Wednesday, December 21, 2011

சாகித்ய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கு தமுஎகச பாராட்டு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக்குழு

11,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625001

பத்திரிகைச்செய்தி:21.12.2011

சாகித்ய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கு தமுஎகச பாராட்டு

CHENNAI, 18/07/2010: Suvenkatesh. Photo:Handout_E_Mail

2011க்கான தமிழ் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு அவர் எழுதிய காவல் கோட்டம் நாவலுக்காக வழங்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியையும் பெருமித்தையும் ஒருசேர எமக்கு வழங்கியுள்ளது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளரான அவர் பெற்றுள்ள இவ்விருது எம் அமைப்புக்கே கிடைத்த விருதாக எமது இயக்கத்தின் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களும் பெருமையுடன் கொண்டாடுகிறார்கள்.

தமிழ் நாவல் வரலாற்றில் அழுத்தமான தடம் பதித்த காவல் கோட்டம் நாவலுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பான செய்தியாகும்.அறுநூறு ஆண்டுகால மதுரையின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு கி.பி.1300லிருந்து 1900 வரையிலான காலத்தின் கதையை அரசியல், சமூகவியல்,இன வரைவியல் கண்ணோட்டத்துடன் இந்நாவல் பேசுகிறது.வரலாறும் புனைவும் பிரித்தறிய முடியாதபடிக்குப் பின்னிச்செல்லும் நுட்பமான அழகியலோடு இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது.தாதனூர் என்னும் சிறு கிராமத்து மக்களின் களவும் காவலுமான வாழ்வினூடாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதுரையைக் கைப்பற்றுவதில் துவங்கி ரேகைச்சட்டத்தால் களப்பலியாகும் ஒரு மக்கள் குழுவின் வரலாறாகவும் இந்நாவல் விரிகிறது.என்னதான் முயன்றாலும் ஆங்கிலேய மூளைகளால் கணித்திடவே முடியாத ஒரு எளிய ஆனால் வலுவான உள்ளூர் பண்பாட்டு வரலாற்றைப் பதிவு செய்வதாகவும் காவல் கோட்டம் அமைகிறது.ஏற்கனவே இருந்த பண்பாட்டை அழித்து புதிதாக எதையும் தராத ஆங்கில அரசு என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்ட ஒரு வரலாற்று உண்மையின் கலாபூர்வமான வடிவமாகவே காவல் கோட்டம் நாவல் அமைந்துள்ளது.1050 பக்கங்களில் விரியும் ஒரு பெருங்கதையாக ஓர் உள்ளூர்வரலாறு சொல்லப்பட்டிருப்பது தமிழில் அரிதாக நடக்கும் படைப்பு முயற்சியாகும்.ஏழு ஆண்டுகால கடுமையான ஆய்வுகளையும் உழைப்பையும் உண்டு செறித்து எழுந்து நிற்கும் காவல் கோட்ட்த்துக்காக இவ்விருது வழங்கப்பட்டிருப்பது அந்த உழைப்புக்குக் கிடைத்த உரிய அங்கீகாரமாகவே தமுஎகச கருதுகிறது.

ஓட்டையிடாத புல்லாங்குழல்,பாசி வெளிச்சத்தில்,ஆதிப்புதிர் போன்ற தொகுப்புகளின் வழியே ஒரு நுட்பமான கவிஞராக வெளிப்பட்ட எழுத்தாளர் சு.வெங்கடேசன் தொடர்ந்து ஆட்சித்தமிழ்,கலாச்சாரத்தின் அரசியல்,கருப்பு கேட்கிறான் கிடா எங்கே,மதமாற்றத்தடைச்சட்டம்,சமயம் கடந்த உ.வே.சா போன்ற பல நூல்களால் ஓர் ஆழமிக்க ஆய்வாளராக முகம் காட்டினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக அவர் ஆற்றிவரும் களப்பணிகள் அவரது இன்னொரு முகம்.தன் ஆவேசமிக்க உரைகளின் மூலம் அணிகளை மன எழுச்சிகொள்ள வைப்பவர் சு.வெங்கடேசன்.

2011 செப்டம்பரில் விருதுநகரில் நடைபெற்ற தமுஎகசவின் மாநில மாநாட்டில் அவர் தமுஎகசவின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.இவ்வளவு இளம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தமிழ்ப் படைப்பாளி என்கிற பெருமையையும் இதன்மூலம் அவர் பெறுகிறார்.

தமுஎகச படைப்பாளிகள் இன்னும் உற்சாகத்துடன் தம் படைப்பு முயற்சிகளில் ஈடுபட இவ்விருது தூண்டுதலாக அமையும்.தோழர் சு.வெங்கடேசனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஆவிசேரக் கட்டியணைத்துத் தெரிவித்துக்கொள்கிறது.

அருணன்                          ச.தமிழ்ச்செல்வன்

கௌரவத்தலைவர்           மாநிலத்தலைவர்

2011க்கான தமுஎகச பரிசுகள்/விருதுகள் நூல்கள்/குறுந்தகடுகள் வரவேற்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக்குழு

சென்னை அலுவலகம்-421,அண்ணாசாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018

மதுரை அலுவலகம்-57-ஏ,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625001

2011க்கான தமுஎகச பரிசுகள்/விருதுகள் நூல்கள்/குறுந்தகடுகள் வரவேற்பு

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக வழங்கப்படும் கீழ்க்கண்ட பரிசுகளுக்கான நூல்கள் /தகடுகள் வரவேற்கப்படுகின்றன.2011இல் அச்சாகி வெளியான நூல்கள் ஒவ்வொரு பரிசுக்கும் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும்.குறும்பட ஆவணப்படங்களுக்கன பரிசுக்கும் 2011இல் வெளியான படங்களின் சிடி அல்லது டிவிடி இரு பிரதிகள் அனுப்ப வேண்டும்.எழுத்தாளர்/இயக்குநர் மற்றும் பதிப்பாளர்/பட்த்தயாரிப்பாளரின் முழு முகவரி தொலைபேசி எண்ணுடன் புத்தகங்களுடன்/தகடுகளுடன் எழுதி அனுப்பிட வேண்டுகிறோம்.அனுப்ப வேண்டிய முகவரி பொதுச்செயலாளர்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,11,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடம்,மதுரை-625001.செல்- 9442462888. வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 29-02.2012.

புத்தகம்/தகடுகளை திருப்பி அனுப்ப இயலாது.நடுவர் குழுக்களின் முடிவே இறுதியானது.

1.தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவுப்பரிசு- சிறந்த நாவலுக்காக- ரூ.10000/-

2.புதுமைப்பித்தன் நினைவுப்பரிசு -சிறந்த சிறுகதை நூலுக்கு-ரூ 5000/-

3.குன்றக்குடி அடிகளார் நினைவுப்பரிசு-தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூல்-ரூ.5000/-

4.அமரர் சேதுராமன் -அகிலா நினைவுப்பரிசு-சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கு ரூ 5000/-

5.தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் நினைவுப்பரிசு-சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு-ரூ 5000/-

6.அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு- சிறந்த கவிதை நூலுக்கு-ரூ5000/-

7. தோழர் பா.இராமச்சந்திரன் நினைவு விருது-சிறந்த ஒரு குறும்படம் மற்றும் சிறந்த ஒரு ஆவணப்படத்துக்கு-தலா ரூ 5000/-

8.அமரர் சு.சமுத்திரம் நினைவுப்பரிசு -ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய படைப்பு ஒன்றுக்கு(கதை,கவிதை,நாவல்,ஆய்வு,கட்டுரை எதுவாகவும் இருக்கலாம்)- ரூ. 10000/-

9.தோழர் மு.சி.கருப்பையா பாரதி –ஆனந்த சரஸ்வதி சார்பாக நாட்டுப்புறக்கலைச்சுடர் பட்டமும் ரூ.10000 விருதும்-ஒரு மூத்த நாட்டுப்புறக்கலைஞருக்கு –பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட செய்தியை தங்கள் இதழில் வெளியிட அன்போடு வேண்டுகிறோம்.

சு.வெங்கடேசன்

பொதுச்செயலாளர்konangi pics 379