Sunday, May 31, 2009

பெண்மை என்றொரு கற்பிதம்... (மூன்றாம் பகுதி)

 8


முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான்துழந்து அட்ட தீம்புளிப்பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே - ( குறுந்தொகை : பாடல் 167 )

எவ்வளவு அழுக்கான ஆடையணிந்து புகை படிந்த கண்களோடும் தலைவி சமைத்துப்போட்டா லும் கணவன் அவள் சமையல் இனிது என்று பாராட்டுவதைக்கேட்டுத் தலைவி பிறர் அறியாவண்ணம் நுண்ணிதாக மகிழ்ந்தாள் என்று இப்பாடல் ஒரு காட்சியை விளக்குகிறது. ரொம்பப்புகழ் பெற்ற சங்கப் பாடல் இது. உண்மையில் இது மிகவும் ரசிக்கத்தக்க பாடல்தான். என்ன ஒரு ரசமான குடும்பக் காட்சி. ஆனால், மனைவி சமைத்துப்போட கணவன் பாராட்ட அதைக்கண்டு பெண் நாணிச் சிவக்க என்று குறுந்தொகைக் காலத்திலேயே இந்த ஆண் - பெண் வேலைப் பேதமும் உன் கை ருசியே தனிதான் என்று ஏமாற்றி அடுக்களையை அவளது சாம்ராஜ்ஜியமாகத் தலையில் கட்டியதும் வந்துவிட்டதே என்று நினைக்கை யில் பாடல் வருத்தமளிக்கிறது. தொல்காப்பியத்திலேயே,


ஏனது சுவைப்பினும், நீ கைதொட்டது
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு


- என்று பெண்கள் தலையில் மொளகா அரைக்கப்பட்டு விட்டதுதான்.
ஆனால், இங்கு நாம் அதுபற்றி விளக்கிப் பேசப்போவதில்லை. அதுபற்றிப் பின்னர் பார்க்கலாம். முதல் வரியில் வரும் காந்தள் மெல்விரலை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். கெட்டித்தயிரைப் பிசைந்த தால் சிவந்து போன ஒரு பெண்ணின் கை விரல்களைப் பற்றி இந்த வரி பேசுகிறது. அவ்வளவு மென்மை யான விரல்கள் என்று! இப்படியே ஆரம்பித்து பெண்மையை விட மென்மையான தலையணைகள் என்று இன்று கம்பெனிகள் விளம்பரம் செய்கிறவரை வந்து நிற்கிறோம்.

மென்மை என்பது பெண்மையின் ஓர் அம்சம் என்கிற கருத்து காலம் காலமாக நம் மனங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்காரனும் வெண்டைக்காய்க்கு லேடீஸ் ஃபிங்கர் (பெண் விரல்) என்று பேர் வைத்து அங்கேயும் இதே கொடியை நாட்டி வைத்து நாங்களும் உங்களுக்குக் குறைஞ்சவங்க இல்லே என்று சொல்லிவிட்டான். மென்மையானவள் என்பதால் முரட்டு வேலைக்கு லாயக்கில் லாதவள் என்று சமூக உற்பத்தியின் பல தொழில்களிலிருந்தும் பெண் விலக்கி வைக்கப்படுகிறாள்.

சோசலிச சோவியத் யூனியனுக்குப் போய் வந்து தன் அனுபவங்களை எழுதிய ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அங்குள்ள அங்குள்ள பெண்கள் எல்லா வேலைகளும் செய்கிறார்கள். ஆகவே அவர்களுடைய கைகளெல் லாம் முரடாக இருக்கின்றன. பெண்களுக்குரிய மென் மையை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்று வருந்தி எழுதினர். எல்லா ஆண்களுக்குமே அப்படி ஒரு வருத்தம் இருக்கிறதுதான். கையைப் பிடித்தால் பஞ்சு மாதிரி மென்மையாக இருக்கணும் என்கிற எதிர்பார்ப்பு.
ஆனால், நாட்டின் பெருவாரியான உழைக்கிற பெண்களின் கைகள் முரடாகவும் உறுதிப்பட்டும்தான் இருக்கிறது. சங்க இலக்கியங் களும் உப்பு மூட்டைகள் சுமந்த உமணப் பெண்கள் பற்றிப் பேசுகிறது. தூத்துக் குடிக்குப் போனால் இன்றும் அதே உமணப் பெண்கள் உப்பளங்களில் பெட்டிகளை வைத்துத் தூக்கிச் சுமப்பதைக் காண முடியும். சாலைப் பணி களில், கரும்பு வெட்டும் தோட்டங்களில், உயர்ந்து எழு கின்ற கட்டிடங்களுக்கு ஊடே என்று பெண்கள் அரி வாளும் மண்வெட்டியும் பிடித்துக் கடினமான வேலை கள் எல்லாம் செய்கிறார்கள். மென்மை - மெல்லியலாள் என்கிற புருடாக்கள் எல்லாம் மத்திய தர வர்க்கம் மற்றும் அதற்கு மேல் உள்ள பெண்களின் தலையில்தான் பெரிதும் சுமத்தப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியை மண் மகள் அறியா வண்ணச் சீறடியாள் என்று இளங்கோவடிகள் குறிப்பிடு வார். கண்ணகியும் மிக வசதியான வீட்டுப்பிள்ளைதான். கண்ணகியின் பாதங்கள் மண்ணிலேயே பட்டதில்லை என்று பெருமையாகப் பேசினாலும் இன்னொரு பக்கம் அவளை வீட்டை விட்டு வெளியே விடாமல் அப்படி அடைத்து வைத்திருந்தார்கள் என்றும் பார்க்க வேண்டி யுள்ளது. உள்ளேயே பூட்டி வச்சிருந்தா காயும்கூட அவிந்து மென்மை யான கனியாகி விடுவதில்லையா? அதுபோலத் தான் பெண்ணும், மென்மையாக்கப் பட்டிருக்கிறாள். இது இயற்கை யான மென்மை இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பூட்டி வச்சுப் பழுக்க வைத்த மென்மை.

மென்மையின் இன்னொரு முக மாக அவள் பலவீனமானவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். றுநயமநச ளுநஒ என்று ஆங்கிலமும் சொல்கிறது. ஆனால், அது அப்பட்டமான பொய். உடல்ரீதியாகவே பெண்தான் பலசாலி. ஆணின் உடலில் பருவத் தில் மீசை முளைப்பது போன்ற சிற்சில மாற்றங்களைத் தவிர வேறு எந்த சிக்கலும் சாகும் வரை ஏற்படுவதில்லை. ஆனால், பெண் மாதவிலக்கில் துவங்கி கருத் தரித்தல், குழந்தை பெறுதல், மெனோபாஸ் என உயிரைக் காவு கேட்கும் உதிரப்போக்கு நிறைந்த பல உயிரியல் ரீதியான மாற்றங்களைத் தன் உடம்பில் தாங்கியபடியே தன் வாழ்நாள் முழுவதையும் கடந்து கொண்டிருக்கிறாள். ஆண் சந்திக்கும் மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் இந்த உடல் பிரச்னைகளோடு சேர்த்துக் கூடுதலாகச் சந்திக்கிறாள்.

உடல்ரீதியாகவும் சரி மனரீதியாகவும் சரி பெண்தான் ஆணைவிடப் பலசாலி. ஆனால், நமது பொதுப்புத்தி யில் நேர்மாறான புரிதல் தான் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது.

பெண்மையின் மென்மை என்றால் என்ன என்பதற்கு நாம் கொண் டுள்ள புரிதல் ஆணின் தன்மைக்கு எதிரானது என்பதுதான். கடுமை, கடினம், முரடு, வலிமை, உறுதி போன்றவை எல்லாம் ஆண் குணம். இவற்றுக்கு எதிராக மென்மை என்பதை நாம் பெண்ணுக்குரியதாக முன்வைக்கிறோம். நாம் இத்தொடரின் ஆரம்ப அத்தி யாயங்களில் குறிப்பிட்டதுபோல ஆணையும் பெண்ணையும் பரஸ்பர எதிர்வுகளாக நிறுத்திப் பார்க்கும் கண் ணோட்டத்திலிருந்தே ஆணிடம் இல்லாது பெண்ணிடம், பெண்ணிடம் இல்லாதது ஆணிடம் என்று இதெல்லாம் இயற்கையின் படைப்பு போன்ற ஒரு தோற்றத்தை இயல்பானது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக வரலாற்றுப் போக்கில் உருவாக்கப் பட்டதுதான். பெண் ஆணுக்கு இணையாக முடியாது. மாறாக அவனிடம் இல்லாத சில பள்ளங்களை இட்டு நிரப்புபவளாக இருப்பதே இயற்கை அவளுக்கு இட்ட கட்டளை என்கிற கண்ணோட்டத்திலிருந்தே இக் கருத்துக்கள் பிறக்கின்றன. சமூகம் இப்படியாக ஏற்றத் தாழ்வுமிக்கதாக, வர்க்க சமூகமாக, உயர்ந்தோர் தாழ்ந் தோர் என்பதாக இருப்பது இயற்கையிலேயே நியாயம் என்பதை வலியுறுத்துகிற முக்கிய ஆதாரமாக இந்த ஆண் பெண் பேதம் பயன்படுகிறது. காலம் காலமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் குணங்கள் என்பவை சும்மா வெறும் விவ ரணைகளாகவோ அலங்காரத்துக்கு ஏற்பட்டவையோ அல்ல. சமூகத்தில் ஆண் செய்பவற்றையெல்லாம் பெண் செய்யக் கூடாது. பெண் செய்வதற்கென்று சில இருக்கின்றன. அவை சமூகத்தின் சட்டங்கள் மட்டு மல்ல, இயற்கையின் விதியே அப்படித்தான் என்று அழுத்தமாகச் சொல்வதற்காகச் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டவையாகும். ராஜஸ்தான் மாநிலத்தில் பன்வாரி தேவி என்கிற பெண்மணி இந்தக் கட்டுக்களை யெல்லாம் தாண்டினார். ஒரு சமூக சேவகர் என்கிற முறையில் அங்கு அமலில் இருக்கும் குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பல பிற்போக்கான பழக்க வழக் கங்களுக்கு எதிராக இயக்கம் நடத்தினார். உயர்சாதி ஆண்கள் சிலர் கூட்டாக அவரைப் பாலியல் பலாத் காரம் செய்தனர். அவரது சமத்துவ நடவடிக்கைகளை முடக்குவதற்காகவே அவர் மீது அவ்வன்முறை தொடுக்கப்பட்டது. பொம்பளைக்கு இதெல்லாம் தேவை யா? அவள் தன் எல்லையை மீறலாமா? மீறினால் இப்படித்தானே நடக்கும்? என்கிற கேள்விகளை மீண்டும் பொதுப்புத்தியில் எறிகிற சம்பவமாக அந்த வன்முறை நிகழ்த்தப்பட்டது.

ஆகவே, பெண்மை என்கிற பெயரில் அது பெண்மை, நளினம், தாய்மை, கருணை, தியாகம் என எதுவாக வும் இருக்கலாம். அக் குணங்கள் வெறும் அலங் காரத்துக்கும் ஆண் - பெண் வேறுபாட்டைச் சும்மா காட்டுவதற்காக வும் ஏற்பட்டவை அல்ல, அவற்றுக்கு ஒரு சமூகக் கடமை இருக்கிறது. செயல்பாட்டுத் தன்மை யோடு இணைப்பு இருக்கிறது.

ஒரு பெண் மீது சுமத்தப்படும் குணங்கள் (கவனிக்க: பெண்ணின் குணங்கள் அல்ல. பெண் மீது சுமத்தப்படும் குணங்கள்) பற்றி நாம் பேசுகையில் நாம் இரண்டு வித மாகப் பார்க்க வேண்டும். ஒன்று உயிரியல் ரீதியானது எவை என்கிற கேள்வி. இன்னொன்று பண்பாட்டு ரீதியாக அவள் மீது சுமத்தப்பட்டுள்ள குணங்கள் எவை என்கிற கேள்வி.

பிள்ளை பெற்றுக் கொள்வதும் பாலூட்டுவதும் உயிரியல் சார்ந்தவை. அது இயற்கையானது. இயல் பானது. அதைக் கேள்விக்குள்ளாக்க வாய்ப்பில்லை. அது நிச்சயமாக ஆணுக்குக் கிட்டாத வாய்ப்பு.


அதைத் தவிர தாய்மை, பெண்மை, மென்மை போன்ற மைகள் எல்லாம் யாரு வச்ச மை? என்று கேட்க வேண்டிய மைகள்தான். இவையெல்லாம் பண் பாட்டு ரீதியாக - வரலாற்று ரீதியாக - சமூக ரீதியாகப் பெண் மேல் சுமத்தப்பட்ட மைகள்தான். இவை அத்தனையும் நம் கேள்விக்கு உள்ளாகியே தீர வேண்டும். இவை யும் உயிரியல் ரீதியானவைபோல, இயற்கையின் படைப்புபோல ஒரு புரிதல் நம் (ஆண்-பெண்) எல்லோருடைய  மண்டைகளிலும் ஏற்றப்பட்டுள்ளன. அது பண்பாட்டின் வேலை. உண்மையில் பண்பாடுதான் ஒரு பெண்ணைக் கட்டமைக்கிறது. பெண் பிறப்பதில்லை. பெண் கட்டமைப்படுகிறாள் என்று சொல்வது இந்தப் பண்பாட்டுக் கட்டமைப்பைத்தான்.இந்தப்பண்பாடு என்பதுதான் என்ன? இது ஏன் இந்த மாதிரி வேலைகளையெல்லாம் செய்கிறது? அதைக் கேள்விக்குள்ளாக்கி மாற்ற முடியாதா? அதை யார் செய்வது? ஆண்களா? பெண்களா? இருவரும் சேர்ந்தா? 

                             9

ஆண்மை - பெண்மை என்பவை வெறும் உயிரியல் ரீதியானவையோ உடலியல் ரீதியானவையோ மட்டும் அல்ல. கடவுளால் அல்லது இயற்கையால் இப்படி இருக்கக் கடவது எனப் படைக்கப்பட்டவையும் அல்ல. நூற்றாண்டுகளாக மனித குலம் கடந்து வந்த பாதையில் - வரலாற்றின் போக்கில் - அவர்கள் கட்டமைத்துக் கொண்ட சமூக ஏற்பாடுகளின் - சிந்தனை மற்றும் செயல்பாட்டு முறைமைகளின் பகுதியாகவே ஆண்மையும் பெண்மையும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகவே, ஆண்மை அல்லது பெண்மை என்பவற்றின் பொருளும் பரிமாணமும் முக்கியத்துவமும் காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் மாறக் கூடியவையே. மாறிக் கொண்டேதான் வந்திருக்கின்றன.

இது தொடர்பாகப் பல்வேறு சிந்தனைப் பள்ளிகள் வேறு வேறு வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் தருகின்றன. மார்க்சிய சிந்தனைப் பள்ளிகள் ஆண் - பெண் உறவு, ஆண்மை - பெண்மை மற்றும் குடும்பம் இவை பற்றியெல்லாம் விரிவான ஆழமான முழுமையான பார்வையை முன்வைக்கின்றன. பாலினம் அல்லது பால்பாகுபாடு என்பது சமூகத்தில் தனித்து இயங்கும் ஒரு யதார்த்தமல்ல. சமூக முழுமையின் ஒரு பகுதியாகத்தான் அவற்றைப் பார்க்க வேண்டும் என்கிறது மார்க்சியம். ஆண்கள், பெண்களின் பங்கு மற்றும் இடம் என்பவை வெறும் செயல்பாட்டு ரீதியான வை மாத்திரமல்ல, சமூகப் பொருளாதார அமைப்பின் அங்கங்களாக அம்சங்களாக - பொருளாதார அதிகாரம், சமூக மேலாதிக்கம், பண்பாட்டுக் கடமைகள், உரிமைகள் ஆகிய இவற்றைப் பிரதிபலிப்பவையாகவும் இவற்றின் மீது தாக்கம் செலுத்துபவையாகவும் ஆண்மை - பெண்மை மற்றும் பாலின பேதம் என்பவை அமைந்துள்ளன.

புரிதல் என்பது எப்போதும் இயங்கியல் ரீதியானது. இந்த உலகத்தை மனிதன் புரிந்து கொள்வது அதைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளவோ அதை வெறுமனே வியாக்கி யானம் செய்யவோ அல்ல. மாறாக அதை இன்னும் சிறந்த உலகமாக மாற்றுவதற்காக.

மனித குலம் இரண்டு விதமான பொருளியல் நடவடிக்கைகள் மூலம் தன்னைத்தானே வாழவைத்துக் கொள்கிறது. ஒன்று உற்பத்தி. இன்னொன்று மறு உற்பத்தி. ஒரு சமூகம் தனக்கான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்காகச் செய்யும் சகல நடவடிக்கைகளையும் உற்பத்தி என்று மார்க்சியம் குறிப்பிடுகிறது. மறு உற்பத்தி என்பது குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி இச்சமூகத்துக்குத் தருவது - இதில் வெறும் உடம்பாகப் பிள்ளைகளைப் பெற்றுத் தருவதை மட்டும் மறு உற்பத்தி என்று சொல்வதில்லை. இந்த உலகத்தின் போக்கை - நிலவும் வாழ்முறையை ஏற்று அதற்குத் தக்கவாறு குழந்தைகள் தம்மை மாற்றி யமைத்துக் கொள்வது உள்ளிட்டதுதான் மறுஉற்பத்தி. அவ்விதம் தகவமைக்கப்படும் குழந்தைகள் ஏற்கெனவே அச்சமூகத்தில் நிலவும் உற்பத்தி உறவுகளின் படிநிலையில் தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை - பாத்திரத்தை - எதிர்ப்பின்றி ஏற்று வாழப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். நிலப்பிரபுவின் மகன் நிலப்பிரபுவாக கூலியின் மகன் கூலியாக, பிரச்சனை இல்லாமல் உற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு காலத்திலும் ஒரு உற்பத்தி முறை அமலில் இருந்து வந்துள்ளது - வருகிறது. அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம், முதலாளியச் சமூகம், சோசலிச சமூகம் என.... அவ்வச்சமூக ஏற்பாட்டுக்கேற்ற மக்களைத் தயாரிக்கும் பாசறைகளாகக் குடும்பங்கள் கடமையாற்றுகின்றன. பிள்ளைகளை மறு உற்பத்தி செய்யும் உடலியல் வாய்ப்புப் பெற்ற பெண்களுக்கு உற்பத்தி முறையில் வேறொரு முக்கியப்பணியை வர்க்க சமூகம் வழங்கியுள்ளது. வர்க்க சமூகத்தில் தமக்குரிய - தமக்கு வரையறுக்கப்பட்ட இடங்களில் மனப்பூர்வமாக உட்கார்ந்து கொள்ளும் பிள்ளைகளாக மனிதர்களைப் பயிற்றுவிக்கிற கடமை. இதையே சமூகவயமாக்கல் என்கிறோம். குடும்பமும் மதமும் தான் இதில் பிரதானப் பங்கு வகிக்கின்றன. பெண்கள் குடும்ப விளக்குகளாகவும் பக்தியின் உருவங்களாகவும் கட்டமைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் இதுதான். பண்பாட்டுக் கூறுகளையும் நம்பிக்கைகளையும் சுமந்து தலைமுறை தலைமுறைக்கும் கடத்திச் செல்பவர்களாகவும் மத ஆச்சாரங்கள் கடமைகள் குடும்பச் சடங்குகளை வழுவாது கடைப்பிடிப்பவர்களாகவும் பெண்கள் வர்க்க சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருப்பது இந்த வர்க்கக் கடமையை நிறைவேற்றத்தான்.
இந்த சமூகவயமாக்கும்  ஆளும் வர்க்கத்தேவை வெளியிலிருந்து அல்லா- மாறாக வீட்டுக்குள்ளிருந்தே பெண்கள் மூலமாக நிறைவேற்றப்படுகிறது.
இந்தப் புரிதலோடு பண்பாடு என்றால் என்ன என்கிற கேள்விக்குள் நாம் புக வேண்டும். பண்படுத்துவது எதுவோ அதுவே பண்பாடு. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்றே கலித் தொகையும் கூறுகிறது. சமூகத்தின் பாடறிந்து - செல்நெறி அறிந்து - ஒழுகுதலே பண்பாடாகிறது. நிலத்தைப் பண்படுத்துவதை ஆங்கிலத்தில் அக்ரி கல்ச்சர் என்கிறோம். மனதைப் பண்படுத்துவதை கல்ச்சர் என்கிறோம். யார் நிலத்தை யார் பண்படுத்துவது நல்லது என்று நாம் கேட்பதில்லை. யார் மனதை யார் பண்படுத்துவது யாருக்கு நல்லது என்றும் நாம் கேட்பதில்லை.

ஆதிகாலம் தொட்டு - இனக் குழு சமூகத்திலிருந்து - மனித குலம் தன் வாழ்வனுபவத்தினூடே உட்செறித்த மதிப்பீடுகள் வாழ்வின் அர்த்தம் பற்றிய புரிதல்கள், நடை, உடை, பாவனை எனப்பெறும் வாழ்முறைகள் எல்லாம் பண்பாட்டில் அடங்கும் என்பர். ஆனால், வர்க்க சமூகமாக மனித குலம் பிளவுண்ட பிறகு பண்பாட்டுக்கு வேறு பணிகள் வந்து சேர்கின்றன. ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறது என்னும்போது ஆண்மை, பெண்மை, குடும்பம், பண்பாடு என்கிற ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு வர்க்கம் - வர்க்க நலன் என்பதை நாம் தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்தப் பண்படுத்தும் பணி பிரதானமாக மனித மனதின் பொதுப்புத்தி எனப்படும் காமன் சென்ஸ் என்கிற தளத்தில்தான் வலுவாக நடக்கிறது. பட்டறிவும், வாழ்பனுபவமும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆளும் வர்க்கத்தின் (அது பெற்றுள்ள இடத்தின் காரணமாக இயல்பாகவே) சிந்தனைகளும் கலந்த கலவைதான் பொதுப்புத்தியாக வடிவெடுக்கிறது. பொதுப்புத்தியில் எல்லாம் கலந்துதான் கிடக்கும். நம்பிக்கைகள், சமூக விழுமியங்கள், பல்வேறு பண்பாட்டுக் கூறுகள் என எல்லாமும் குழம்பிக் கிடக்கும். அதில் சக்திமிக்க தலையீடு செய்து ஆளும் வர்க்கம் தனக்குச் சாதகமான திசை வழியில் மனித மனங்களை வழி நடத்திடப் பண்படுத்துகிறது.

பண்படுத்தும் இவ்வர்க்கக் கடமையை நிறைவேற்றும் தொழில் நுட்ப அறிவுடன் இயங்கும் தொழிற்சாலைகளாக இருப்பவை பண்பாட்டு நிறுவனங்கள். குடும்பம், கல்விச் சாலைகள், மதம், மீடியா, கலை - இலக்கியங்கள் என விதவிதமான பண்பாட்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்தியாவில் சாதி எனும் நிறுவனம் நம் சமூகத்தின் வர்க்க ஏற்பாடாகவும், பண்பாட்டு நிறுவனமாகவும், இருவிதப் பணிகளைச் செய்கிறது. இந்நிறுவனங்களின் எல்லாப் பணிகளையும் விரித்துப் பார்க்க இங்கு இடமில்லை. ஆண்மை - பெண்மை உருவாக்கத்தில் இவை எவ்விதமான பண்படுத்தலைச் செய்கின்றன என்று பார்ப்பதே   இப்போதைய தேவை.                            


10


சென்ற கட்டுரைக்கு வாசகர் கடிதம் பகுதியில் கம்பிக் குடியிலிருந்து தோழர் வேம்பு மணி சாமி எழுதிய விமர்சனம் பார்த்தேன். பண்டைக்காலத்தில் உற்பத்திக்கு மனித சக்தி தேவைப்பட்டதால் அதிகக் குழந்தை பெறுவதும் தேவைப்பட்டது.ஆகவே பெண் உடலுக்கு ஒரு கவர்ச்சித்தன்மை ஊட்ட வேண்டியிருந்தது என்பதுபோல பல கருத்துக்கலை அவர் குரிப்பிட்டிருந்தார்.

அவ்வாசக எதிர்வினைக்குப் பின்பும் சில கேள்விகள் நிற்கத்தான் செய்கின்றன. இயல்பு மீறிய கவர்ச்சிப் பொருளாகப் பெண்ணுடல் மட்டும் ஏன் வைக்கப்பட வேண்டும்? இலக் கியங்களும், இலக்கணங்களும் மனிதன் காட்டில் வாழ்ந்த இனக்குழு சமூகத்தால் எழுதப்பட்டவையா? சங்க இலக்கியம் என்பது இனக்குழு சமூகத்திலிருந்து நிலவுடைமைச் சமூகத்தை நோக்கிப் பயணிக்கிற  மாறிக் கொண்டிருந்த ஒரு காலத்தின் வாழ்வைப் பதிவு செய்துள்ளது என்றே அறிஞர்கள் கணிக்கிறார்கள். சிலைகள் ஆலயங்களில் வைக்கப்பட்டதும் பெரும் பெரும் ஆலயங் கள் எழுப்பப்பட்டதும் வர்க்க சமூகமாக மாறிவிட்ட நிலவுடைமைச் சமூகத்தில் அல்லவா?

தவிர, வாசகர் குறிப்பிடுவது போல அன் றைய பெண்ணடிமைச் சிந்தனைகள் அன் றைய காலத்தின் தேவையால் எழுந்து அன்றோடு மடிந்து போய்விடவில்லையே அவை மியூசியத்தில் வைக்கப்படவில்லை. இன்றும் நம் மூளைகளை ஆக்கிரமித்து வழி நடத்தும் வாழும் சிந்தனைகளாகவே இருக்கின்றன. ஆகவே, பழையதை அய்யோ பாவம் பழைய சிந்தனை என்று ஒதுக்கிச் சும்மா பாராட்ட முடியாது. மறுவாசிப்புச் செய்து விமர்சித்துக் காலி செய்ய வேண்டியது நமது முக்கியமான பணி அல்லவா?

மேலும், காம உணர்ச்சி என்பது இயற்கை யானது- வயிற்றுப் பசியைப் போல. அதற்கு மாடுகளைப் புணர்ச்சிக்குக் கிளப்பிவிடுவது போல பாட்டுப் பாடிக் கிளப்பிவிட வேண்டிய அவசியம் இல்லை. அது தன்னாலே நடக்கும். வர்க்க சமூகத்தின் தேவையிலிருந்தே ஆணா திக்கச் சிந்தனை பிறக்கிறது. பெண்ணை வெறும் உடம்பாக -ரசிக்கத்தக்கதாக- குறுக்குகின்ற பார்வை எந்தக் காலத்தில் தோன்றி யிருந்தாலும் மறுவாசிப்புக்கு உட்படுத்தி இன்றின் பட்டறையில் தட்டி நிமித்தியாக வேண்டும்.  நாங்கள் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் ஒண்ணாவது இரண்டாவது வகுப்புகளில் இருந்தபோது ஒரு பழக்கம் இருந்தது.ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான விடை சொல்லாவிட்டாலோ அல்லது பாடம்   தப்பில்லாமல் ஒப்பிக்கத் தெரியாவிட்டாலோ அடிப்பது முட்டங்கால் போட வைப்பது தலையில் குட்டுவது போன்ற தண்டனைகளை சில ஆசிரியர்கள்  வழங்குவார்கள்.வேறு சிலர் தப்பாகப் பதில் சொன்ன பையன்களை  பொம்பளைப் பிள்ளைகள் உட்கார்ந்திருக்கும் பலகையில் அவர்களுக்கு நடுவில் உட்கார வைத்து விடுவார்கள்.

பல பெண் உடல்களுக்கு நடுவில் ஒரே ஒரு ஆண் உடல்.

பிற பையன்களின் கேலிச்சிரிப்பு உடனே பின் தொடரும்.அவமானத்தால் நாங்கள்  கூசிப்போவோம்.ஆண் உடல் வேறு பெண் உடல் வேறு என்கிற தன்னுணர்வு பால்பேதம் பற்றிய எவ்வித உணர்வும் தோன்ற வாய்ப்பில்லாத அந்தப் பால்ய நாட்களிலேயே பள்ளிக்கூடத்தில் எமக்குத் தோன்றிவிட்டது.  சமூகத்தால் கட்டமைக்கப்படும் உடல்கள் மற்றும் உடல் அசைவுகள் குறித்து இன்று உலக அளவில் ஏராளமான ஆய்வுகள் வந்து கொண்டிருக்கின்றன.  அவற்றை நாம் படிக்கும் போது எமது பள்ளியில் நடந்த அத்தண்டனைச்சம்பவங்கள்  தவிர்க்கவியலாத படி நினைவுக்கு வருகின்றன.  இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும் நடை வனப்பும் நாணின் வனப்பும்-புடைசால்  கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு -                                                   (ஏலாதி)

என்று நம்பிப் பள்ளிக்கூடம் போனால் அங்கே பாடத்திட்டத்துக்கு அப்பால் பல கல்வி நடக்கிறது. ஆண்-பெண் உடல் பேதம் ஒரு முக்கியமான கல்வி அல்லது பண்படுத்தல். பால பாடங்களில் குடும்பம் பற்றிய படத்தில் அப்பா ஈசி சேரில் உட்கார்ந்து பேப்பர் படிப்பதும் அம்மா சமையல் செய்வதும் போன்ற காட்சிப்படுத்தலில் துவங்கி , சமூகத்தில் ஆண்- பெண் இருவரின் இடம் எது- அந்தஸ்து என்ன என்பது பற்றிச் சமூக மனதில்-பொதுப்புத்தியில் என்ன இருக்கிறதோ அதைப் பள்ளிக்கூடம் கேள்விக்குள்ளாக்கவில்லை.மாறாக . வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்  என்பதாக அடிக்கோடு இட்டுப் பிள்ளைகள் மனதில் அழுந்தப் பதிக்கிறது.அதாவது மேலும் நுட்பமாகப் பண்படுத்துகிறது .அவள் ஏன் மனையுறை மகளிர் ஆக்கப்பட்டாள் என்று கேள்வியைப் பள்ளிக்கூடம் நம் மனதில் எழுப்புவதில்லை.எழுப்பினால்தானே அது சரியான கல்வியாகும்?

ஆண்கள் பெண்கள் சேர்ந்து படிக்கிற பள்ளிகளை விட பெண்கள் பள்ளி ஆண்கள் பள்ளி என்று தனித்தனியாக இருப்பதே நலம் என்கிற கருத்து வலுவாக நம்மிடம் உள்ளது. ஈன்றவள்,மகள், தம் உடன் பிறந்தாள் ஆயினும் சான்றார் தமித்தா  உறையற்க ஐம்புலனும் தாங்கற் கரிதாகலன் (ஆசாரக்கோவை)

(தாய்,மகள், சகோதரியே ஆனாலும் அவர்கள் தனித்திருக்கையில் அவர்களோடு உடன் உறையக்கூடாது -ஏனெனில் ஐம்புலன்களையும் அடக்குவது என்பது அவ்வளவு லேசான காரியமில்லையே) என்று பாடிவைத்தவர்கள் ஆயிற்றே நாம்.(என்ன கேவலமான பாட்டய்யா இது! )  இவ்விதமாக ஆண்களும் பெண்களும் சாதாரணமாகக் கலந்து பழகுதல் தவறென்று நம் பண்பாட்டில் நிறுவப்பட்டுள்ள ஒன்றையே கல்விச்சாலைகளும் கறாராகக் கற்றுத் தருகின்றன. நடைமுறைப் படுத்துகின்றன. அதாவது மனங்களைப் பண்படுத்துகின்றன.

விளையாட்டிலும்கூட பெண்களுக்கான விளையாட்டுகளாகப் பரவலாக நம் பள்ளிகள் வைத்திருப்பது த்ரோ பால் (வாலிபால் கிடையாது),கோக்கோ, வளைபந்து எனப்படும் டென்னிகாயிட் இவைபோலச் சிலவே.அதிலும் பேதம்தான்.

மாணவர்களைத் திட்டுவதற்கு (மாடு மேய்க்கத்தான் லாயக்கு போன்றவை) வேறு வசவுகள் மாணவிகளைத் திட்டுவதற்கு ( ஆக்கிப் போடத்தான் லாயக்கு) வேறு வசவுகள் . பெண்களுக்குப் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால் பெண்களின் வருகையே பாதிக்கப்படுவது தனியாகப் பேச வேண்டிய ஒன்று.

கல்விச்சாலைகள் என்பவை பண்பாட்டு நிறுவனங்களில் முக்கியமானவை.அவற்றை ஆளும் வர்க்கங்களே நடத்துகின்றன.சட்டப்படி நடக்கிற -- சட்டத்தை மதிக்கிற-- ஒருமனிதரின் உத்தரவுக்குக் கீழ்ப்படிகிற -  மார்க் அடிப்படையில் தன் தகுதியை சமூகத்தில் தன் இடத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிற விதமாக மனங்களைப் பண்படுத்தும் தொழிற்சாலையே கல்விக்கூடம். இவ்விதமான வர்க்கக் கடமையை நிறைவேற்றும் கல்விச்சாலை  வர்க்க வேறுபாடுகளைத் தன் பாடத்திட்டத்தின் மூலம் கற்றுத்தருவதில்லை.மாணவ மாணவிகளில் பெருவாரியானவர்களான உழைப்பாளி மக்களின் பிள்ளைகளுக்கு வர்க்க உணர்வை ஊட்டும் விதமான கல்வியைத் தருவதில்லை.ஏனெனில் அது அதற்கு எதிராக இயங்குவதற்காகவே படைக்கப்பட்டது.

அதே காரணங்களாலேயே அது பெண்களுக்கு பெண் உணர்வையும் ஊட்டுவதில்லை.பெண் உணர்வு என்று நாம் குறிப்பிடுவது பெண்ணிய உணர்வைத்தான்.அதாவது பெண் சமத்துவ உணர்வைத்தான்.மக்கள்  தொகையில் சரிபாதியான பெண்கள் ஆண்களுக்கு இணையானவர்கள் அல்ல என்று பல்வேறு வடிவங்களில் கல்விச்சாலை கற்பிக்கிறது.அதில் ஒன்றுதான் உடல் ரீதியாகப் பெண்ணை வேறுபடுத்தி நிறுத்துவது.

அடுத்து பெண்களுக்குப் பொறுத்தமான கல்வி - பாடப்பிரிவுகள் என்று சிலவற்றை உருவாக்கி வைப்பது.ஹோம் சயின்ஸ் ,அறிவியல் பாடங்கள், கல்வியியல்,செகண்டரி கிரேடு ஆசிரியர் பயிற்சி ,நர்ஸ், சித்த மருத்துவம் என்று துவங்கி இன்று கம்ப்யூட்டர் வரைக்கும் - அதாவது உட்கார்ந்த இடத்தில் படிக்கிற மாதிரி- அலையாத வேலைக்குத் தோதான கல்வி.ஆய்வு மாணவிகளுக்குக் கூட  கிராமம் கிராமமாகச் சென்று ஆய்வு செய்து ஆய்வேட்டைச் சமர்ப்பிக்கும் தலைப்புகளைத் தவிர்த்து ஜெயகாந்தன் படைப்புகளில் சமூகப்பார்வை என்பது போல மேசை ஆய்வுகளையே தேர்வு செய்வது. இதுதான் பொதுவான போக்காக இருக்கிறது.

சமீபத்தில் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் கணிணித் துறையில் வேலை பார்க்கும் பெண் வேண்டாம் என்று மறுக்கிற இளைஞர்கள் எண்ணிக்கை பெருகிவருவது விவாதத்தின்போது வெளிப்பட்டது.இது இப்படியே போனால் இன்னும் சில காலத்தில் கணிணித்துறைக்கு இப்போது வேக வேகமாகத் தம் பெண்பிள்ளைகளை அனுப்பிக்கொண்டிருக்கும் பெற்றோர் அதை நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது.

என் பொண்ணு கணிணியில் பெரிய ஆளாக வருவதை விட அவளுக்கு வரன் கிடைத்துக் கல்யாணம் ஆவதுதானே முக்கியம்! கக்கூசிலிருந்து கணிணி வரை எல்லாமே பெண்கல்விக்குத் தடையாக இருப்பது யதார்த்தம்.இது ஒருபக்கம் இருக்க, பாலியல் கல்வி என்பதே நம் பாடத்திட்டத்தில் இன்றுவரை கிடையாது.ஆண்-பெண் இருபால் குழந்தைகளுக்கும் பாலியல் கல்வி அளிப்பது நிச்சயமாக இன்று நிலவும் பால் பேதக் கொடுமைகளைக் குறைக்க சிறிதளவேனும் உதவ முடியும்.சின்ன வயதிலேயே பாலியல் கல்வி அளிக்கப்பட வேண்டும்.பாலுறவுச் சுரப்பிகள் தம் பணியைத் துவக்குவதற்கு முந்திய பால பருவத்தில் இக்கல்வி அளிக்கப்பட்டால் ஆணோ பெண்ணோ தம் உடல் பற்றிய விஞ்ஞானப்பூர்வமான புரிதலோடு பரஸ்பரம் தங்களை மனுஷர்களாகவும் மனுஷிகளாகவும் பார்க்கத் துவங்கி விட வாய்ப்பு உருவாகும். உடல்களைக் கடந்து மானுடப் பிறவிகளாக ஆணும் பெண்ணும் வாழ என்ன மனநிலையைத் தகவமைக்க வேண்டுமோ அது பள்ளிக்கூடத்தில்தான் செய்யப்பட வேண்டும்.இன்று அதற்கு நேர் மாறானது நடந்து கொண்டிருக்கிறது. வரலாற்றைப் போதிக்கும்போது அதில் நிகழ்ந்துள்ள பெண் புறக்கணிப்பு பற்றிச் சொல்லியாக வேண்டும்.இலக்கியம் போதிக்கும்போது  அது பெண்ணியப் பார்வையோடு மறுவாசிப்புச் செய்யப்பட வேண்டும்.அறிவியலில் மறைந்துள்ள ஆணாதிக்கப்பார்வையை அடையாளம் காட்ட வேண்டும். இதுபோன்ற வேலைகளைக் கையில் எடுக்கும் கல்விதான் நமக்குத் தேவை.                                                                             

11                             

கல்விச்சாலைகளை அடுத்து நாம் குடும்பம் என்னும் மிக முக்கியமான பண்பாட்டுத் தொழிற் சாலையைப் பார்க்கலாம். கல்விச்சாலைகள், மதங்கள்,மீடியா போன்றவை யெல்லாம் அளவில் பெரிய பண்பாட்டு நிறுவனங்கள் போலத் தோற்றம் தருபவை.குடும்பம் அவ்விதமாகப் பார்த்தால் அளவில் சிறியதுதான்.ஆனால் பண் படுத்தும் பணியை மிக நுட்பமாக-  குடிசைத் தொழிலாகச் செய்கிற இடம் குடும்பம்.குடும்பம் என்பதை ( ) குழந்தைகளை சமூகவயப்படுத்தும் மையம் என்பார்கள்.நாம் வாழும் சமூகத்துக்கேற்ற மனிதர்களாக மனுஷி களாக குழந்தைகளை வளர்த்தெடுக்கும் இட மாகவே குடும்பங்கள் இருப்பதால்தான் என்ன விதமான ஆட்சி மாற்றங்கள் ஆட்சிமுறை மாற்றங்கள் நிகழ்ந்தபோதும் குடும்பங்கள் தொடர்ந்து அப்படியே நீடிக்க ஆளும் வர்க்கத் தாரால் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

குடும்பத்தின் மைய அச்சாக இருப்பது பெண் என்கிற உணர்வு அழுத்தமாக நம்மிடம் உள்ளது. ஒரு வீடு என்கிற கட்டிடம் குடும்பமாக மாறுவது அந்த வீட்டில் பெண்/பெண்கள் இருக்கும்போது தான் என்பார்கள். ஆகவே வர்க்க பேதமுள்ள- சாதி பேதமுள்ள - இச்சமூகத்திற்கு ஏற்ற சாதி மற்றும் வர்க்க மனிதர்களாக குழந்தைகளை வளர்த்தெடுக்கும் மிகப்பெரிய பொறுப்பை பெண்களின் தலையில் ஏற்றி வைத்திருக்கிறது சமூகம்.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப் பொறுப்பைப் பெண் பிசகாமல் நிறைவேற்றி வருகிறாள்.அதனால்தான் ஆம்பளை கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்திட்டாலும் கண்டு கொள்ளாமல் விடுகிற சமூகம் பெண் விஷயத்தில் எந்த சலுகையும் கொடுப்பதில்லை. தர்மங்கள், நியாயங்கள், சரி-தப்புகள்,நீதி-நேர்மைகள் என எல்லாவற்றையும் அவள்தான் கட்டிக் காத்து  வரும் தலைமுறைக்கும் எடுத்துச்சொல்ல வேண்டிய வளாக, எடுத்துச்செல்ல வேண்டியவளாக இருக் கிறாள்.எதையும் மீற முடியாதவளாக மீறக் கூடாதவளாக பெண் கட்டமைக்கப்படு கிறாள். அதற்காகத்தான் இந்தப்பெண்மை, தாய்மை என்கிற எல்லா இழவுகளும் அவள் தலையில் ஏற்றப்பட்டுள்ளன -ஆண்களின் தலை யிலும்தான்.

இந்த இடத்தில் மறைந்த எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு  என்கிற சிறுகதையை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

மருமகள் வாக்கு

திருமணமாகிப் புகுந்த வீட்டுக்கு வரும் ஒரு மருமகளைப்பற்றிய கதை இது.அந்த வீட்டில் எல்லாம் மாமியார் வச்ச சட்டம்தான்.இன்னைக்கு அரைப்படி அரிசி பொங்கணுமா கால்படி வடிச்சா போதுமா என்பது உட்பட மாமியாரிடம் கேட்டுத் தான் செய்ய வேண்டும். புருசனோடு பேசுவது கூட மாமியார் அனுமதி யோடுதான். மருமகளின் ஒவ்வொரு அசைவும் மாமியார் விருப்பப் படிதான். ஆரம்பத்தில் மருமகள் மனசில் என்ன இது கொடுமையா இருக்கே என்று தோன்றினா லும் நாள் ஆக ஆக இதுதானே நம்ம வீட்டு வழக்கம் என்று ஆகி விட்டது.
அந்த சமயம் உள்ளூர் பஞ்சாயத்துத் தேர்தல் வந்தது.பல சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.பூனைச்சின்னத்துக்கும் கிளிச்சின்னத்துக்கும்தான் சரியான போட்டி. மருமகள் தன்னுடைய ஓட்டு யாருக்கு என்று மனசுக்குள் யோசித்துக் கொண்டிருந்த போது மாமியார் வந்து  என்ன யோசனை பலமா இருக்கு உன்னுடைய ஓட்டு கிளிச்சின்னத்துக்குத் தான் ஒண்ணும் யோசிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டாள். மாமியார் அப்படிச்சொன்னா மறுகணமே மருமகள் தன்னுடைய ஓட்டு பூனைக்குத்தான்  என்று அழுத்தமாக முடிவு செய்து விட்டாள்.ரகசிய வாக்குத்தானே. யாருக்குப் போட்டோம் என்று மாமியாருக்குத் தெரியவா போகிறது என்று தைரியமாக முடிவு எடுத்தாள்.

இடையிடையே மாமியார் உன் ஓட்டு யாருக்குடீ என்று கேட்கும்போதெல்லாம் நீங்க சொன்னபடி கிளிக்குத்தான் அத்தே என்று சிரிப்போடு பதிலும் சொல்லி விட்டாள். கடைசியில் தேர்தல் நாளும் வந்தது. காலை யிலேயே மருமகள் ஓட்டுப் போடக் கிளம்பி விட்டாள்.மாமியார் கிளிச்சின்னம் என்று ஒரு உறுமலோடு மருமகளை அனுப்பி வைத் தாள்.ஒருநாளும் இல்லாத உற்சாகமும் மகிழ்ச்சி யும் மருமகளின் நடையில் துள்ளியது. வாழ்க்கை யில் முதல் முறையாக மாமியாருக்கு எதிராக வாக்களிக்கப்போகிறோம் என்கிற சந்தோசம் அது.சுட்டு விரலில் மையிட்டு வாக்குச் சீட்டை வாங்கிக்கொண்டு மறைவிடத்துக்குப் போனாள். வாக்குச் சீட்டில் ஒவ்வொரு சின்னமாகப் பார்த்துக்கொண்டே வந்தாள்.கிளிச்சின்னத்தின் மீது பார்வை பதிந்ததும் கிளி சிறகடித்தது. கிளிச்சின்னம் என்கிற மாமியாரின் உறுமல் பின்புறமிருந்து கேட்டது.கிளியைத்தாண்டி அவள் கை கீழே நகரவில்லை.அப்படியே தலை சுற்றுவது போலிருந்தது.கீழே பூனைச்சின்னம் இருப்பதை மயக்க நிலையில்தான் கவனித்தாள். அவளை அறியாமலேயே கை அதுபாட்டுக்கு கிளிச்சின்னத்தில் முத்திரையைப்பதித்து விட்டது. வாக்குச்சீட்டை உள்ளே போட்டு விட்டு வெளியே அவசரமாக ஓடிவந்துவிட்டாள்.

இதுதான் அக்கதையின் சுருக்கம்.பெண்களின் மனநிலையை மட்டுமல்ல ஆளும் வர்க்கத்தின் சிந்தனை மற்றும் பண்பாட்டு மேலாதிக்கத்துக்குத்  தன்னையறியாமலேயே கட்டுண்டு கிடக்கும் பாட்டாளி வர்க்கத்தின் மனநிலைக்கும் இக்கதை பொருந்தும். அவள் நினைத்தாலும் அவளால் மீற முடியாத தளைகளுக்குள் பெண் காலம் காலமாகக் கட்டப்பட்டிருக்கிறாள்.பக்தி,குடும்பநலன்,
வீட்டுக்கு ஆகாது,பிள்ளைகளுக்கு நல்லது, அவருக்கு நல்லது என்கிற வளையத்துக்குள் வசமாக சிக்க வைக்கப்பட்டிருக்கிறது பெண் மனம். மாட்டையடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே வீட்டினில் எம்மிடங்காட்ட வந்தார் என்று பாரதி சொன்னது போல பெண் வசக்கப்படுகிறாள் குடும்பத்தில்.அவள் வசங்கும் காலம் என்று ஒரு குறிப்பிட்ட பருவத்தை மட்டும் சொல்லி விட முடியவில்லை. பிறந்ததிலிருந்து சாகும் வரை அவள் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் பெற்ற மக்கள் வீட்டிலும் என வசக்கத்தான் படுகிறாள். சகல தர்மங்களையும் நம்பிக்கைகளையும் சுமக்க வசக்கப்படுகிறாள்.
ஆனால் அதே சமயம் குடும்பம் எந்த மாற்றத்துக்கும் ஆளாகாமல் அப்படியே தொடர் வதாகச் சொல்ல முடியாது.சமூகத்தில் நிகழும் மாற்றங்கள் குடும்பத்துக்குள் தொடர்கிற பண் பாட்டு அசைவுகள் மீதும் தாக்கம் செலுத்தி வந்துள்ளன. கணவன் இறந்தால் அவனோடு மனைவியும் எரிந்து சாம்பலாகிற பண்பாடு இந்தியக்குடும்பங்களில் -குறிப்பாக வட மாநிலங்களில் இருந்ததை நாமும் அறிவோம். இதுபோல சமூகம் குடும்பத்துக்குள் கொண்டுவந்த இன்னும் பல மாற்றங்களைப் பார்க்கலாம்.  
                                                                                                                                                                                       12


மனித மனங்களைப் பண்படுத்தும் தொழிலை சக்தி மிக்க முறையிலும் பரந்துபட்ட அளவிலும் நுட்பமான வடிவங்களிலும் செய்யும் பண்பாட்டு நிறுவனமாக ஊடகங்கள் செயல்படுகின்றன. ஊடகங்களில் அச்சு ஊடகங்கள்,மின்னணு ஊடகங்கள்,திரைப்படங்கள் எனப்பலவகை உண்டு. இன்று உலகமயப் பொருளாதாரத்தின் முகமூடி யாகவும் கேடயமாகவும் உறைவாளாகவும் இந்த ஊடகங்கள் திகழ்கின்றன.

ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என்று வர்ணிக்கப்படும் ஊடகங்களின் மிகப்பெரிய அரசியல் யாதெனில் சில துறைசார்ந்த செய்திகளை தவறாமல் மீண்டும் மீண்டும் வெளியிடுவதும் சில துறைசார்ந்த செய்திகளை மறந்தும் வெளியிட்டு விடாமல் இருப்பதுமாகும்.சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி விவசாயிகள் பற்றிய செய்திகளை-தொழிலாளர் போராட்டங்கள் பற்றிய செய்திகளை - தேசிய அளவில் வெளியாகும் எந்தப் பத்திரிகையும் எந்த மின் ஊடகமும் வெளியிடுவதில்லை என்பது தெரிய வந்துள்ளது. மராட்டியத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது கூட அங்கே பிரதமர் சென்ற செய்தியை ஒட்டித்தான் அவை தற்கொலைச் செய்திகளையே வெளியிட்டன. அவை வெளியிடும் செய்திகளில் விவசாயி-தொழி லாளர் பற்றிய செய்திகள் 0.70 சதவீதம்தான்.

பெண்கள் பற்றிய செய்திகளை - நிகழ்ச்சிகளை- எந்த ஊடகமும் புறக்கணிப்பதில்லை.ஆனால் அவை என்னமாதிரியான பெண் செய்திகளை வெளியிடு கின்றன என்பதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி. ஏற்கனவே இந்த ஆணாதிக்க சமூகம் கட்டமைத்து வைத்துள்ள பெண்மை என்கிற பொய்யை-பெண்மை என்கிற கருத்தாக்கத்தை-மேலும் மேலும் அடிக் கோடிட்டுத் திணிக்கும் வேலைதான் ஊடகங்களில் நடக்கிறது.

விவசாயிகள் தற்கொலையை நாட்டின் முக்கிய மான செய்தியாகக் கருதாத தினசரிகள் சாமியார்களின் காமலீலை,அழகிகள் கைது,காதலனுக்காகக் கணவனைக் கொன்ற சங்கீதா என்பன போன்ற செய்தி களையும் சினிமா மற்றும் பொழுதுபோக்குச் செய்திகள் என்ற பேரில் பெண்களின் உடல்காட்டும் புகைப்படங்களையும் வாரக்கணக்கில் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.வார இதழ்களிலோ அட்டை டு அட்டை ஆண் மனதில் காட்சி இன்பம் தூண்டும் லட்சிய வெறியுடன் அச்சிடப்பட்ட பெண் உடல்தான். இவற்றிலெல்லாம் ஊடாடுவது பெண் என்பவள் வெறும் உடல்தான் -வெறும் காட்சிப் பொருள்தான் -ஆண்கள் நுகர்வதற்கான ஒரு போகப் பொருள்தான் -என்கிற ஒரு கருத்தோட்டம்தான். பெண்களுக்கான பத்திரிகைகள் சில சாதனைப்பெண்கள் பற்றி அறிமுகம் செய்வது போன்ற மிகச்சில சேதிகளைத் தவிர மற்றதெல்லாம் பெண்மையின் இலக்கணங்களாக நம் சமூகம் சொல்லிவரும் சமையல்,கோலம்,டிசைனிங் என்றே வட்டமடிக்கின்றன. பிற பத்திரிகைகளுக்கும் பெண் களுக்கான பத்திரிகைகளுக்கும் உள்ள ஒரு முக்கிய மான வித்தியாசம் இதில் பெண் உடம்பாகக் குறுக்கப் படுவதில்லை. ஆனால் பெண்மையின் பெருமை என்கிற கொடுமை தவறாமல் உண்டு.

தொலைக்காட்சி அலைவரிசைகளில் பரவலாகப் பேசப்படுபவை தொடர்கள். தவிர்க்கவியலாத ரெண்டு பெண்டாட்டிக் கதைகளாகவே அமைந்து விடுகிற இத்தொடர்களில் கண்ணீரும் கம்பலையுமாக பெண்கள் புலம்புகிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக விமர்சித்து அவற்றைப் புறந்தள்ளுவது நியாயமான பார்வையாக இருக்காது.

கோலங்கள், அரசி, சித்தி, கஸ்தூரி போன்ற தொடர்கள் எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் ஒரு பெண்ணின் போராட்டத்தை- பல சோதனை களைத் தாண்டி அவள் வெற்றி பெறுவதைச் சொல் லும் கதைகளாகவும் இருக்கின்றன என்பதை நாம் பார்க்க வேண்டும். இவற்றை விரும்பிப் பார்க்கும் பெண்கள் மனங்களில் உளவியல்ரீதியாக ஒரு பெருமித உணர்வு சத்தமில்லாமல் பொங்கிப் பெருகு வதை நாம் காணத் தவறக்கூடாது.

ஏழை எம்.ஜி.ஆர். பணக்கார வில்லனைத் தோற் கடிக்கிற பழைய சினிமா பாணிதான் இது என்ற போதிலும் இதில் வெல்வது பெண் என்பது முக்கியம். ஆனால் இத்தொடர்கள் எல்லாவற்றிலுமே வில்லியாக ஒரு பெண்ணே காட்டப்படுவது ஏற் கனவே நம் மனங்களில் அழுந்தப்பதிக்கப்பட்டுள்ள மாமியார் - வில்லி என்கிற படிமத்தை இன்னும் வலுவாக அடிக்கோடிடும் கேட்டைச் செய்கின்றன.

இன்னும் குடும்பப் பொண்ணா லட்சணமாக வாழும் ரோல் மாடல் பெண்கள் ஏராளமாக இத் தொடர்களில் மூக்கைச் சிந்துவார்கள்.எத்தனை காலத்துக்குத்தான் பெண்களை குடும்பப்பாங்கு என்கிற முக்காட்டுக்குள் மூச்சுத் திணற வைப் பது?பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்கிற புளித்துப்போன பழைய வாதமும் இத் தொடர்களில் அடிக்கோடிடப்படுகின்றது.

கலைஞர் தொலைக்காட்சி வந்தபிறகு தொடர் களை விட, மானாட மயிலாட போன்ற ஆட்ட பாட்டத்தொடர்கள் மற்றும் நேரலை ( ) ஒளி பரப்புக் காட்சிகள் மையமான இடத்தைப் பிடித் துள்ளன. இவற்றில் ஆடும் பெண்களின் உடையலங் காரம் மற்றும் ஜட்ஜ்களாக வந்து அமரும் சில மேடம்களின் உடை பற்றிக் குடும்பங்களில் கடும் விமர்சனங்கள் எழுவதைப் பார்க்கிறோம். -டிவியின் ஆட்டங்கள் நம் சேனல்களில் வந்தபோதும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்தன.விமர்சிக்கும் அதே வேளையில் உடையில் ஒருவித கட்டுடைக்கும் சுதந்திர மனோபாவத்தை இந்த ஆட்டங்கள் பெண்களுக்கு வழங்குகின்றன என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும்.சேலையை விட சுடிதாரும் நைட்டியும் நிச்சயமாக வசதியும் சுதந்திரமும் தந்தனதானே. இப்படியே போனால் என்னாவது என்று சுதந்திரத்தின் எல்லையை அவசர அவசரமாக ஆண்மனம் நிர்ணயிக்கத் தவிக்கிறது.குடும்ப மனம் என்பதே சமூக மனமாகத் திகழும் ஆண்மனம்தானே.

இவை போக தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள் பொறுப்பான பெண்கள் கக்கூஸ் சுத்தம் செய்ய சரியான க்ளீனிங் திரவத்தைத் தேர்வு செய்வதையும் துவைப்பதற்கு ஏமாறாமல் ஒரு சோப்பையோ வாஷிங் பவுடரையோ தேர்வு செய் வதையும் குழந்தைகளுக்கும் கணவருக்கும் ஆகா என்று சொல்லும் வண்ணம் மசாலாப் பொடிப் போட்டுச் சமைப்பவராகவும் மீண்டும் மீண்டும் மீண்டும் காட்டிக்கொண்டே இருக்கின்றன.

திரைப்படங்களும் இதே வேலையைப் பெரிய திரையில் டிஜிட்டல் சவுண்டுகளுடன் செய் கின்றன.காதலிக்கும் போதெல்லாம் டவுசர், பேண்ட்டுகளில் வரும் பெண்கள் கல்யாணம் என்றதும் பட்டுப்புடவை கட்டித் தழையத் தழைய வருவதை எல்லாத்திரைப்படங்களிலும் பார்க் கிறோம். இவர்கள் எல்லோருமே ஒரே ஆண்மனதின் வேறு வேறு ரூபங்கள்தான்.ஒரே குரலில் பெண் களுக்கான உடைக்கலாச்சாரத்தை நம் மண்டையில் திணிக்கிறார்கள்.
இன்னும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு அதே கயவனைத் தாலி கட்டச் சொல்லும் நாட்டாமைகள்,கதாநாயகன் தன் சமூக சேவை நடவடிக்கைகள் இல்லாத நேரத்தில் கூடச் சேர்ந்து ஆடிப்பாடுவதற்கு என்றே வந்துபோகிற கதாநாயகிகள் என்று திரைப்படங்களும் தொலைக் காட்சிகளும் கட்டமைக்கிற பெண்மையின் லட்சணங்கள் ஏராளம்.இது ஆண் பெண் இருபால்  ரசிகர்களின் மனங்களிலும் ஆழ்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.பெண்மை இன்னும் பல விதங் களில் மீடியாவால் தகவமைக்கப்படுகிறது. 

                                13

நாம் வாழும் சமூகங்கள் நம்மை அதாவது ஆண்களையும் பெண்களையும் சில குறிப்பிட்ட விதங்களில் சிந்திக்கவும் செயல்படவும் வேண்டு மென எதிர்பார்க்கின்றன.அந்த எதிர்பார்ப்பே பண்பாட்டுத்தளத்தில் ஆண்களுக்கும் பெண்களுக் குமான விதிகளாக இறுகி நிற்கின்றன.ஆனால் மனிதர்களாகிய நாம் எப்போதும் விதிகளைக் கட்டிக்கொண்டே சாவதில்லை.அழுத்தம் அதிக மாகும்போது விதிகளை உடைத்துக்கொண்டு வெளியே வரத்தான் செய்வோம். அரசியல்-பொரு ளாதாரத் தளங்களில் நடப்பதுபோல இந்த உடைப்பு அவ்வளவு எளிதில் பண்பாட்டுத்தளத்தில் நடந்து விடுவதில்லை.

ஒரு சின்ன விசயம்.

முற்போக்கு மேடைகளில் பிரபலமாகப் பாடப்படும் ஒருசில பாடல்கள் பற்றி ஒரு முகாமில் காரசாரமான விவாதம் வந்தது.ஒரு பாட்டு ஆசைப்பட்ட எல்லாத்தியும் காசிருந்தால் வாங்க லாம் அம்மாவை வாங்க முடியுமா ? என்கிற பாட்டு. இன்னொன்று ஆத்தா உன் சேலை என்கிற பாடல்.இவை அற்புதமாகப் பாட்டெழுதும் தோழர் ஏகாதசியின் பாடல்கள். இத்தகைய பாடல்களை மக்கள் விரும்பிக் கேட்கிறார்கள்.மேடையில் நம் கலைஞர்கள் பாடும்போது கூட்டத்தில் பலர் கண் கலங்கி அழுது விடுவதும் உண்டு. அவரவர் அம்மா ஞாபகம் வந்து ஏக்கப்பெருமூச்சு விடாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.மக்கள் அடிக்கடி விரும்பிக்கேட்கும் பாடலாக சீட்டுக்கொடுத்துப் பாடச்சொல்வதும் உண்டு - இப்பாடல்களை.

ஏற்கனவே அம்மா என்றால் அன்பு-பாசம்-தியாகம் - கண்ணீர் என்று சமூக மனதில் பதிவாகி யிருக்கிற - அம்மாக்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்று இச்சமூகம் எதிர்பார்க்கிறதோ - என்ன விதிக்கப்பட்டிருக் கிறதோ அதையே கண்ணீரும் கம்பலையுமாக சோகத்தில் தோய்த்தெடுத்து இப்பாடல்கள் காற்றில் பரவ விடுகின்றன. முற்போக்காளர்கள் அதே தியாக அம்மாவையா மக்களின் முன்னால் கொண்டுபோய் நிறுத்த வேண்டும்? நமக்கு இந்த அன்பு பாசம் தியாகம் போன்ற மூடாக்குகளிலிருந்து விடுபட்ட -கார்க்கியின் தாய் நாவலில் வரும் அம்மா போல -கேப்டன் லட்சுமி போல -அன்னை லட்சுமி போல -ஜானகி அம்மா போல - பாப்பா அம்மா போல-ஒரு அம்மாவை அல்லவா நாம் முன்னுதாரணமாக மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும் என்று விவாதம் செய்தோம்.

பாட்டை எழுதிய கவிஞர் இந்த விமர்சனப் பார்வையை ஏற்றுக்கொண்டு அப்படி ஒரு புதிய பாடலை தானே எழுதித்தருவதாக ஒப்புக் கொண்டார். ஆனால் கூட்டம் முடிந்ததும் ஒரு தோழர் தனியாக வந்து சன்னமான குரலில் சொன்னார்  இப்படி எல்லாத்தியும் ராவடியாக பெண்விடுதலைப் பார்வையிலேயே பார்த்துக் கொண்டு போனால் உலகத்தில் அன்பு பாசம் தாயின் அரவணைப்பு என்று  மனித வாழ்க்கைக்கு அழகும் அர்த்தமும் தந்து கொண்டிருக்கிற எல்லாமே காலியாகி விடாதா?வாழ்க்கை என்பது எல்லாம் சேர்ந்ததல்லவா? வெறும் பிரச்னைகளின் தொகுப்பல்லவே வாழ்க்கை. ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் ஆத்தாவின் மடியில் நமக்கு ஒரு ஆறுதல் இருக்கிறதல்லவா?அதையும் பறித்துக்கொள்வது நியாயமா?என்று தயக்கத்துடன் ஆனால் ஒரு உள்ளார்ந்த கோபத்துடன் அவர் கேட்டார்.

பெண்களுக்காக யார் எப்போது எங்கே லேசாகக் குரல் எழுப்பினாலும் இப்படி லட்சம் சந்தேகங்களும் கேள்விகளும் வந்துவிடும் என்பதை நாம் அறிவோம்.
தாயின் அரவணைப்பை நாம் மறுக்க வில்லை.அதில் உயிரியல்ரீதியான அம்சம் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இருக்கிறது.தாய் மட்டுமே தியாகியாவது அயோக்கியத்தனமான ஏற்பாடு அல்லவா என்பதுதான் நாம் எழுப்பும் ஒரே கேள்வி. தாய்க்குத் தியாகம் செய்கிற ஒரு டூட்டி மட்டுமே கொடுப்பது எந்த உலகத்து நியாயம் என்பதுதான் நம் கேள்வி.இருக்கும் கதகதப்பை - அனுபவித்துக் கொண்டிருக்கும் அரவணைப்பை இழந்துவிடச் சொல்கிறார்களே என்கிற ஆண் மனப்பதட்டமே இத்தகைய கேள்விகளுக்குப் பின்னால் துடித்துக் கொண்டிருக்கிறது.ஏன் பதட்டப்பட வேண்டும்?. இப்போதிருக்கும் இந்த ஒருதலைப்பட்சமான ஏற்பாட்டுக்கு மாற்றாக அரவணைப்பு-அன்பு-பாசம்-என்பதற்கான புதிய வரையறுப்புகளை உருவாக்குவோம்.அப்புதிய சூழல் இன்னும் ஜனநாயகமான ஒரு காதலை- இன்னும் பரஸ்பரமான கதகதப்பை வழங்கும்.நாம் இன்னும் நல்ல ஒரு வாழ்வை நோக்கிச் செல்லலாம் அல்லவா?.

எத்தனையோ விசயங்களில் முற்போக்கானவர் களாக இருக்கும் நண்பர்கள் தாய்மை-பெண்மை என்கிற இடம் வரும்போது மட்டும் வெறும் உணர்ச்சி மனிதர்களாக வரலாற்றுணர்வற்றுப் பின் தங்கி விடுகிறார்கள்.மிகப்பெரிய உடைப்பு உணர்வு மட்டத்திலும் அறிவுத்தளத்திலும் நடக்க வேண்டி யிருக்கிறது. அதுவரைக்கும் செத்தாலும் என்னைப் பொத்த ஆத்தாவின் சேலை வேண்டும் என்று அழுது மூக்கைச் சிந்திக்கொண்டிருப்போம் என்று சொல்வது நியாயமா? இதில் இன்னொரு கொடுமையும் சத்த மில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. பாட்டைக் கேட்டு அம்மாக்களுக்காக நாலு சொட்டுக் கண்ணீர் விட்டு ரெண்டு சிலிண்டர் பெருமூச்சும் விட்டுக் கொள்வதில் நம் குற்ற உணர்வுகள் கரைந்து போய் மீண்டும் வழக்கமான ஆண்களாக நிம்மதியாக வலம் வந்து விடுகிறோம். நாம் சுத்திகரிக்கப்பட்டு விடுகிறோம்.சடங்குகள் எப்படி உளவியல்ரீதியாக இயங்கி குற்ற உணர்வுகளில் இருந்து நம்மை விடுவிக்கப் பயன்படுகின்றனவோ அதுபோலக் கலை இங்கே அப்பணியைச் செய்து விடுகிறது. அன்பின் பேராலும் பாசத்தின் பேராலும்தான் ஆணாதிக்கம் நம் சமூகத்தில் அமலாகிக் கொண் டிருக்கிறது   என்பதை நாம் கருத்தில் கொண்டால் எந்த அளவுக்கு சமரசமற்ற இடைவிடாத போரை நாம் நமக்கு உள்ளேயும் சமூகத்திலும் நடத்த வேண்டியிருக்கிறது என்பதை உணரலாம்.

பெண்மை என்கிற இட்டுக்கட்டப்பட்ட கற்பனையின் மீது நாம் பல கனவுகளையும் கடமைகளையும் ஏற்றி வைத்துக்கொண்டே போகிறோம்.உயிரியல் ரீதியான ஆண் பெண் வேறுபாடுகளைத் தவிர மற்ற எல்லாம் பண்பாடு என்ற பெயரில் இச்சமூகம் நம் தலையில் திணித்தவை என்னும்போது மாற்றுப்பாதையை நாம் சமைக்க வேண்டும்.

சென்ற மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தொலைக்காட்சி அலைவரிசை களில் பலருடைய கருத்து உதிர்ப்புகள் ஒளி பரப்பப் பட்டன.ஒரு திரைப்பட இயக்குநர் கூறினார் . பெண்களுக்கு சமத்துவம் சென்னை போன்ற மாநகரங்களில் கிடைத்துவிட்டது. டவுன் சவுத்தில் கிராமப்புறங்களில் இன்னும் கிடைக்கவில்லை(ஈவ் டீசிங்கில் இளம் பெண்கள் செத்தது எல்லாமே பெருநகரங்களில்தான் என்பது காலப் போக்கில் எளிதாக மறந்துபோகிறது)
வேறு பலருக்கு முன்னே மாதிரி இல்லே இப்போ பெண்கள் ரொம்ப முன்னேறிட்டாங்க என்கிற கருத்து இருக்கிறது.

எதெல்லாம் பெண் அடிமைத்தனம் என்று ஒரு நீண்ட பட்டியலைத் தயார் செய்து - தீண்டாமைக்குச் செய்வது போல -சர்வே எடுத்து-பரவலாக மக்களிடம் கொண்டு சென்று பெண்நிலை குறித்துப் பெரும் கல்விபுகட்டல் நடைபெற வேண்டியுள்

14 

நீண்ட நெடுங்காலமாய் காத்திருக்கிறோம்...


இரண்டு நிகழ்வுகளை நாம் நினைவு படுத்திப் பார்க்க வேண்டும். ஒன்று 1946 முதல் 1951 வரையி லும் நீடித்த தெலிங்கானா போராட்டத்தில் கம்யூ னிஊட்டுகள் தலைமையில் பல நூறு பெண்கள் ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.துப்பாக்கி ஏந்திடப் பயிற்சி எடுத்தார்கள். துப்பாக்கியோடு எதிரிகளைச் சுட்டு வீழ்த்தினார்கள். சக ஆண் போராளிகளைப் போலவே வெட்ட வெளியில் வயல் வெளிகளில் மலைக்காடுகளில் என எவ் விடத்தும் படுத்து உறங்கினார்கள்.வீடுகளைத் துறந்து உற்றார் உறவினரைத்துறந்து தாங்கள் ஏற்றுக்கொண்ட லட்சியத்துக்காக சுதந்திரத்துக்காக நிஜாமின் - பண்ணையார்களின் ஆதிக்கத்துக்கு எதிராகக் களத்தில் நின்றார்கள்.நிஜாம் தோற்கடிக்கப் பட்டபிறகு நேருவின் அரசாங்கத்தின் ராணுவமும் போலீசும் தெலிங்கானா போராட்டத்தை நசுக்கி அழித்த பிறகும் அதுவரை வீடுகளைத் துறந்து இயக்கத்தோடு இருந்துவிட்ட பெண்களை இனி நீங்கள் உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள் என்று கட்சி சொன்னபோது அப்பெண்களில் பலர் கதறி அழுதார்கள். மீண்டும் அந்த நரகக் குழிக்குப் போகவா? நாங்கள் கட்சி அலுவலகத்திலேயே இருந்து விடுகிறோமே என்றுதான் எல்லோரும் கேட்டார்கள்.
இன்று நம்மோடு கூட வாழும் நம் வீட்டுப் பெண்களுக்கு இது நரகக் குழி என்பது இன்னும் பிடிபடவில்லை. காடுகளிலும் வயல் வெளிகளிலும் படுத்துறங்கும் வாழ்க்கையை அவர்கள் சற்றும் ருசிக்கவில்லை. காடுகளை விடுங்கள். வீட்டுக்கு வெளியே இயங்கும் உலகத்தில் எத்தனை கோடி இன்பம் உண்டோ அதில் ஒரு துளியையும் அவர்கள் ருசித்ததில்லை. வெளியே இருக்கும் உலகம் தன்னை விழுங்கும்.தன்னை மானபங்கம் செய்துவிடும் என்கிற அச்சம் தவிர வெளி உலகம் பற்றி நம் பெண்களுக்கு நாம் என்ன காட்டியிருக்கிறோம்.

வேலைக்குப் போகும் பெண்கள் ஒன்றி ரண்டாக- அரையும் குறையுமாக- சில சுதந்திரங் களை தொட்டுப்பார்த்திருந்தாலும் வேலை பார்க்கும் ஆண்கள் அனுபவிக்கும் சுதந்திரம் அவர் களுக்கு இல்லை.நரகம் என்று தெரிந்தும் மீற முடியாத மனத்தடைகளுக்குள் நம் பெண்கள் சிக்கிக் கிடக்கிறார்கள்.பல்லாயிரம் ஆண்டுகளாகப் பண் பாடு அவர்கள் தலையில் (ஆண்கள் தலை யிலும்தான்) ஏற்றி வைத்துள்ள பெண்மை பற்றிய கற்பிதங்களில் இருந்து விடுபட முடியாத மனத் தடைகள்தாம் அவை.

அரசியல்ரீதியாக தன்னை முற்போக்காக வளர்த்துக்கொண்டு இயங்கும் ஒருவர்கூட வீட்டில் - பெண்களைப் பொறுத்தவரை படு பிற்போக்கான வராக அவர்களது விருப்பங்கள் ஆசைகள் கனவுகளுக்கு எந்த மதிப்பும் தராதவராகவே இருக்கிறார். சரி அதுதான் இல்லை.தன்னுடைய நண்பர் களை - தோழர்களை வீட்டுக்கு அழைத்து வரும் அவர் தானும் தன் தோழர்களும் சாப்பிட்ட தட்டுகளை  - எச்சில் தட்டுகளை -  சூப்பிப்போட்ட முருங்கைக்காய்த் தோலுடன் மிதக்கும் அந்தத் தட்டுகளை தம் வீட்டுப் பெண்கள் எடுத்துச் சென்று கழுவுவதை எந்தக் குற்ற உணர்வும் இன்றி இயல்பாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். சாப்பிட்டவர்கள் தட்டை எடுத்தால்கூட அட நீங்க ஏன் தட்டை எடுக்கறீங்க.. நீ எடும்மா என்று மனைவியை ஏவித் தமிழ்ப்பண்பாட்டை நிறுவி நிற்கிறார்.தன்னுடைய மனைவியின் நண்பர்கள் தோழிகள் இப்படி வீட்டுக்கு வந்து சாப்பிட்டால் அவர்களது எச்சில் தட்டைத் தான் கழுவுவோமா என்று யோசிக்கிற அறிவெல்லாம் அப்படிப்பட்ட ஆணுக்கு வருவதே இல்லை.இதற்குப் பெயர் முற்போக்கு ஆணாதிக்கம் என்று சொல்வதா? இப்படியே பெண்களை வேலை வாங்கிக் காலம் பூராவும் திங்கிறதைத் தவிர வேற எந்த வீட்டு வேலையிலும் பங்கேற்காத ஆண்கள் கோடிக் கணக்காக இருந்தார்கள். இருக்கிறார்கள். இருப் பார்கள்- நாம் அறிவோடும் உணர்வோடும் கொஞ்சம் சுரணையோடும் இது விஷயத்தில் தலையீடு செய்யாமலே இருந்தால்.


பெண்களுக்கில்லா அந்த அறிவு வரணும். நாம என்னா சார் செய்ய முடியும், என்று ஆண் மனம் கூவுவது கேட்கிறது. ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போராட பெண்களை ஆண்கள்தான் தயார் செய்ய வேண்டும்.வர்க்க உணர்வு பெறாத தொழிலாளிக்கு சக தொழிலாளி வர்க்க உணர்வு ஊட்டுவ தில்லையா? வர்க்கபோதம் பெறாத தொழி லாளிக்கு வர்க்கபோதம் ஊட்டுவதில்லையா? அதுபோல ஆணாதிக்க சமூகத்துக்கு எதிராக பெண் உணர்வை  பெண்நிலைவாதத்தை அல்லது போதத்தை சக மனிதனாக காலம் காலமாக கூடுதலான சுதந்திரத்தை அனுபவித்து வரும் ஆண்தான் பெண்ணுக்கு ஊட்ட வேண்டும்.

எனக்கு எதிராகப் போராடு என்று என் மனைவியை நான் தூண்டவில்லையானால் நான் ஓர் ஆணாதிக்கவாதிதான். எனக்கெதிராகப் போராட என் மகளை நான் தயார் செய்யவில்லையானால் நான்தான் குற்றவாளி.
பின்னாலிருந்து இரண்டு குரல்கள் கேட் கின்றன. ஒன்று ஆண் குரல். இன்னொன்று பெண் குரல்.

ஆண் குரல் சொல்கிறது இப்படியெல்லாம் பேசறது ரொம்ப அதி தீவிரம் இல்லையா?
பெண் குரல் சொல்கிறது அவுக தட்டெல் லாம் கழுவ வேண்டாம்.நொள்ளை சொல்லாம பொங்கிப் போட்டதை சந்தோசமா சாப்பிட்டுப் போனாப் போதும் இந்த இரண்டு மனநிலைகளுமே சரியல்ல. மனநிலைகளில் மாற்றம் தேவை.
ஆண் குற்ற உணர்வு கொள்ள வேண்டும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்ப் பெண்களை அடிமை கொண்ட பாவத்தின் கறைபடிந்த நம் கரங்களை -  இதயங்களை -  பெண் விடுதலைக் காகப் போராடும் செயல்களால் கழுவ வேண்டும்.

பெண்கள் -பண்பாடு தங்கள் மீது கழுதைப் பொதிபோல ஏற்றி வைத்திருக்கும் சுமைகளை மனத்தடைகளை உதறி எறிய வேண்டும்.கை நீட்டி அடித்தால்தான் வன்முறை என்று கருதாமல் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் ஒவ்வொரு திருப்பத்திலும் தங்கள் மீது வன்முறை பிர யோகிக்கப்படுவதை உணர வேண்டும். கெட்ட வார்த்தையில் திட்டினால்கூட இச்சமூகம் பெண்ணை - பெண்ணின் உடல் உறுப்புகளைப் பழிக்கும் விதமான சொற்களையே பயன்படுத்து கிறது என்பதைக் கோபத்துடன் பார்க்கப் பழக வேண்டும். ரெத்திரம் பழகு என்று பாரதி பெண்களை நோக்கித்தான் சொன்னான் என உணர வேண்டும். இதெல்லாம் எப்படி சார் நடக்கும்? நடக்கும்.

துவக்கத்தில் குறிப்பிட்ட அந்த இரண்டாவது நிகழ்வுக்கு இப்போது வருவோம்.
அறிவொளி இயக்கம் நடந்து கொண்டிருந்த காலத்தில் அது முற்றிலும் பெண்கள் இயக்க மாகவே நடந்தது. ஆயிரம் ஆயிரம் பெண்கள் வீதிக்கு வந்தார்கள். கற்றார்கள். கற்பித்தார்கள். நாடகம் போட்டார்கள். பாட்டுப் பாடினார்கள். எல்லாம் இந்தத் தமிழகத்துத் தெருக்களில்தான் நடந்தது.

அறிவொளியின் தொடர்ச்சியாக வந்த சுய உதவிக்குழுக்களில் இன்று எத்தனை ஆயிரம் பெண்கள் அணி திரண்டிருக்கிறார்கள்? இத்தனை வருசமா நீங்கள்ளாம் எங்கேதான் இருந்தீங்க என்று நாம் வியக்க வேண்டியிருக்கிறது.
ஆம். இவை எதைக்காட்டுகின்றன? பெண்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால் கிளம்பி வருவார்கள்.அறிவொளிக்கு இருந்தது போன்ற ஆதரவான சமூக மனநிலை இருந்தால் பெண்கள் தெருவில் இறங்குவார் கள்.தெலிங்கானாவில் போல எதிர்ப்புகள் பலமாக இருந்தபோதும் தோழமை உறவுகள் துணை நின்றால் பெண்கள் ஆயுதம் ஏந்தவும் தயாரா வார்கள்- தங்கள் விடுதலைக்காகவும் தங்கள் வர்க்கத்தின் விடுதலைக்காகவும் தங்கள் தேசத்தின் விடுதலைக்காகவும்.பண்பாட்டு ரீதியாக மிக மிக அதிகமான மன அழுத்தத்தில் வைக்கப்பட்டுள்ள அவர்கள் அதையெல்லாம் மீறியும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் விடுதலைக்கான தங்கள் தாகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் இதுபோன்ற இயங்கு தளங்களை உருவாக்குவதும் வாய்ப்புகளைத் திறந்து விடுவதும்தான் சக பயணிகளான - தோழர்களான- ஆண்களின் -மற்றும் தோழமை பூர்வமான இயக்கங் களின் பிரதான வரலாற்றுக் கடமையாகும். அதோ பெண்கள் பாடி வரும் குரல் பிசிறற்றுக் கேட்கிறது. கேட்கிறதா?


நீண்ட நெடும் காலமாய்   காத்திருக்கிறோம்
நெஞ்சுக்குழியில் வாழும் கனவைத் தேக்கி நிற்கிறோம்
சமத்துவமாய் வாழ ஒரு சாசனத்தை முன் மொழிகின்கிறோம்
உம் கரம் பிடித்துக் கையெழுத்தை இடுமாறு கோரி நிற்கிறோம்.


கனிந்து வரட்டும் என்று காத்திருக்கக் காலம் இனி இல்லை
எம் காதலரை நெஞ்சுக்கு நெருக்கமான அன்பர்தமை எதிர்த்தே சமர் புரியும் சங்கடத்தைத் தந்து விடாமல்
சமமான உணர்வோடு கரம் இணைத்து
இச்சமூகத்தின் ஆணிவேரை அறுத்திட வாரீர்

ஆணாதிக்கம்தான் அந்த வேர் எனவே புரிந்திட வாரீர்
அறைகூவி அழைக்கின்றோம் தோழர்களே
ஆழ்மனதில் பொங்கி வரும் தாகத்துடனே..                         
(  கவிதையின் துவக்க வரிகள் : ஆதவன் தீட்சண்யா )

13 comments:

கப்பியாம்புலியூரன் said...

வணக்கம் அய்யா

நான் தங்கள் வலைப்பூவை கடந்த இரண்டு மாதங்களாக வாசித்து வருகிறேன்.


"பெண்மை என்றொரு கற்பிதம் " மூன்று பதிவுகளையும் வெளியிட்ட அன்றே படிக்கும் வாய்ப்பு பெற்றேன்.

தங்களின் மேலான முற்போக்கு கருத்துகள் என்னுள் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இதை மனதளவில் நினைத்து புளங்காகிதம் அடைவதை விட செயலில் காட்டவே விரும்புகிறேன்.

உங்கள் பணி சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன்.

கப்பியாம்புலியுரன்

Unknown said...

கந்த வேலன்
தங்கள் வருகை மகிழ்வளிக்கிறது.ரொம்ப சரி.செயலே சிறந்த சொல்.

ச.தமிழ்ச்செல்வன் said...

கந்த வெலன்,
வணக்கம்.தொடர்ந்து வாசிப்பது மகிழ்ச்சி தருகிறது.தங்கள் கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள்

செல்வநாயகி said...

முக்கியமானதும், திருமணத்தில் தாம்பூலமாகத் தர மிகப் பொருத்தமுடையதுமான பதிவுகள்.
நன்றி ச..தமிழ்ச்செல்வன். இக்குரல்கள் இன்னும் இடைவிடாது ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயத்தில்தான் நம் சமூகம் இருக்கிறது.

rvelkannan said...

பெண்ணியம் குறித்து மிக முக்கியமான பதிவு

TAMILSUJATHA said...

அன்பு தோழர்,

பெண்களை அடிமையாக நினைப்பது பல நூறு ஆண்டுகாலம் ரத்தம், ஜீன்களில் கலந்த ஒரு விஷயமாகிவிட்டிருக்கிறது. படித்தவர், பாமரர், ஏழை, பணக்காரர் என்று எந்த வித்தியாசமும் இதுக்குக் கிடையாது.

1970களில் நான்கு பிள்ளைகள் பெற்றுக்கொள்வது ஒரு ஃபேஷனாக இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன்! எங்கள் உறவினர்கள் வீடுகளில் பெரும்பாலும் நான்கு குழந்தைகள் இருப்பார்கள். எங்கள் வீட்டில் நான்கு பெண்கள். நான்கு குழந்தைகள் பிறந்ததில் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் நான்கும் பெண்களாகப் பிறந்ததுதான் பிரச்னை! எங்களைப் பார்க்கும்போது எல்லாம், ‘நாலு பொம்பளைப் பிள்ளைகளாகப் பிறந்திருக்கீங்களே!’, ‘எப்படி உங்களை எல்லாம் கரையேத்தப் போறாங்களோ!’, ‘ஒண்ணு கூடவா பிளஸ் ஆகப் பிறக்கக்கூடாது!, எல்லாம் மைனஸ்’ என்று அவரவர் படிப்பு, அறிவுக்கு ஏற்றபடி எங்களிடமே சொல்வார்கள். பெண்களாகப் பிறந்ததே அவமானமான விஷயம் என்பது போல அந்தச் சின்ன வயதில் நினைக்க வைத்துவிட்டார்கள். (என் பெற்றோர் ஒரு நாளும் எங்களை நினைத்து கவலைபட்டதில்லை. வித்தியாசமாக நடத்தியதில்லை!)

என் தோழி வீட்டில் அவளையும் அவள் அண்ணனையும் உணவில் இருந்து, துணியில் இருந்து வித்தியாசமாகத்தான் நடத்தினர் அவள் பெற்றோர். ‘ஆம்பிள்ளை பிள்ளை திடமாக இருக்கணு’ என்று சொல்லி தினமும் முட்டை. அவனுக்கு மட்டும் பள்ளி செல்லும்போது தின்பண்டம் வாங்கிச் சாப்பிட காசு, பிறந்தநாள் கொண்டாட்டம் இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் வேறுபடுத்தி வைத்திருந்ததைச் சொல்லி அழுதிருக்கிறாள்.

ஒரு நிறுவனத்தின் எம்.டி அந்தத் தோழி. அவர் புதிதாகக் கட்டிய வீட்டில் மகனின் பெயரை மட்டும் சுவரில் பொறித்திருந்தார். பெண் பெயர் எங்கே என்று கேட்ட போது, ’நம்ம பையன் பேரைத்தான் போடணும். அடுத்த வீட்டுக்குப் போறவ பெயரை எல்லாம் போடுவாங்களா?’ என்றார்!

பி.ஏ. கம் ஸ்டெனோகிராஃபர். மிகுந்த திறமைசாலி. அழகான, வித்தியாசமான ஆங்கிலச் சொற்களைத் தேடி எடுத்து, அலுவலகக் கடிதங்களை அடிக்கும் ரசனை மிக்கவர். அவர் கணவருக்கும் அதே அலுவலகத்தில்தான் வேலை. திருமணமாகி இருபது வருடங்கள் ஆகின்றன. அவர் இதுவரை கையில் சம்பளம் வாங்கியதில்லை. இவர் கையெழுத்துப் போடுவார். சம்பளத்தை அவர் கணவர்தான் வாங்குவார். சின்னச் சின்ன விஷயத்துக்கும் கணவரிடம் கைகைட்டி நிற்கவேண்டும். சம்பளம் இல்லாமல் வேலை செய்வது போல ஓர் அலுப்பு வந்துவிடுகிறது என்பார்!

ஒரு பிரபல பத்திரிகையின் தீபாவளி மலர் செய்யும் வேலை எனக்குக் கூடுதல் வேலையாக வழங்கப்பட்டது. என்னுடன் பணிபுரிந்த ப்ரூஃப் ரீடர் மலருக்காக ஒரு நெடுங்கதை கொடுத்தார். கதை மிகவும் சுமாராக இருந்ததை ஆசிரியரிடம் தெரிவித்தேன். சுருக்கமாகப் போடச் சொன்னார். எடிட் செய்த பிறகு, அவரிடம் கொடுத்து ப்ரூஃப் பார்க்கச் சொன்னேன். ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்! ’என்னைவிட வயசுல சின்னவ, அதுவும் ஒரு பொம்பளை... என் கதையில் எப்படிக் கை வைக்கலாம்?’ என்று ரகளை செய்தார். நிர்வாகத்திடம் முறையிட்டார். நிர்வாகம் நியாயத்தின் பக்கம் இருந்தது. உடனே பையைத் தூக்கிக்கொண்டு, வேலையை விட்டே சென்று விட்டார்!


வேலை செய்யும் இடங்களிலும் பெண் - அவளுக்கு இந்தச் சமூகம் வகுத்திருக்கும் சட்டதிட்டங்களுடன்தான் வேலை செய்யவேண்டும் என்று நினைக்கிறது. உயர் அதிகாரிகளாக இருக்கும் பெண்களை எத்தனைபேர் விரும்புகிறார்கள்! வேலையிலோ, திறமையிலோ குறை சொல்ல முடியாத பெண்களை ஒரு விஷயத்தில் மிகவும் கேவலப்படுத்தி விடுகிறார்கள். ‘அவங்க கேரக்டர் சரியில்லை’ என்று போகிற போக்கில் பெண்கள் மீது அமிலம் வீசப்படுகிறது. எதற்கும் திடமாக இருக்கும் பெண் கூட இந்த கேரக்டர் விஷயத்தைச் சொல்லும்போது கலங்கிப் போகிறாள்.

தொடர்கிறது...

TAMILSUJATHA said...

’சமைக்கிறோம், வீட்டு வேலை செய்யறோம்னு எல்லாம் சொல்லாதீங்க. அது எனக்குப் பிடிக்காது. சுவாசிக்கறது, சாப்பிடறது மாதிரி பெண்களுக்கு சமைப்பது, வீட்டு வேலை செய்வது... பெண்களுக்கு உரிமை கொடுத்தால் என்ன ஆகும்ங்கறதைத்தான் ஜெயலலிதா, மம்தா, மார்கரெட் தாட்சர் என்று நிறையப் பார்க்கறோமே! ’ இப்படி எத்தனை எத்தனை ஏச்சுகள்... பேச்சுகள்...! ஆண்களிலும் ஒரு ஹிட்லர், ராஜபட்சே, முசோலினி, ஜார்ஜ் புஷ், சதாம் ஹூசேன், இடி அமீன் போன்றவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களை உதாரணம் காட்டி ஆண்களுக்குப் பதவி கொடுக்கக்கூடாது என்று சொல்ல முடியுமா?

பொங்கல் போனஸ் கேட்டு போராட்டம். இறுதியில் வெறும் அடுப்பு, பானையை வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்துவது என்று தீர்மானம். கூட்டத்தில் ஐந்து பெண்கள் இருந்தோம். ‘நீங்க அஞ்சு பேரும் நாளைக்கு வெறும் பானையில பொங்கல் வைக்கணும். ஆண்கள் எல்லாம் கோஷம் போடுவோம்’ என்றார்கள் தொழிற்சங்க நிர்வாகிகள். ‘ வெறும் பானையில் கூட பெண்கள்தான் பொங்கல் வைக்க வேண்டுமா?’ என்று கேட்டேன். ‘நம்ம டிராமா போடலை. போராட்டம் நடத்தறோம். ஆண்களை செய்ய வச்சா அது காமெடி ஆகிடும். நீங்க செய்யாததை ஒண்ணும் செய்யச் சொல்லிடலையே!’ என்றார் ஒருவர். மற்றவர்கள் சிரித்தார்கள்.

சொல்வதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது, இயக்கத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்களும் இதற்கு விதிவிலக்குகள் அல்ல தோழர்!

படைப்புலகிலும் பெண்ணுக்கு சில இலக்கணங்களை வகுத்துவைத்திருக்கிறார்கள். ஓர் ஆணின் படைப்பு, படைப்பாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இதுவே ஒரு பெண்ணின் படைப்பில் அவளுடைய வாழ்க்கையைத் தேடும் நிலைதான் இருந்துகொண்டிருக்கிறது.

’உனக்கு ஒண்ணும் தெரியாது. உனக்கு இதெல்லாம் புரியாது’ என்று எத்தனை ஆண்கள் சுலபமாக மனைவியை இருட்டடிப்புச் செய்துவிடுகிறார்கள். அப்பாவைப் பார்த்து வளரும் மகனும் இதே கேள்வியைத் தன் அம்மா, சகோதரி, மனைவி, மகள் என்று காலம் முழுவதும் கேட்டுக்கொண்டேயிருக்கிறான்.

பெண்கள் படிப்பதாலும், வேலைக்குச் செல்வதாலும் மட்டுமே பெண் சமத்துவம் வந்துவிடாது. ஒவ்வோர் ஆண், பெண்ணிடமும் அந்தச் சிந்தனை வரவேண்டும். பெற்றோர் அந்தச் சிந்தனையைத் தங்கள் சந்ததியிடம் செயலில் காட்ட வேண்டும். அதைப் பார்த்து வளரும் எதிர்காலச் சமுதாயம் நிச்சயம் மாற்றம் கொண்டதாக இருக்கும். நாளையோ, நாளை மறுநாளோ நடக்கக்கூடிய விஷயம் அல்ல இது. ஆனால் இன்றிலிருந்து இந்தச் சிந்தனைகளைப் புகுத்தினால்தான் இன்னும் நூறாண்டுகளிலாவது மாற்றம் வரும்.

எஸ். சுஜாதா

தொடர்பவன் said...

அது எப்படி உங்கள் மாதிரி எவன் செத்தாலும் பெண்ணியம்.............யம் எல்லாம் எழுத முடியுது.. ஈழத்தில் செத்துமடியும் நமது இன வலியை உங்களை போன்றோர் எழுத்தில் அல்லது புனைவில் அல்லது இலக்கியத்தில் பதிய மறுப்பது ஏன்? ஒரு வேளை சி.பி.எம் கட்சியில் இருக்கும் விசுவாசமா அல்லது தன் தலைவர் பதிவியை காபாற்ற நினைக்கும் சுய நலமா மிஸ்டர் டமில்செல்வன்

ச.தமிழ்ச்செல்வன் said...

தொடர்பவரே,

ஈழத்து மண்ணில் தமிழ் மக்கள் செத்து மடிந்ததும் இன்றும் பட்டினிக்கும் சுகக்கேட்டுக்கும் இடையில் செத்துக்கொண்டிருப்பதும் உங்கலைப்போலவே எல்லோரையும் வதைக்கிறது.எழுத்தில் அதுபற்றிய பதிவுகள் நிச்சயம் வரும்.ஈழத்தமிழ் மக்கள் மீதான அக்கறையும் துயரமும் உங்களுக்கு மட்டுமே என்று ஏன் நீங்களே பட்டாப் போட்டுக்கொள்கிறீர்கள்.இந்தப் பார்வையை விட்டுத்தொலைங்க சார்.நிலைபாடுகளில் விமர்சனம் இருக்கும்.அது பேச வேண்டியது.எனது பார்வை தவறெனில் திருத்திக்கொள்ளலாம்.

அதைத்தவிர வ்ந்ந்றெ எதுவும் பேசாதே என்பது நடைமுறைச் சாத்தியமா தோழரே? தலைவர்என்பது எங்களுக்கு ஒரு பதவி அல்ல.அது ஒரு வேலைப்பிரிவினை.

ச.தமிழ்ச்செல்வன் said...

சுஜாதாவின் வலி மிகுந்த பின்னூட்டத்தை என் கட்டுரையின் தொடர்ச்சியாகவே பார்க்கிறேன்.

ச.தமிழ்ச்செல்வன் said...

சுஜாதாவின் வலி மிகுந்த பின்னூட்டத்தை என் கட்டுரையின் தொடர்ச்சியாகவே பார்க்கிறேன்.

Anonymous said...

hi,

i am pavithra.. gender sensitisation is verymuch necessary to discuss with..As tamilselvan mentioned, comrades in public life don't mind much about gender bias.. In telungana movement, there is an example. A pregnant women, who is a wife of a comrade accidentally stayed in another leader's home.. she delivered a baby too.. the leader's wife looked after the lady.. we just can't imagine, what pains she would have faced.. but in history, even her name is not recorded.. this is the reality.. i have more views to share with.. pl inform me the way to express in tamil..

பிரேமாவின் செல்வி said...

பெண்ணியம் பற்றி எவ்வளவு பேசினாஉம், 'உச்' கொட்டிக் கேட்டு, தலையை பலமாக ஆட்டி விட்டு, வீட்டிற்குப் போய் தன் பழைய குணத்தைத் தொடர்வதுதான் எல்லா ஆண்களின் வழக்கமும். சமையல் செய்யத்தான் பிறந்திருக்கிறோம் எனப் பெண்களையும் அவர்களுக்கு எதிராகவே ஆக்கி விட்டது பெரிய சாதனை. அம்மா-தியாகம்-தெய்வம் என்று அம்மா என்ற உயிர்க்கான தனித்தன்மைகளை வசதியாய் குழி தோண்டிப் புதைத்து விடுகிறோம். பொருளாதார பலத்திற்காக பெண்கள் வேலைக்குப் போவதையே பெரிய பெண் சுதந்திரமாகப் பேசிக் கொண்டு இருப்பவர்களை என்ன சொல்லியும் மாற்ற முடியாது. இருப்பினும், சலனமற்ற குளத்தில் சிறிது நேர சலசலப்பாகவேனும், உங்கள் அழுத்தமான எழுத்துக்கல் தொடர்ந்து கொண்டிருப்பது மிகுந்த ஆறுதல். ஒரு பாதி மனித இனம் இத்தனை ஆண்டுகளாய் அடிமைப் பட்டு, அடிமைப் படுவதையும் அறியாமல் அதுவே சரி என ஏற்றுக் கொண்டு, ஓருயிர் பிராணி போல் வாழ்ந்து கொண்டிருப்பதை நிச்சயமாய்ப் பேசியே ஆக வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள். மனம் நிறைந்த ஆதரவுகளும், பாராட்டுகளும்.....