Thursday, July 15, 2010

உத்தப்புரம் போராட்டம்-கருணாநிதி கடிதத்துக்கு தோழர் டி.கே.ரெங்கராஜன் பதிலடி

Today at 11:04pm

உத்தப்புரம் தலித் மக்களின் நியாயமான, நீண்டகாலமாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 12ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறை அத்துமீறி தடியடி தாண்டவத்தில் ஈடுபட்டது. பெண்களையும் கூட அடித்து நொறுக்கிய அவலக்காட்சி அரங்கேறியது.
இந்தக் கொடுமையை எப்படியாவது நியாயப்படுத்திவிட வேண்டும் என்று ஆளுங்கட்சி துடியாய் துடிக்கிறது. முதல் நாள் முரசொலியில் (14,7,2010) மார்க்சிஸ்ட் கட்சியின் அடாவடிப் போராட்டம் என்ற தலைப்பில் பெட்டிச் செய்தி யொன்று எழுதப்பட்டுள்ளது. மறுநாள் முரசொலி யில் (15.7.2010) முதல்வர் கலைஞர் உத்தப்புரம் உணர்த்தும் உண்மை என்ன? என்ற தலைப்பில் வினா-விடை பாணியில் எழுதியுள்ளார்.
உத்தப்புரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமையேற்றவன் என்ற முறையில் தமிழ்நாட்டு மக்களுக்கு சில உண்மைகளை எடுத்துச் சொல்லவேண்டிய அவசியம் உள்ளது.
போராட்டத்தின்போது, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை. தமிழக அரசு திறந்துவிட்ட பொதுப்பாதையில் தலித்மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை குறித்து நாங்கள் எடுத்துச்சொன்னபோது, அங்கிருந்த அதிகாரிகளிடம் ஆட்சியர் கேட்டதற்கு, அது உண்மைதான் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதேபோன்று, எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கியும் கூட நிழற்குடை கட்ட மாவட்ட நிர்வாகம் முன் வராதது குறித்தும், தலித்மக்கள் வசிக்கும் பகுதிக்குள் ஓடக்கூடிய ஊர் சாக்கடையை ஊருக்கு வெளியே திருப்பிவிட வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும், அரசு புறம்போக்கு பகுதியில் உள்ள அரசமரத்தில் பாரம்பரியமாக நடத்தப்பட்ட வழிபாட்டிற்கு தலித்மக்களை அனுமதிக்க வேண்டும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலித் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நாங்கள் எடுத்துரைத்தபோது, அதிலிருந்த நியாயங்களை ஆட்சியரின் அருகிலிருந்த அதிகாரிகள் ஒத்துக் கொண்டனர்.
அரசு திறந்துவிட்ட பொதுப்பாதையில் தலித்மக்கள் வாகனங்களில் சென்று வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர் திரும்பத் திரும்ப கூறியபோது, இதில் உண்மையில்லை என்று உடன்வந்த தலைவர்கள் மறுத்தனர். இந்த நிலையில்தான் மாவட்ட ஆட்சியர் உத்தப்புரம் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று பார்த்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். உத்தப்புரத்திற்கு பல ஆட்சியர்கள் நேரடியாக வந்து பார்த்து நிழற்குடை அமைக்கவும், அரசமர வழிபாடு நடத்தவும், தலித் மக்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவித்தனர். அது குறித்த கோப்புகளைப் பார்த்து நடவடிக்கை எடுங்கள் என்று கூறினோம்.
நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியதை ஒரு உறுதிமொழியாக எழுதிக்கொடுங்கள் என்று கேட்டோம். இதற்கு ஆட்சியர் மறுத்துவிட்டார். இவ்வாறு எழுதிக்கேட்டதைத்தான் ஏதோ மாபாதகச் செயலில் ஈடுபட்டு விட்டதாக முரசொலி ஏடு ஆத்திரப்பட்டு, அடாவடி என்று வர்ணித்துள்ளது. முதல் வரும் அன்று மாலைக்குள் கோரிக்கைகளை ஏற்று எழுத்துபூர்வமாக அனுமதி வழங்க வேண்டுமென்று பிடிவாதமாகக் கூறினர் என்று குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து மூலமாக எழுதித் தராவிட்டா லும் உங்களது வாக்குறுதியை வெளியே உள்ள பத்திரிகை மற்றும் தொலைக் காட்சி செய்தியாளர்களிடம் கூறுங்கள். உத்தப்புரம் தலித் மக்களுக்கு இதனால் நம்பிக்கை பிறக்கும் என்றும் கூறினோம். அதை மாவட்ட ஆட்சியர் முதல்வரிடம் தெரிவித்தாரா? இல்லையா? என்று தெரியவில்லை.
இது ஒருபுறமிருக்க, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடம் மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிப்பது என்பது எந்த வகையிலும் மரபுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. ஒரு மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மக்களுக்கு அளிக்கும் உறுதி மொழியே ஆகும் இது.
இங்கு ஒரு கடந்தகால வரலாற்று சம்பவத்தை நினைவூட்ட வேண்டியுள்ளது. 1967 தேர்தலில் திமுக வெற்றி பெற்று அண்ணா அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார். டால்மியா சிமெண்ட் ஆலை உரிமையாளரான டால்மியா, ஆலை நிர்வாகி ராஜுவின் தொழிலாளர் விரோதப்போக்கைக் கண்டித்து ஆலைவாயில் அருகே மறைந்த தோழர் பி.ராமச்சந்திரன் தொடர்ந்து பத்து நாள் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். அப்போது, சங்கத்தின் தலைவராக இருந்த தோழர் ஆர். உமாநாத் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவரது உடல்நிலையும் மோசமடைந்தது. அப்போது முதல்வராக இருந்த அண்ணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்த தோழர் பி.ராமமூர்த்திக்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதினார். அதில், உமாநாத்தை உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளச் சொல்லுங்கள். பிரச்சனையை தீர்க்க நான் பொறுப்பேற்கிறேன் என்று அண்ணா அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உறுதிமொழியின் அடிப்படையில் உமாநாத் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து டால்மியா சென்னைக்கு வந்து அண்ணாவை சந்திக்க முயன்றபோது அதற்கு அவர் மறுத்துவிட்டார். டால்மியாவுடன் பேச்சு நடத்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பி.ராமமூர்த்தி, திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியன் ஆகியோர் கொண்ட குழுவை நியமித்தார். இந்தக்குழு டால்மியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பிரச்சனை தீரவில்லை என்பது வேறு விஷயம்.
மிகுந்த ஞாபகசக்தி கொண்ட முதல்வர் கலைஞருக்கு இந்த சம்பவம் நிச்சயம் மறந்திருக்காது. எனவே எழுத்துப் பூர்வமாக உறுதிமொழி கேட்டது, யாரும் செய்யக்கூடாத குற்றம் என்பது போல கூறுவதுதான் வேடிக்கையாக உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அனந்தநம்பியார், ஆர்.உமாநாத் ஆகியோரிடம் ஐஏஎஸ் அதிகாரிகள் மக்கள் பிரச்சனைகளுக்கான போராட்டத்தின் போது எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்து போராட்டம் முடிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு.
உத்தப்புரம் கிராமமக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், அங்கே ஒற்றுமை நிலவக்கூடாது என்ற எண்ணத்தோடு போராட்டம் நடத்துவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அன்றைக்கு நடந்த போராட்டத்தில் உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் 128 பேர் கலந்து கொண்டனர் என்பதுதான் உண்மை. கைது செய்யப்பட்டவர்களை நான் விடுவிக்குமாறு கூறினேன் என்று முதல்வர் கூறியுள்ளார். ஆனால் முதல்வர் இவ்வாறு காவல்துறைக்கு உத்தரவிடுவதற்கு முன்பு, கைதுசெய்யப்பட்டு தமுக்கம் மைதானத்தில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, திருச்சி சிறைக்கு அனுப்ப போலீசார் ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர். உத்தப்புரம் தலித் பெண்களிடம் நாம் அனைவரும் திருச்சி சிறைக்கு செல்வதற்கு தயாராக இருக்கவேண்டு மென்று கூறியபோது அவர்கள் யாரும் பயப்படவில்லை. மாறாக மகிழ்ச்சியடைந்தனர். தங்கள் காது மூக்குகளில் போட்டிருந்த சிறுசிறு நகைகளை கழற்றி வைத்துவிட்டு சிறைக்குச் செல்ல தயா ராக இருந்தனர். அந்த நிலையில்தான் கைதுசெய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
காவல்துறை கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது உண்மை. பெண்களையும் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத் மயங்கி விழும் அளவுக்கு காவல்துறையால் தாக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினர்கள் நன்மாறன், மகேந்திரன் ஆகியோரையும் போலீசார் வாகனத்திற்குள் தூக்கியெறிந்தனர். செங்குட்டுவன், நல்லதங்காள், கிருஷ்ணமூர்த்தி ஆகிய தோழர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் பல தோழர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகளில் ஒருவரான எ.கே.பொன்னுத்தாய் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தப்புரத்தில் இதற்கு முன்னர் தலித் மக்கள் மீது காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதல் தொடர்பாக மாதர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க விசாரணைக்குழு ஒன்றை உயர்நீதிமன்றம் நியமித்தது. தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை என்பதை கண்டறிந்த விசாரணைக்குழு, தாக்குதலின் தன்மைக்கேற்ப நிவாரணம் வழங்க உத்தரவிட்டது. தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 15லட்சத்து 20ஆயிரத்து 900 நிவாரணம் வழங்கவேண்டுமென விசாரணைக்குழு சிபாரிசு செய்தது. இந்தத் தொகை அதிகமென அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. எனினும் இடைக்கால நிவாரணமாக இந்தத் தொகையை வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் இதுவரை ரூ.10லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது.

"உத்தப்புரம் தலித் மக்கள் பிரச்சனையில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தலித் மக்கள் பிரச்சனையிலும் தமிழக காவல்துறையினர் ஒருவகையான சாதிய வன்மத்துடன்தான் நடந்துகொள்கின்றனர். அதுதான் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் நடந்தது"

முதல்வர் கூறுவது உண்மை என்றால், ஒற்றுமையாக வாழ்ந்த மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது ஏன்? ஒற்றுமையை குலைக்கவா?
உத்தப்புரம் தலித்மக்கள் பிரச்சனையில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தலித் மக்கள் பிரச்சனையிலும் தமிழக காவல் துறையினர் ஒருவகையான சாதிய வன்மத்துடன்தான் நடந்துகொள்கின்றனர். அதுதான் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜூலை 12 அன்றும் நடந்தது.
உத்தப்புரத்தில் திமுக அரசுதான் பொதுப்பாதையை திறந்துவிட்டது என்று முதல்வர் கூறுகிறார். உத்தப்புரத்தில் அந்த தீண்டாமைச்சுவர் 20 ஆண்டுகளாக இருந்துவந்தது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டத்திற்குப் பிறகுதான் அந்தச்சுவர் உலகின் கவனத்திற்கு வந்தது. மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் வருகைக்கு முதல்நாள் தான் சுவரின் ஒருபகுதி உடைக்கப்பட்டது. அந்தப்பாதையிலும் கூட இன்னமும் ஆக்கிரமிப்பு உள்ளது. டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது என்பதை மாவட்ட ஆட்சியரின் கூற்றை மேற்கோள் காட்டியதன் மூலம் முதல்வரே ஒப்புக்கொள்கிறார்.
அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்று ஆட்சி நடத்துவதாக கலைஞர் கூறியுள்ளார். டால்மியாபுரம் ஆலை பிரச்சனையில் அண்ணா காட்டிய அணுகுமுறையை உத்தப்புரம் விஷயத்தில் இன்றைய அரசு காட்ட மறுப்பது ஏன்? அன்றைக்கு அதிகாரிகள் அரசின் கொள்கைகளை செயல்படுத்துபவர்களாக இருந்தார்கள். இன்றைக்கு அதிகாரிகள் ஆளும் கட்சியின் மனநிலைக்கு ஏற்ப மாறுபவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை.
அவசர நிலை காலம் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இந்திரா காந்தி தமிழகத்திற்கு வந்தார். அப்போது திமுகவின் சார்பில் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. அப்போது, இந்திரா காந்தியை கொல்ல திமுகவினர் முயன்றதாகவும், அடாவடிப் போராட்டம் நடத்துவதாகவும் காங்கிரசார் கூறினர். ஆனால், திமுகவுடன் அந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும் இணைந்து நின்றது. திருச்சியில் திமுக தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கத்துடன் சேர்த்து நானும் கைது செய்யப்பட்டேன். இதேபோன்று மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களும் கைதானார்கள். கல்லக்குடி போராட்டத்தின் போது கலைஞர் தண்டவாளத்தில் தலை வைத்த போது, அதை அடாவடி போராட்டம் என்று அன்று மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் விமர்சிக்கவில்லை.
இந்த ஆட்சிக்கு கெட்டபெயர் உண்டாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டு செயலாற்றுகிறது என்று முதல்வர் கூறியுள்ளார். மின்வெட்டு, பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசில் அங்கம் வகிப்பது மட்டுமின்றி அதை நியாயப்படுத்துவது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான, உள்நாட்டு தொழிலாளர்களுக்கு எதிரான அணுகுமுறை என திமுக அரசு தனது சொந்த முயற்சியிலேயே நிரம்ப கெட்ட பெயரை சம்பாதித்துள்ளது.
இப்போது கூட உத்தப்புரம் தலித்மக்களின் சுயமரியாதையை பாதிக்கும் தீண்டாமையை அப்பட்டமாக கடைப்பிடிக்கும் அத்துமீறலுக்கு முடிவுகட்டி இந்த அரசு நல்லபெயரை சம்பாதித்துக் கொள்ளட்டும். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

1 comment:

புதுவை ஞானகுமாரன் said...

உத்தப்புரம் பிரச்சனையில் கண்விழிக்க வேண்டியவர் கருணாநிதிதான். அதிகாரிகள் செயல்களை நியாயப் படுத்திவிட்டு,உண்மை நிலையை அவர் புரிந்து கொள்ள மறுக்கக் கூடாது.அதற்கு வழி காட்டுவதுதான் டி கே ஆரின் இவ்வறிக்கை.கலைஞர் விழித்துக் கொண்டு பிரச்சனையைத் தீர்ப்பாரா?உத்தப்புரம் பிரச்சனையில் கண்விழிக்க வேண்டியவர் கருணாநிதிதான். அதிகாரிகள் செயல்களை நியாயப் படுத்திவிட்டு,உண்மை நிலையை அவர் புரிந்து கொள்ள மறுக்கக் கூடாது.அதற்கு வழி காட்டுவதுதான் டி கே ஆரின் இவ்வறிக்கை.கலைஞர் விழித்துக் கொண்டு பிரச்சனையைத் தீர்ப்பாரா?உத்தப்புரம் பிரச்சனையில் கண்விழிக்க வேண்டியவர் கருணாநிதிதான். அதிகாரிகள் செயல்களை நியாயப் படுத்திவிட்டு,உண்மை நிலையை அவர் புரிந்து கொள்ள மறுக்கக் கூடாது.அதற்கு வழி காட்டுவதுதான் டி கே ஆரின் இவ்வறிக்கை.கலைஞர் விழித்துக் கொண்டு பிரச்சனையைத் தீர்ப்பாரா?உத்தப்புரம் பிரச்சனையில் கண்விழிக்க வேண்டியவர் கருணாநிதிதான். அதிகாரிகள் செயல்களை நியாயப் படுத்திவிட்டு,உண்மை நிலையை அவர் புரிந்து கொள்ள மறுக்கக் கூடாது.அதற்கு வழி காட்டுவதுதான் டி கே ஆரின் இவ்வறிக்கை.கலைஞர் விழித்துக் கொண்டு பிரச்சனையைத் தீர்ப்பாரா?உத்தப்புரம் பிரச்சனையில் கண்விழிக்க வேண்டியவர் கருணாநிதிதான். அதிகாரிகள் செயல்களை நியாயப் படுத்திவிட்டு,உண்மை நிலையை அவர் புரிந்து கொள்ள மறுக்கக் கூடாது.அதற்கு வழி காட்டுவதுதான் டி கே ஆரின் இவ்வறிக்கை.கலைஞர் விழித்துக் கொண்டு பிரச்சனையைத் தீர்ப்பாரா?உத்தப்புரம் பிரச்சனையில் கண்விழிக்க வேண்டியவர் கருணாநிதிதான். அதிகாரிகள் செயல்களை நியாயப் படுத்திவிட்டு,உண்மை நிலையை அவர் புரிந்து கொள்ள மறுக்கக் கூடாது.அதற்கு வழி காட்டுவதுதான் டி கே ஆரின் இவ்வறிக்கை.கலைஞர் விழித்துக் கொண்டு பிரச்சனையைத் தீர்ப்பாரா?உத்தப்புரம் பிரச்சனையில் கண்விழிக்க வேண்டியவர் கருணாநிதிதான். அதிகாரிகள் செயல்களை நியாயப் படுத்திவிட்டு,உண்மை நிலையை அவர் புரிந்து கொள்ள மறுக்கக் கூடாது.அதற்கு வழி காட்டுவதுதான் டி கே ஆரின் இவ்வறிக்கை.கலைஞர் விழித்துக் கொண்டு பிரச்சனையைத் தீர்ப்பாரா?உத்தப்புரம் பிரச்சனையில் கண்விழிக்க வேண்டியவர் கருணாநிதிதான். அதிகாரிகள் செயல்களை நியாயப் படுத்திவிட்டு,உண்மை நிலையை அவர் புரிந்து கொள்ள மறுக்கக் கூடாது.அதற்கு வழி காட்டுவதுதான் டி கே ஆரின் இவ்வறிக்கை.கலைஞர் விழித்துக் கொண்டு பிரச்சனையைத் தீர்ப்பாரா?