Friday, June 4, 2010

தோழர் வேலுச்சாமியின் குழந்தைகள்..... -நேசக்கரம் நீட்டுவோம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் வட்டி கொடுக்கப்போன பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி அதை வீடியோ பதிவு செய்து வலைத்தளத்தளங்களுக்கு விற்றதைக்கண்டித்து இயக்கம் நடத்திய மார்க்சிஸ்ட் ஊழியர் வேலுச்சாமி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஏற்கனவே எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக.. ..

சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது.உள்ளூர் காவல்துறையினர் உட்பட யாரும் தப்பிவிடாமல் இருக்க மார்க்சிஸ்ட் கட்சி கவனத்துடன் விசாரணைக்கு ஒத்துழைத்தும் கண்காணித்தும் வருகிறது.

தோழர் வேலுச்சாமியின் துணைவியார் சித்ரா சில ஆண்டுகளுக்கு முன் அவரையும் குழந்தைகளையும் விட்டுப் பிரிந்து விட்டார். சதா காலமும் கட்சி,நாடு,சமூகம் என்று அலைந்து கொண்டிருக்கும் ஒருவரோடு சேர்ந்து வாழ்வது அந்த இணைக்கும் அப்படியான சமூகப்பார்வை இருக்கும்போது மட்டுமே எளிதாக இருக்கும். அல்லது நித்தம் முரண்பாடுகளோடு மோதிக்கொண்டுதான் இருக்க நேரும்.கம்யூனிஸ்ட்டுகள் என்றில்லை பொது வாழ்வில் (பைசா பேராத ஒரு இயக்கத்தில்) எந்த இயக்கத்தில் ஈடுபடும் ஒருவரும் (அவர் ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம்) குடும்பத்தில் நெருக்கடியைச் சந்தித்துத்தான் தீர வேண்டியிருக்கிறது.சிலர் தாக்குப்பிடித்துச் சகித்துக்கொண்டு போய்விடுகிறார்கள்.சித்ராவால் முடியவில்லை.அவர்மீது குற்றம் சொல்ல ஏதுமில்லை.அவர் இப்போது வேறொரு வாழ்வைத் தேடி அமைத்துக்கொண்டு விட்டார்.

ஆகவே தோழர் வேலுச்சாமியின் மூன்று குழந்தைகளும் இப்போது தாயும் இல்லை .தந்தையும் இல்லை என்கிற கதிக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.வேலுச்சாமியின் தகப்பனார் தன் முதுமைக்காலத்தில் இக்குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை முழுதாக ஏற்றுக்கொண்டுள்ள நிலை.வேலுச்சாமியின் சகோதர சகோதரிகள் அன்றாடம் உழைத்துப் பிழைப்பவர்கள்.ஒரு குடும்பச் சூழலை அவர்களால் அக்குழந்தைகளுக்கு உருவாக்கித் தர முடியலாம். ஆனாலும் பொருளாதாரம்?

குழந்தைகளுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன்.தாரணி-ஐந்திலிருந்து ஆறாம் வகுப்பு,ரேணுகா நாலிலிருந்து ஐந்து,விநோத் இரண்டாம் வகுப்புக்குப் போகிறார்.

மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு முழுவதும் தன் கட்சி அணிகளிடமும் பள்ளிப்பாளையத்தில் வீடுவீடாக உண்டியல் வசூல் செய்தும் 3 லட்ச ரூபாய் நிதி திரட்டியுள்ளது.மூன்று குழந்தைகளுக்கும் அவர்கள் பேரில் வங்கி வைப்பு நிதியாக ஆளுக்கு ஒரு லட்சம் வீதம் டெபாசிட் செய்துள்ளது.ஒரு லட்சம்! எவ்வளவு சிறிய தொகை! பத்தாண்டுகளில் அது இரண்டு மூன்று லட்சம் ஆகலாம்.ஆனாலும் அது இன்றைய வாழ்வின் போக்கில் என்ன ஒரு சிறிய தொகை.ஆனாலும் மார்க்சிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியரின் மாதச் சம்பளம் 5500 ( மணமாகாதவர் எனில் ரூ 4500) என்பதோடு ஒப்பிட்டால் இது பெரிய தொகைதான்.கட்சியால் முடிந்தது இப்போதைக்கு இது.இனி அக்குழந்தைகளின் பள்ளிப்படிப்புச் செலவு மற்றும் அன்றாடச்செலவுகளுக்கு திரட்ட வேண்டும்.சில தொண்டு நிறுவனங்களையும் பள்ளி நடத்தும் கிறித்துவ அமைப்புகளையும் தோழர்கள் அணுகியிருக்கிறார்கள். இதை வாசிக்கும் நீங்களும் இது தொடர்பாக ஆலோசனைகளை வழங்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

என் முந்தைய பதிவைப்பார்த்துவிட்டு வெளிநாடுவாழ் நண்பர்கள் சிலர் அக்குழந்தைகளுக்கு உதவ முன்வந்தார்கள்.அதற்காக ஐசிஐசிஐ வங்கியில் ஒரு கணக்குத் திறக்க கோரினேன்.இவ்வளவு தாமதம் ஏன் ஒரு வங்கிக் கணக்கைத் திறக்க என்று நாமக்கல் மாவட்டச் செயலாளரைக் கேட்டபோது அது திறப்பதற்கே 10000 ரூபாய் கேட்கிறார்கள் தோழர். வசூல் முடித்ததும் இப்போதுதான் திறந்தோம் என்றார்.

கடந்த மே 23 ஆம் நாளில் பள்ளிப்பளையத்தில் கந்து வட்டி ஒழிப்புக் கருத்தரங்கம் நடத்தி அக்கூட்டத்தில் நிதி அளிப்பு என்று திட்டமிட்டிருந்தார்கள். நானும் போயிருந்தேன்.நிகழ்ச்சி துவங்கி சற்று நேரத்தில் பெருமழை பிடித்தது.நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.நான் அக்குழந்தைகளையும் வேலுச்சாமியின் சகோதர சகோதரிகளையும் பார்த்துப் பேசி விட்டுத் திரும்பிவிட்டேன்.

மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் தோழர் ரெங்கசாமி இன்று அக்குழந்தைகளின்பால் மனப்பூர்வமான ஈடுபாட்டுடன் மிகுந்த பொறுப்புணர்வோடு அவர்களுக்கான சகல முயற்சிகளையும் செய்து வருகிறார்.அவருக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வது அவசியம். உள்நாட்டு வெளிநாட்டு நண்பர்கள் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிதியை (எவ்வளவு சிறிய தொகை ஆனாலும் சரி) அனுப்பிட அன்புடன் வேண்டுகிறேன்.மாதாமாதம் பணம் அனுப்ப வாய்ப்புள்ள நண்பர்கள் அவ்விதமே செய்தால் அவர்களுக்குப் படிப்பு மற்றும் இதர செலவுகளுக்குப் பேருதவியாக இருக்கும்.

ICICI BANK EASY RECEIVE WELCOME KIT

ERODE BRANCH

CUST ID - 520947786

12 DIGITAL ACCOUNT NUMBER : 606201521085

வங்கிக் கணக்கு - சி.ஸ்ரீதர் பெயரில் உள்ளது.இவர் தோழர் வேலுச்சாமியின் தம்பி.

காசோலை’/ட்ராப்ட் அனுப்ப: சி.ஸ்ரீதர்,12-பி/25kannimaar கோவில் தெரு,அக்ரகாரம் போஸ்ட், ஓங்காளியம்மன் கோவில் அருகில்,குமாரபாளையம் மெயின் ரோடு,பள்ளிப்பாளையம்-638006,namakkal மாவட்டம்.செல்-9150163445




பி.கு:

கொலையாளிகளால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்மணி ஒரு கவுண்டர்-இஸ்லாமியர் தம்பதியின் மகள்.அருந்ததியர் என்று முந்தைய பதிவில் தவறாக எழுதிவிட்டேன்.தொலைபேசித் தகவலில் நான் சரியாக உறுதிப்படுத்தாமல் எழுதிவிட்டேன்.மன்னியுங்கள்.அப்பெண்மணிக்கும் உதவ வேண்டும் என கட்சித் தோழர்கள் முயன்றபோது அவரும் அவர் குடும்பத்தாரும் மறுத்து விட்டார்கள்.இதுபற்றி வெளியே யாரோடும் பேச அவர்கள் விரும்பவில்லை. அசிங்கப்பட்டது போதாதா என்று ஒதுங்கும் மனநிலை அவர்களுக்கு வந்திருக்கலாம். கொலை ,கேஸ் என்று ஆகிவிட்ட சூழலில் அச்சம் காரணமாகவும் ஒதுங்க நினைத்திருக்கலாம்.

3 comments:

hariharan said...

சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்காக உழைத்து அதற்காக தன்னுயிரையே ஈந்த தோழரின் குழந்தைகளுக்காக நிச்சயம் உதவவேண்டும். விரைவில் என்னால் இயன்ற நிதியை அனுப்புகிறேன் என்னுடைய நண்பர்களுக்கும் தெரிவிக்கிறேன், உங்களுடைய சிரத்தைக்கும் நன்றி!

தோழன் said...

”செம்மொழித் தமிழுக்குச் செய்ய வேண்டியது என்ன” என்ற இயக்கத்தை எங்கள் மாவட்டத்தில் பிரச்சாரம் மூலமாகவும் புத்தக விற்பனை இயக்கம் மூலமாகவும் தொடர்ந்து செய்து கொண்டிருந்த வேளையில் தோழர். வேலுச்சாமி குழந்தைகள் பற்றிய உங்கள் வேண்டிகோள் படிக்க நேர்ந்தது. அப்படியே அச்சிட்டு நண்பர்களிடம் கொடுத்தேன். மேலும் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் பரிமாறிக் கொண்டேன். முதல் கொடையாக எனது மனைவி மேகலை ரூபாய் 1000 தர, ஆர்வமாய் நண்பர்கள் அனுப்பிய தொகை ரூபாய் 5000த்தை தொட்டது. தோழர்.வேலுச்சாமியின் சகோதரர் ஸ்ரீதரின் கணக்கிற்கு அனுப்பி வைத்து விட்டேன். அவரும் நன்றி கூறி பதில் எழுதியுள்ளார். ஈரம் எல்லோர் நெஞ்சிலும் நிறையவே நிரம்பி வழிகிறது தமிழ். பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேசக்கரம் நீட்ட வாய்ப்புக் கொடுத்த உங்களுக்குத் தான் நன்றி சொல்லனும். நாகநாதன் கே. திருச்சி.

hariharan said...

ரூ.2000க்கான காசோலையை அனுப்பியிருந்தேன்,ஸ்ரீதரை தொடர்புகொண்டு உறுதிபடுத்திக்கொண்டேன்.
நன்றி.