Friday, October 21, 2011

மீண்டும் கொல்லப்பட்ட இமானுவேல் சேகரன்

immanuel-1

 

 

paramakkudi

 

 

 

paramakkudi-2

காரிருள் சூழ்ந்த 1950களின் கரிய வானத்தில் தாரகைபோல் ஜொலித்த மகத்தான போராளி இமானுவேல் சேகரன், ஆதிக்க சாதியினரால் 1957இல் முதலில் கொல்லப்பட்டார். எனினும் ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் அவர் உயிர்த்துடிப்பாக வாழ்ந்து வருகிறார். நினைவுகளிலும் அவர் வாழ்ந்திருக்கக் கூடாதென அஞ்சும் ஆதிக்க சாதியும் அதன் பாதுகாவலனான அரசும் மீண்டும் மீண்டும் அவரைக் கொன்று சாய்க்கிறது. ஃபீனிக்ஸ் பறவையைப் போல அவர் மறுபடியும் பிறக்கிறார். பிறக்கிறார், பிறப்பார் என்பதை அறியாமல்.

1952இல் இராணுவப் பணியை உதறிவிட்டு மக்களிடம் பணியாற்ற இராமநாதபுரம் பகுதிக்கு வந்து சேர்ந்த அவரை 6 ஆண்டு காலமே வாழ அனுமதித்தது ஆதிக்க சாதி. அந்த 6 ஆண்டு கால மின்னல் வாழ்க்கையில் அவர் செய்த “குற்றங்கள்” ஏராளம். அவற்றில் சில:_

1. தேவேந்திரகுலச் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளராகி தொலைபேசி மற்றும் வாகன வசதி இல்லாத அந்நாட்களில் ஊர் ஊராகச் சென்று ஒடுக்கப்பட்ட மக்களை அமைப்பாகத் திரட்டினார்.

2. அப்பகுதியின் ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைக்கும் அடாவடிகளுக்கும் ஆளான எல்லா சாதிகளைச் சேர்ந்த மக்களையும் நேச அணியாக ஒன்றுபடுத்தினார்.

3. பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி முதலான இடங்களில் வணிகர்களை மிரட்டி ‘மாமூல்’ வசூலித்து வந்த கூட்டத்தின் அடாவடிகளை மக்கள் ஒத்துழைப்புடன் தடுத்து நிறுத்தினார். வணிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

4. 1953 சித்திரைத் திருநாளில் இராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டைக் கூட்டினார். தென் தமிழகமே அங்கு திரண்டது.

5. பேரையூர் பெருமாள் பீட்டர் அவர்களுடன் இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்திடப் பணியாற்றினார்.

6. பண்பாட்டு ஒடுக்கு முறையின் வெளிப்பாடாகத் திகழ்ந்த கிராமப்புறக் கோவில் திருவிழாக்களில் ஊதியமில்லாத தொண்டூழியமாக தாழ்த்தப்பட்ட மக்கள் செய்து வந்த பறையடித்தல், இலவசமாக வைக்கோல் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை இலவசமாக வழங்குதல், ஊரைச் சுத்தம் செய்தல் போன்றவற்றை நிறுத்தினார். கோவில் பணிகள் எல்லாவற்றையும் சமத்துவமான முறையில் வேலைப்பிரிவினை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதன் காரணமாக பல ஊர்களில் பொதுவிழாக்கள் நின்றன. தாழ்த்தப் பட்டோர் தனி விழாக்கள் நடத்தலாயினர்.

7. இரட்டைக்குவளை எதிர்ப்பு மாநாட்டை அருப்புக்கோட்டையில் நடத்தியதோடு மட்டுமன்றி பலமுறை எச்சரித்தும் கேளாத டீக்கடைகளை மக்களைத் திரட்டிச் சென்று நேரடி நடவடிக்கைகளிலும் இறங்கியது _ சட்ட பூர்வமாக எண்ணற்ற வழக்குகளைப் பல தேநீர்க் கடைகளின் மீது பதிவு செளிணிதது.

8. 1957 மார்ச் பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு வாக்களிக்காத மக்களை _ குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களை அடையாளம் கண்டு ஆதிக்க சாதியினர் தாக்கியதைக் கண்டித்து இயக்கம் நடத்தியது,

“முத்துராமலிங்கத் தேவரின் சாயல்குடிக் கூட்டத்திற்குப் பிறகு அரிசனங் களும் காங்கிரசு ஆதரவாளர்களும் முதுகுளத்தூர் மறவர்களின் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். பல கிராமங்களில் சட்டம் ஒழுங்கே இல்லை. உடனடியாகத் தலையிடவும்’’ எனத் தமிழக முதல்வருக்குத் தந்தி அனுப்பினார்.

9. தந்தி அனுப்பிவிட்டுச் சும்மா இருக்கவில்லை. தாக்குதல்களை எதிர் கொண்டு திருப்பித் தாக்க மக்களுக்குப் பயிற்சி அளித்தார். எதிர்த்தாக்குதலால் நிலை தடுமாறிய ஆதிக்க சாதியினர் “பாதுகாப்பு’’ கோரி அரசுக்கு மனுவும் தந்தியும் அனுப்பினர். அந்தத் தந்தியை விட இந்தத் தந்தி அரசை வேகமாக இயக்கி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எல்லாரையும் அழைத்தது.

இப்படி அடுக்கடுக்கான குற்றங்களைப் புரிந்த இமானுவேல் மீது ‘இயல்பாக‘க் கோபம் கொண்டது சாதியம். எல்லாவற்றுக்கும் மேலாக 9 மணி பேச்சுவார்த்தைக்கு சரியான நேரத்துக்கு வந்து காத்திருந்த எல்லா சாதித்தலைவர்களும் தாமதமாக பசும்பொன் முத்துராமலிங்கர் நுழைந்த போது எழுந்து நின்று மரியாதை செய்ய, இமானுவேல் தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். பேச்சுவார்த்தையில் முத்துராமலிங்கரின் பேச்சுக்குப் பேச்சு இமானுவேல் பதிலளித்தார். மாவட்ட ஆட்சியர் இறுதியாக சமாதானத்தை வலியுறுத்தி எல்லாத் தலைவர்களும் கையொப்பமிட்ட துண்டறிக்கையை வெளியிடலாம் என்றார். அப்போது உ.முத்துராமலிங்கர் அது பயனளிக்காது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு படிக்கத் தெரியாது என்றார். உடனே தலையிட்ட இமானுவேல் பிற எந்தச் சாதியாரையும் விட அதிகமான படிப்பறிவு கொண்டவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று பதிலளித்தார்.

இவ்வளவு திமிர் 1957இல் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவருக்கு எப்படி இருக்கலாம்? ஆகவே மேற்சொன்ன அடுக்கடுக்கான கொடும் குற்றங்களைப் புரிந்த இமானுவேல் சேகரனுக்கு இராமநாதபுரம் மாவட்ட சாதியம் மரணதண்டனை என்று தீர்ப்பு எழுதி ஒரு பஷீமீளியில் பாரதி நினைவு நாள் சொற்பொழிவாற்றி விட்டு வீடு திரும்பிய அவரைப் படுகொலை செளிணிது, தீர்ப்பை உடனே நிறைவேற்றியது.

இன்று 2011ல் கூட ஒரு வரலாற்று நோக்கில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் அரசியல் வாழ்க்கையை விருப்புவெறுப்பின்றி சார்பு நிலையின்றி அச்சமின்றி விமர்சித்து எழுதிட முடியாத நிலையே நீடிக்கிறது. எனில் 1957இல் இவ்வளவு துணிச்சலாக எழுந்து நின்ற இமானுவேல் சேகரன், ஒரு பள்ளப்பயலுக்கு இவ்வளவு திமிரா என்கிற கேஷீமீவியோடு கொல்லப்பட்டதில் வியப்பில்லை.

தன் உயிரை எடுத்து வைத்து இமானுவேல் பற்ற வைத்த விடுதலை நெருப்பு பற்றிப்படர்ந்தது. தென் மாவட்டங்களில் எப்பொழுதும் போல தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கலாம், அடிக்கலாம், உதைக்கலாம், வெட்டிச் சாய்க்கலாம் என்கிற கதை முடிவுக்கு வந்து விட்டது. அடித்தால் பதிலடி கிடைக்கும் என்கிற யதார்த்தம் நடைமுறைக்கு வந்துவிட்டது.

தஞ்சை மண்ணில் தாழ்த்தப்பட்ட மக்களின் மகத்தான தலைவராக செங்கொடியுடன் உயர்ந்த தோழர்.பி.சீனிவாசராவ் முழங்கிய ‘அடித்தால் திருப்பி அடி’ என்கிற முழக்கத்தின் எதிரொலிகளாகவே தென் மாவட்டங்களில் தலித் மக்கள் திருப்பித் தாக்கிய எதிர்வினைகளைப் பார்க்க வேண்டும். இராமநாதபுரத்திலோ தமிழகத்தின் இதர பகுதிகளிலோ ஒரு சீனிவாசராவ் தோன்றும் வரை வரலாறு காத்திருக்காதல்லவா? வரலாறு இமானுவேல் சேகரனையும் பெருமாள் பீட்டரையும் ஜார்ஜ் ஜோசப்பையும் படைத்துத் தந்தது. பிற்காலத்தில் ஜான் பாண்டியனையும் டாக்டர் கிருஷ்ணசாமியையும் தொல் திருமாவளவனையும் படைத்தளித்தது. இத்தலைவர்களில் சிலர் முன்வைத்த முழக்கங்களில் குறிப்பிட்ட சாதிகள் மீதான துவேஷ உணர்வு வெளிப்பட்டிருக்கலாம். அவற்றை நாம் விமர்சிக்கலாம்.

ஆனால் அத்தகைய கோஷங்களுக்குப் பின்னால் ஏன் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் அணி திரண்டார்கள் என்கிற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக விடை காண வேண்டுமல்லவா? ஆதிக்க சாதிகளின் வல்லந்தம் தலித் மக்களின் மனங்களில் ஏற்படுத்தியுள்ள வரலாற்றுக் காயங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இத்தலைவர்கள் முன்வைத்த ‘துவேஷ‘ முழக்கங்கள் மருந்தாக அமைந்தன.

பண்பாட்டு ரீதியாகப் பன்னெடுங்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் உயர்சாதியினர் மீதும் சாதிய அமைப்பின் மீதும் தீராக் கோபம் கனன்று கொண்டேதான் இருக்கும். அதை வெளிப்படுத்த முடியாத வன்முறையான புறச்சூழல் நிலவும் போது அது நாட்டுப்புறப் பாடல்களாக கதைகளாக சொலவடைகளாக வெளிப்பட்டு நிற்கும். அத்தனை விதமான நாட்டுப்புற ஆட்டங்களிலும் கதைகளிலும் பிராமணர்கள் கேலிக்கு உள்ளாக்கப்படுவதும் பகடி செய்யப்படுவதும் இன்று வரை தொடர்வதை நாம் இந்தக்கோணத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும்.

“வெள்ளாளன் போன வழி வெட்டவெளி”

“பிண்டத்துக்கு பிராமணன்

துண்டத்துக்கு துலுக்கன்

தெண்டத்துக்கு சம்சாரி

என்பன போன்ற சொலவடைகளையும் நாம் அடித்தட்டு மக்களின் வாழ்வனுபவ வரலாற்றின் பின்னணியில் வைத்தே புரிந்து கொள்ள வேண்டும்.

இதே எதிர்பண்பாட்டு மனநிலை தான் “இமானுவேல் சேகரன் குரு பூஜை” “தெய்வத் திருமகன் இமானுவேல் சேகரன்” போன்ற சொற் சேகரங்களை தலித் மக்கள் சுவரொட்டிகளிலும், ஃபிளக்ஸ் பேனர்களிலும் எழுதி வைப்பதிலும் ஒளிந்திருக்கிறது என்பதை கருத்தியல் ரீதியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. இந்த வார்த்தைகள் எவையும் ‘காப்பி ரைட் ‘ வாங்கப்பட்ட வார்த்தைகளுமல்ல. இன்றைய பரமக்குடிப் படுகொலைகளின் பின்னணியில் இத்தகைய வார்த்தைகளுக்கு ஒரு பங்கு இருக்கிறது.

நினைவஞ்சலி, வீரவணக்கம் போன்ற பல வார்த்தைகள் தமிழில் இருக்க தலித் மக்களின் ஒரு பகுதியினர் குருபூஜை என்கிற ‘வார்த்தை’யைத் தேர்வு செய்ததற்கும் ஒரு வரலாற்று ரீதியான பின்புலமும் சமூக உளவியலும் இருக்கிறது என்பதைப் பதட்டமின்றி நம் தமிழ்ச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏன் இந்த வார்த்தையைத்தான் தேர்வு செய்ய வேண்டுமா? இந்த வார்த்தையை ஏன் தேர்வு செய்யக் கூடாது? என்கிற இரு கேள்விகளும் இன்று முன் வைக்கப்படுகின்றன. வார்த்தைகள் மொழியிலிருந்து எடுத்தாளப்படவில்லை. வலிமிகுந்த வரலாற்றிலிருந்தும் வஞ்சம் தீர்க்கப்படாத கோபத்திலிருந்தும் எடுத்தாளப் படுகின்றன என்பதை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

ஆனாலும் இந்த ‘வார்த்தைப் போரை நடத்துவது சிறிய பகுதிதான். பெருவாரியான மக்கள் இம்மானுவேல் ‘சாமி கும்பிட‘ப் போவதாகவே பெருவழக்காகப் பேசுகின்றனர். இமானுவேல் சேகரனுக்குப் பால்குடம் எடுத்து விரதம் இருந்து அணியணியாகச் செல்வதை ஒரு பண்பாட்டு நடவடிக்கையாகக் கைக் கொண்டுள்ளனர்.யதார்த்த்த்தில் தீராத சாடிய நெருக்கடியை ஒடுக்கப்பட்ட மக்கள் இப்படிப் பண்பாட்டு ரீதியான சடங்குகள்,விழாக்கள் மூலம் ஆற்றுப்படுத்திக்கொள்வது உலகெங்கும் உள்ள வழக்கம்தான்.

ஆதிக்க சாதியினரும் நிலைமைக்கேற்ப தமது தந்திரோபாயங்களை மாற்றி வருகின்றனர். ஊரோடு மலையில் ஏறி உட்கார்ந்து கொள்வது அதில் ஒரு வடிவம். தாமே நேரடியாகச் சென்று தாக்குவதை நிறுத்திவிட்டுத் தம் சார்பாகக் காவல்துறையை ஏவிவிடும் நடைமுறையை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.. தாமிரபரணிக் கரையில் 17 உயிர்களைக் காவல்துறை பலி கொண்டபோது இமானுவேல் சேகரன் 17 முறை கொல்லப்பட்டதாகவே கருதினோம்.

காங்கியனூரில் வயிற்றில் மிதித்தார்கள். செட்டிப்புலத்தில் தடிகொண்டு தாக்கினார்கள். மதுரை மண்ணில் தலைவர்களைத் தூக்கி எறிந்தார்கள்.. உத்தப்புரத்தில் என்னதான் செய்யாமல் விட்டார்கள்? சாதியம் காத்திடக் காவல்துறையும் அரசும் எடுத்திட்ட முயற்சிகள் தாம் எத்தனை எத்தனை? இவை அத்தனை அடிகளும் இமானுவேல் சேகரனின் மீது விழுந்த அடிகள்தானே?

தென்பகுதி தலித் மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து விட்ட இமானுவேல் சேகரனின் சித்திரத்தை தடிகொண்டு அடித்தும் பூட்ஸ் கால்களால் மிதித்தும் எனப் பலவித வடிவங்களிலும் அழிக்க முயன்று தோற்றுப்போன அரசும் காவல்துறையும் இன்று அதே பரமக்குடியில் இமானுவேல் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகிலேயே மீண்டும் ஆறுமுறை இமானுவேல் சேகரனைக் கொலை செய்துள்ளது.

இமானுவேல் சேகரன் ஒரு காங்கிரஸ்காரர். நம்பிய காங்கிரசால் கழுத்தறுக்கப்பட்டவர். அவருடைய துணைவியாரையும் நான்கு பெண் குழந்தைகளையும் கூடப் பராமரிக்கவோ, வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யவோ காங்கிரஸ் முன் வரவில்லை என்பது வரலாறு. அவர் காங்கிரஸ்காரரா கிறித்தவரா மதம் மாறிய இந்துவா பட்டாளத்துக்காரரா என்பது எதுவுமே முக்கியமல்ல. இன்று அவர் தென் தமிழகத்து ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் விடுதலையின் சின்னம். சாதி ஒழிப்புப் போராட்டத்தின் உயிர்த்துடிப்பு.

அவரை ஒரு சாதியின் தலைவராகப் பார்ப்பதை மாற்ற வேண்டும். அதற்கு எல்லா சாதிகளையும் சேர்ந்த ஜனநாயக எண்ணம் கொண்ட மக்கள் அவரை விடுதலையின் சின்னமாக மனதார ஏற்க வேண்டும். அவர் ஒருபோதும் சாதி வெறுப்பை முன் வைத்ததில்லை. சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றிணைக்கும் அரசியலையே முன் வைத்தார்.

அம்பேத்கர் தன் வாழ்வில் சாதியத்தின் வடிவமாக பிராமணியத்தை எதிர் கொண்டார். இமானுவேல் சேகரன் இராமநாதபுரத்தில் பிராமணியத்தின் வடிவமாக வேறொரு சாதியை எதிர்கொள்ள நேர்ந்தது. இது வரலாறு.இது அவர் செய்த குற்றமல்ல.

வர்க்கப் போராட்டம் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்று தளங்களிலும் நடைபெறுவது. இந்தியாவின் வர்க்க ஏற்பாடான சாதியக் கட்டமைப்புக்கு எதிரான போரும் இம்மூன்று தளங்களிலும் நடைபெறுவதை, நடைபெற வேண்டியதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

அவ்வகையில் சாதி எதிர்ப்புப் போர்த் தியாகிகளெல்லாம் வர்க்கப் போர்த் தியாகிகளாகப் போற்றத்தக்க தியாகிகளல்லவா?

இமானுவேல் சேகரனின் தியாகத்தைப் போற்றுவோம்!

தோழர் இமானுவேல் சேகரனின் தியாகத்துக்கு வீர வணக்கம் செய்வோம்!

 

(பி.கு. இக்கட்டுரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தும் அணையா வெண்மணி இதழில் வெளியாகியுள்ளது)

 

back_inner_wra(2)

5 comments:

சித்திரவீதிக்காரன் said...

இமானுவேல் சேகரன் குறித்த அற்புதமான பகிர்வு. விடுதலையின் சின்னம் அவர் என்பது உண்மைதான். இன்றைக்கு சகஇளைஞர்களிடம் பரவி வரும் சாதிவெறி எதிர்காலத்தின் மீது மிகவும் அவநம்பிக்கையை தருகிறது. தங்கள் 'சொல்லவருவது' சிறுகதையில் தாமிரபரணி படுகொலையை பதிவு செய்து இருந்தீர்கள். அதை வாசித்ததும் நான் மனிதர்களுக்கு நாய்கள் பரவாயில்லை என்று தாங்கள் சொல்ல வருவதாகத்தான் எண்ணினேன். அடக்குமுறையும் அதற்கு எதிரான கலகக்குரலும் இன்றைக்கு கட்டாயம் தேவை. பகிர்வுக்கு நன்றி.

Bharathi Raja R said...

அருமையான கட்டுரை. இம்மானுவேல் அவர்கள் பற்றிய இது போன்ற தகவல்கள் இன்றைய தலைமுறைக்கு நிறையவே தேவை. ஒடுக்கப் பட்ட மக்களின் வன்முறைக்குப் பின்னால் இருக்கும் உளவியற் காரணங்களை - அவற்றின் நியாயங்களை எப்போதுமே உணர முயன்றிருக்கிறேன். அத்தனை நூற்றாண்டு கால அடிமை மடை உடைகிறபோது சில தலைமுறைகளுக்காவது அதன் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அதே வேளையில் முழுமையாக அதை நியாயப் படுத்திக் கொண்டே ஊக்குவித்து விடவும் கூடாதென்றே எண்ணுகிறேன். தன் மேல் கை வைத்த பின்னும் காவல்த்துறை அமைதி காக்க முடியாது. அது யாராக இருந்தாலும்! அது அவர்கள் என்பதால் மட்டுமே அப்படியொரு மூர்க்கம் காட்டப் பட்டதோ - ஒருவேளை பதில்த் தாக்குதலில் பயன்படுத்தப் பட்ட தோட்டாக்களில் ஆதிக்க சாதிகளின் வெறியும் வெறுப்புணர்வும் கலந்திருந்ததோ என்கிற கேள்விதான் அறுத்துக் கொண்டிருக்கிறது. அதே வேளையில், இதே போன்றதொரு சூழல் தேவர் ஜெயந்தியின் போது ஏற்பட்டால் இதே போன்ற பதிலடியே காவல்த்துறை கொடுக்குமா என்பதே பதிலளிக்க முடியாத கேள்வியாக இருக்கிறது. கொடுக்க வேண்டும் என்பதே நியாயம். பார்க்கலாம்.

Ashok D said...

நிறைய விஷயங்களை அறிந்துக்கொண்டேன்.. நன்றி

palani said...

cirantha katdurai. criminalkal , katda panchayathdu nadathdupavarkal elloraium thalith viduthalaikkaga poradum thalaivarkal ena oppukolla mudiyadu . EMMAANUVELSEKARAN THE GREAT LEADER nu puriya vachitdinka . nantri .

palani said...

devar poojai la eppadi nadanthirundha yochikkave mudiyala , ethanai kodiyankulankal uruvaaki erukum