Tuesday, January 10, 2012

மாற்றுத்திறனாளி விக்னேஷ்வர் படுகொலை

Bhuvaneshwaran 3

நில மோசடிக்கென்று தனி காவல்துறை விசாரணையெல்லாம் நடப்பதாக சொல்லப்படுகிறது.திமுக முன்னாள் அமைச்சர்களெல்லாம் கைதாகவாதாக பத்திரிகைகளில் படங்கல் வருகின்றன.ஆனால் என்ன ஆட்சி மாறினாலும் இந்த மாஃபியா கும்பலின்  ஆதிக்கம் தமிழகத்தை ஆக்டோபஸ் போல கவ்விக்கொண்டிருக்கிறது.

நேற்று தூத்துக்குடி மாவட்ட சிபிஎம் செயலாளர் கனகராஜ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.அவரது துணைவியார்  தலைக்காயத்துடன் மருத்துவமனையில் இருக்கிறார்,இன்று  இதோ நம் அன்புத்தோழன் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் செயல்வீரன் புவனேஷ்வரன் சென்னைக்கு அருகே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.நினைக்கவே நெஞ்சம் பதைக்கிறது.

திரு.புவனேஷ்வரன் அவர்கள் ஆவடி அருகே மோரே கிராமத்தில் நில மோசடிக்கு எதிராகக் கடந்த 5 ஆண்டுகளாகப் போராடி வருபவர்.அப்பகுதியிலுள்ள வீராபுரம் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாலராகவும் பணியாற்றி வருபவர்.தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக கடந்த ஆண்டு சிலருக்கு மோசடியாளர்களிடமிருந்து நிலம் மீட்டுத்தரப்பட்டது.புவனேஷ்வரன் உள்ளிட்ட இன்னும் சிலருடைய அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படவில்லை.சட்டரீதியாகவும் ஜனநாயக அடிப்படையிலும் அவர் தொடர்ந்து போராடி வந்த சூழலில் நேற்று 10 ஆம் தேதி பட்டப்பகலில் அவர் நில மோசடிக்கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும்.உரிய தண்டனை பெற வேண்டும்.நில மோசடியாளர்களுக்கு உடந்தையாக இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரிக்கப்பட்டுக் கைது செய்யப்பட வேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய நிலம் மீட்டுத்தரப்பட வேண்டும்.கொலை மிரட்டல் பற்றி அறிந்தும் மெத்தனமாக இருந்த காவல்துறையும் விசாரிக்கப்பட வேண்டும்.

அனைவரும் கண்டனக்குரல் எழுப்புவோம்.அவர் அனைத்துவகை மாற்றுத்திரனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்டப்பொருளாளராகப் பணியாற்றியவர்.

தீரமிக்க ஒரு தோழனை இழந்து நிற்கும் அவருடைய இயக்கத்துக்கும் குடும்பத்துக்கும் தோள் கொடுப்போம்.

Bhuvaneshwaran 4

Monday, January 9, 2012

நக்கீரன் அலுவலகத்தின் மீது தாக்குதல் தமுஎகச கண்டனம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக்குழு

11,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625011

421,அண்ணாசாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018

நக்கீரன் அலுவலகத்தின் மீது தாக்குதல்

தமுஎகச கண்டனம்

முதல்வர் ஜெயல்லிதா அவர்கள் மீது அவதூறுச் செய்தி வெளியிட்ட்தாக்க் கூறி சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகத்தை அதிமுக தொண்டர்கள் 300 பேர் திரண்டு சென்று தாக்கி அங்குள்ள பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர்.ஒரு சட்ட மன்ற உறுப்பினர் தலைமையில் இந்த அராஜகம் நிகழ்ந்துள்ளது.பத்திரிகையில் செய்தி வெளியிட்டால் அதன் மீது கருத்து மாறுபாடு இருக்கும் பட்சத்தில் சட்டபூர்வமாக வழக்குத்தொடுத்தோ பிரஸ் கவுன்சிலில் முறையிட்டோ எதிர்ப்பைத் தெரிவிக்க ஜனநாயகப் பூர்வ வழிகள் பல இருக்க அதையெல்லாம் கைவிட்டு இப்படி நேரடித் தாக்குதலில் ஆளும் கட்சியினரே இறங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியது.முதல்வர் அவர்களும் இச்செயலைக் கண்டனம் செய்யாத்து வருத்த்துக்குரியது. திருச்சியில் நக்கீரன் பத்திரிகையை எரித்தபோது அதிமுக தொண்டர் ஒருவர் தீக்காயத்துக்கு ஆளானதும் நடந்துள்ளது.இத்தகைய கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வன்முறைகளை தமுஎகச வன்மையாக்க் கண்டனம் செய்கிறது.

அதே சமயத்தில் பரபரப்பான வியாபாரத்துக்காக செய்திகளை வெளியிடுவதில் எந்த எல்லைக்கும் செல்ல்லாம் என்கிற நக்கீரனின் போக்கை ‘பத்திரிகை சுதந்திரம்’ என வரவேற்க முடியாது என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்

ச.தமிழ்ச்செல்வன் சு.வெங்கடேசன்

மாநிலத்தலைவர் பொதுச்செயலாளர்

மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்/வலைத்தளத்தில் வெளியிடுமாறு வேண்டுகிறோம்

சு.வெங்கடேசன்

9-1-2012

காவல் கோட்டம் – ஓர் அனுபவம்

இந்த நேரத்தில் தமிழ்பேப்பர்.நெட் டில் வெளிவந்துள்ள இக்கட்டுரை முக்கியத்துவமும் சுவாரஸ்யமும் பெறுகிறபடியால் கீழே தந்துள்ளேன்.

சி.சரவணகார்த்திகேயன்

“Good writers write the kind of history good historians can’t or don’t write.” – Daniel Aaron

சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலை நான் வாசித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தாலும், அதற்கு 2011 சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கும் இவ்வேளையில் அதைப் பற்றி எழுத முயல்வது பரிசுத்த‌மான‌ சந்தர்ப்பவாதமாகவே படுகிறது. ஆனாலும் இப்போதேனும் இந்த நாவல் குறித்த கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு அமைந்ததே என்றே எடுத்துக்கொள்கிறேன்.

காவல் கோட்டம் என்கிற பிரம்மாண்டமான நாவல் வெளியாகியிருக்கிறது என்ற தகவல் டிசம்பர் 2008 வாக்கில் சிறுபத்திரிக்கைகள் வாயிலாக அறிந்திருந்தாலும் அது குறித்த முதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆண்டிறுதி ஆனந்த‌ விகடன் இதழில் வெளியிடப்பட்ட விகடன் அவார்ட்ஸ் 2008 தான். அதில் அவ்வாண்டின் சிறந்த நாவல் என்று காவல் கோட்டம் நாவலைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

பிப்ரவரி 2009 காலச்சுவடு இதழில் ஆ. இரா. வேங்கடாசலபதி காவல் கோட்டம் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை (களவியல் காரிகை) வெளியாகி இருந்தது.

மார்ச் 2009 தீராநதி இதழில் வெளியான எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய விமர்சனக் கட்டுரையான ‘காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்’ (பகுதி-1, பகுதி-2) தான் அடுத்த‌ தூண்டுகோல். அதில் விழுந்திருந்தது வெறுப்பின் சாயை மட்டுமே என்பது நாவலைப் படிக்காமல் கட்டுரையின் பாணியிலேயே தெரிந்து விட்டது.

ச.தமிழ்ச்செல்வன் மற்றும் ம.மணிமாறன் ஆகியோர் இதைக் கண்டித்து மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தனர். மேலாண்மை பொன்னுச்சாமியும் ‘காவல் கோட்டம் : மீள் விசாரணை – ஆயிரம் பக்க அதிசயம்’ என்று நாவலைப் புகழ்ந்துரைத்து ஒரு விமர்சனம் எழுதினார். ஜெயமோகனும் சற்று நாசூக்காக இதைக் கடிந்து எழுதியிருந்தார் (“முன்நிலைபாடுகளும் கசப்புகளும் இல்லாமல் வாசிப்பதே”). எஸ்.ரா.வின் மொழியா இது என செல்வேந்திரன், ஹரன் ப்ரசன்னா, யாழிசை லேகா உள்ளிட்ட சில வலைப்பதிவர்களும் ஆச்சரியம் காட்டி இருந்தனர்.

ஜ.சிவகுமார் என்ற சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை ஆகிய நாவல்களுடன் காவல் கோட்டத்தை ஒப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார்.

பிற்பாடு அக்டோபர் 2009ல் ஜெயமோகன் காவல் கோட்டம் பற்றி மிக விரிவாக தன் வலைப்பதிவில் எழுதினார் (பகுதி-1, பகுதி-2, பகுதி-3, பகுதி-4, பகுதி-5). அவர் இதுகாறும் வேறு ஏதேனும் நாவலுக்கு இது போன்றதொரு நீண்ட விமர்சனம் எழுதி இருக்கிறாரா என்பது சந்தேகமே. இந்தத் தனித்துவமே எனை வசீகரித்தது.

அதன் காரணமாகவே சு.வெங்கடேசனின் எந்தப் படைப்பையும் அதற்கு முன்பு படித்ததில்லை என்ற போதிலும் ஜனவரி 2010 சென்னைப் புத்தகக் காட்சியில் காவல் கோட்டம் நாவலை வாங்கினேன். கொஞ்சமும் மெருகு கலையாத புது மணப்பெண் மாதிரி காத்திருந்தது காவல் கோட்டம்.

பின் 2010ன் கோடையில் என்பதாக ஞாபகம் – காவல் கோட்டத்தை முதன் முதல் ஸ்பரிசித்தேன். கிட்டதட்ட ஒரு மாதம் போல் நீடித்த நீண்ட கூடல் அனுபவமது. கூடலை நீட்டிப்பதற்காக அல்லாமல் தொடர்வதற்காக Start and Stop Technique பயன்படுத்த வேண்டி இருந்தது. இடையில் சற்றே இளகிக் கொடுத்தாலும் இறுதி வரை மிகுந்த உழைப்பையும் பொறுமையையும் கோரும் ஓர் அடங்காப் புரவியாகவே இருந்தது காவல் கோட்டம். சமீபத்தைய மறுவாசிப்பிலும் கூட‌ அப்படியே தான்.

எந்த சந்தர்ப்பத்திலும் நாவலின் எந்தப் பகுதியையும் என்னால் தொடர்ச்சியாய் மூன்று மணி நேரத்திற்கு மேல் படிக்க இயலவில்லை. இடைவெளி எடுத்துக் கொண்டு அதுவரை படித்ததை கிரகித்து உள்வாங்கி ஜீரணித்த பின்பே அடுத்த பகுதியை மீண்டும் தொடர வேண்டி இருந்தது. இதன் அர்த்தம் காவல் கோட்டம் நாவல் சுவாரஸ்யமாய் இல்லை என்பதில்லை. இதன் அடர்த்தியும், செறிவும் அத்தகைய அக்கறையை, கவனத்தைக் கோருகிறது. இதை ஒரு வாசிப்பு என்று சொல்வதை விட ஓர் அனுபவம் என்பதே சரி. இதற்கு முன்பு இத்தகையதோர் அனுபவத்தைத் தந்த நாவல் என்றால் அது ஜெயமோகனின் விஷ்ணுபுரம் தான்.

நாவல் இதுவரை மூவாயிரம் பிரதிகள் விற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமற்றதொரு தகவல் வழி அறிகிறேன். அது உண்மையெனில் அதில் ஒரு சதவிகிதம் பேராவது (அதாவது முப்பது பேர்) இந்நாவலை முழுக்க ஊன்றிப் படித்திருப்பார்களா என்கிற என் அடிப்படைச் சந்தேகத்தை நேரடியாக‌வே இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

*

நாவல் பற்றிப் பேசப்புகும்முன் தமிழில் என் வரலாற்று நாவல் வாசிப்புத்தகுதியை கொஞ்சம் எடை போட்டுக் கொள்வோம். இதுவரை கல்கி, சாண்டில்யன், அகிலன், கருணாநிதி, ர.சு.நல்லபெருமாள், ஜெகசிற்பியன், விக்கிரமன், அரு.ராமநாதன், ப.சிங்காரம், பிரபஞ்சன், சுஜாதா, பாலகுமாரன், ரா.கி.ரங்கராஜன், கௌதம நீலாம்பரன், கவிஞர் வைரமுத்து, விசாலி கண்ணதாசன் ஆகியோர் எழுதிய குறைந்தபட்சம் நூறு சரித்திரப் புதினங்களையேனும் வாசித்திருப்பேன்.

அண்ணாத்துரை, ந.பார்த்தசாரதி, கோவி. மணிசேகரன், ஸ்ரீவேணுகோபாலன், கண்ணதாசன், மு.மேத்தா, இந்திரா சௌந்தர்ராஜன், பா.விஜய் ஆகியோர் எழுதிய சரித்திர நாவல்கள் எதையும் படித்ததில்லை. தமிழின் முதல் நாவலான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் படித்ததில்லை. பி. ஆர். இராஜமையர் எழுதிய முதல் தொடர்கதையான கமலாம்பாள் சரித்திரம் படித்தது இல்லை. தமிழின் முக்கிய சரித்திர நாவல் முயற்சிகளாகக் குறிப்பிடப்படும் சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம், பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் இரண்டையும் படித்ததில்லை. கள்ளர் பற்றிப் பேசும் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை இரண்டையும் கூட இதுவரை படித்ததில்லை.

வாசித்தவரையில் கீழ்க்காணும் நாவல்கள் முக்கியமானவையாகப் படுகின்றன: பொன்னியின் செல்வன் (கல்கி), ஜலதீபம் (சாண்டில்யன்), கல்லுக்குள் ஈரம் (ர.சு. நல்லபெருமாள்), புயலிலே ஒரு தோணி (ப.சிங்காரம்), வீரபாண்டியன் மனைவி (அரு.ராமநாதன்), பொன்னர் சங்கர் (கருணாநிதி), வானம் வசப்படும் (பிரபஞ்சன்), நான் கிருஷ்ணதேவராயன் (ரா.கி.ரங்கராஜன்) மற்றும் உடையார் (பாலகுமாரன்).

சு.வெங்கட்டேசனின் காவல் கோட்டம் இவற்றையெல்லாம் விஞ்சி நிற்கிறது. அவ்வகையில் நான் வாசித்தவற்றில் மிகச்சிறந்த சரித்திர நாவல் இது தான்.

*

காவல் கோட்டம் என்கிற வரலாற்று நாவல் 2 பெரும் பாகங்களாக (முடி அரசு, குடி மக்கள்), 10 உட்பிரிவுகளாக (மதுரா விஜயம், பாளையப்பட்டு, யூனியன் ஜாக், இருளெனும் கருநாகம், தாதுப்பஞ்சத்திற்கு முன், மெஜுரா சிட்டி, பென்னிங்டன் ரோடு, ரயில் களவு, CT ACT, பட்ட சாமி), 115 அத்தியாயங்களில், 1048 பக்கங்களில் மிகப்பிரம்மாண்டமாக விரிகிறது. காவல் கோட்டம் நாவலின் வெளித்தோற்றத்தில் மட்டுமல்லாது உள்ளடக்கம் வரை ஊடுவி நிற்கிறது அந்த‌ மகா பிரம்மாண்டம்.

மதுரையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ச‌மணமலையின் அடிவாரத்திலிருக்கும் கீழக்குயில்குடி என்கிற கிராமத்தில் களவையும், காவலையும் தம் குலத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்த‌ கள்ளர் இனத்தவரின் அறுநூறு ஆண்டுகால வரலாற்றை, தொடர்புடைய ராஜாங்க நடவடிக்கைகள், அரசியல் நிகழ்வுகளுடன் வழங்குகிறது காவல் கோட்டம். புனைவுக்காக சமணமலை அமணமலை ஆகிவிட்டது; கீழக்குயில்குடி தாதனூர் ஆகிவிட்டது.

1310ல் மதுரையில் நடந்த மாலிக் கஃபூர் படையெடுப்பில் தொடங்கும் நாவல் 1910ல் பெருங்காமநல்லூரில் நடக்கும் பிரிட்டிஷாரின் துப்பாக்கிச் சூட்டில் முடிவடைகிறது. கிட்டதட்ட தொடங்கிய நிலைமையிலேயே முடிகிறது கள்ளர்களின் வாழ்க்கை. வித்தியாசம் பார்த்தால் ஆரம்பத்தில் அகதிகள்; கடைசியில் அடிமைகள். அப்போது முகமதியன்; இப்போது ஆங்கிலேயன்.

இந்த நாவல் பிரதானமாய் கள்ளர் பற்றியது தான் என்றாலும், அதன் ஊடுபாவாய் மதுரையின் சரித்திரம் விளம்ப‌ப்படுகிறது. எப்படி காந்தியின் வரலாற்றை இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தவிர்த்து விட்டு எழுதி விட‌ முடியாதோ, ஹிட்லரின் வரலாற்றை இரண்டாம் உலகப்போரைத் தவிர்த்து விட்டு எழுதி விட‌ முடியாதோ, அது போல் தான் கள்ளரின் வரலாற்றை மதுரை ந‌கரின் சரித்திரத்தைத் தவிர்த்து விட்டு எழுத முடியாது. கள்ளர் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் மதுரையின் அரசியல் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. போலவே மதுரையின் பல‌ முக்கிய நடவடிக்கைக‌ளை கள்ளர்களின் செயல்கள் தாம் தீர்மானிக்கின்றன.

நாவலின் மேலோட்டமான கதைச்சரடை சற்று அறிமுகம் செய்து கொள்வோம்.

மாலிக்கஃபூரின் மதுரைப் படையெடுப்பில் கோட்டைக்காவலனான கருப்பணன் இறந்து பட, அவன் கர்ப்பிணி மனைவி சடச்சி தப்பிப்பிழைத்து சிசு ஈனுகிறாள். அவளது ச‌ந்ததி கள்ளர் இனமாக தாதனூர் என்ற இடத்தில் நிலைகொள்கிறது. விஜயநகர அரசி கங்கா தேவி தன் இனமழித்த முகமதிய சுல்தானை பழிவாங்க மதுரை மீது போர் தொடுக்கிறாள். மதுரை விஜயநகர அரசின் வசமாகிறது. சிலபல வாரிசுச்சண்டைகளுக்குப்பின் கிருஷ்ணதேவராயர் விஜய நகர அரசராகிறார். அவர் திறமையான தளபதியான விஸ்வநாதரை மதுரையை ஆட்சிசெய்ய அனுப்புகிறார்.

மதுரையில் நாயக்கர் ஆட்சி உதயமாகிறது. மதுரைக் கோட்டை விஸ்தரிக்கப்பட்டு பிரம்மாண்டமான முறையில் கட்டப்படுகிறது. மதுரையைச் சுற்றி பாளையங்கள் பிரிக்கப்படுகின்றன. திருமலை நாயக்கர் காலத்தில் தாதனூர்க்காரர்களுக்கு மதுரை கோட்டைக் காவல் உரிமை வழங்கப்படுகிறது. அவருக்குப் பின் நாயக்கர் அரசுகள் பல தலைமுறையாக‌ சதிகளிலும், துரோகங்களிலும் சிக்கி உழன்று தவிக்கிறது.

பின்னர் கிழக்கிந்திய கம்பெனி மதுரையை எடுத்துக் கொள்கிற‌து. தொடர்ந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆளுமைக்குக் கீழ மதுரை வருகிறது. பிளாக்பர்ன் என்ற கலெக்டரின் காலத்தில் இட விஸ்தரிப்பைக் காரணம் காட்டி மதுரைக் கோட்டை இடிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் அரசிலும் தன் மதுரை நகர காவல் உரிமையை தாதனூர்க்காரர்கள் மீட்டுக் கொள்கிறார்கள். அரசு சார்பில் கச்சேரி (போலீஸ் ஸ்டேஷன்) அமைக்கப்படுகிறது. மதுரைக்கு அருகே மிஷனரி பள்ளி, மியூசியம், காட்டன் மில், ரயில் நிலையம் ஆகியன வருகின்றன. மதுரை நவீனமாகிறது.

தாது வருஷத்தில் கடும் பஞ்சத்தையும் பின் தொடர்ந்து கொள்ளை நோயையும் மதுரை சந்திக்கிறது. நிறைய உயிர்ச்சேதம் நிகழ்கிறது. முல்லைப்பெரியாறு அணை கட்ட ஆரம்பிக்கிறார்கள். அரசு தாதனூர்க்காரர்களின் காவல் உரிமையை ரத்து செய்கிறது. எதிர்த்தவர்கள் சிறைபடுகிறார்கள்; சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.

தாதனூர்க்காரர்கள் வேறுவழியின்றி வெளிகிராமங்களில் காவல் பிடிக்கிறார்கள்.

தாதனூருக்கு பென்னிங்டன் ரோடு அமைக்கப்படுகிறது, ஒரு சிறைச்சாலையும் அருகிலேயே கட்டுகிறார்கள். குற்றப்பரம்பரைச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. தாதனூர்க்காரர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்படுகின்றன. தினசரி அந்த சிறைச்சாலையில் ஆஜராக உத்தரவிடப்படுகிறது. நல்லூரிலிருக்கும் கள்ளர்கள் மீது பிரிட்டிஷ் போலீஸார் துப்பாக்கி ச் சூடு நடத்துவ‌தோடு முடிகிறது நாவல்.

இந்த நாவலின் 10 பக்கங்களிலிருந்து தான் வசந்தபாலனின் அரவான் திரைப்படக் கதை எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். படத்தில் வருவதாய்ச் சொல்லப்படும் வரிப்புலி, கொம்பூதி, சிமிட்டி என்ற பெயரில் கதாபாத்திரங்கள் ஏதும் நாவலில் இல்லை. நாவலில் வரும் சின்னான், மாயாண்டி கதை (அத்தியாயங்கள் 37, 38 மற்றும் 40) சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்ப‌ட்டிருக்கலாம் என்பது contextual understanding அடிப்படையிலான என் ஊகக்கணக்கு. அத‌ல்லாதும் இருக்கலாம்.

இது தவிர கமல்ஹாசனின் கனவுப்படமான மருதநாயகம் கதையும் (அத்தியாயம் 32) இதில் வருகிறது. ஆனால் நாயக வழிபாடாக அல்லாமல் சந்தர்ப்பங்களின் காரணமாக கும்பினியை எதிர்க்கும், இக்கட்டின் போது கேட்ட குத்தகையைத் தரத் தயாராகும், இறுதியில் உடல்துண்டாகி ஊருக்கூர் வீசப்படுமோர் அவலச்சித்திரமே மருதநாயகம் யூசுஃப் கான் பற்றி நாவலில் அளிக்கப்படுகிறது. மருதநாய‌மும், கட்டபொம்முவும் ஒரே நாளில் (அக்டோபர் 16) ஆனால் வெவ்வேறு ஆண்டுகளில் தூக்கிடப்பட்டிருக்கிறார்கள் – முன்னவர் 1764ம் ஆண்டு; பின்னவர் 1799ம் ஆண்டு.

*

களவு பற்றிய நான் சுவைத்த முதல் கலை அனுபவம் 1990களின் இறுதியில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான களவுக்கலை என்ற சுவாரஸ்யமான நாடகத்தொடர் தான். பின்னர் கல்கியின் கள்வனின் காதலி நாவல் முதல் பாலாவின் அவன் இவன் திரைப்படம் வரை எழு த்திலும், காட்சியிலும் பல கள்வர்கள் கடந்து போய் விட்டார்கள். கடைசியாய் இப்போது சு.வெங்கடேசனின் காவல் கோட்டம்.

கோட்டம் என்ற சொல்லுக்கு இருவிதப் பொருள் கொள்ளலாம். நிர்வாகத்திற்காகப் பகுத்திருக்கும் பிரிவு ஒன்று (உதாரணம் வருவாய் கோட்டம்). மற்றது ஒருவருக்கு எழுப்பப்படும் நினைவிடம் (உதாரணம் வள்ளுவர் கோட்டம்). காவல் கோட்டம் என்ற தலைப்புக்கு இந்த இரு பொருளுமே பொருந்துகின்றன‌. மதுரையின் காவல் பிரிவைக் கவனித்துக் கொண்டவர்களின் கதை என்ற அர்த்தத்திலும். காவல் காரர்களின் நினைவாய் எழுப்பப்படும் ஒரு நினைவுப்புனைவு என்ற வகையிலும்.

ஆனால் நாவலின் உள்ளடக்கத்தோடு ஒப்பிடுகையில் இந்தத் தலைப்பு பொருத்திப் போகிறதா என்று பார்த்தால் ஆம் என்று சொல்வதில் தயக்கம் இருக்கிறது. களவு போவது என்பது காவல் பெறுவதற்கான உத்தி என்ற கருத்து நாவல் நெடுகிலும் மறுபடி மறுபடி வலியுறுத்தப்பட்டிருந்தாலும், நாவல் முழுக்க முழுக்க களவைப் பற்றியே பேசுகிறது, அதைக் கொண்டாடுகிறது, அதை மகத்துவப்படுத்துகிறது.

களவின் சம்பவங்களும், சாத்தியங்களும் மிக நுட்பமாய் விவரிக்கப்படுகிற‌து. மாறாக காவல் என்பது ஆங்காங்கே இடைவெளி நிரப்பும் சிறு செய்தியாய் மட்டுமே சொல்லப்படுகிறது. உண்மையில் இது களவுக் கோட்டம் தான்.

காவல் கோட்டம் நாவலின் இலக்கியரீதியான செவ்வியல் உச்சங்கள் என்றால் களவு பற்றிய விவரணைகளும், கோட்டை இடிக்கப்படும் நிகழ்வுகளும், பஞ்ச காலம் பற்றிய பகுதிகளுமே ஆகும். இது தவிர தாதனூரில் நடக்கும் திருமணம், மரியாதை, சடங்குகள், வரிகள், பலிகள் ஆகியவை பற்றிய பகுதிகள் கள்ளர் இன வரைவியல் ஆவணமாகக் கொள்ளத்தக்கவை. ஆனால் ஆவணம் என்பதைத் தாண்டி இவை யாவும் சுவாரஸ்யமான நடையில், பாந்தமான இடங்களில் உட்செருகப்பட்டிருக்கின்றன எனப்து தான் இந்நாவலை முக்கியமானதாக்குகிறது.

பாலகுமாரனின் உடையார், கடிகை போன்ற‌ நாவல்களிலும் இது போன்றதான‌ விவரணைகள் இடம் பெறுகின்றன. ஆனால் அவை ஒருவித வறட்டு நடையில் எழுதப்பெற்று வெறும் ஆவணமாகத் தேங்கி விடுகின்றன. அதாவது அவற்றில் கலை ஊக்கம் இல்லை; அல்லது குறைவாய் இருக்கிறது. வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் ஆகிய நாவல்களிலும் இது போன்ற சித்தரிப்புகள் வருகின்றன. ஆனால் அவை அந்த நாவலுக்கு தேவையிற்ற துருத்தல்களாய் உருத்திக் கொண்டிருக்கின்றன. அதாவது இவற்றில் கலை ஊக்கம் இருந்த போதிலும் நாவலை செம்மையுறப் பயன்படுவதில்லை.

எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் நாவலில் வெக்கை குறித்து நிறைய இடங்களில் விவரித்திருப்பார். அதில் கணிசமானவை ஒரே மாதிரியானதாகவும் (monotonous), தட்டையானதாகவும் சில இடங்களில் எரிச்சலூட்டுவதாகவுமே அமைத்திருக்கும் (வெக்கை எரிச்சலூட்டத்தானே செய்யும்!). அதே போல் காவல் கோட்டம் நாவலில் பல இடங்களில் – குறைந்தபட்சம் நூறு இருக்கும் – இருள் குறித்த விவரணைகள் இடம்பெறுகின்றன. ஆனால் எவ்விடமும் அவை அலுப்பூட்டுவதில்லை. எல்லாமே கவித்துவத்துடன் தத்துவார்த்தமாக அமைத்துள்ளன. அதை நினைத்துப் பார்க்கும் போதே பிரம்மிப்பு ஏற்படுகிறது. இந்த இருள் குறித்த பகுதிகளை மட்டும் தொகுத்து ஒரு சிறுநூலாக வெளியிடலாம் (கவிதை?) என்று கூட ஓரெண்ணம் ஏற்படுகிறது.

பனைமரத்தில் கட்டிவைத்து கள்ளர்கள் கல்லெறிந்து சிவானந்தய்யர் கொல்லப் படும் காட்சியே நாவலின் புறம் சார்ந்த ஆக‌ உக்கிரமான பகுதி. இது போக‌ அக எழுச்சி உக்கிரங்கள் ஆங்காங்கே மலரவிழ் மொட்டாய் சாத்தியப்பட்டிருக்கின்றன.

*

அறுநூறு வருட காலத்தை அடைத்து நிற்கிறது என்பதால் இந்நாவலில் எந்தப் கதாபாத்திரத்தையும் முதன்மைப் பிரதானமெனக் கொள்ளவியலாது. அப்படிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் கள்ளர்கள் தாம் இந்நாவலின் நாயக‌ர்கள். நாவல் முழுக்க மன்னர்களும் மக்களும் வருகிறார்கள், போகிறார்கள் – ஆனால் இடையில் தம்மை எழுதுமொழி வரலாற்றிலோ, வாய்ப்பாட்டு வரலாற்றிலோ அழுந்தப் பதித்துக் கொள்கிறார்கள். நாவலைப் படித்து முடிக்கையில் விசுவநாத நாயக்கரும், மாயாண்டிப் பெரியாம்பிளையும், ஆங்கிலக் கலெக்டர் பிளாக்பர்னும், சிவானந்தய்யரும், டேவிட் சாம்ராஜும் உச்சம் பெற்று மனதில் நிற்கிறார்கள்.

பொதுவாய் வரலாற்றுப் புதினங்களில் பெண் கதாபாத்திரங்கள் கவர்ச்சித் தாரகைகளாகவோ, மதிப்பிற்குரிய மங்கையராகவோ என்ற இரு எதிரெதிர் நிலைகளில்மட்டும் பதிவு பெற்றிருக்கின்றனர் (பொன்னியின் செல்வன், உடையார் மட்டும் விதிவிலக்கு). ஆனால் காவல் கோட்டம் நாவலில் வரும் பெண்களைப் பற்றிய பதிவுகள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கின்றது. பேரனுக்காக நாட்டை ஆளும் பொறுப்பேற்றுப் பின்னாளில் அவனாலேயே பலி வாங்கப்படும் ராணி, தன் இனத்தை வதைக்க முனையும் ஐரோப்பியக் காவலனின் கழுத்தைக் கடித்துக்குதறும் கிழவி, பஞ்சகாலத்தில் எந்த எதிர்பார்ப்புமின்றி தன் செல்வத்தைக் கரைத்து ஊருக்கே கஞ்சி ஊற்றும் தாசி, தன் இனம் சிந்திய ரத்தத்திற்குப் பழிதீர்க்க நேரடியாக போரிலிறங்கி சுல்தானைக் கொல்லும் அரசி, தமக்குள் மட்டுமல்லாது ஆண்க‌ளுடனும் கூட‌ பாலியலை சர்வ சுதந்திரமாய் பேசித்திரியும் பெண்டிர் என்று பெண்களின் பன்முகங்கள் நாவலெங்கும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. விஜயநகரப்பெண்கள், நாயக்கர் பெண்கள், கள்ளர் பெண்கள், அக்ரஹாரப் பெண்கள் என்று பரவி விரியும் நாவலில் ஆங்கிலேயப் பெண்களில் ஒருவரைப் பற்றிக் கூட பெரிய அளவிலான விவரணைகள் இல்லை.

திருமலை நாயக்கர் அரண்மனையிலேயே புகுந்து ராஜமுத்திரையைக் களவாடி விடும் கழுவன் என்ற தாதனூர்க்கள்வனைப் பாராட்டி கோட்டைக்காவல் உரிமை தருகிறார் மன்னன் என்றொரு செய்தி இடம் பெறுகிறது. ஆனால் இதே கதையில் களவாடியவனை வஞ்சகமாக வரவழைத்துக் கொன்றதாகவும் ஒரு வெர்ஷனை ஏற்கனவே வேறெங்கோ படித்திருக்கும் நினைவு. நாயக்கர் தந்த கோட்டைக்காவல் உரிமை தான் நாவலின் அச்சு. அதை மையமிட்டுத்தான் நாவலின் அத்தனை சம்பவங்களுமே சுழல்கின்றனை. இந்த உரிமையை விட்டுத்தராதிருக்கும் பொருட்டு தான் இறுதியில் கள்ளர் இனமே அழிய நேரும் சூழ்நிலை உருவாகிறது.

மனிதன் எழுத்தின் வழி, கதைகளின் வழி, அகழ்வுகளின் வழி வரலாற்றைத் தரிசிக்கிறான். அஃறிணை பொருட்களோ எத்தனை ஆண்டு கால வரலாறு என்றாலும் தாமே காத்திருந்து நேரிலேயே பார்த்துக் கொள்கின்றன‌! அப்படி சந்திரஹாச வாளும், சாளுவ கட்டாரியும் ஒரு கட்டம் வரை நாவல் முழுக்கவே புராதனக்குறியீடாய் சமயங்களில் மௌனசாட்சியமாய் உடன் பயணிக்கின்றன.

*

நாவலுக்கென்று பத்து ஆண்டு காலம் உழைத்ததாகச் சொல்கிறார் ஆசிரியர். நாவலில் அடங்காமல் பொங்கி வழியும் தகவல்களைப் பார்க்கும் போது அது எள்ளளவும் மிகையில்லை என்று தெரிகிறது. இந்த தகவல்கள் தாம் சாதனை.

நாவல் முழுக்க சு.வெங்கடேசனின் செறிவான மொழிநடை காணக்கிடைக்கிறது. கதையின் போக்கில் நிகழ்வுகளைத்தாண்டி அவரது நடை நம்மைக் கட்டியணைத்த படியே நகர்த்திச் செல்கிறது. இத்தகைய வசீகர‌ நடை சமகால எழுத்தாளர்களில் மூவருக்கு மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது – முதலில் எஸ்.ராமகிருஷ்ணன், அடுத்தது இரா.முருகன், அப்புறம் க.சீ.சிவக்குமார். இத்தனைக்கும் கதையின் கணிசமான பகுதிகள் கள்ளர்களின் பேச்சு மொழியிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதிலும் கூடப் புகுந்து பிரமாதப்படுத்தி இருக்கிறார் சு.வெங்கடேசன் (அது சரி, வசந்தபாலனின் அரவான் படத்துக்கு சு.வெங்கடேசன் தான் வசகர்த்தாவா?).

காவல் கோட்டம் நாவல் எதைப் பேசுகிறது என்பது தெளிவாய் இருக்கிறது – கள்ளர்களின் கதையினூடாய் மதுரை வரலாற்றின் ஒரு அபாரமான‌ குறுக்கு வெட்டுச் சித்திரத்தை அளிக்கிறது. ஆனால் அந்நாவல் முன்வைக்கும் அரசியல் என்ன என்ற கேள்விக்கு தெளிவாய் பதிலிறுக்க முடிவதில்லை. காவல் கோட்டம் களவை நியாயப்படுத்த முயல்கிறதோ எனத் தோன்றுகிற‌து. நமது சமூகத்தின் இன்றைய சிந்தனை முறையானது திருட்டு என்பதை அரசியல் சாசனப்படியான குற்றம் என்று புற‌ அளவில் வரையறுத்ததோடு மட்டுமல்லாது, அதன் அக நீட்சியாக திருட்டை ஓர் ஒழுக்கக்கேடான நடவடிக்கையாகவும் சித்தரித்து வைத்திருக்கிறது. எப்படி யோசித்துப் பார்த்தாலும் அச்சித்தாந்தம் சரியென்றே மனதுக்குப் படுகிற‌து. ஆனால் காவல் கோட்டம் நாவலோ அதற்கு நேரெதிராய் களவை வீரமெனச் சித்தரித்து, சமகால மனங்களில் திருட்டு பற்றி நிலவும் பொதுப்புத்திக் கருத்துக்களைக் கேள்விக்குள்ளாக்குகிற‌து. ஒரு கட்டத்தில் களவு தாம் அறமோ என்று கூட‌ எண்ண வைத்து விடுகிற‌து. என் பாட்டன் திறமான கள்வன் என்பது எவ்வகையில் எனக்குப் பெருமை தரும் என்பது விளங்கவில்லை. ஒருவகையில் அவமானம் ஏதுமில்லை என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

நாவலின் பலவீனமான கட்டங்கள் என நாயக்கர் காலம் நேரடி வரலாறாய்ச் சொல்லப்படும் ஆரம்பப் பகுதியையும், உயிர்ப்பின்றிச் சொல்லப்பட்டிருக்கும் குற்றப்பரம்பரைச்சட்டம் வரும் இறுதிப்பகுதியையும் சொல்லலாம். அதிலும் நாவல் தன் முடிவை நெருங்கிச் செல்லும் உச்ச வேளையிலும் களவுக்கலை பற்றிய நுண்விவரணைகள் தொடர்ந்தபடியே இருப்பது (அத்தியாயங்கள் 110 மற்றும் 112) கவனம் கலைப்பதோடு ஒரு கட்டத்தில் ஆயாசமூட்டுகிறது.

தொடர்புடைய‌ வரலாற்றின் சில பகுதிகளை மட்டும் ஏன் தொடவில்லை என்பது புரியவில்லை. உதாரணமாக ஊமைத்துரை வரலாறு விரித்துச் சொல்லப்படுகிறது (அத்தியாயம் 33); ஆனால் கட்டபொம்மு வரலாற்றை ஒற்றை வரியில் கடந்து விட்டார். குஞ்சரம்மாள் கதை சொல்லப்படுகிறது (அத்தியாயம் 77); ஆனால் நல்லதங்காள் கதை சொல்லப்படுவதில்லை. சொல்லப்படாத பின்னதுகளுக்கும் கள்ளர்களுக்கும் தொடர்பில்லை என்று காரணம் சொன்னால் சொல்லப்பட்ட முன்னதுகளுக்கும் கள்ளர்களுக்குமே அதே அளவு சம்மந்தம் தான் இருக்கிறது.

கள்ளர் இனத்தில் பிறந்து மிஷனரி பள்ளியில் படித்து பாதிரியாராக மாறும் டேவிட் சாம்ராஜ் பாத்திரம் இன்னும் தெளிவோடு கட்டமைக்கப்பட்டிருக்கலாம்.

இவ்வளவு பெரிய வரலாற்று நாவலுக்கு அடிக்குறிப்புகள் இல்லை, விரிவான முன்னுரை மாதிரியான விஷயம் இல்லை (இறுதியில் ஆசிரியர் குறிப்பு என்று சொல்லி மூன்று பக்கங்கள் தரப்பட்டிருந்தாலும் அதில் பெரிதாய் எந்தத் தகவலும் இல்லை). இதன் காரணமாக நாவலில் எவை வரலாற்று ஆவணங்களின் அடிப்படையிலானவை, எவை உறுதிப்படுத்தப்படாத கேள்விப்பட்ட செய்திகள், எவை முற்றிலும் கற்பனை சார்ந்த‌ புனைவு என்பதில் வாசகன் குழம்புகிறான்.

நாவலின் இலக்கியத்தரம் ஒரு சைனுசாய்டல் அலை (Sinusoidal Wave) கணக்காய் அமைந்திருக்கிறது. விஸ்வநாதர் காலத்தில் சமநிலையில் தொடங்கும் நாவல், நாயக்கர் காலத்தில் எதிர்மறை நிலைக்குச் சென்று விட்டு, கும்பினியர் காலத்தில் சமநிலைக்குத்திரும்பி, பிரிட்டிஷ் அரசின் காலத்தில் உச்சமெய்தி, தாதுப்பஞ்சத்தில் சமநிலைக்கு வந்து, குற்றப்பரம்பரைச்சட்டத்தின் போது எதிர்மறைக்குப் போகிறது.

*

ஒரு பத்தாண்டுகளாக அப்துல் ரகுமான், வைரமுத்து, சிற்பி பாலசுப்ரமணியம், ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, புவியரசு என்று அராஜக அட்டூழியம் செய்து வந்த சாகித்ய அகாதமி, கடந்த இரு வருடங்களாகத் தான் மறுபடி தகுதி வாய்ந்த‌ படைப்புகளுக்கு விருது வழங்கி வருகிறது. 2010ல் நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதைத்தொகுதிக்கும், இப்போது 2011ல் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலுக்கும் தரப்பட்டிருக்கிறது. இரண்டுமே தமிழினி வெளியீடுகள்.

சு.வெங்கடேசனுக்கு அளிக்கப்பட்ட விருது தொடர்பாய் இரண்டு பிழையான தகவல்கள் முன்வைக்கப்படுகின்றன. மிக இள‌ம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறுபவர் சு.வெங்கடேசன் என்பது ஒன்று. காரணம் 1972ல் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற போது ஜெயகாந்தனுக்கு வயது 38. இப்போது விருது பெறும் சு.வெங்கடேசனின் வயது 40. ஒருவேளை விருது பெறும் இரண்டாவது மிக இளையவராக வேண்டுமானால் இருக்கக்கூடும்.

இரண்டாவது ஒரே நாவல் எழுதிய படைப்பாளிக்கு எப்படி விருது கொடுக்கலாம் என்கிற கேள்வி. உண்மையில் சாகித்ய அகாதமி விருதானது ஒரு குறிப்பிட்ட படைப்புக்கு வழங்கப்படுகிறதே ஒழிய ஒரு படைப்பாளுமையின் ஒட்டுமொத்த எழுத்துச் சாதனையைக் கணக்கில் கொண்டு அளிக்கப்படுவதில்லை (ஞானபீட விருதுகள் வேண்டுமானால் இப்போபோதெல்லாம் அப்படி வழங்கப்படுகின்றன)‌. விருது பெற்றவர்களில் கணிசமானவர்கள் விருது பெறும் காலத்தில் இலக்கிய வாழ்வினின்று ரிட்டயர்ட் ஆகி விட்டிருந்தார்கள் என்பதால் (அதற்குத் தான் ஒருவேளை விருதோ!?) நம் பொதுப்புத்தியில் இது படைப்பாளிக்கான விருது; படைப்புக்கானது அல்ல என்ற எண்ணம் உறைந்திருக்கலாம். அது விருதுக் கமிட்டியின் பிழையல்லவே. அதனால் ஒரே படைப்பு தான் எழுதி இருக்கிறார் என்றாலும் அது தகுதியானது என்றால் சாகித்ய அகாதமி வழங்கப்படுவதே முறையானது. இம்முறை அந்த விதிமுறை சரியாகப் பின்பற்றிருக்கிறது.

இளம் வயதில் அதுவும் முதல் நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றிருப்பது சமீப‌த்தைய சாதனை என்றால் அழகியலும், வரலாறும் ஒத்திசைத்து இயங்கும் ஒரு பிரம்மாண்டத்தைப் யாத்தளித்தது அவரது நீண்ட கால சாதனை என்பேன்.

சு.வெங்கடேசனுக்கு என் மனப்பூர்வமான‌ வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

VERDICT: அவசியம் நிச்சயம் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல். DON’T MISS IT.

பின்னிணைப்புகள்:

  1. சு.வேங்கடேசனின் விக்கிபீடியா பக்கம்
  2. சு.வேங்கடேசனின் தினமலர் பேட்டி
  3. சு.வேங்கடேசனின் சில கட்டுரைகள்

0

சி.சரவணகார்த்திகேயன்

Wednesday, December 21, 2011

சாகித்ய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கு தமுஎகச பாராட்டு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக்குழு

11,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625001

பத்திரிகைச்செய்தி:21.12.2011

சாகித்ய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கு தமுஎகச பாராட்டு

CHENNAI, 18/07/2010: Suvenkatesh. Photo:Handout_E_Mail

2011க்கான தமிழ் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு அவர் எழுதிய காவல் கோட்டம் நாவலுக்காக வழங்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியையும் பெருமித்தையும் ஒருசேர எமக்கு வழங்கியுள்ளது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளரான அவர் பெற்றுள்ள இவ்விருது எம் அமைப்புக்கே கிடைத்த விருதாக எமது இயக்கத்தின் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களும் பெருமையுடன் கொண்டாடுகிறார்கள்.

தமிழ் நாவல் வரலாற்றில் அழுத்தமான தடம் பதித்த காவல் கோட்டம் நாவலுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பான செய்தியாகும்.அறுநூறு ஆண்டுகால மதுரையின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு கி.பி.1300லிருந்து 1900 வரையிலான காலத்தின் கதையை அரசியல், சமூகவியல்,இன வரைவியல் கண்ணோட்டத்துடன் இந்நாவல் பேசுகிறது.வரலாறும் புனைவும் பிரித்தறிய முடியாதபடிக்குப் பின்னிச்செல்லும் நுட்பமான அழகியலோடு இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது.தாதனூர் என்னும் சிறு கிராமத்து மக்களின் களவும் காவலுமான வாழ்வினூடாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதுரையைக் கைப்பற்றுவதில் துவங்கி ரேகைச்சட்டத்தால் களப்பலியாகும் ஒரு மக்கள் குழுவின் வரலாறாகவும் இந்நாவல் விரிகிறது.என்னதான் முயன்றாலும் ஆங்கிலேய மூளைகளால் கணித்திடவே முடியாத ஒரு எளிய ஆனால் வலுவான உள்ளூர் பண்பாட்டு வரலாற்றைப் பதிவு செய்வதாகவும் காவல் கோட்டம் அமைகிறது.ஏற்கனவே இருந்த பண்பாட்டை அழித்து புதிதாக எதையும் தராத ஆங்கில அரசு என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்ட ஒரு வரலாற்று உண்மையின் கலாபூர்வமான வடிவமாகவே காவல் கோட்டம் நாவல் அமைந்துள்ளது.1050 பக்கங்களில் விரியும் ஒரு பெருங்கதையாக ஓர் உள்ளூர்வரலாறு சொல்லப்பட்டிருப்பது தமிழில் அரிதாக நடக்கும் படைப்பு முயற்சியாகும்.ஏழு ஆண்டுகால கடுமையான ஆய்வுகளையும் உழைப்பையும் உண்டு செறித்து எழுந்து நிற்கும் காவல் கோட்ட்த்துக்காக இவ்விருது வழங்கப்பட்டிருப்பது அந்த உழைப்புக்குக் கிடைத்த உரிய அங்கீகாரமாகவே தமுஎகச கருதுகிறது.

ஓட்டையிடாத புல்லாங்குழல்,பாசி வெளிச்சத்தில்,ஆதிப்புதிர் போன்ற தொகுப்புகளின் வழியே ஒரு நுட்பமான கவிஞராக வெளிப்பட்ட எழுத்தாளர் சு.வெங்கடேசன் தொடர்ந்து ஆட்சித்தமிழ்,கலாச்சாரத்தின் அரசியல்,கருப்பு கேட்கிறான் கிடா எங்கே,மதமாற்றத்தடைச்சட்டம்,சமயம் கடந்த உ.வே.சா போன்ற பல நூல்களால் ஓர் ஆழமிக்க ஆய்வாளராக முகம் காட்டினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக அவர் ஆற்றிவரும் களப்பணிகள் அவரது இன்னொரு முகம்.தன் ஆவேசமிக்க உரைகளின் மூலம் அணிகளை மன எழுச்சிகொள்ள வைப்பவர் சு.வெங்கடேசன்.

2011 செப்டம்பரில் விருதுநகரில் நடைபெற்ற தமுஎகசவின் மாநில மாநாட்டில் அவர் தமுஎகசவின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.இவ்வளவு இளம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தமிழ்ப் படைப்பாளி என்கிற பெருமையையும் இதன்மூலம் அவர் பெறுகிறார்.

தமுஎகச படைப்பாளிகள் இன்னும் உற்சாகத்துடன் தம் படைப்பு முயற்சிகளில் ஈடுபட இவ்விருது தூண்டுதலாக அமையும்.தோழர் சு.வெங்கடேசனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஆவிசேரக் கட்டியணைத்துத் தெரிவித்துக்கொள்கிறது.

அருணன்                          ச.தமிழ்ச்செல்வன்

கௌரவத்தலைவர்           மாநிலத்தலைவர்

2011க்கான தமுஎகச பரிசுகள்/விருதுகள் நூல்கள்/குறுந்தகடுகள் வரவேற்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக்குழு

சென்னை அலுவலகம்-421,அண்ணாசாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018

மதுரை அலுவலகம்-57-ஏ,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625001

2011க்கான தமுஎகச பரிசுகள்/விருதுகள் நூல்கள்/குறுந்தகடுகள் வரவேற்பு

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக வழங்கப்படும் கீழ்க்கண்ட பரிசுகளுக்கான நூல்கள் /தகடுகள் வரவேற்கப்படுகின்றன.2011இல் அச்சாகி வெளியான நூல்கள் ஒவ்வொரு பரிசுக்கும் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும்.குறும்பட ஆவணப்படங்களுக்கன பரிசுக்கும் 2011இல் வெளியான படங்களின் சிடி அல்லது டிவிடி இரு பிரதிகள் அனுப்ப வேண்டும்.எழுத்தாளர்/இயக்குநர் மற்றும் பதிப்பாளர்/பட்த்தயாரிப்பாளரின் முழு முகவரி தொலைபேசி எண்ணுடன் புத்தகங்களுடன்/தகடுகளுடன் எழுதி அனுப்பிட வேண்டுகிறோம்.அனுப்ப வேண்டிய முகவரி பொதுச்செயலாளர்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,11,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடம்,மதுரை-625001.செல்- 9442462888. வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 29-02.2012.

புத்தகம்/தகடுகளை திருப்பி அனுப்ப இயலாது.நடுவர் குழுக்களின் முடிவே இறுதியானது.

1.தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவுப்பரிசு- சிறந்த நாவலுக்காக- ரூ.10000/-

2.புதுமைப்பித்தன் நினைவுப்பரிசு -சிறந்த சிறுகதை நூலுக்கு-ரூ 5000/-

3.குன்றக்குடி அடிகளார் நினைவுப்பரிசு-தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூல்-ரூ.5000/-

4.அமரர் சேதுராமன் -அகிலா நினைவுப்பரிசு-சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கு ரூ 5000/-

5.தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் நினைவுப்பரிசு-சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு-ரூ 5000/-

6.அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு- சிறந்த கவிதை நூலுக்கு-ரூ5000/-

7. தோழர் பா.இராமச்சந்திரன் நினைவு விருது-சிறந்த ஒரு குறும்படம் மற்றும் சிறந்த ஒரு ஆவணப்படத்துக்கு-தலா ரூ 5000/-

8.அமரர் சு.சமுத்திரம் நினைவுப்பரிசு -ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய படைப்பு ஒன்றுக்கு(கதை,கவிதை,நாவல்,ஆய்வு,கட்டுரை எதுவாகவும் இருக்கலாம்)- ரூ. 10000/-

9.தோழர் மு.சி.கருப்பையா பாரதி –ஆனந்த சரஸ்வதி சார்பாக நாட்டுப்புறக்கலைச்சுடர் பட்டமும் ரூ.10000 விருதும்-ஒரு மூத்த நாட்டுப்புறக்கலைஞருக்கு –பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட செய்தியை தங்கள் இதழில் வெளியிட அன்போடு வேண்டுகிறோம்.

சு.வெங்கடேசன்

பொதுச்செயலாளர்konangi pics 379

Wednesday, November 23, 2011

உயர்நீதிமன்றத்தில் தமுஎகச வழக்கு

 

  •  

    annaa library1
  • நூலக நிதியில் உருவான நூலகத்தை அரசு தன்னிச்சையாக மாற்ற முடியுமா? உயர்நீதிமன்றத்தில் தமுஎகச வழக்கு சென்னை, நவ.22- மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமாக அமைக்கப்பட உள்ள அறிவு சார் பூங்கா வளாகத்திற்குள், அனைத்துத் தரப்பினருக்குமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவது பொருத்தமான முடிவல்ல என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கூறியுள்ளது. நூலகத்திற்கென்றே மக்களிடம் வசூலிக்கப்பட்ட வரியில் கட்டப்பட்ட நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதிமுக அரசு, நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி வளாகத்திற்கு இடம் மாற்ற முடிவு செய்திருப்பது தெரிந்ததே. அந்த வளாகத்தில் புதிதாக அறிவு சார் பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், அங்கே இந்த நூலகம் அமைவதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசு அறிவித்திருந்தது. அமைச்சரவையின் இந்த முடிவை எதிர்த்து ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழக்குத் தொடுத்துள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் சார்பில், வழக்கறிஞர் ச. செந்தில்நாதன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். புதனன்று (நவ.23) இந்த வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வுக்குழு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மாற்ற முடியுமா? மாநகர நூலக ஆணைக்குழு நிதியில்தான் இந்த நூலகம் கட்டப்பட்டது. நூலகத்தைப் பராமரிக்க இயலவில்லை என்று ஆணைக்குழு முடிவெடுத்துச் சொன்னால்தான் அரசு வேறு முடிவு எடுக்க வேண்டுமேயன்றி, தானே நேரடியாக இந்த முடிவை எடுக்க இயலாது. மேலும், மக்களிடம் வசூலிக்கப்பட்ட நூலக வரியிலிருந்து கட்டப்பட்ட நூலகக்கட்டடம் ஆணைக்குழுவுக்கே சொந்தமானது. அதை அரசு வேறு நோக்கத்திற்குப் பயன்படுத்த முடியாது என்று சங்கத்தின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது நூலகம் அமைந்துள்ள பகுதியில் அதனால் எவ்விதமான இடையூறும் ஏற்படுவதாக எந்தத் தரப்பிலிருந்தும் புகார் வரவில்லை. இந்நிலையில் அரசு தன்னிச்சையாகவே இந்த முடிவை எடுத்துள்ளது. நிதிநிலை உரையில் சொல்லப்பட்டதா? அரசுத் தரப்பில், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை உரையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால், சட்டமன்ற உரையில், ஒருங்கிணைந்த அறிவு சார் பூங்கா அமைப்பது குறித்துதான் சொல்லப்பட்டிருக்கிறதேயன்றி, அண்ணா நூற்றாண்டு நூலகம் அங்கே நிறுவப்படும் என்பது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. அறிவு சார் பூங்கா மாணவர்களுக்காகவும் ஆசிரியர்களுக்காகவுமே அமைக்கப்பட உள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகமோ அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படுவது. அதை அந்த பூங்காவுக்கு மாற்றுவது பொருத்தமல்ல என்று சங்கத்தின் மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு எவ்விதமான கலந்தாலோசனையும் நடத்தவில்லை. பொதுமக்கள் கருத்துக்கூற வாய்ப்பு அளிக்கவில்லை. தற்போதைய நூலகக் கட்டடம் மருத்துவமனைக்குப் பயன்படுமா என்பது குறித்து, மருத்துவக் கட்டட வல்லுநர்களின் கருத்தையும் பெறவில்லை. ஆகவே அரசின் இந்த முடிவு நிதிநிலை அறிக்கைக்குப் பின்னர் எடுக்கப்பட்டதே என்பது தெளிவாகிறது என்றும் சங்கம் கூறியுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள பல்வேறு நவீன வசதிகள், ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தெரிவித்துள்ள தமுஎகச, இந்த வசதிகள் அனைத்தையும் புதிய இடத்திற்கு மாற்றுவது நடைமுறை சாத்தியமல்ல என்பதையும் குறிப்பிட்டுள்ளது. தமுஎகச வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை ஏற்கெனவே உள்ள வழக்குகளோடு இணைக்க ஆணையிட்டனர். மூன்று வார காலத்தில் இது விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    annaa library 2

annaa lib 3

Sunday, November 13, 2011

புத்தகங்களோடு தெருவில் ஆர்ப்பாட்டம்-தமுஎகச அறைகூவல்

 

நவம்பர் 16 மாலை 4 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் முன்பாக அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்ற முடிவை கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தளர் கலைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.அனைத்துப்பகுதி எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள்,நூலகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள்,குழந்தைகள் என அனைவரையும் அழைக்கிறோம்.குழந்தைகளை அழைத்து வாருங்கள்.ஒவ்வொருவரும் கையில் ஒரு புத்தகத்தோடு வாருங்கள்.ஒரு கையில் புத்தகத்தை இறுகப்பற்றி மறு கையை முஷ்டி உயர்த்தி முழக்குவோம்.எங்கள் புத்தகங்களைப் பறிக்க ஆட்சியாளர்களை அனுமதியோம்.கவிஞர்கள் கவிதைகளோடு வாருங்கள்.ஆர்ப்பாட்ட முடிவில் புத்தகத்தை நெஞ்சோடு அணைத்து மறு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நூலகத்தைக் காக்க –இடைவிடாது போராட சபதம் ஏற்க இருக்கிறோம்.மெழுகுவர்த்தி அங்கே இருக்கும்.புத்தகங்களோடு அனைவரும் வாரீர்.அறிவுக்கு எதிரான அராஜகத்தை முறியடிக்க ஆர்ப்பரித்து எழுவோம்.தமுஎகச அழைக்கிறது வாரீர்.

ச.தமிழ்ச்செல்வன்,மாநிலத்தலைவர் சு.வெங்கடேசன்,பொதுச்செயலாளர்.