Thursday, April 21, 2011

மறுபக்கம்

comrades

அப்போது அது எந்தத்தொகுதி யார் போட்டியிட்டார்கள் என்பதெல்லாம் நினைவில் இல்லை.நான் சந்தித்த முதல் தேர்தல் 1962 தேர்தல்தான்.அப்போது எனக்கு வயது 8.இரண்டாம் வகுப்பிலோ மூன்றாம் வகுப்பிலோ இருந்தேன்.சாத்தூர் தொகுதியில்தான் எங்கள் ஊர்  மேட்டுப்பட்டி ரொம்ப காலமாக இருக்கிறது.ஆகவே 62 தேர்தலில் எங்கள் தொகுதியில் காமராஜர்தான் போட்டியிட்டார் என இப்போது அறிய முடிகிறது..அவரை எதிர்த்து சுதந்திராக் கட்சியின் சார்பாக ராமமூர்த்தியும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஒருவரும் போட்டியிட்டனர். கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெயர் நினைவில்லை.தலைவர்களை அழைத்துக்கொண்டு எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரான கலிங்கல் மேட்டுப்பட்டியைச்சேர்ந்த காங்கிரஸ்காரர் சங்குத்தேவர் எங்கள் தெரு மடத்துக்கு வந்தார்.எங்கள் தெற்குத்தெரு ஆண்களெல்லாம் மடத்தில் கூடினர்.அதில் காமராஜர் இருந்தாரா என்பது சரியாக நினைவில்லை.அக்கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.

தேர்தல் நாளுக்கு முந்தின இரவில் நான்கு கம்யூனிஸ்ட்டுகள் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள் அதில் ஒருவர் எங்கள் அத்தை மகன்.அவர்தான் மற்ற 3 பேரை அழைத்து வந்தது.எங்கள் பாட்டி ரொம்ப பயந்து விட்டாள்.அப்போது திமுக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.எங்கள் பாட்டி திமுகவை ‘கட்சி’ என்றுதான் சொல்லுவாள். திமுக என்று ஒரு பெயர் அக்கட்சிக்கு இருப்பதே அவளுக்குத் தெரியாது.காங்கிரசை மட்டுமே அறிந்திருந்த அவளுக்கு காங்கிரசோடு கட்சி கட்டும் ஒரு கூட்டத்தை கட்சி என்று அழைப்பதே சரி என்று பட்டு அவ்வாறே அழைத்தாள்.அவள் மட்டுமல்ல.எங்கள் தெருவில் பெரியவர்கள் எல்லோருமே திமுகவை கட்சி என்றுதான் அழைத்தார்கள்.கம்யூனிஸ்ட்டுக்கட்சி ஒன்று மூன்றாவதாக வீட்டுக்குள் வந்துவிட்டதே என்று பயந்தாள்.அடிக்கடி தகராறுகளும் நடந்ததால் அவளுக்குப் பயம்.சொந்தக்காரர்களின் வீடுகளுக்குப் போய் இந்த நாலு கம்யூனிஸ்ட்டுகளும் ஓட்டுக்கேட்டார்கள்.அவர்களும் சரி சரி சீக்கிரம் போயிருங்க என்று அனுப்பி வைத்தார்கள்.தேர்தல் எங்கள் ஊரைவிட்டு ஒரு அரைமைல் தூரத்தில் இருந்த நான் பின்னர் படித்த உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அதிகாலையில் கம்யூனிஸ்ட்டுகளோடு நானும் சேர்ந்து பள்ளிக்குச் சென்றேன். வாக்களிக்க வரும் மக்களிடம் கதிர் அரிவாள் மறந்திடாதீங்க என்று சொல்லிக்கொண்டிருந்தோம்.வந்த கம்யூனிஸ்ட்டுகளில் ஒருவர் பூத் ஏஜண்டாக உள்ளே சென்றுவிட்டார்.

மீதி நேரமெல்லாம் அந்தக் கம்யூனிஸ்ட் எனக்குப் பல கம்யூனிஸ்ட் கதைகள் சொல்லிக்கொண்டிருந்தார்.அவருடைய அப்பா சிறையில் இருந்தபோது கட்சியின் ரகசிய அறிக்கை ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தாராம்.அப்போது போலீஸ் பார்த்துவிட அவர் அப்படியே லபக் கென்று அந்தப்பேப்பரை கசக்கிச் சுருட்டி வாயில் போட்டு விட்டாராம்.போலீஸ் ஓடி வந்து அவருடைய தொண்டைக்குழியைப் பிடித்து கக்குடா கக்குடா என்று அடித்திருக்கிறார்.ஆனால் அவர் போராடி விழுங்கி விட்டார். போலீசார் ஏமாந்தனர்.இப்படியான கதைகளாக அவர் சொல்லிக்கொண்டிருந்தார்.நேரம் ஆக ஆக பாடிக்கு வந்த பயம் எனக்கும் வர ஆரம்பித்தது.அப்போது தேர்தல் பணிக்கு வந்திருந்த போலீஸ்காரர்கள் ரெண்டுபேர் அப்பக்கமாக வந்தனர்.எனக்கு லேசாக உதறல் எடுத்தது.

அவர்கள் இருவரும் இந்தக் கம்யூனிஸ்ட்டுகளை முறைத்துப்பார்த்தனர்.இந்தக் கோட்டுக்கு அப்பாலே போய் நில்லுங்க என்று கத்தினார் ஒரு போலீஸ்.அந்தக் கோட்டுக்குத்தான் நாங்க வரப்பாடாது.இந்தக்கோட்டுக்கு நாங்க வரலாம்.ரூல்ஸ் தெரிஞ்சா சொல்லுங்க இல்லேன்னா வாயப்பொத்திக்கிட்டுப் போங்க என்று கம்யூனிஸ்ட் தொண்டர் பதிலடி கொடுத்தார். போலீச்காரருக்கு மீசை துடித்தது.கொஞ்ச நேரம் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அப்படியே போய்விட்டார்.எனக்குப் பயம் வந்து கொஞ்சம் போய்விட்டது.நம்மகிட்டே நடக்குமா என்று கம்யூனிஸ்ட் கட்டைவிரலை என்னிடம் ஆட்டிக்காண்பித்தார்.

நான் பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்வேன் என்று அப்போது யாருக்குத் தெரியும்.ஆனால் இப்போது நினைத்துப்பார்கிறேன்.கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் தியாகங்களை மக்களிடம் எடுத்துரைப்பதால் மக்கள் மதிப்பார்கள் என்பது ஒருபகுதி உண்மை மட்டும்தான்.இன்னொரு பெரிய உண்மை கம்யூனிஸ்ட் என்றால் அடி உதை வாங்கணும் என்கிற பய உணர்வையும் எதுக்கு அவங்கவழிக்கு நாம போகணும் என்கிற தப்பிக்கிற மனநிலையையும் அது உருவாக்குகிறது என்பதையும் கணக்கில் கொண்டு மக்களிடம் பேச வேண்டியிருக்கிறது.

எதையெல்லாம் யோசிக்க வேண்டியிருக்குடா சாமி.

1 comment:

ஆனந்தி.. said...

தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_23.html