே!

ஒரு தேசத்தைக் கண்மணியே என்று சொல்லிக் கசிந்துருகும் மனம் சோவியத்தின் பால் இருந்தது.என் இரண்டாம் தாயகம் என்று சோவியத்தை மூத்த படைப்பாளி ஜெயகாந்தன் சொன்னது நினைவுக்கு வருகிறது.அது ஒரு கனாக்காலம் போல் ஆகிவிட்டது.அக்காலத்தின் அடையாளமாகப் பரிணாமனின் வரிகள் என் முன்னே விரிந்து கிடக்கின்றன.

தமிழக நெல் களஞ்சியமாம்

தஞ்சை மண்ணின் ஓரம்

தாத்தப்பட்ட நாப்பத்திரண்டு

பூக்கள் எரிந்த கோரம்

நெஞ்சம் குமுறும் அம்மா அம்மா

என்கிற அவருடைய பாடலை கிருஷ்ணசாமி பாடிய பல மேடைகள் கண்ணீரால் மீண்டும் கட்டப்பட்டன.கேட்ட மக்கள் கரைந்து நிற்பார்கள்.

இசைப்பாடல்களுக்கும் இடதுசாரி இயக்கங்களுக்கும் நீண்ட வரலாற்றுத் தொடர்பு உண்டு.தமிழகத்தில் இடதுசாரி இயக்கம் வேர் கொள்ளத் துவங்கிய நாட்களில் தோழர் ஜீவாவின் காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக் கூழுமில்லை என்கிற கோவை ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர் போராட்டம் பற்றி எழுதிய பாடல் எத்தனையோ தோழர்களால் தமிழகமெங்கும் பாடப்பட்டது.பின்னர் அடுத்தடுத்துச் சில இசைக்குழுக்களை பொதுவுடமை இயக்கம் உருவாக்கி மக்களிடம் அனுப்பியது.பாவலர் வரதராஜன் குழு,திருமூர்த்தி குழு,மதுரை தியாகி ராமசாமி கலைக்குழு, பிற்காலத்தில் கரிசல் குயிலகள் குழு,கைலாசமூர்த்தி பாடல் குழு எனத்துவங்கி இன்று ஏராளமான குழுக்களும் தனிப்பாடகர்களும் இடதுசாரி இயக்கங்களில் பாடி வருகிறார்கள்.இவர்கள் எல்லோருக்கும் பாடல்களை வழங்கும் வற்றாத ஊற்றாகப் பரிணாமன் எம்மோடு வாழ்கிறார்.

அமெரிக்க்க் கறுப்பின மக்கள் மத்தியில் பணியாற்றிய இசைக்குழுக்கள் பற்றி ஆய்வு செய்து வெளியாகியுள்ள MY SONG IS MY WEAPON என்கிற நூலைப்போல தமிழகத்தில் மக்கள் இயக்கங்களோடு கலந்து நின்ற –நிற்கிற- இசைக்குழுக்கள்-பாடகர்கள்-கவிஞர்கள் குறித்த வரலாற்றை இனிமேல்தான் நாம் யாரேனும் எழுத் வேண்டியிருக்கிறது.அவ்வரலாற்றில் மதிக்கத்தக்க ஒரு பங்கினை ஆற்றியவராக பரிணாமன் இருப்பார்.சந்தக்கவிதைகள் மறைந்து புதுக்கவிதைகள் வந்து சேர்ந்த இடைவெளியில் இசைப்பாடல்களை நம் சமூகம் மறந்து விட்டதுபோல ஆகிவிட்ட்து.இசைப்பாடல் என்ரால் அது சினிமாப்பாடல் என்றாகிவிட்டது.அதைத் தாண்டி சமூக அக்கறைமிக்க கிளர்ச்சிப்பாடல்களை பரிணாமன் போன்றோர் தொடர்ந்து வழங்கி வருவது முக்கியமானது.

சமீபத்தில் வெளியாகியுள்ள அவரது கவிதைத் தொகுப்பான என் பெயர் இந்தியா என் மனதைத் தொடவில்லை. மக்கள் போராட்ட வரலாற்றிலிருந்து வார்த்தைகளை உருவி எடுத்து மனசிலிருந்து நூலெடுத்துக் கோர்த்துக் கவி பாடும் பரிணாமனின் கவிமனம் திட்டமிட்டுச் செய்யும் பணிகளில் சறுக்கி விடத்தான் செய்கிறது.

கல்பனா மாத இதழ் வந்துகொண்டிருந்தபோது பரிணாமன் அதில் ஒரு நாவலும் எழுதியிருக்கிறார்.உரைநடையில் அவர் எழுதி ஏதும் நான் படித்ததில்லை.உழைப்பாளி வர்க்கத்திலிருந்து உருவாகி வந்த அபூர்வமான கவி பரிணாமன்.

பாரதத் தென் கோடி

பாண்டி மாமதுரையில்

பாட்டாளியாய் வளர்ந்தேன்!

பார்வை உலகெங்கும்

அளவளாவிடப்

பாட்டுரம் பெற்றுயர்ந்தேன்

சாரதி பாரதி

ஆகிட ரத்த்தினில்

சஞ்சரித்தெங்கும் வந்தேன்

சமகாலப் பாடலில்

பரிணாமன் என்றதோர்

சந்ததி கொண்டு வந்தேன்.

பரிணாமன் கவிதைகள் தொகுப்பை ஸ்ரீ செண்பகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.என் பெயர் இந்தியா தொகுப்பை என்சிபிஎச் வெளியிட்டுள்ளது.